Pages

Friday 2 November 2012

உள்விதி மனிதன் பாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்- GOOD AND BAD TIME

உள்விதி மனிதன்  
சம மனிதக் கொள்கை  
மதுரை கங்காதரன் 

பாகம்:27 நீ கண் விழிக்கும் நேரம் நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்-
WHICH IS GOOD TIME AND BAD TIME


இனிய மனிதா! இந்த உள்விதி மனிதனைத் தொடர்வாய் என்று நம்புகிறேன். 'பொய்' எனபது குவி லென்ஸ் இல் ஊடுருவும் அனைத்து ஒளியை ஒன்று திரட்டி ஒரு புள்ளி வடிவில் குவிப்பது போன்றது. அது எதையும் எரிக்க வல்லது. அதாவது பொய் உன்னை அழிக்கவல்லது. ஆனால் 'உண்மை' என்பது விளக்கு திரியை பற்ற வைக்கும்போது அதிலிருந்து எல்லா இடத்திற்கும் ஒளி பரவி அதன் சுற்றியுள்ள இடத்தை பிரகாசம் கொடுத்து அனைவருக்கும் நன்மைகள் பல தருவது. அதாவது   சிலர் தேன் ஒழுகப் பேசுவார்கள். நீங்கள் நினைக்கும் காரியம் நிறைவேற அருள் செய்கிறேன். உங்கள் வாழ்கையில் மகிழ்ச்சி பொங்க வைக்கிறேன். ஐஸ்வர்யங்களை அள்ளி அள்ளித் தர வழிவகை செய்கிறேன் என்பவர்கள் எமாற்று மற்றும்  போலியானப் பேர் வழிகள். அவர்களே மேலும் உங்களிடத்திலிருந்து பணம் கறக்க வம்படியாக விடாமல்  'உங்கள் காரியம் வெற்றி பெற' அந்த யாகம் செய்யவேண்டும் என்றோ, இந்தப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றோ, தட்சணை இவ்வளவு வைக்கவேண்டுமென்றோ கூறுவார்கள். அவர்கள் பலவாறு ஆசைவார்த்தைகள் காட்டி உன்னிடம் என்ன இருக்கின்றது என்று தெரிந்து கொண்டு அதை அதிகபட்சமாகக் கவர்ந்து விடுவார்கள். அவர்கள் உங்களுக்காகச் செலவழிப்பதோ மிகவும் சொற்பமாக இருக்கும். அதவும் அவர்களுக்காகவும் இருக்கும். அப்படி செய்தும் உங்களுக்குப் பலன் கிடைக்காவிட்டால் அந்தப் பணத்தை உங்களுக்குத் திருப்பித் தருவார்களா? 

பிரியமுள்ள மனிதா! இன்னும் சில போலி ஆசாமிகள் ஒரு படி மேலே போய் உன்னைக் கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் என்றும், உனது முன் ஜென்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்றும், உனது மூதாதையர்களைப் பற்றிச் சொல்கிறேன் என்றும், சொர்கத்தைக் காண்பிக்கிறேன் என்றும், உனது பாவத்தை போக்குகிறேன் என்று பலவாறு பேசுவார்கள். அப்படிச் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் அவர்கள் உனக்குப் பிடித்தாற்ப்போல் பேசுவதால் நீ மகிழ்ச்சி அடைகிறாய். அதனால் நீ பெறும் பலன் யாது? ஆனால் அந்த மகிழ்ச்சியால் உனக்கு உன் பணம் நஷ்டம் தானே!



பண்புமிக்க மனிதா! அப்படி யாராவது உன்னிடத்தில் கூறினால் உடனே என்னிடத்தில் சொல்லு. இந்த மாதிரி அவன் சொல்லுகிறானே ! அதற்கு கூலியாக அவனுக்கு எனது குடும்பச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை அல்லது  எனது குழந்தையின் படிப்பிற்காக வைத்திருக்கும் பணத்தை அல்லது  வைத்திய செலவிற்காக வைத்திருக்கும் பணத்தை அல்லது பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை அல்லது கடனாக வாங்கிய பணத்தை அவனுக்கு கொடுக்கலாமா? என்று என்னிடம் கேட்டால், அதற்கு நான் 'கொடு'  என்று சொல்வேன். ஆனால் ஒரு நிபந்தனை! நீ கொடுக்கும் பணத்தைவிட இருமடங்கு பலன் கைமேல் உனக்கு கிடைக்கும் பட்சத்தில்??!! ஆனால் அதனால் உனக்கு கிடைக்கும் பலனோ லட்சத்தில் ஒரு பங்கு கூட அதாவது ஒரு தூசு கூடக் கிடைக்காது என்பது தான் உண்மை. உனக்கு இந்த உள்விதி மனிதனின்றி வேறு யாராலும் அதிகமாக இலவசமாக நன்மைகள் செய்ய இயலாது. 



மதிப்புமிக்க மனிதா! அவனால் அத்தகைய வல்லமை இருந்தால் உன்னிடம் எதற்கு கேட்கவேண்டும்? மேலும் சில போலிகள் இதை இங்கு கட்டிக்கொள், வைத்துக்கொள், பூசிக்கொள், பலி கொடு, அந்தப்  படையல் செய், இந்தப் படையலுக்கு ஏற்பாடு செய் என்று சொல்ல்பவர்களை விட்டு ஒதுங்கியே நில். ஏனெனில் நீ தேடி வைத்திருக்கும் மிகச் சிறிய பணத்தை நீ அனுபவிக்காமல் எமாற்றுபவனிடத்தில் கொடுத்து மேலும் மேலும் ஏமாறாதே! உண்மையில் அவர்கள் நன்மை செய்பவர்களாக இருந்தால் நீ கொடுப்பதை வாங்கிக்கொண்டு சேவை செய்யவேண்டும்.



பண்புள்ள மனிதா! உண்மையில்  இவர்களெல்லாம் வருடக்கணக்கில் தவம் செய்தவர்களா? ஆசையைத் துறந்தவர்களா? மனிதர்களுக்கு உதவு செய்யும் சேவை மனப்பான்மை கொண்டவர்களா? மக்களுடைய மகிழ்ச்சியான வாழ்வுக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுப்பவர்களா? அல்லது மனிதனுக்கு உபயோகமாகும் வாழ்க்கைக்கான தொழிலைக் கற்றுக் கொடுப்பவர்களா? மனித குலத்தின் மேல் அக்கறை கொண்ட குருக்களா? இல்லவே இல்லை. அவர்களாகவே ஒரு ஜால்ரா குழுவை அமைத்துப் பகட்டாக மக்களிடத்தில் காட்டி அதன்மூலம் ஏமாற்றுபவர்கள். அவர்களிடத்தில் ஜாக்கிரதையாக நடந்துகொள். இந்த மாதிரி போலி ஆசாமிகள் இருப்பதால் உண்மையில் சேவை மனப்பான்மை கொண்டவர்களை நீ  அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. ஆனால் சிலர் அவர்களின் கஷ்டகாலத்தில் வேறு வழி தெரியாமல் கேட்பார் பேட்சைக் கேட்டு அவசரம் அவசரமாக ஏமாற்றுப் பேர்வழிகளை அணுகி பொருள் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். போனது போகட்டும். இனி இந்த உள்விதி மனிதன் உனக்குத் துணையாய் இருப்பான்.



அன்பு மனிதா! உனது அறிவுக்கு எட்டாத, ஒவ்வாத, தெரியாத செயல்கள் ஒருவர் உனக்காக செய்யும்போது, அதை நன்றாக ஒன்றுக்கு பத்து தடவை ஆலோசித்து முடிவு எடு. அப்போதும்  உனக்கு குழப்பமாக இருந்தால் என்னிடத்தில் விட்டுவிடு. எனது உத்தரவு கிடைத்த பின்னர் தான் செய்ய வேண்டும். ஒருவேளை நான் உத்த்தரவு தராவிட்டால் அந்த செயல் செய்யவே கூடாது.



பாசமுள்ள மனிதா! சிலர் நல்ல நேரம் பார்த்துச் சொல்கிறேன் என்று நல்லசெயல்கள் கூடிவரும் வேலையை தள்ளிப்போட்டு, அவர்களுக்கு உகந்த நாளில் உனது வேலையைத் தொடங்கச் சொல்வார்கள். இந்த கொடுமையை யாரிடம் நீ சொல்வாய். மனிதா! நல்ல நேரம், கெட்ட நேரம் உனக்குத் தெரியாமலே உன்னிடத்தில் வைத்துள்ளேன் என்று சொன்னால் நீ நம்புவாயா? அதாவது உனது கண்கள் விழித்திருக்கும் நேரம் நல்ல நேரம். நீ தூங்கும் நேரம் கெட்ட  நேரம். இது தான் நல்ல நேர விதி. எல்லா நேரமும் நல்லநேரம் என்று சொன்னால் உனது மனம் ஒத்துக்கொள்ளாது. யாராவது ஒருவர் ஏதாவது காரணம் சொல்லி நல்ல நேரம் குறித்து அது சரியாக இல்லாத பட்சத்தில் ஏமாறுவது தான் உனது அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. அனைத்தும் இழந்த பிறகு தான் நான் உனக்குள் இருந்து உனக்காக துடிப்பது உணருகின்றாய். அதற்கு முன் நான் கரடியாகக் கத்தினாலும் உனது செவிகளில் அவ்வொலி கேட்காமல் இருக்கின்றது. அப்பயென்றால் அது யார் மீது தவறு!



மேன்மையுள்ள மனிதா! நீ சம்பாதிப்பது குறிப்பாக அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் சம்பாதிப்பது, பெரும்பாலும் நீ சில போலியான வலியோரிடத்திலும், உயர்ந்த பணக்காரரிடத்திலும், அரசியல்வாதிகளிடத்திலும், தீயவர்களிடத்திலும் ஏமாறுவதற்காகத் தான் போலும்! ஏனெனில்  அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று சொன்னாலும் அவர்களின் பகட்டு உடையில் மயங்கி, வெளி வேஷத்தில் மயங்கி, பேச்சில் மயங்கி ஏமாறுவது தான் உனக்கு வாடிக்கையாகிவிட்டது. நீ சொற்பமாக சேர்த்துவைத்த பணத்தை அவர்களிடத்தில் ஏமாந்து நடுக்கடலில் தத்தளிப்பதே உனது அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. அந்தச் சமயத்தில் இந்த உள்விதி  மனிதன் எவ்வத உதவியும் செய்யவில்லை என்று புலம்புகின்றாய். இனிமேல் இவ்விதம் நடக்கவிடாமல் நான் உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். இனிமேல் யாரும் உன்னை ஏமாற்ற முடியாது..




இந்த உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்டம் தொடரும்..


No comments:

Post a Comment