Pages

Friday 26 April 2013

விளம்பரத்தில் ஏமாறும் மனிதர்கள் - SOME PEOPLE ARE CHEATING BY ADVERTISEMENTS.. நாட்டு நடப்புகள்

விளம்பரத்தில் ஏமாறும் மனிதர்கள் -


SOME PEOPLE ARE CHEATING BY ADVERTISEMENTS..


நாட்டு நடப்புகள் 


இன்றைய காலகட்டத்தில் வீட்டிற்கு வீடு டி வி பார்ப்பதை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அப்படி பார்க்கும் நேரத்தில் விளம்பரம் பார்ப்பதும் தவிர்க்க முடியாததாகும். இந்த பலவீனத்தை பயன்படுத்தி ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்துவிட்டன. முன்பு சினிமாவில் தான் விளம்பரம் பார்க்கமுடியும். அப்போது விளம்பரம் தயாரிக்கும் செலவு, ஒவ்வொரு தியேட்டருக்கு அனுப்பும் செலவு  அதை போடுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் செலவு போன்றவைகள் மிகமிக அதிகம் தான். ஆனால் இப்போது அனைத்து செலவும் மிகமிககுறைவு. மேலும் கணினி உதவியுடன் குழந்தைகளை, மக்களைக் கவரும் வகையில் விதவிதமான விளம்பரங்கள் வந்துகொண்டு இருக்கின்றது. 


ஆனால் கொடுமை / பரிதாபம் என்னவென்றால் கொழுந்துவிட்டு எரியும் விளம்பரத்தீயில் விட்டில் பூச்சிகளாய் மக்கள் தங்களுடைய வாழ்கையை இழந்துகொண்டிருப்பதே உண்மையான நிலைமை. அதிலும் குறைந்த பண முதலீட்டில், குறைந்த காலத்தில் பலமடங்கு சம்பாதிப்பது எப்படி? என்று சொல்லும் விளம்பரம் மிக அதிகம். அதன் பிறகு அழகு குறிப்பு, ஆண்மை, பெண்மை பற்றிய விளம்பரம்...பிறகு நொறுக்கு தீனி வகையறா, குளிர் பானங்கள், ரியல் எஸ்டேட், டுபாகூர் ஸ்கீம்கள் (ஈமு கோழி வளர்ப்பு), சிட் பண்டு, பங்கு மார்கெட், கோல்ட் லோன், வங்கிகள், கல்வி மற்றும் கல்லூரிகள் என்று நீண்டு கொண்டே போகிறது. சரி அந்த விளம்பரங்களை எப்படி மக்களிடத்தில் சேர்ப்பது? அதற்காக  புகழ் வாய்ந்த நடிக , நடிகையர்களைக் கொண்டு விளம்பரம் தயாரிக்கிறார்கள். அதற்கு செலவு அதிமா? இருக்கவே இருக்கு? துணை நடிக , நடிகையர்களைக்கொண்டு தயாரிக்கிறார்கள். 

    

இவ்வளவும் சரி! விளம்பரத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. விளம்பரத்தை பார்த்தவுடன் உடனே செயலில் இறங்கிவிடுகிறார்கள். இதில் கூத்து என்னவென்றால் புதிதாக முளைக்கும் கம்பெனிகளும் என்னவோ தங்கள் வியாபாரத்தில் இருபது, முப்பது ஆண்டுகள் அனுபவமிக்கவர்கள் போல நடிக நடிகையர்களை கொண்டு பில்ட்-அப் செய்து விளம்பரம் தயாரிக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் பணத்திற்கு எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஏன் அரசியலிலும் நடிக, நடிகையர்களைக்கொண்டு விளம்பரம் கொடுக்கத் தவறுவதில்லை.

     

பாவம் கடைசியில் விளம்பரம் நம்பி அதில் முதலீடு செய்து இருந்த  சொத்துகளை இழந்து வீதிக்கு வருவதோடு தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு போய் விடுகிறார்கள். எல்லோருக்கும் ஒரு சின்ன நப்பாசை இருக்கின்றது. அதாவது பலன் கிடைத்தால் அமைதியாக ஏற்றுக்கொள்வது. ஆனால் ஏமாற்றம் என்று தெரிந்துவிட்டால் அரசின் மீதும், சட்டத்தின் மீதும் பழியை போடுவது. நஷ்டஈடு வேண்டுமென்று போராடுவது? அதெல்லாம் நடக்கிற காரியமா? அரசு எந்த அளவிற்கு இருக்கின்றதென்றால் ஒரு கட்டிடம் இடிந்துவிழும் போது தான் அது 'அப்ரோவல்' இல்லாத கட்டிடம் என்று தெரிய வருகிறது. மேற்கொண்டு படிக்கபோகும்போது தான் தாங்கள் கற்ற கல்லூரி அரசு அங்கீகாரம் பெறாதது என்று தெரிய வருகிறது. சிட் பண்டு ஏமாற்றும் போது தான் அது அரசின் விதிமுறைக்கு எதிராக இருப்பது தெரியவருகிறது.

எல்லாமே தெரியாத வரைக்கும் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. ஏதாவது தவிர்க்க முடியாத பிரச்சனை குறிப்பாக மீடியாக்களுக்கு தெரிய வந்துவிட்டால் அது பூதாகரமாக பெரிதாகி மக்களுக்கு வேதனை தந்துவிடுகிறது. அதேசமயத்தில் சில நிறுவனங்கள் தங்கள்  பொருட்கள் தரமாக விநியோகிப்பதோடு தரமாக விளம்பரம் செய்கிறாகள். அதேபோல் சில நிறுவனகள் சிறந்த சேவை செய்து அளவாக விளம்பரம் செய்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான விளம்பரங்கள் டுபாகூர் ஆகவே இருக்கின்றது. எது நல்லது எது டுபாகூர் என்று தெரிந்துகொள்வது மிகவும் கடினம் தான். எல்லாம் முடிந்த பிறகு தான் உண்மை தெரியவருகிறது.


ஆகவே எந்த விளம்பரம் ஆனாலும் முந்திரிக்கொட்டை போல முதன்முதலில் விழுந்துவிடாதீர்கள். அந்த நிறுவனம் அல்லது கம்பெனி குறைந்தது ஐந்து அல்லது பத்தாண்டுகள் நிறைவான சேவை தந்துள்ளனவா? மக்களுக்கு என்ன பலனைத் தந்துள்ளது என்று ஓரளவு தெரிந்துகொண்டு முதலீடு செய்வது நல்லது. இப்போதுள்ள நிலையில் புதிதாக முளைத்த நிறுவனம் அல்லது பத்து ஐமபது ஆண்டுகள் கழிந்த நிறுவனம் ஏன் நூறு ஆண்டு புகழ் பெற்ற நிறுவனமும் வேறுபாடு இல்லாமல் ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகிறது . அதற்கு முக்கியமான காரணம் அவர்கள் தங்களிடமுள்ள வசூலித்த பணத்தை ஆன்-லைன் மற்றும் பங்கு சந்தையில் போட்டு அதிகம் சம்பாதிக்கும் ஆசையில் முதலீடு செய்யும்போது ஒரு கட்டத்தில்  போட்ட பணம் 'அம்போ' என்று ஆகிவிடுகிறது. பணம் போட்டவர்களுக்கு 'பட்டை நாமம்' தான்.


என்னதான் தான் பெரிய பொருளாதார நுபுனராகட்டும் , இன்றை வியாபார உலகத்தை கணிப்பது மிகவும் கடினம் ஏன் முடியவே முடியாது. ஏனெனில் உலகளாவில் அரசியல் மற்றும் பணபலமுள்ள பல முதலைகள் கழுதையை குதிரையாக்குவதிலும், குதிரையை கழுதையாக்குவதில் தினமும் பல உக்தியை மேற்கொண்டு வருகிறார்கள்.கோபுரத்தில் இருப்பதை குப்பைக்கு கொண்டுவருகிறார்கள். குப்பையில் உள்ளதை கோபுரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் உலகில் ஒவ்வொரு மூலையில் இருந்துகொண்டு 24 மணிநேரமும் 'பணம் குவிக்கும் யுத்தம்' நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 


அந்த யுத்தத்தில் அவர்கள் சக்தி வாய்ந்த பல்வேறு கரன்சிகளை கொண்டு தாக்குகிறார்கள். ரூ 10 உள்ளதை ரூ 1000 ஆக மாற்றி லாபத்தை சம்பாதிக்கிறார்கள். ரூ 1000 உள்ளதை ரூ 10 ஆக மாற்றி பிறர்க்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் வித்தைகளை காட்டுகிறார்கள். அதில் இருப்பவன், இல்லாதவன் என்று பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி சின்னாபின்னாமாக்குகிறார்கள். அதில் சில சிறிய நாடுகளும் சிக்கி தங்கள் பொருளாதாரத்தை இழந்துவருகிறார்கள். தங்கம் விலை குறையவே குறையாது என்று நினைக்கப்பட்டது, சில வதந்திகளால் மளமளவென்று இறங்கி பலரை வீதிக்கு வரச்செய்து விட்டது. ஆனால் ஒரே வாரம் திரும்பவும் ஏறுமுகம்.. ஆக செயற்கையாக ஏறவைத்து தொப்பென்று கீழே போடும் வியாபாரம் சரிவருமா?

        

கடைசியாக கட்டாயமாக உங்களுக்கு விளம்பரம் செய்யும் நிறுவனம் அல்லது பொருளின் மேல் ஆசையா? மிகக்குறைந்த அளவு மட்டும் முதலீடு செய்து குறைந்த அளவே ஏமாறுங்கள். விளம்பரம் செய்யும் எல்லோருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை. நமது நாட்டின் மக்கள்தொகை நூறு கோடிக்கு மேல். அதில் ஒரு கோடி (1 % ) ஆவது முதலீடு செய்வார்கள் அல்லது பொருளை வாங்குவார்கள் என்று வைத்துக்கொள்வோம் . அதாவது ஒரு லட்சம் பேர்கள்  10,000 ரூபாய் முதலீடு செய்தால் 1000 கோடி ரூபாய் கிடைத்துவிடும் . சுமார் ஒரு கோடி பேர்கள் நூறு ரூபாய்க்கு பொருட்களை வாங்கினால் 100 கோடி ரூபாய் எளிதாக சம்பாதிக்கலாம். இது தான் விளம்பர தந்திரம். லாப சூத்திரம். அதற்காக எப்போதும் உங்களைச் சுற்றும் புரோக்கர்கள், விற்பனை பிரதிநிதிகள், மார்கெடிங் பிரதிநிதிகள் எத்தனை பேர் என்று பாருங்கள். அவர்களுக்கு சம்பளம் எப்படி கிடைக்கிறது? யோசியுங்கள்..  மக்களே ! விளம்பர மோகம் உங்களை விட்டு அகலட்டும். உண்மை நிலை தெரிந்து கொண்டு செயல்படுங்கள் . நீங்கள் சம்பாதிக்கும் பணம் அழிவில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிரந்தமாய் அரசு மற்றும் அஞ்சல் நிலையத்தில் சேமியுங்கள். உங்கள் முதலீடு சிறிது சிறிதாக வளர்ந்தாலும் நஷ்டம் எப்போதும் வரவே வராது. போலி விளம்பரம்.. போகும் பணம்.. 


நன்றி 
வணக்கம்.   

1 comment:

  1. /// எந்த விளம்பரம் ஆனாலும் முந்திரிக்கொட்டை போல முதன்முதலில் விழுந்துவிடாதீர்கள் ///

    விளக்கமான விழிப்புணர்வு பதிவு... நன்றி...

    ReplyDelete