Pages

Monday 24 September 2012

மாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா- ARE YOU PREPARED TO CHANGE YOURSELF

மாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா-
ARE YOU PREPARED TO CHANGE YOURSELF




மக்கள் சேவை மற்றும் விழிப்புணர்வு 


இப்போது நடைபெறும் மாற்றம் மனிதனுடைய இயல்பு வாழ்கையே தலைகீழாக புரட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லலாம். கல்வி, தொழில், சேவை, சட்டம், நடைமுறை , நடை, உடை, பாவனை, இடம், எண்ணங்கள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், ஆன்மிகம், வீட்டு நிர்வாகம், நிறுவன நிர்வாகம், அரசியல், போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள், உணவு பழக்கங்கள்   என்று எதில் தான் மாற்றமில்லை. சொல் வழி கல்வி மறைந்து புத்தக வழி கல்வி உருவாகி இன்று கணினி வழி கல்விக்கு வந்துவிட்டார்கள். ஆட்சியாளர்களும், ஆட்சி முறையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒரு மாற்றம் முழுமையாக தெரியு முன்னே இன்னொரு மாற்றம் வருகின்றது. 


ஆகவே சூழ்நிலைக்குத் தகுந்தாற்ப் போல் காலத்திற்கு தகுந்தாற்ப்போல் எவ்வளவு சிக்கிரம் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு நீங்கள் மாறுகின்றீரோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு வாழ்கையில் நல்லது கிடைக்கும். நல்ல மாற்றத்திற்கு தடை சொல்லாமல் உடனே ஏற்றுக்கொண்டு பின்பற்ற ஆரம்பித்தால் அனாவசியமான பிரச்சனை இல்லாமல் தவிர்க்கலாம். பலவித பிரச்சனை எதிர்கொண்டு கடைசியில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் மனஉளைச்சல், கால விரயம் மற்றும் பணவிரயம் தான் மிச்சமாகும். ஒருவேளை நீங்கள் மாறாவிட்டால் அந்த மாற்றமே உங்களது வாழ்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்.


நேற்று, இன்று , நாளை என்று காலங்கள் மாறுவது எப்படி தவிர்க்க முடியாதோ அதுபோல் உங்களது வாழ்விலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதே! மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவர்கள் ஜடங்களுக்கு ஒப்பானவர்களாவார்கள். 


நமது வாழ்கையில் மாற்றம் குழந்தை முதல் பெரியவர் வரை மாறிவருகிறோம். வயதிற்குத் தகுந்தாற்ப்போல் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவிதமான எண்ணங்களையும், சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிறோம். அதற்கு தகுந்தாற்ப்போல் நமது செயல்களும், பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. குழந்தையில் பிடித்தது இளைஞனான பிறகு பிடிப்பதில்லை. இளம் வயதில் பிடித்தது வயதான பிறகு பிடிப்பதில்லை. காரணம் மாறிவரும் உலகிற்கேற்ப உனது எண்ணங்களும் செயல்களும் மாறுவது தான்.


மாற்றத்தின் விதை 'கற்பனை' என்று சொன்னால் மிகையாகாது. இந்த கற்பனையானது அறிவியல், கலை, தொழிநுட்பம் என்று பல வகைகளின் நுழைந்து இன்று மரங்களாக வளர்ந்து நமக்கு பலவிதத்தில் காய் கனி போல் பலன்களை அள்ளிக் கொடுத்து உதவுகின்றது.

மாற்றங்கள் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. தினம் தினம் சில மாற்றங்களை சந்தித்து கொண்டு வருகின்றோம். கற்கால மனிதன் முதல் இக்கால கம்ப்யூட்டர் மனிதன் வரை மாற்றங்கள் ஒன்றே நம்மை மாறாமல் ஆட்சி செய்துவருகின்றது. 


விட்டில் ரேடியோ மறைந்து தொலைக் காட்சி பெட்டி, விறகு அடுப்பு மறைந்து கேஸ் மற்றும் இண்டக்சன் அடுப்பு, தொலைபேசி மறைந்து மொபைல், கடித தொடர்பு மறைந்து ஒரு நொடியில் அனைத்து தகவல்கள் தரும் கம்ப்யூட்டர், அதன் மூலம் உலகம் முழுவதும் எளிதாக தகவல் பரிமாற்றங்கள், கால்நடை மறைந்து மோட்டார் வாகனம், பாஸ்ட் புட் உணவுவகைகள்,  பல தரப்பட்ட கல்விகள் அதாவது மருத்துவ கல்வியில் பலவகை, கலைக் கல்வியில் பலவகை, பொறியியல் கல்வியில் பலவகை, உடைகளில் தான் எத்தனை மாற்றங்கள்! பாவாடை ரவிக்கை மறைந்து சுடிதார் மற்றும் பல.


மாற்றம் தான் ஒரு மனிதனை உயிருள்ளவனாக காட்டுகின்றது. படைப்பாளியாக்குகின்றது, பெருமை தேடித் தருகின்றது. வாழும் வீடுகளில் தான் எத்தனை மாற்றங்கள்! மண் குடிசை மறைந்து கான்கிரீட் வீடுகள் ! அதுவும் போய் இப்போது நானோ வீடுகள்! 

மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகள். ஓடாமல் ஒரே இடத்தில் அழகான காரை நீங்கள் எத்தனை நிமிடங்கள் வரை பார்த்துகொண்டு இருப்பீர்கள்! ஒரு நிமிடம்.... ஐந்து நிமிடம்... அது மிகவும் கஷ்டமாக தெரிகின்றதா? ஆனால் ஓடிக்கொண்டு விதம் விதமாக சாகசம் செய்யும் காரை நாள் முழுவதும் பார்த்து ரசிக்கலாம். 

வாய்ப்புகள் எப்படி கிடைக்கும்?

முட்டாளுக்கு மத்தியில் அறிவாளிக்கு வாய்ப்பு! 
நோயாளிகளுக்கு மத்தியில் மருத்துவனுக்கு வாய்ப்பு!
தொண்டர்களுக்கு மத்தியில் தலைவனுக்கு வாய்ப்பு!
சோம்பேறிகளின் கூட்டத்தில் சுறுசுறுப்பானவனுக்கு வாய்ப்பு!
பலவீனம் உள்ளவர்களுக்கு மத்தியில் பலசாலிக்கு வாய்ப்பு!
கரிக்கட்டைக்கு மத்தியில் வைரத்திற்கு வாய்ப்பு 
வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வியாபாரிக்கு வாய்ப்பு!
பேச்சை கேட்பவர்களுக்கு மத்தியில் பேச்சாளர்களுக்கு வாய்ப்பு!
கலைகள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் கலைஞனுக்கு வாய்ப்பு!
பாடல்கள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் பாடகர்களுக்கு வாய்ப்பு!
கற்க விருப்பமுள்ளவர்களுக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு மதிப்பு!

அதாவது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் உனது மாற்றங்களால் மட்டுமே முடியும். மாற்றங்களைச் செய்யாமல் கட்டை வண்டி மோட்டார் வண்டியாக மாற்ற முடியாது. உனது வாழ்கையில் வேகம் பெற வேண்டுமானால் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும். மாறிவரும் உலகில் நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் நம் வாழ்க்கை நிலை மாறாது.

மனித உயிரினம் 'டார்வின்' பரிணாம கொள்கையின்படி ஒரு செல் உயிரினம் முதல் மனித உயிரினம் வரை பலவகை மாற்றங்களுக்கு பிறகே வந்துள்ளது. ஓரறிவு முதல் ஆறறிவு வரைக்கும் காரணம் மாற்றம் தான். இன்றைய மனிதன் வருங்காலத்தில் 'சூப்பர் மனிதன்' ஆக மாறுவதற்கு நிறைய வாய்புகள் இருக்கின்றன.


'கனவு காணுங்கள், விஞ்ஞானி ஆகலாம்' என்று சொல்கிறார் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்ட்டர் அப்துல் கலாம் அவர்கள். மாற்றங்களுக்கு அடிப்படை எண்ணங்கள்! வளமான எண்ணங்கள் நல்ல செயலுக்கு அடித்தளமாய் அமைகின்றன. அத்தகைய மாற்றங்கள் மக்களுக்கு பல நன்மைகள் தருகின்றன. அறிவியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் பெருகிவரும் மக்கள் தொகையினை சமாளித்திருக்க முடியுமா? இல்லையெனில் மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுக்கு பஞ்சம் வந்திருக்கும்! உடுத்துகின்ற உடைக்கு பஞ்சம்! ஆரோக்கிய வாழ்வுக்கு பஞ்சம்! வாழுகின்ற இடத்திற்கு பஞ்சம் எற்பட்டு இருக்கும்.

மாற்றங்கள் பல வந்தாலும் சில மாற்றங்கள் மக்கள் தங்கள் அறியாமையினால் ஏற்றுக்கொள்ள தவறிவிடுகின்றனர். அதனால் தினமும் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனன்ர். தற்போது நமது நாட்டில்  மின்சார பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கின்றன.  தினந்தோறும் மின்வெட்டு பலமணி நேரம் வரை இருக்கின்றனர். உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. விவசாயம் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு  தீர்வாக சூரிய சக்தி, பயோ டீசல், ஹோபர் கேஸ் முறை போன்றவைகள் இருந்தாலும் அரசாங்கம் அதை ஊக்குவிக்க தவறிவிட்டது. அதற்கு மான்யம் பூஜ்யம் தான். எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருக்கும் அக்கறை உள்நாட்டு உற்பத்தியில் இல்லை. 

போதிய அளவு மழை பெய்தாலும் அதை முறையாக சேமிக்க வழியில்லை. அணைகள் கட்டுவதில் பிரச்சனை, மழைநீரை தேக்கி வைப்பதில் திட்டமின்மை, நதிநீர் பங்கீடு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை வெறும் பேச்சளவில் தான் இருகின்றது. நம் நாடு என்ன பாலைவனமா? நதிகள் ஓடவில்லையா? ஆறுகள் இல்லையா? வடக்கு வெள்ளத்தில் மூழ்கின்றன. தெற்கே மழையில்லாமல் பஞ்சத்தில் அடிபடுகின்றது. ஆனால் வெள்ள நீரை பஞ்ச நாட்டிற்க்கு மாற்றும் திட்டம் அரை நூற்றாண்டுகளாக காகிதத்தில் தான் இருக்கின்றது. எதுவும்  முயற்சி செய்தால் தான் பலன் கிடைக்கும். இன்னும் எத்தனை நாட்கள் அயல்நாட்டை எதிர்பார்த்து நிற்ப்பது. இதில் மாற்றம் இல்லையென்றால் எத்தனை பெரிய தலைவர்கள் வந்தாலும் விலைவாசி ஏறுவதை தவிர்க்க முடியாது. 

மருத்துவத்தில் எக்ஸ் - ரே    முதல் ஸ்கேன் வரையிலான மாற்றம் மனிதனின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே துல்லியமாக நமக்கு தெரிவிப்பதனால் சரியான சிகிச்சை தகுந்தநேரத்தில் கொடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. இதன் பலனாக இதய நோய்க்கு நிரத்தர தீர்வுகள் பல கிடைத்துள்ளது. பை -பாஸ் சர்ஜரி , பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் உறுப்பு மாற்றதல, கண்தானம், ரத்த தானம் போன்றவை உதாரணமாக கொடுக்கலாம்.

நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, கெமிகல் டெக்னாலஜி, திசு கல்சர், க்ளோனிங் ஆகியவை அறிவியல் துறையில் ஏற்ப்பட்ட மாற்றங்களே! மேலும் மக்களின் ஆரோக்கியத்தை காப்பதில் பெரும்  பங்கு வகிக்கின்றது. ஐ.நெட் எனப்படும் வலைதளம் உலகத்தில் நடை பெறும் , நடைபெற்ற நிகழ்ச்சிகளை உடனுக்குடன் நமக்கு தருகின்றது.

பொதிபோல் புத்தகங்களை சுமக்கின்ற மாணவ மாணவிகள் இனிமேல கைக்கு அடக்கமாக உள்ள லேப் -டாப் க்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம்.இது மாற்றத்தின் உச்ச கட்டம் எனலாம்.

குழந்தை பெறுவதற்கும், குடும்பத்தை காப்பதற்கும் தான் பெண்கள் என்று மலையேறி புதுமை பெண்களாக பல சாதனைகள் படைக்கின்றனர். நாட்டை ஆளும் திறமையும், விண்வெளியில் வலம் வரும் துணிச்சலையும் அடைந்துள்ளனர். இதற்கு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் சான்றுகளாவார்கள்.

மனிதனின் 360 கோணங்கள் சுற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதை அறிந்து கொண்டு தகுந்த அறிவை வளர்த்துக்கொண்டு வந்தால் தான் நாம் வாழ்கையில் முன்னேற முடியும்.

இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. மாற்றங்கள் ஒன்றே நிரந்தரம். 


விதையில் மாற்றம் கனி கொடுக்கும் மரத்தில் இருக்கின்றது!
கம்பளிப் புழுவின் மாற்றம் வண்ணத்துப் பூச்சியில் இருக்கின்றது!
செல்லின் மாற்றம் பல உயிரினங்களை கொடுப்பதில் இருக்கின்றது!
எண்ணங்களின் மாற்றம் செயலில் இருக்கின்றது!     
மனிதனின் மாற்றம் தெய்வமாக மாறுவதில் இருக்கின்றது!

'நான் உலகத்தை மாற்றப் போகிறேன்' என்று புறப்பட்டவர்கள் எல்லாம் முகவரி தெரியாமல் தொலைந்துவிட்டனர். அதற்குக் காரணம் நடைமுறைக்கு ஒத்து வராமை. அதாவது நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் நாம் முதலில் மாறவேண்டும். அப்படி மாறிவிட்டால் உலகம் தானாக மாறும். இதுதான் உண்மை நிலை. ஆக நாம் மாற்றத்தை கடைபிடிப்போம். வாழ்கையில் தொடர்ந்து முன்னேறுவோம். 


நன்றி!
வணக்கம்!

     

1 comment:

  1. மாற்றத்தின் விதை கற்பனை. Super..

    ReplyDelete