Pages

Thursday 8 August 2013

இது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்! 100% அரசியல் நிகழ்ச்சி

இது நம்ம சேனல் வழங்கும்
சின்னத்திரையில் முதன்முறையாக



நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்!
நூறு சதவீதம் அரசியல் நிகழ்ச்சி


பொதுவா கட்சியை ஆரம்பித்த பிறகு தான் டி.வி சேனலை தொடங்குவாங்க! நாங்க கொஞ்சம் வித்தியாசமாக டி.வி சேனலை தொடங்கிய பின்னே கட்சியைத் தொடங்கலா ம்ன்னு இருக்கிறோம். எப்படி ஒரு தொழில் தொடங்கும்போது அதற்குத் தகுதியானவர்களை பேப்பர், டி.வி. ரேடியோ மூலம் விளம்பரம் கொடுத்து நேர்முகத் தேர்வு மூலமாக சரியான ஆட்களைத் தேர்வு செய்கிறோமோ அது போல நாங்க தொடங்கப் போகிற உலகளவிலே மெகா ஹிட் ஆகப்போகும் கட்சிக்கு தகுதி வாய்ந்த எம்.எல்.ஏ க்களைத் தேந்தெடுக்கப் போகிறோம். இந்த வருடம் பத்து  எம்.எல்.ஏ க்களைத் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பவேண்டும் என்கிற இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். இதற்கு காசு,பணம் தேவையில்லை. மக்களுக்காக உழைக்கும் எண்ணமும், நேர்மையும் , எதையும் சாதிக்கும் , சந்திக்கும் துணிச்சலும் இருந்தால் போதும். மேலும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அறிவாற்றலும் வேண்டும். அத்தகைய தகுதி படைத்தோரை தேர்ந்தெடுப்பதற்கு உங்களுடைய முழு ஆதரவு தொடர்ந்து எங்களுக்குத் தரவேண்டுமென்று நாங்கள் இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறோம். 


ஏற்கனவே வெள்ளித் திரையில், சின்னத் திரையில் பல நடிக, நடிகர்களை, பாடலாசிரியர்களை, வசனகர்தாக்களை, இசையமைப்பாளர்களை, கேமரா மேன்களை, குழந்தை நட்சத்திரங்களை அறிமுகப் படுத்திய 'இது நம்ம சேனல்' இப்போது முதன் முறையாக பல  எம்.எல்.ஏ க்களை உருவாக்கும் சிறு முயச்சி தான் இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொள்ள வேண்டுமென்றல் கட்டாயம் ஓட்டு அடையாள அட்டை அவசியம் இருக்கவேண்டும். இது பார்வையாளர்களுக்கும் பொருந்தும். நாடு முன்னேற, நாட்டு மக்களின் முன்னேற்றமே முக்கியம் எனக்கருதி இதில் தேர்ந்தெடுக்கும் நபர்கள் அதற்காக பாடுபடுவார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்க ஆரம்பிக்கப் போகும் கட்சியின் பெயர் ' நீங்களும்  எம்.எல்.ஏ ஆகலாம்' ! ஆமாங்க, இப்போ இருக்கிற அரசியல் இன்னும் கொஞ்ச வருஷம் போனா சுத்தமாக குடும்ப அரசியலா மாறிவிடும் போல இருக்கு. இப்போவே கால் வாசி ஆயாச்சு. பிறகு சாமான்ய மக்களின்   எம்.எல்.ஏ கனவு பலிக்கவேண்டும். அவர்களுக்கும் இந்த அருமையான வாய்ப்பு தந்து மக்களுக்கு உண்மையாக பல சேவைகள் செய்யவேண்டும் . அதுக்கு முன்னாடி 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்கிற வாக்கியம் உண்மையாக்கும் வண்ணம் தான் இந்த ' நீங்களும்  எம்.எல்.ஏ ஆகலாம்' நிகழ்ச்சி.  


இப்போது இருக்கின்ற பல  எம்.எல்.ஏ க்களுக்கு மேடையிலே பேசத் தெரியல்லே! சட்டசபையிலேயும் பேசத் தெரியல்லே. அவங்க எப்படி மக்களோட குறைகளை தலைவருகிட்டே சொல்லுவாரு ? எப்படி குறைங்களை தீர்ப்பாரு? அவங்களுக்கு பணம் கொடுத்தா அல்லது பணத்தைக் காட்டினாத் தான் பேசுவாங்க போலிருக்கு! கண்ணால தெரியுற பிரச்சனைங்க கூட சரி பண்ணமாட்டேன்கீறாங்க . பின்னே எப்படி விவசாயம், தொழில் நடக்கும்? விலைவாசி எப்படிக் குறையும்? அதுக்குக் காரணம் வேற ஒன்னுமில்லைங்க. அவங்களுக்கு கஷ்டம்ன்னா என்னான்னு தெரியாது. அப்படிப் பட்டவங்க எப்படி மக்களோட கஷ்டம் தெரியப் போகுது? இப்படிப் பட்ட்டவங்களைத் தான் நாம மக்கள் பிரதிநிதிகளாக தேந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்புறோம்! 

இப்படியே போன நம்ம நாட்டோட முன்னேற்றம் ஒன்னும் சொல்லிக்கொள்ளும்படியா இருக்காது. 2020 என்ன 3000 ம் ஆண்டில் கூட நம்ம நாடு முன்னேற்றம் அடையாது. ஏனென்றால் இப்போது எம்.எல்.ஏ பதவி, கடையிலே அல்வா வாங்குவதுபோல் அல்லவா இருக்கின்றது. இந்த பதவிக்கு இவ்வளவு ரூபாய் என்று எழுதப்படாத சட்டமல்லவா இருக்கின்றது. அந்த பதவிக்குரிய தியாகம், சேவை என்கிற அழகு போய் லஞ்சம், ஊழல் என்று மாறியல்லவா போய்விட்டது. இன்னும் சிலர் பதவி கிடைத்தும் விளையாடிக்கொண்டும், சொந்த தொழில்களை கவனித்துக்கொண்டும், நடித்துக்கொண்டும் இருப்பது கேலி கூத்தாகிவிட்டார்கள் .

பல டி.வி சேனல்கள் சிறந்த அறிவாளிகளை பொதுஅறிவு மூலம் தேர்ந்தெடுகிறார்கள். இந்த மாதிரி ஏன் பல அரசியல் ஜீவிகளை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி வேறுபாடின்றி மக்களுக்காக சேவைகளைச் செய்யத் துடிக்கும் பல இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் அரசியல் வாழ்கையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி தான் இது. இன்றைய பல இளைஞர்கள் வெறும் புத்தகப் புழுவாக மாற்றி கூலிக்கு மாறடிப்பவர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களும் அதிகம் பேர் சொந்த மூளையை உபயோகிக்காமல் 'ஜால்ரா' தட்டும் வேலையைத் தான் செய்வது வருகிறார்கள். ஒரு ஆரோக்கியமான அரசியல் அடிப்படை மாற்றம் கீழ்மட்டத்திலிருந்து வரவேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சி. அதேபோல் பல இளைஞர்கள் மிகவும் தன்னம்பிக்கையும் மக்களுக்கு பல வழிகளில் அவர்களால் முடிந்த உதவி செய்து வருகிறார்கள். அவர்களை அடையாளம் காட்டி மக்கள் முன் நிறுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். 

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவர்கள் அவர்களின் தொகுதி பற்றிய பல குறைகளை தெரிந்துகொண்டு அதை எப்படி, யாரைக்கொண்டு, எந்த வகையில் சரி செய்ய முடியும்  என்று ஒருபுறம் தொகுதியின் முக்கிய மக்களும் (20 அல்லது 25 பேர்கள்) மறுபுறத்தில் எம்.எல்.ஏ  ஆக தகுதி பெற விரும்புவோரும் (10 பேர்கள்) விவாதம் செய்து அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவந்து மக்களுக்கு அடையாளம் காட்டும் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி. இதன் மூலம் அரசியல் அறிவு, புத்திகூர்மை, சாமர்த்தியம், பேச்சாற்றல், மக்கள் மனநிலை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி, லஞ்ச ஊழல் ஒழிப்பு, பாலியல் கொடுமை, மாறிவரும் உலக மக்களின் எண்ணங்கள், விலைவாசி, தொழில், விவசாயம், தண்ணீர் மாறும் மின்சாரம் போன்ற பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை அவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாமல்லவா!

இதில் வெற்றிபெறும் அதிஷ்டசாலிகள், மக்களைக் கவர்ந்தவர்கள், நல்ல அறிவாற்றல் உள்ளவர்களை பல கட்சிகள் எம்.எல்.ஏ ஆக ஆகும் வாய்ப்பு தரலாம். அவர்களின் எதிர்காலம் மற்றும் மக்கள், கட்சிகளின் எதிர்காலம் கூடவே நாட்டின் எதிகாலம் கட்டாயம் நல்லவிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இதில் பங்கு பெற விரும்புவோர் எப்போதும் தயாராக இருங்கள். உங்களைத் தேடி வருது எம்.எல்.ஏ  பதவி...

/
நாட்டை முன்னேற்றுவோம்!

நாமும் முன்னேறுவோம்!


நன்றி..

வணக்கம்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1 comment:

  1. நாளைய இயக்குநர் போன்று நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம் என்ற நிகழ்ச்சியும் கூடிய விரைவில் வரலாம்.

    ReplyDelete