Pages

Friday, 11 November 2016

Demonetization of Rs 500 and 1000 - 500, 1000 நோட்டுகள் செல்லும்!

500, 1000 நோட்டுகள் செல்லும்!
விழிப்புணர்வுக் கட்டுரை
மதுரை கங்காதரன்

பூனைக்கு யார் மணி கட்டுவது? என்று இந்நாள் வரை பல தலைவர்கள் செய்யத் தயங்கியதை, சுயநலமில்லாமல், பதவிக்கு மயங்காமல் , பணக்காரர்களுக்கு அடிபணியாமல் ஒரு செயல் நடந்துள்ளது என்றால் அது இது தான். ஆம், டிசம்பர் மாதம் 30 வரையில் தான் இந்த பழைய 500, 1000 நோட்டுகள் செல்லும் என்கிற செய்தி. சுமார் 65 சுமார் ஆண்டுக்கும் மேலாக, இதுநாள் வரையில் நம்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் தலைவர் யாராவது ஒருவர் வரமாட்டார்களா? இந்தியாவில் நல்லாட்சி நடைபெறாதா? என்கிற இளைஞர் சமுதாயத்தின் ஏக்கமும், கனவும் இன்று நிறைவேறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஒரு நல்ல காரியத்திற்கு யார் ஆதரிக்கிறார்கள்? யார் எதிர்க்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளலாம். சாமானிய மக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்! என்று அவர்களைப் பற்றி கவலைபடுபவர்கள்! விலைவாசி, கல்விக் கட்டணம், மருத்துவம் என்று பலவைகள் விண்ணைத் தொடுமளவிற்கு உயரும்போதும், விவசாய நிலங்கள் விலைநிலங்களாக மாறியபோதும் எங்கே சென்றார்கள் இவர்கள்? இந்த 500, 1000 ரூபாய் பணம் இருந்தால் சட்டத்தை, வேலையை, கல்வியை, அதிகாரத்தை, பதவியை விலைவாங்கலாம் என்கிற எண்ணம் தானே மக்களிடம் இருந்தது. பணம் என்கிற போர்வையில் பல அநியாயக்காரர்களிடம் தானே பெரும்பாலான அதிகாரம் இருந்தது. மயிலே, மயிலே என்றால் இறகு போடுமா? நல்ல மாட்டிற்கு ஒரு சூடு! இதெல்லாம் தெரிந்த பழமொழி. நம்நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 68 ஆண்டுகள் ஆகியும் விலைவாசி மேலே பறக்கிறது. ஊழல் லஞ்சம் ஒழிந்தபாடில்லை. தீவிரவாதம் அச்சுறுத்துகிறது. அண்டை நாடுகள் பல வழிகளில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை உயர்ந்தபாடில்லை. தினமும் வீணாகிக் கொண்டிருக்கும் அரசு செலவீனங்கள், மக்களின் அடிப்படைத் தேவை பூர்த்தி செய்ய முடியாமை, நாட்டில் ஒரு பக்கம் வெள்ளம், மறுபக்கம் வறட்சி. இதையெல்லாம் பற்றி பொறுப்புள்ள மக்களாகிய நாம் கவலைபட்டிருக்கின்றோமா? காரணம் கேட்டால் ஆட்சி சரியில்லை, சட்டம் சரியில்லை, தலைவர்கள் சரியில்லை, மக்கள் சரியில்லை என்று இதுநாள் வரை சொல்லிக் கொண்டே இருந்தார்களே தவிர, அதையைல்லாம் சரி செய்ய ஏதாவது முயற்சி நடந்துள்ளதா? இதுவரையில் இல்லை என்பதே உண்மை.

8.11.16 அன்று உலக வரலாற்றில் நம்நாடு செய்திருக்கும் செயற்கரிய செயல் தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு. இந்த அதிர்ச்சியான செய்தி ஒரு பக்கம் மக்கள், தங்களுடைய வாழ்வில் பூகம்பம் போல் சில நிமிடங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், வருங்காலதிதில் வரவிருக்கும் சுனாமி, எரிமலை, பஞ்சம் போன்ற பேராபத்திலிருந்து தடுத்துக் காத்து மக்களின் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படுத்தவே இந்த செயல் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதனால் என்ன நன்மை உண்டாகும்? இதுநாள் வரை செயற்கையாய் நடைபெற்று வந்த விலைவாசி ஏற்றம் இனி நடக்காது. சேவை மற்றும் பொருட்களின் உண்மையான முகம் இப்போது தான் தெரியவரும். தாறுமாறாய் விலை ஏறி நிற்கும் உணவு வகைப் பொருட்கள் (எண்ணைய், பெட்ரோல், டீசல், போக்குவரத்து, அரிசி, பால், பருப்பு, காய்கறிகள் போன்றவைகள்), தங்கம், வெள்ளி, வைரம், வாகனங்கள், வங்கி வட்டி, வீட்டுமனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஊழல், லஞ்சம், தீவிரவாதம் என்று மேற்சொல்லியவைகள் பெருமளவில் குறைவதற்கு மிகப்பெரிய அளவில் உதவிசெய்யும் என்பதை போகப்போக மக்கள் உணருவார்கள். இதில் என்னக் கூத்து என்றால் சில ஊடகங்களில் காட்டிய பேட்டி (இன்று இருக்கும் கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் அரசியல்வாதியோ அல்லது அரசியல்வாதிகளின் தயவினால் நடைபெறுகிறது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது) சிரிப்பை வரவழைக்கின்றது. இவர்கள் தான் ஏழைகளின் கண்ணீர் பற்றி பேசியவர்கள்! என்ன நடக்கிறது? அவர்களுக்குச் சாதகமான செய்தியை அடிக்கடி பிரமாண்டமாய்க் காட்டியும், பாதகமான செய்தியை ஒரு சில வினாடியே காட்டுவது நாம் தினமும் பார்க்கிறோம். இன்றைய நாட்டு மக்களின் நிலைமை, ஊடகங்களை விட இளைஞர் சமுதாயம் அதிகமாக இருக்கும் சமூக வலைதளங்களில் நன்றாகவே நன்றாக பிரதிபலிக்கின்றது. குறுகிய காலத்தில் ஏழைமக்களை அல்லாட வைத்தது இந்த 500, 1000 நோட்டுகள் தானே!

கிலோமீட்டர் கணக்கில் சொற்ப விலையில் நிலங்களை வாங்கி அதைக் கூறுபோட்டு சாமானியர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்குப் கோடிக்கணக்கில் விற்றதோடு, அந்தப் பணத்தால் எதையும் சாதித்து வருவதே உண்மை. இந்தப் பணம்தான் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி, ஏழைகளை மிகவும் ஏழையாக்கிக் கொண்டு வருகின்றது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த இரண்டு மூன்று நாட்கள் அலைக்கலைக்கப்பட்டவர்கள் பிறகு வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும், மற்றவர்கள் தங்கள் தகாத செயல்களால் அடையாளம் காணப்பட்டு அலைக்கலைக்கப்படுவார்கள் என்பதே உண்மை.

அது எப்படி? ஐம்பது கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி என்று வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாத, அரசை, மக்களை ஏமாற்றிய பணம் இன்று வெறும் காகிதங்களாக மாறிவிட்டன. அந்தப் பணத்தைக் கொண்டு மென்மேலும் எல்லோரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என்கிறர்களின் ஆசை மண்ணாகப் போய்விட்டது. இப்போது அவர்களும் சாதாரண மனிதர்கள். இனிமேல்அவர்களால் எதையும் சொற்ப விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கும் வேலை நடக்காது. இதுநாள் வரை அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளின் உழைப்பை உறிஞ்சியவர்கள், அறிவாளிகளை விலைக்கு வாங்கி அவர்கள் மூலம் ஏமாற்றும் வேலை, பணம் கொடுத்து எதையும் சாதித்தவர்கள் என்பதெல்லாம் இப்போது நடக்காது.

8.11.16 அன்று அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை உலகமே எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது, அதை விட வரலாற்றுச் சிறப்புமிக்கச் செய்தியாக இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு. புலி வருது, புலி வருது என்று பூச்சாண்டி காட்டியவர்களுக்கு உண்மையான புலியை அரசியலில் இப்போது தான் பார்க்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இது இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாதையாகவும், வழிகாட்டியாகவும், எதையும் சாதிக்கலாம் என்கிற துணிவும், நல்ல செயலுக்கு என்றும் மக்களின் ஒத்துழைப்பு இருக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கச் செய்துள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்சி பற்றிய அக்கறையும் பெற்றிருப்பார்கள். இது நாள் வரை அரசியல்வாதிகள் அட்டைக் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள், ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைத்தவர்களுக்கு, அரசியல்வாதிகளால் எதையும் செய்ய முடியும் என்று இப்போது தெரிய வரும்.

இதுநாள் வரை இரகசியமாய் நடந்த அணுகுண்டு சோதனை, சர்ஜிக்கல் ஆபரேசன், இப்போது500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு என்கிறது போல் இன்னும் பல செயல் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நாளை50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு வந்தாலும் அதிசயம் இல்லை. ஆகையால் மக்கள் இனிமேலாவது அதிகமான ரூபாய் புழக்கத்தை வங்கியின் மூலம் நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் உள்ள இரகசியத்தை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். கிட்டத்தட்ட நம்நாட்டில் பதினைந்து இலட்சம் கோடி மக்களிடத்தில் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அதில் எவ்வளவு கறுப்பு? எவ்வளவு வெள்ளை என்று கணக்கி எடுக்கவே இந்த செயல். ஒருவேளை ஐந்து இலட்சம் கோடி தான் மாற்றப்பட்டுள்ளது. மீதம் பத்து இலட்சம் கோடி வரவில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்து இலட்சம் கோடி தான் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அந்தப் பணம் அரசாங்கத்திற்கு வராவிடில், இனி அந்தப் பணம் அரசாங்கப் பணம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு, இது நாள் வரையில் தடைபட்டுவந்த இலவசக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவம், நதி நீர் இணைப்பு, போக்குவரத்து வசதி, நிலையான விலைவாசி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, உணவுப்பாதுகாப்பு, விவசாயம் போன்ற வளர்ச்சிக்கு இந்தப் பணம் கட்டாயம் உதவும். இனி அரசாங்கத்தால் எதையும் நிர்ணயிக்கும் நிலை உண்டாகும். அதாவது இது நாள்வரை பணக்காரர்கள் கையில் இருந்துவந்த விலைவாசி, இனி அரசாங்கத்திடம் இருக்கும். அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவுகள் நனவாகும். அவர்கள் தந்த இந்த மாபெரும் ஒத்துழைப்பு கட்டாயம் நல்லரசுக்கு வழி வகுக்கும்.

சிலர் இதைக் கோமாளியான செயல் என்று விமர்சனம் செய்கிறார்கள்! எது கோமாளியான செயல்? சிலராகிய நாங்கள் வரிகட்டமாட்டோம், வியாபாரக் கணக்கு காட்டமாட்டோம், லஞ்சம், ஊழல் தொடர்ந்து செய்வோம், ஏழை எளியவர்கள், நடுத்தர மக்களை ஏமாற்றுவோம், இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை வழக்கம்போல் காற்றில் பறக்கவிட்டு சுயநலம் மற்றும் வாரிசு, உறவினர்களின் நலனுக்காக எதையும் செய்வோம் என்கிற செயல் இனி நடக்காது. அரசியல்வாதிகளின் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்கிற வீராப்பு வசனம் இனி எடுபடாது.

8.11.16 அன்று சுமார் இரவு 9.00 மணி அளவில் வெளியான அறிவிப்பு ஏமாற்றியவர்களுக்கு இடியும், உண்மையாய் இருப்பவர்களுக்கு இனிப்பும் ஆக இருந்திருக்கும். இதை எண்ணும்போது 'எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!' என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது. இது எப்படி இருக்கிறதென்றால் பணமுதலைகள் பல ஆயிரம் கோடிகள் ஏமாற்றற்றும். என்னிடம் இருக்கும் ஆயிரம் ரூபாய் ஒன்றும் ஆகாமல் இருந்தால் சரி என்கிற எண்ணம் இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கு எடுத்துக்காட்டாக தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மூன்று கண்டெய்னர்களில் சுமார் 5000 கோடி பணம், வாராக்கடன் சுமார் இரண்டு இலட்சம் கோடி, சுவிஸ் வங்கியில் இருந்த பதினைந்து இலட்சம் கோடி, கடன் தள்ளுபடி சுமார் இரண்டு இலட்சம் கோடி, சமீபத்தில் சுமார் ஒண்ணேகால் லட்சம் கோடி அளவுக்கு கறுப்புப்பணம் வெள்ளையாக்கிய வாய்ப்பு, அதன் பின்னும் வருமானவரி சோதனையின் போது கண்க்கில் வராமல் பிடிபட்ட கோடிக்கணகான பணம்! இவைகள் தான் நம்நாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை. இன்னும் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்பது தான் ஒரு அரசாங்கத்திற்கு வேலையா? அந்த பணமெல்லாம் வெற்றுக் காகிதமாக்கியது இந்தச் செயல். இதற்கெல்லாம் முடிவுகட்ட பாரபட்சமில்லாமல் முடிவுகட்டவே இந்த ஏற்பாடு!

சிலர் சொல்கிறார்கள், 1946 மற்றும் மொராஜிதேசாய் ஆட்சியில் இத்தகைய செயல் நடந்தது. ஆனால் எவ்வித பலனும் அளிக்கவில்லை என்கிறார்கள். அன்றைய காலம் வேறு, இன்றைய கணினி காலம் வேறு! இன்று தொழில்நுட்பம் சிறந்து இருக்கின்றது. அதை உபயோகித்துக் கொள்ள இது தான் வழி. அன்று நடைபடுத்திய வழி வேறு. இன்று நடைப்படுத்துக்கின்ற வழி வேறு. இன்று பணப்பழக்கத்திற்கும், பணமுதலீடு செய்வதற்கும் பல வழிகள் இருக்கின்றன. அவைகளெல்லாம் சில அடையாள அட்டையின் உதவியோடு கணக்கில் காட்டப்படுகின்றன. இந்த நடைமுறை அப்போது இல்லை.

இந்தத் திட்டம் எடுத்தேன், கவிழ்தேன் என்றது போல் செய்யப்படவில்லை. பல மாதங்களாய் திட்டமிட்ட செயல் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. சாம பேத தான தண்டம் என்கிற வரிசையில் வந்துள்ளது. அனைவருக்கும் கணினி மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு, பொது மற்றும் விவசாய மக்களுக்கு மானியம் தருவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் மற்றும் குடும்ப அட்டை, பான் கார்டு, கணினியில் வியாபாரம் மற்றும் வரி கணக்குத் தாக்கல், கறுப்புப்பணத்தை வெள்ளைபணமாக்கும் வாய்ப்பு என்று பலவேறு எச்சரிக்கைகள் கொடுத்த பிறகே இந்த நடவடிக்கை! இதுநாள் வரை உலக வங்கியில் வாங்கிய கடன் எங்கே? அரசு வருமானம் எங்கே? வளர்ச்சி எங்கே? என்கிற பல கேள்விக்கான பதில் இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது தான்!

இப்போதுள்ள ஊடகங்கள் சிலரைக் காக்கவும், விளம்பரத்திற்காகவும், தங்களின் கருத்துக்களை திணிப்பதற்காகவும், ஒன்றுமே இல்லாததை ஆ, ஊ என்று மக்களை உசுப்பேற்றும் இயந்திரமாக செயல்படுகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது. சமீபத்தில் நடந்த உள், வெளிநாட்டுத் தேர்தலின் கருத்துக் கணிப்பு பொய்யாய்ப் போனது இதற்குச் சாட்சி. ஏன் பொய்யாய் போனது என்பது இப்போது மக்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கும்.


இந்த  சூழ்நிலையிலும் சிலர், இருபது விழுக்காடு மக்கள் தவறு செய்பவர்களுக்காக எண்பது விழுக்காடு மக்களை சிரமத்திற்கு ஆளாக்கலாமா? என்று என்றைக்குமில்லாமல் மிகுந்த அக்கறையாக தினமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதற்காக இவ்வாறு பேசுகிறார்கள். அவர்களின் பின்னால் இருக்கும் பலவீனம் என்பதை மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டதால் சிரமத்தைப் பார்க்காமல், எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

எனக்கு ஒன்று விளங்கவில்லை. ஒரு பாத்திரத்தில் உள்ள பாலில் சில துளி விஷம் இருந்தால் பரவாயில்லையா?  அந்த விஷம் பாலை என்ன செய்துவிடும் என்று எண்ணி நாம் அதை பயன்படுத்துவோமா? அட ஆங்காங்கே தீவிரவாதிகள் குண்டு வைக்கிறார்கள். இனிமேலும் ஏதோ சில இடத்தில் குண்டு வைக்கப்போகிறார்கள் என்கிற தகவல் வருகின்றது. அப்போது அரசாங்கம், சில இடங்களில் தானே! என்று சும்மா இருக்கின்றனரா? விமான நிலையம், இரயில் நிலையம் போன்ற இடங்களில் பாரபட்சமில்லாமல் அனைவரையும் சோதிப்பதில்லையா? சரி, உடம்பு சரியில்லை. அசதியாய், பலவீனமாய் இருக்கின்றது. அப்படியே இருந்தால் பரவாயில்லை என்று விட்டுவிடுகின்றோமா? உடம்பு அனைத்தும் ஸ்கேன் செய்தும், பலவித சோதனைகள் செய்து கொள்கிறோமா? இல்லையா? இவ்வளவு ஏன்? ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் விலையுயர்ந்த பொருள் ஒன்று திருடு போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்கிறார்கள். உடனே கதவுகளை அடைத்து அங்குள்ளவர்களை ஒருவர் விடாமல் சோதனை செய்யப்படுகின்றனவா? இல்லையா? அதுபோலத்தான் இன்று பல நிகழ்வுகள் நடக்கின்றது. நான் ஒரு குற்றமும் செய்யாதவன் என்று வாய் வார்த்தை பேசாமல் அதை மற்றவர்களுக்கும் நிரூபித்துக் காட்டுவதே கடமையும், நேர்மைக்கு அடையாளமும் ஆகும்.   

இப்போது மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யாரென்றால் வரம்பிற்குள் சேமிப்பு செய்பவர்கள், சட்டப்படி சொத்து சேர்த்திருப்பவர்கள், ஒழுங்காக வருமானவரியை கட்டிக் கொண்டிருப்பவர்கள், வங்கி மூலம் வியாபாரம் மற்றும் பணப்பரிமாற்றம் செய்பவர்கள், வருமானம் - செலவுக் கணக்கை ஒழுங்காக வைத்திருப்பவர்கள், கள்ளப்பணம், கறுப்புப்பணம் மற்றும் போலி பணத்தை வெறுப்பவர்கள், நம்பர் டு வியாபாரம் செய்யாதவர்கள், பிறர் பெயரில் பணம் மற்றும் சொத்துகளைச் சேர்க்காதவர்கள், அதையும் மீறி அரசாங்கம் கொடுத்த கடைசி வாய்ப்பான அதிகம் சேர்த்த கறுப்புப்பணத்தை கணக்கில் காட்டி அதற்கு முறையாக வரிசெலுத்தியவர்கள்.

பலருக்குச் சந்தேகம் வருகின்றது. சிலர் அதாவது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நேரத்திலும் தாராளமாக செலவு செய்கிறார்களே அது எப்படி? என்று. இதற்கு பதில் ரொம்ப எளிது. அவர்கள் பெரும்பாலும் வங்கிகளிடம் மூலம்தான் பணப்பரிவர்தனை செய்துவருபவர்களாக இருப்பார்கள். அவர்கள் கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள் / சேமிக்கிறார்கள். அதற்குத் தகுந்தாற்போல் கோடிக்கணக்கான பணத்தை சரிபடி கணக்கு காட்டி வரியினைக் கட்டுகிறார்கள். அந்த லாபப் பணத்தைத் / சேமித்தப் பணத்தைத்தான் இப்போது தாம் தூம் என்று செலவு செய்கிறார்கள். உங்களிடத்திலும் கணக்குக் காட்டிய பணம் அதிகமாக இருந்தால் இப்போது செலவழிக்கலாம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் இதுவரை டாம் டூம் என்று செலவழித்தவர்கள் இப்போது அடக்கி வாசிக்கிறார்கள் என்றால், அதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

ஒரு சிலர் இதனால் எல்லாம் கறுப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் கட்டுப்படுத்தவோ அல்லது கண்டுபிடிக்க முடியாது என்று கூக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது விதைத்தவுடன் மரம் வளர்ந்துவிடுமா? பத்துமாதம் நிறைவு அடையாமல் குழந்தை பிறப்பு பற்றி சந்தேகம் கொள்ளலாகுமா? அதுபோல மத்திய அரசு கொடுத்த காலக்கெடு முடியாமல் அதனைப் பற்றி விமர்சனம் எந்தவகையில் நியாயமோ? என்று தெரியவில்லை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது. இதில்லாமல் சிலருக்கு இவ்விசயம் முன்பே தெரிந்துள்ளது. ஆகையால் அவர்கள் வங்கியில் அதிக டெபாசிட் செய்துள்ளனர் என்று கூறுகின்றனர். இப்படிப் பார்த்தால் தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்கள் எல்லோருக்கும் முன்பே வினாத்தாள் கிடைத்திருக்கின்றன என்று சொல்வது போல் இருக்கின்றது. அது சரிதானா? நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு சாரார் எறும்பாய், தேனியாய், நன்றி காட்டும் நாயாய் சுறுசுறுப்பாய் இயங்குவதைப் பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்வது நியாயமாஅவர்களுக்கு கட்டாயம் இவர்கள் உதவி செய்யமாட்டார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று வேடிக்கை மட்டும் பார்க்கலாம் இல்லையா?     

சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க ஒற்றை இலக்கம், இரட்டை இலக்க வாகன விதிமுறை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கும் போது, இந்தத் திட்டம் கோமாளித்தனமாக இருக்கின்றது என்றும், இதனால் எவ்வித பயனும் இல்லை என்று கூறினர். அதாவது தங்களது சொந்த வாகனத்தை ஐம்பது விழுக்காடு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டம் போடுவதுபோல் உள்ளதல்லவா? ஆரம்பத்தில் மக்களும், ஊடகங்களும் என்னென்ன விமர்சனம் செய்தார்கள் என்று ஒருதடவை நினைவுபடுத்திப் பாருங்கள். அதுபோலத் தான் இது. இதன் பலனை அடுத்தமாதத் தொடக்கத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். தலைநகரில் வாகனம் இல்லாமல் மக்கள் இருப்பார்களா? அவர்கள் அனைவரும் பொறுமையைக் கடைப்பிடித்து விதியைப் பின்படுத்தவில்லையா?

எப்போது மக்க்ளின் நன்மைக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு அரசியல் தலைவரால் இந்த மாதிரி துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டதோ, பின் வரும் காலங்களில் கூட எப்போதெல்லாம் விலைவாசி ஏற்றமோ, கறுப்புப் பணம் புழக்கமோ, வாராக் கடன் அதிகரித்தோ, அதிக வரி ஏய்ப்பு நடந்தாலோ, போலிப் பணம் நடமாட்டமோ, தீவிரவாதிகள் அச்சுறுத்தலோ, லஞ்சம், ஊழல் அதிகரித்தாலோ, பொதுச் சேவையில் ஏமாற்று வேலையோ இன்னும் மக்களை ஏமாற்றும் பிற வேலையில் ஈடுபடுவது தெரியவந்தால், இனி மக்களே 'உயர் மதிப்பு பணத்தை செல்லாது' என்று எந்த கட்சி அறிவிக்கின்றதோ அந்தக் கட்சிக்கே எங்கள் வாக்கு' என்கிற கோரிக்கை வைப்பதற்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்றது. ஆகையால் எந்த மதிப்பு கொண்ட பணம் இருந்தாலும் சரி, அதில் உள்ள கவர்னரின் கையொப்பத்திற்கு மேல் ஒரு வாசகம் இருக்கின்றதே அந்த வாசகத்தில் உள்ள I promise to ... வரியினைத் தொடர்ந்து  until demonetization action taken.என்கிற இந்த வரியினையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.



முடிவாக, நம்நாட்டு அரசியல் சரித்திரம் புதிதாக எழுதப்பட்டுள்ளது. இனி எழை, எளியவர்கள், நடுத்தர மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். அவர்களின் கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகிக் கொண்டு வரும் என்பதைப் போகப்போகத் தெரியவரும்.

************************************************************************                                    



Monday, 24 October 2016

பெருமைமிகு தமிழ்மொழியா? பிறஎழுத்துக் குப்பைமேடா?

சென்ற 23.10.16 (ஞாயிறு) அன்று திரு. ரவி தமிழ்வாணன் (நிர்வாக இயக்குநர், மணிமேகலைப் பிரசுரம்) முன்னிலையில் நமது மாமதுரை கவிஞர் பேரவைக் கவிஞர் திருமதி மு.வாசுகி அவர்களின் கவிதை படைப்பாகிய 'இவர்களும் இந்நாட்டின் கண்கள்' என்கிற நூலை மாமதுரை கவிஞர் பேரவை, மதுரையில் வெளியிட்ட நிகழ்ச்சியின்போது எடுத்த சில மின்படங்கள்.













அன்றைய கவியரங்கில் நான் படைத்து, வாசித்த கவிதை

பெருமைமிகு தமிழ்மொழியா?
பிறஎழுத்துக் குப்பைமேடா?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

நாட்டுக்கு மட்டுமா சுதந்திரம் பொருந்தும்!
நம் தமிழ்மொழிக்கும் சுதந்திரம் பொருந்துமே!
பிறமொழி கலந்து சுதந்திரமாகப் பேசலாம்?
பிறஎழுத்து சேர்த்து சுதந்திரமாக எழுதலாம்?

குடியிருக்கும் வீட்டினுள்
குப்பையைக் கொட்டுவாயா?
பிறஎழுத்து குப்பை தமிழில் சேர்த்தால்
பிணவாடை வீசாதா?

பெண்களுக்கு கூந்தல் அழகு தரும்
பெண்டிற்கு மீசை அழகு தருமா?
கூந்தலாய் தமிழ் எழுத்து இருக்க
கொடுக்கு மீசையாய் பிறஎழுத்து எதற்கு?

உயிருக்கு ஒப்பான தமிழ்மொழியில்
ஆணியாய் பிற எழுத்துகளை அறைகின்றாயே!
கசாப்புகாரனுக்கு ஆடு பலியாகிறது
காசுக்காக தமிழ் எழுத்துகள் பலியாகிறது.

தமிழா! அரைகுறையாக அந்நியமொழியினை
தமிழில் பேசி மகிழ்ச்சி அடையாதே!
இளித்தவாய்த் தமிழர்கள் கைத்தட்டுவார்கள்

இங்கிலீசுகாரனோ தலையில் குட்டுவான்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Wednesday, 12 October 2016

‘விதி’யை வெல்ல ஊரால் முடியும் தம்பி!

விதியை வெல்ல ஊரால் முடியும் தம்பி!
சிறு கதை
மதுரை கங்காதரன்

கடவுளுக்கு இரக்க குணம் இருக்கின்றதா? என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? ‘ஆமாம் என்று சொன்னால் பின் ஏன் தினம்தினம் நம்மை அச்சுறுத்தும்படி பல சம்பவங்கள் நடக்கின்றது? ‘எல்லாம் விதி என்று ஏற்றுக் கொண்டாலும் அந்த விதியை ஒரு நாள் மதியால் வென்றே தீருவேன் என்கிற உறுதியோடு இருந்தான் ஒரு கடவுள் பக்தன்.

'கடவுளே, ஏன் மனிதர்களை வாட்டி வதைக்கின்றாய்? என்ன தான் இறப்பதற்காகவே மனிதன் பிறக்கின்றான் என்கிற விதி இருந்தாலும் தன் முழு ஆயுளை முடிக்கவிடாமல் இயற்கை என்கிற பெயரில் நீ செய்யும் லீலைகள் சரி தானா? ஏட்டிக்குப் போட்டியாய் ஏன் சில காரியங்களைச் செய்கின்றாய்? மனிதர்கள் தான் அவரவர் கடமையைச் செய்யாமல் வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் நீயும் கூடவா இப்படி? உன் பொழுது போக்கிற்காக எங்கள் உயிரை அல்லவா மாய்க்கின்றாய்! இதற்கு முடிவே இல்லையா?' என்று அந்த பக்தனின் இதயத்திலிருந்து எழுந்த ஒலி, அருள் உலகத்தில் எதிரொலித்து ஒரு குலுங்கு குலுக்கியது.

இக்காலத்திலும் மனமுருகி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்ட பக்தன் இருக்கின்றானா? அவனைச் சந்தித்து அவன் குறையினை நீக்க வேண்டும்என்கிற கடவுளின் ஆசையும், ஆர்வமும் நம்மையும் மெய் சிலிர்க்க வைக்கின்றதல்லவா?

"எமதர்ம ராஜரே, சற்று முன் நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் குரலைக் கேட்டீர்களா?"
"ஆம் பிரபு, இது நாள் வரை நம்மைப் பற்றி யாருமே இவ்வாறு பேசியதே இல்லை. மக்களுக்கு நாம் என்னதான் வாரி வழங்கினாலும் அவனுடைய பேராசையை என்ன சொல்வது? பணம், செல்வம் கொண்டவன் மென்மேலும் செல்வம் சேர்க்கிறான். ஏழையானவன் அவனிடத்தில் ஏமாந்து விட்டு மேற்கொண்டு ஏழையாக அல்லவா ஆகிறான். உழைப்பவனை விட ஏமாற்றுபவனைத் தானே மனிதன் அதிகமாய் நம்புகிறான். சில சமயங்களில் நம்மையும் கூட துச்சமாக அல்லவா மதிக்கிறான்!" என்று எமதர்மர் தமது தரப்பில் இருக்கும் நியாயத்தை கர்ஜனை கொண்ட குரலோடு எடுத்துச் சொன்னார்.
"எமதர்மரே, என்ன தான் நியாயம் நம் பக்கத்தில் இருந்தாலும், நம் மீது பக்தி கொண்டிருக்கும் அந்த பக்தனின் ஆதங்கத்தை செவி சாய்ப்பது நமது கடமையல்லவா? உடனே புறப்படுவோம். அந்த பக்தனின் குறையை உடனே தீர்ப்போம்"
"அப்படியே ஆகட்டும் பிரபு. உங்கள் சித்தம் படியே நடக்கிறேன்" என்று கூறிய எமதர்மரும், கடவுளும் அந்த பக்தனை நோக்கி அனுகினார்கள்.

இதெல்லாம் நடப்பது கனவல்ல. எல்லாம் உண்மையாக நடந்து கொண்டிருக்கின்றது.

அவ்விருவரையும் கண்ட பக்தன், இன்ப அதிர்ச்சி அடைந்தாலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் மிகச் சாதாரணமாகப் பார்த்தான். அந்தப் பார்வையில் 'என் பக்தியினை ஏற்று ஒரு நாள் கடவுள் இங்கு வந்தே தீருவார்' என்கிற நம்பிக்கை தெரிந்தது என்றே சொல்ல வேண்டும்.

"அகிலத்தை காக்கும் கடவுளே, தங்களை வணங்குகிறேன். என் நம்பிக்கையை உண்மையாக்கிய தங்களுக்கு நன்றி" என்று பக்தன் தன் பக்தியையும், பணிவையும் தன் உடலால் வெளிப்படுத்தினான்.
"பக்தனே, பொன்னையும், பொருளையும் பிரதானமாக நினைக்கும் இந்த கணினியுகத்தில் என்னை மறக்காமல் நினைத்திடும் உன்னை வாழ்த்துகிறேன். நீ என்னை அழைத்த காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?"
"கடவுளே, சமீப காலமாக இயற்கை என்கிறப் பெயரில் தாங்கள் செய்யும் அட்டகாசம் எங்களால் தாங்க முடியவில்லை. ஆங்காங்கே மழை, வெள்ளம், அனல் காற்று, சூறாவளி, பூகம்பம் என்று ஒரு பக்கமும், விலைவாசி என்கிற அரக்கன் ஒரு பக்கமும், இது போதாதென்று சில அரசியல் தலைவர்கள் செய்யும் அலப்பறையும், வளர்ச்சி என்கிறப் பெயரில் கணினி, கைபேசி செய்யும் அவலங்களும் ஒன்றோடொன்று போட்டிப் போட்டுக் கொண்டே வளர்ந்தால், வாழத்தான் முடியுமா? அல்லது மடியத்தான் வேண்டுமா? இதற்கு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று இத்தனை நாள் மனதில் வைத்திருந்த அத்தனை குறைகளையும் உலக மக்கள் சார்பில் முன் வைத்தான் பக்தன்.

"பக்தனே, இவற்றுக்கெல்லாம் காரணம் நாம் அல்ல. மாற்றங்கள், முன்னேற்றம் என்கிற பெயரில் நீங்கள் செய்யும் தில்லுமுல்லுகள். கவர்ச்சியான விளம்பரத்தில் மதி மயங்கியதால் வந்த விளைவே! மேலும் நான் கொடுத்திருக்கும் அறிவைக் கொண்டு இயற்கைக்குப் புறம்பாக செயற்கையாக பலவற்றை உருவாக்குவதே காரணம். அதனால் வரும் பக்கவிளைவுகள்  தான் இவைகள். எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் பேராசை இருக்கின்ற வரையில், எனக்குக் கட்டுப்பட்டு இருக்கும் இயற்கையின் சீற்றம் அவ்வப்போது அதன் வேலைகளைக் காட்டத் தான் செய்யும். அது ஒருவகையில் முடிவில்லாத தொடர்கதை! அது சரி, நீ அழைத்ததன் காரணம் யாதோ?"

"தேவனே, நீங்கள் எழுதிய விதிகளை என் மதியால் வென்று காட்டுகிறேன்"
"பக்தா, அது உன்னால் ஒரு காலும் முடியாது. ஏனென்றால் விதி விளையாடும் போது மதி வேலை செய்வது மிகக் கடினம். வேண்டுமென்றால் நீ முயற்சி செய்து பார். முடிகின்றதா? என்று பார்ப்போம்" என்று கடவுளே பக்தனிடம் சவால் விடுவதை கண்டு பதறிய எமதர்மர்

"பிரபோ, ஏன் இந்த விபரீத விவாதம். விதியையெல்லாம் மனிதன் மதியால் வென்று விட்டால் இந்த உலகம் அழிந்துவிடுமல்லவா? அதற்கு நாம் காரணமாக இருக்கலாமா?"
"எமதர்மரே, உங்கள் கருத்தில் உண்மை உள்ளது. முக்காலமும் அறிந்த நாமே நம் இயக்கத்தில் சந்தேகம் கொள்ளலாமா? ஆகையால் தன்னலம் கருதாமல் மக்கள் நலன் கருதும் இந்த பக்தனுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுத்துத் தான் பார்ப்போமே!"
"ஆகட்டும் பிரபு"
"பக்தனே, அடுத்த மாதம் உன்னைச் சுற்றிலும் என்னென்ன அழிவு வர இருக்கின்றது என்பதை இந்த எமதர்மர் சொல்லுவார். கவனமாகக் கேள்" என்று எமதர்மரைப் பார்த்தார்.

கடவுளின் கட்டளைக்கிணங்க அடுத்த மாதத் திட்டத்தினைப் படிக்கலானார்.
"செம்பாக்கம் பகுதியில் தரமில்லாத பல அடுக்கு மாடிக் கட்டிட வேலை நடந்து வருகின்றது. அது அடுத்த மாதம் இடிந்து அதனால் 42 பேர் இறப்பார்கள். பிறகு தென்மாலையூரில் ஒரு கடையில் காலாவதியான திண்பண்டம் சாப்பிட்டு 2 குழந்தைகள் இறப்பார்கள். மடுகப்பட்டியில்
பெய்யப் போகும் அடமழையால் 54 பேர் பலியாவார்கள். பலர் வீடுகள் இழந்து தவிப்பார்கள். இவைகள் தான்" என்று எமதர்மர் எடுத்துரைக்க அனைத்தையும் அந்த பக்தன் கவனமாகக் கேட்டான்.
"பக்தனே, இப்போது மகிழ்ச்சி தானே. நடக்கப் போகும் உயிர்பலிகளை உன் மதியால் தடுத்துவிட்டால் நான் மிகவும் மகிழ்வேன்"
"கடவுளே, என் நம்பிக்கை வீண் போகவில்லை. உங்கள் திட்டங்களை என் மதியால் முறியடிப்பேன். இந்த வாய்ப்பு கொடுத்தமைக்கு நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன்"
"நாங்கள் வருகிறோம்" என்று இருவரும் அருள் உலகத்திற்குச் சென்று விட்டனர்.

இது கனவா? நனவா? என்கிற சந்தேகம், சிறிது நேரம் கழித்த பின்பு தான் அந்த பக்தனுக்கு நம்பிக்கை பிறந்தது. தெரிந்துவிட்ட தேவரகசியத்தை தடுக்க அவனின் மனம் வேகப்படுத்தியது. முதல் திட்டத்தில் பலி கொடுக்கக் காத்திருக்கும் அந்த செம்பாக்கத்தில் புதிதாய் பிரமாண்டமாய் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டிடத்தைப் பார்த்தான் பக்தன். பார்த்தவுடன் பிரம்மித்துப் போனான். இந்த இடத்தில் முறையான அனுமதி இருக்கின்றதா? என்று விசாரித்துப் பார்த்ததில் நான்கு தளத்திற்கு அனுமதி பெற்று எட்டு தளம் எழும்பியிருந்தது. அதோடு வேகவேகமாக வேலை நடந்து கொண்டிருந்தது. தனக்குத் தெரிந்த ஒரு பொறியாளர் மூலமாக அந்தக் கட்டிடத்தில் கட்டப்படும் கலவை சரியான விகிதத்தில் இல்லையென்று தெரிந்து கொண்ட உடனே, கட்டிடத்திற்குச் சொந்தமான சொந்தக்காரரையும், அதைக் கட்டும் ஒப்பந்தக்காரரையும் சந்தித்துவிடத் துடித்தான். அந்த இடத்திற்கு ஓடினான்.
நல்லவேளை இருவரும் ஒரே இடத்தில் இருப்பது எனது பாக்கியம் என்று மனம் சந்தோசப்பட்டாலும், விதி ரூபத்தில் வரும் சதியை இவர்களைக் கொண்டு வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான்.
"ஐயா, வணக்கம்" என்று பவ்வியமாய் அவர்களைப் பார்த்துக் கும்பிட்டான் பக்தன். அந்த பணிவு அவர்களிடமிருந்து பதிலாய் எதிர்பார்த்த பக்தன் ஏமாந்தான்.
"ம்.. வணக்கம்.. வணக்கம்" என்று அலட்சியமாய் வார்த்தைகள் வெளிவந்தன.
"ஐயா, நான் சொல்லப் போகும் செய்தி, உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். எப்படிச் சொல்வது என்று ..." இழுத்தான் பக்தன்.
"சொல்லறதுன்னு வந்துட்டீங்க, சும்மா சொல்லுங்க" என்று பேச்சை முடுக்கிவிட்டனர்.
"அது வந்து.. வந்து .. அடுத்த மாதம் உங்க கட்டிடம் இடிந்து 42 பேர் சாகப் போறாங்கன்னு விதி இருக்கு. அவங்களை மதியாலே காப்பாத்தனும். அதனாலே அடுத்த மாதம் பூராவும் கட்டிடம் கட்டுவதை நிறுத்துங்க. தரமான பொருட்களைக் கொண்டு பலமான அஸ்திவாரம் போட்ட பிறகு, சரியான கலவையில் கட்டிடத்தை கட்டுங்க. அப்படிச் செஞ்சா தான் விதியை வெல்ல முடியும்" என்று தான் அறிந்த தேவரகசியத்தை விதியாக விவரித்தான்.

"என்ன.. என்ன ஒரு மாசம் கட்டிடம் கட்டுறதை நிறுத்தி அஸ்திவாரம் பலமாக்கி சரியான கலவையிலே கட்டிடம் கட்டணுமா? என்ன விளையாடுறேயா? அப்படிச் செஞ்சா எத்தனை லட்சம் நஷ்டமாகும்னு தெரியுமா? இந்த இடத்திலே நாலு மாடிக் கட்டிடத்திற்குப் பதிலா எட்டு மாடி கட்டிடம் கட்டினாத் தாங்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா? வேற வழியில்லை. லாபம் அதிலேத் தான் பார்க்கணும். அப்படி மீறி செத்தா அரசாங்கம் பார்த்துக்கும். உன்னோட புத்திமதி எங்களுக்குத் தேவையில்லை. நானே கஷ்டப்பட்டு கோடி கணக்கிலே கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்து இந்த கட்டிடம் கட்டுறதுக்கு அனுமதி வாங்கியிருக்கிறேன்.
அதைப் போயி விதி அது இதுன்னு சொல்லி கெடுக்கப் பார்க்குறேயே. வேற வேலை இருந்தா பாரு. எங்களுக்கு நிறைய வேலைங்க இருக்கு. இப்ப நீங்க போகலாம்" என்று சொல்லிய அவர்களின் பதிலைக் கேட்டு ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த பக்தன், அங்கு ஓடிக் கொண்டிருக்கும் டி.வியில் அந்த கட்டிடத்தின் ஸ்திரத் தன்மையையும், தரத்தையும் பற்றி பிரபல நடிகர் விவரித்திக் கொண்டு இருப்பதைப் பார்த்த பக்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. விதியோ அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தது.

விதி நிர்ணயித்த நாள் வந்தது. கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அனைத்து ஊடகங்களில் '42 பேர் பலி' என்கிற செய்தி மின்னல் வேகத்தில் பரவி அனைவரின் அனுதாபத்தைப் பெற்றது. அரசு பலியானவர்களின் குடும்பத்திற்கு கனிசமான தொகையை தர அறிவித்தது. காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கச் சம்மதித்தது. அனைத்தையும் பார்த்த பக்தனோ தலையில் அடித்துக் கொண்டான்.

முதல் விதியில் தோற்ற மனம் இரண்டாவது விதியை வெல்ல முனைந்தது. அடுத்து அந்த திண்பண்டம் விற்கும் கடைக்குச் சென்றான்.
"வாங்க சார், என்ன வேண்டும்?" என்று கடைக்காரர் அனைவரிடத்தில் வழக்கம் போல் வரவேற்கும் வாடிக்கையாளராக அந்த பக்தனை வரவேற்றார்.

"ஐயா, நான் எதுவும் வாங்க வரலே. இந்த மாசத்திலே உங்க கடையிலே நடக்கப் போகும் விதியோட வேலையைச் சொல்ல வந்திருக்கிறேன். நீங்க விற்கப்போற திண்பண்டத்தைச் சாப்பிட்டு 2 குழந்தைங்க சாகப்போறாங்க. அதனாலே காலாவதியான அந்த திண்பண்டத்தை விற்காதிங்க. அதை குப்பைத் தொட்டியிலே போடுங்க" என்று இரண்டாவது இரகசியத்தை வெளிப்படுத்திஅதையாவது வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைத்தான் அந்த பக்தன்.
"ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும். ஏற்கனவே காலாவதியான இந்த திண்பண்டத்தின் தேதியை அழித்து அதிலே புதுக்காலாவதியான தேதியை போட்டது? நீ என்ன கடவுளா?"
"அதெல்லாம் சொல்ற நிலைமையிலே நான் இல்லை. காலாவதியான தின்பண்டங்களை என்ன செய்யப் போறீங்க?"
"அதெல்லாம் குப்பையிலே தூக்கிப் போடமுடியாது. எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டமாகும்"
"அந்த ஆயிரம் ரூபாயை நான் தர்றேன். இந்த ஆயிரம் ரூபாய்" என்று நீட்டும் போது 'இம்முறை எனக்குத் தான் வெற்றி' என்கிற தோரணையும் வந்தது.
சற்று நேரத்தில் கடைக்காரன் அலறினான். இங்கும் அங்கும் ஓடினான். தேடினான். துலாவினான். அவன் செய்யும் செய்கையில் பக்தன் பொறுமை இழந்தான்.
"என்னத்தைத் தேடுறீங்க?'
"அந்த பாக்கெட் வித்திருச்சி போலிருக்கு. தனியா எடுத்து வச்சிருந்தேன். இப்போ காணலே!" என்கிற பதிலைக் கேட்ட பக்தனின் இரத்தம் 'பக்' கென்று உறைந்து. ஏது செய்வதறியாமல் திணறினான். இத்தனைப் பெரிய நகரத்தில் அந்த தின்பண்டத்தை வாங்கிச் சென்றவரை எப்படித் தேடுவது? என்று விழித்தான். அவன் இவ்வாறு திண்டாடுவதைப் பார்த்து விதி புன்னகைத்தது.

சொன்னது போல் இரு குழந்தைகள் பலியான செய்தி காட்டுத் தீயைப் போல் பரவியது. ஆனால் உண்மையான காரணம் மூடி மறைக்கப்பட்டது. பணம் விதியை விலைக்கு வாங்கிவிட்டது. விதி மதி என்னும் ஆடு புலி ஆட்டத்தில், விதி உருவத்தில் இருக்கும் புலிக்குத் தான் எப்போதும் வெற்றி கிடைக்கும் என்பதை ஆணித்தரமாக நம்ப ஆரம்பித்தான்.
மூன்றாவது விதியை நினைவுக்குக் கொண்டு வந்தான்.

மடுகப்பட்டிஅடைமழை -54 பேர் பலி என்ற விதி கண் முன்னே நின்றது. தொலைக்காட்சிப் பெட்டியில் எந்த 'சேனல்' திருப்பினாலும் மடுகப்பட்டியின் வானிலை முன்னறிவிப்பு எச்சரித்தது. இன்று மடுகப்பட்டியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு, மாறி மாறி அறிவுறுத்திக் கொண்டிருந்தது.
அதைக் கேட்ட பக்தன் தன்னைத் தானே சிரித்துக் கொண்டான். தான் நேரடியாச் சென்று விதியைப் பற்றி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காதவர்கள் இந்த கண்டு கொள்வார்களா என்ன? என்று நொந்து கொண்டான்.
இரவுக்குள் மடுகப்பட்டி அடைமழையினால் அதிகமாக பாதித்தது என்கிற செய்தி பரவியது.
மறுநாள் எல்லா ஊடகத்தில் அதைப் பற்றிய செய்திகளைத் தான் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் பலியானவர்களின் தகவல் இல்லாது கண்டு பக்தன் ஏமாந்து போனான் என்று சொல்வதைக் காட்டிலும் அதனைப் பற்றியச் செய்தியைத் தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டான். ஒருவேளை ஊடகங்கள் மறைக்கின்றனவா? என்று பல கோணத்தில் சந்தேகித்தான்.

"மடுகப்பட்டிக்குக் கொடுத்த வானிலை எச்சரிக்கையினால் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், ஆளும் கட்சி, எதிர்கட்சி அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போன்ற அனைவரும் ஒன்றாக இணைந்து, இரவையும் பாராது அந்த அடாத மழையிலும் விடாமல் அங்கிருந்த மக்களை ஒருவரையும் விடாமல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதோடு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை பல சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புவதைப் பார்த்த பக்தன் பூரித்துப் போனான். இதனால் உயிர் பலி முற்றிலும் தடுக்கப்பட்டது என்றது. இது அனைவரின் முயற்சியாலும், விருப்பு வெறுப்பு காட்டாமல் ஒன்றுபட்டு ஈடுபட்டதோடு இந்த இளைஞர்கள் சமுதாயத்தின் மகத்தான பொறுப்பினால் தான் இந்த மாபெரும் சாதனை செய்ய முடிந்தது என்று ஒலித்தது. இந்த சேவை உலக மக்கள் அனைவவரையும் தட்டி எழுப்பியதோடு,  இது ஒரு முன்னுதாரணமாய்த் திகழச் செய்துவிட்டது என்று உலக ஊடகங்கள் அனைத்தும் வானளவு பாராட்டியது.

இந்த முறை பக்தன் விதியைப் பார்த்தான். அது முன்னைவிட நன்றாகச் சிரித்தது. அதன் காரணமும் பக்தனுக்கு விளங்கியது. மதி வெல்ல வேண்டும் என்றே விதியும் நினைக்கின்றது. ஆனால் அது நடக்க வேண்டுமென்றால் தனி ஒருவனின் முயற்சியை விட கூட்டு முயற்சி என்றும் வெற்றி பெறும் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அந்த நிகழ்ச்சிஅவனுக்கு விதியை வெல்ல ஊரால் முடியும் தம்பி !’ என்று அறிவுரை கூறுவதாக இருந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&