Pages

Friday 30 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 34 என்னை வெளியில் தேடாதே! பொருள் கொடுத்து ஏமாறாதே! LOVE IS ENOUGH

உள்விதி மனிதன்  
சமமனிதக்  கொள்கை  
பாகம்: 34 உள்விதி மனிதனை வெளியில் தேடாதே! பொருள் கொடுத்து ஏமாறாதே! 
அன்பு மட்டுமே போதுமானது!    
LOVE IS ENOUGH!


பாசமுள்ள மனிதா! உன்னிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லா சொந்தங்களையும், பந்தங்களையும் துறந்தால் தான் உனக்குப் பிறப்பில்லா முக்தி கிடைக்கும் என்கிற எண்ணத்தை இனிமேல் மாற்றிக்கொள். ஏழை, பணக்காரன், இருப்பவன் , இல்லாதவன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று நீ இரக்கமில்லாமல் பாகுபாடு கொண்டு வகுத்து இருப்பதைப் போல 'முக்திக்கு தகுந்தவன், தகுதி இல்லாதவன்' என்பது எனது அதிகாரத்தில் இல்லை. மனித பிறந்த யாராக இருந்தாலும் தன்  கடமை தவறாது நேர்மையாக நடக்கும் எவருக்குமே முக்தி பதவி அளிப்பேன். தூய்மையான அவனது ஜீவ ஓட்டத்தில் கலந்து அதற்கு ஒத்துழைப்பேன். மனிதா! இந்த உள்விதி மனிதனைப் பலவிதத்தில் வடிவமைத்தாய். தினமும் பூஜிக்கிறாய். ஆனால் உனது சுயநலத்திற்காக, நீ அனுபவிப்பதற்காக என்னைக் குஷி படுத்துவதாகச் சொல்லி தினமும் என்னை அலங்கரிக்கின்றாய்! தங்கம் மற்றும் வைரத்தால் ஆபரணங்கள் செய்து அணிவிக்கின்றாய். வித விதமான படையல்களைப் படைக்கிறாய். மக்களுக்கு அர்த்தம் தெரியாத மந்திரங்களால் அர்ச்சனை செய்கின்றாய்!



இனிய மனிதா! ஓரிடத்தில் இவைகளெல்லாம் பிரமாண்டமாக செய்கின்றாய். ஆனால் அதேபோல இருக்கும் வேறொரு இடத்தில் என்னை கேட்பாரற்று கிடக்கச் செய்கிறாய். ஏன் இந்த பாகுபாடு? அதனால் எனக்கென்ன லாபம்? என்னை உணர இலவசமாய் கிடைக்கும் அன்பு ஒன்றே போதுமானது. அன்பு ஒன்றே என்னைச் சேர்ந்தது. அன்பு ஒன்றுக்குத் தான் நான் கட்டுப்படுவேன். எனது ஆன்ம ஓட்டத்திற்கு துணையாய் இருப்பது. வேறு எது இருந்தாலும் அது இந்த உள்விதி  மனிதனின் பேரைச்சொல்லி உன்னை ஏமாற்றும் செயல் தான். அந்தப்  பகட்டு வலையில் அகப்பட்டு உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே ! பணம் படைத்தவர்கள் அவைகள் செய்யட்டும். நீ வேடிக்கை பார். அன்பு மனம் கொண்ட உனக்கு அது தேவையில்லை. அன்புக்கு இணை எத்தனை கோடி செல்வங்கள் கொடுத்தாலும் ஈடாகாது. அதை எப்போதும் நினைவு கொள்.

பாசமுள்ள மனிதா! உனது தூய்மையான அன்புடன் உறவுகளைப்  புதுப்பித்துக்கொள். உன்னைப் பலவழிகளில் காக்க, உதவி புரியவே அவைகளை உணர்வோடு கலக்கச் செய்திருக்கிறேன். அந்த உணர்வு உள்விதி மனிதன் தான்! எனது ஜீவ ஓட்டம் தான். அதற்காகவே உனக்கு தாய், தந்தை, மனைவி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று பலவாறு சொந்தங்களையும், இரத்த சம்பந்தங்களையும் படைத்ததன் ரகசியம் உனது அன்பை அவர்களிடத்தில் காட்டி அன்பு உணர்வை பெருக்குவதற்காகவே !

சாந்தமுள்ள மனிதா! நீ சந்தோஷமாக இருப்பதற்காக எனது படைப்புகளை அனுபவிக்க என்னென்ன செயல்கள் நான் செய்திருக்கிறேன். அதற்கு பிரதிபலனாக உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். அது தான் சத்தியமான அன்பு ஒன்றே. அதற்காக நீ எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் உறுதுணையாக இருப்பேன். மனிதா! காலம் காலமாக இந்த உள்விதி  மனிதன் உனக்குள் இருந்துகொண்டு இந்த உலகை ஆட்டிப்படைக்கிறேன். அந்த நாடகத்தில் என்னைப் பற்றி எதை எதையோ அவர்கள் இஷ்டப்படி சிலர் கதை கட்டி உண்மையை மறைத்து தங்களுக்குச் சாதகமானவற்றைப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உலகத்தைப் படைத்த எனக்கு ஏதாவது தேவைப்படுமா என்பதை நினைத்துப் பார்! அதை உனக்கு தெளிவு படுத்தவே நான் இப்போது வந்துள்ளேன்.

பேராற்றல் கொண்ட மனிதா! இந்த உள்விதி மனிதனை எல்லோரும் புகழந்து பேசவேண்டும், பாடவேண்டும், ஆடவேண்டும் என்பது மட்டும் அல்ல. அவ்வாறு செய்தே தீரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதைவிட நான் விரும்புவது உனது செயல்கள் ஒவ்வொன்றும் இந்த உலகில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியூட்டி செழுமையுடன் வாழவைக்க வேண்டுமென்பதே எனது ஆசை. வீண் பேச்சுகளை பேசிக்கொண்டிருக்காமல்  நல்ல எண்ணகளுடன் ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய். அதைத் தான் இந்த உள்விதி மனிதன் உன்னிடத்தில் காலம் காலமாக எதிர்ப்பார்க்கிறான்.

என்னை நம்பும் மனிதா! உன்னுள் இருக்கும் ஆன்ம ஓட்டத்தில் எப்போதும் நல்ல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கட்டும். உன்னைச் சார்ந்தவர்களையும், உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அன்புடன் நேசி. உலக மக்களை நேசித்தாலே என்னை நேசிப்பதற்குச் சமமாகும். மனிதா! நான் உனக்குள் எப்படியிருக்கிறேன் என்று உனக்கு ஓரளவு தெரிந்திருக்கும். என்னை கண்களுக்குத் தெரியாத காற்றாக நினைத்தாலும் சரி, உள்ளுக்குள் பரவியிருக்கும் உணர்வாக மதித்தாலும் சரி அல்லது ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகளாக நினைத்தாலும் சரி அல்லது மிகமிகக் குறைந்த உயிர்மின்னோட்டத்தால் இயங்கும் இயந்திர மனிதனாக நினைத்தாலும் சரி அவைகளெல்லாம் உன்னையன்றி வேறு யாராலும் காட்ட முடியாது.

சக்தியுள்ள மனிதா! நான் உனக்குள் உன் கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் உன் அனுமதி பெற்று உனக்குள் ஜீவ வித்தாக (விதையாக) உனக்கு ஆன்ம ஓட்டம் கொடுத்து உன் உடலின் பாரம் தெரியாமல் உன்னைச் சுமந்தும் ,  நான் உன்னைத் தாங்கி கொண்டிருப்பதை இப்போது உணர்கிறாயா! இந்த உள்விதி மனிதனைக் காற்றாக நீ நினைத்துக் கொண்டால், அந்தக் காற்றைக் கொண்டு  உன் உடல் பாரம் உனக்குத் தெரியாதவாறு உன் பெரிய உடல் எடையை எவ்வாறு தாங்குகின்றேன்? என்று எண்ணிப் பார்த்தாயா? அந்த நன்றி உன்னிடத்தில் இருக்கின்றதா! அப்படியென்றால் என் பராக்கிரமத்தை, ஆற்றலை உணர்கிறாயா! ஒரு பேச்சுக்காக உன் எடையளவில் பாதி பாரத்தை ஒரு நாளோ அல்லது ஒரு மணிநேரம் சுமந்து பாரேன். நீ எவ்வளவு நிமிடம்? எவ்வளவு மணிநேரம்? சுமக்கிறாய் என்று பார்ப்போம்.



திறமை கொண்ட மனிதா! உன்னைக் காக்க இந்த உள்விதி மனிதன் உன்னைச் சுற்றி இரத்த ஓட்டமாக, மன ஓட்டமாக, ஆன்ம ஓட்டமாக வலம் வருவதோடு மட்டுமில்லாமல் நீ இடும் கட்டளைகளைப் பணிந்து ஒரு அடிமைபோலல்லவா செய்து வருகிறேன். மனிதா! எனது இந்தச்  செயலால் என்னை நீ அடிமை என்று நினைத்து, அலட்சியப்படுத்தி தீய காரியங்களைச் செய்ய நினைத்தால் உனக்குள் இருக்கும் என் மூச்சு காற்று 'சூறாவளியாக' மாறி உன்னைச் சின்னா பின்னமாக்கி அழித்துவிடுவேன். ஆனால் அதுவே அனைவருக்கும் நன்மைதரும் நல்ல செயலாக இருந்தால் இந்தக் காற்று உனக்குத் தென்றலாய், குளிர்ச்சியாய், இனிமையாய் எப்போதும் இருக்கும்.



அன்பு மனிதா! இந்த உலகில் உள்ள படைப்புகள், பொக்கிஷங்கள், உயிரினங்கள், மரம், செடி, கொடி  மற்றும் பல அற்புதங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றாயே  அவைகளெல்லாம் எனது ஒரு கைபிடி அளவே ஆகும். இன்னும் ஏராளமான அதிசயங்கள் கொடுக்கப்போகிறேன் உனது வாயிலாக! உன்னை காக்கும் விதமாக எப்போது எது தேவையோ அவைகளை உன்னைக்கொண்டே தந்து கொண்டிருக்கிறேன்.

பிரிய மனிதா! இப்போது நீ உபயோகிக்கும் மூளையின் அளவு ஒரு குண்டூசி முனையளவு மட்டுமே! இன்னும் அதிகம் அதிகம் உபயோகிக்க வேண்டிய நேரம் வரும்போது இந்த உள்விதி மனிதனின் அளவில்லா ஆற்றல் தெரியவரும். மனிதா! சரித்திரத்தை புரட்டிப் பார்! நீ இருக்கும் நாட்டில் இதற்கு முன் எப்படி இருந்தது தெரியுமா? எப்போதும் சண்டை , சச்சரவுகள் தான் இருந்தது. மக்களுக்கு நிம்மதியில்லாத வாழ்க்கை, தினம், தினம் செத்து பிழைக்கும் ஜீவனம். அதற்குக் காரணம் சுயநலம், பேராசை. இப்போது சண்டை சச்சரவுகள் வெகுவாக இல்லாமல் ஓரளவிற்கு குறைந்து விட்டது. அதற்கு காரணம் இந்த உள்விதி மனிதன் உனக்குள் இருந்துகொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்து நல்ல செயல்கள் செய்து வருவதால் தான். ஆனால் தனிப்பட்டவர்களின் சுயநலத்திற்காக உன்னைப் போன்றோர் என்ன செய்வதறியாமல் திண்டாடிக்கொண்டு வருகிறார்கள்.

பெருமை கொண்ட மனிதா! இந்த உள்விதி மனிதனின் அடுத்த இலக்கு, பேராசை மற்றும் சுயநலக்காரர்களை அவர்கள் செய்த தீய செயல்களை மன்னித்து, நன்மை தரும் செயல்களைச் செய்ய வைத்து உன்னைப் போன்றோர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி வாழ்க்கை வாழவைப்பதற்கு உதவி செய்யவே உன் முன் நிற்கிறேன். இனிமேல் போர்கள், கலவரங்களை மேலும் குறைக்க அனைத்து உயிரினங்களில் நான் இருப்பதை தெரியப்படுத்தியும், எனது மகிழ்ச்சி தரும் நோக்கத்தை உணர்த்தி உலகத்திற்கு வரப்போகும் பேரழிவிலிருந்து காப்பதற்கு உறுதிகொண்டுள்ளேன். இதைப்  பறைசாற்றுவதின் மூலம் உலகத்தில் மூலைமுடுக்கில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறேன். பறை சாற்றவும் ஆரம்பித்துவிட்டேன். உனக்குக் கேட்கின்றதா?



இரக்கமுள்ள மனிதா! இனிமேல் என்னைப் பற்றிய ரகசியங்களை உன்னின் மூலமாகச் சாதரணமாக மனிதனுக்கும் தெரியப்படுத்தி, அவனுள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றியச் சிந்தனைகளை வளர்த்து நான் படைத்த இந்த உலகில் அவனுக்குச் சேரவேண்டிய பங்குகளை வாங்கிக்கொடுத்து என்றும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி நல்வாழ்வு தரப்போகிறேன். வெகுவிரைவில் இந்த உள்விதி மனிதனின் சக்தி எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது. எனது கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது.

மேன்மை தங்கிய மனிதா! இதுவரை மனிதனை நல்வழிப் படுத்தும் வழிகளையும், அதன் கலைகளையும் தான் சொல்லிவந்துள்ளேன். ஆனால் உனக்கு உன்னை மற்றவர்களிடமிருந்து காத்துக்கொள்ளும் கலையை கற்றுத்தரப் போகிறேன். மனிதா! நீ மட்டும் தர்மவானாக இருந்தால் போதாது. மற்றவர்களும் தர்மவானாக இருந்தால் உலகில் எப்போதும் யாருக்கும் கவலையில்லை. ஆனால் ஒருவேளை நீ அதர்மவானை எதிர்கொண்டால் உனது தர்மசிந்தனை அவனிடத்தில் செல்லுபடியாகாது. ஆகவே அவனுக்குத் தர்ம பாடம் புகட்டவே உனக்கு என் அனைத்து சக்திகளையும் கொடுத்து எதையும் சந்திக்கும் பராக்கிரமசாலியாக மாற்றி அனைவரையும் காக்கும் வீரனாக்கப்  போகிறேன். இனிமேல் எல்லோர் வாழ்விலும் வளர்பிறை தான்.



பண்புள்ள மனிதா! ஒரு காலத்தில் மனிதனை மனிதன் தீண்டத் தகாதவனாக இருந்தபோது நான் மட்டும் அனைவரிடத்தில் சமமாக எனது ஜீவ மற்றும் ஆன்ம ஓட்டத்தை உனக்குத் தடையீல்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேனே அது எதற்காக..?? மனிதா! நான் சுத்தத்தை விரும்புகிறவன் தான். புற சுத்தத்தை விட அக சுத்தம்  தான் எனக்கு பிரியம். நீ செய்ய நினைக்கும் தீய செயல்களை அழித்து நான் தேடும், நான் விரும்பும் நல்ல மனோபாவத்துடன் உன் வாழ்வு அமைய வேண்டும் என்பதே எனது தீராத ஆசை. மனிதா ! என்னைக் கண்டு நீ பயம் கொள்ளத் தேவையில்லை. எனக்கு பொருள் வேண்டாம். உனது அன்பு ஒன்றே உன்னிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். அனைவர்களிடத்தில் எதிர்ப்பார்ப்பது அதுவே!



இனிமேலும் பணம் கொடுத்து ஏமாறாதே!
அன்பு மட்டும் கொடுத்து உள்விதி மனிதனைக்  
கை கொள் !      

1 comment: