Pages

Saturday 6 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 12 எனது லட்சியம், ஜீவன்களைக் காப்பது - MY AIM IS TO SAVE ALL

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 



பாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களைக்  காப்பது - 
MY AIM IS TO SAVE ALL



இனிமையான மனிதா! நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன்! நீ உனக்குள் தேடிக்கொண்டிருக்கும் ரகசியமான விலைமதிக்க முடியாத எங்கும் கிடைக்காத ஒரு அதிசயமானப் பொக்கிஷத்தை எடுத்துக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். பூமியில் தோன்றிய பெரிய பெரிய ஞானிகள், முனிவர்கள், அறிஞர்கள், மகான்கள் போன்றோர்கள் 'தாங்கள் எதற்காக மனிதப் பிறவி எடுத்துள்ளோம்' என்கிற ரகசியத்தைப் பல ஆண்டுகளாகத் தவமிருந்து அதை அழகான பாடல்கள், கதைகள், மந்திரங்கள், சொற்பொழிவுகள், புத்தகங்கள் மூலம் நமக்காக எழுதி வைத்துள்ளனர். அவைகள் எப்படி இருக்கிறதென்றால் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியுள்ளார்கள். அதன் அர்த்தம் எளிதில் புரியாது. படிக்கவே கடினமாக இருக்கும். என்னதான் திரும்பத் திரும்ப படித்தாலும், துருவித்துருவி, தோண்டித்தோண்டி ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் அதற்கான உண்மைப்பொருள் அறிவது மிகவும் கடினம் தான். அதிலும் இந்த அவசர உலகத்தில் இதற்கெல்லாம் யோசிப்பது ஏது நேரம்? அதைப்படித்து ஒவ்வொரு வரியையும் விளக்கிச் சொன்னாலும் கேட்பதற்கு பொறுமை இருக்குமா? என்கிற கேள்விக்குறி இருக்கத்தான் செய்கிறது.

பிரிய மனிதா! விஞ்ஞானம் வளர்ச்சியடையாத நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , ரஷ்யா போன்ற நாடுகளை பார்க்க வேண்டுமென்றால் நாமே நடையாகவோ, வண்டியிலோ செல்லவேண்டும். ஆனால் இந்தக் காலம் அப்படியா? உலகமே உங்கள் உள்ளங்கையில்! எந்த நாட்டிற்கும் ஒரு நொடியில் சென்று வந்துவிடலாம். அப்படியிருக்கும்போது ஆன்மீகத்திலும் இருக்கின்ற இடத்திலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வழியைத்தான் காலத்திற்குத் தகுந்தாற்ப் போல் எளிமையாக்கி அதை  உனக்குச் சொல்லவே உனக்குள்ளேயே இருந்து வருகிறேன்.


மதிப்பு மிக்க மனிதா! நான் உனக்குள் ஜீவ ஓட்டமாய் ஓடிக்கொண்டிருப்பது, உனது வயிற்று பிழைப்பு மற்றும் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருப்பதற்கும், அனைவரும் போற்றும்படி வாழ்வதற்கும், தேடிய செல்வங்களை காப்பதற்கும், நான் படைத்த உலகத்தை நல்லபடியாக இருப்பதற்கும் தான் என்பதை உனக்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த பூமி சூரியனைச் சுற்றி வருவது போன்று நான் உனக்குள் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். 

அன்புமிக்க மனிதா! உன்னைப் படைத்த நோக்கம் என்னைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ, புகழ்ந்து கொண்டோ இருக்கவேண்டும் என்பதில்லை. என்னைப் பற்றி பேசுவதால், புகழ்வதால் உன்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்கில்லை. அப்படி இருந்திருந்தால் உனக்கு ஒரு சாண் வயிற்றை கொடுத்திருக்கமாட்டேன். உனது பிறப்பின் நோக்கம் மனிதர்களை இரக்கம் கொண்டு காப்பதற்கேயன்றி வேறு இல்லை. அப்படியென்றால் என்னைப் பற்றி மட்டும் நினைக்கும் சக்தியை மட்டுமல்லவா கொடுத்திருப்பேன். ஆனால் உனக்கு அனைத்தையும் சிந்திக்கும் சக்தி மற்றும் என்னைப்போல் படைக்கும் ஆற்றலையுமல்லவா கொடுத்துள்ளேன். அதாவது என்னைப் போன்று! என்னை நினைக்கும் பக்தர்களுக்குச் சகலவித செல்வங்களையுமல்லவா கொடுத்திருப்பேன். குறைந்தபட்சம் மனிதன் கஷ்டத்தை அனுபவிக்காமல் காலம் காலமாக எல்லோரும் தவம் செய்துகொண்டே இருக்குமாறு அல்லவா படைத்திருப்பேனே?


பெருமை மிக்க மனிதா! எனது அகராதியில் 'புதுப்பித்தல் ' மற்றும் 'மாறுதல் ' இரண்டும் தவிர்க்க முடியாது! நான் மாற்றுவதினாலும், நீ மாறுவதினாலும் இந்த உலகம் அழியாமல் நிலைத்து இருக்கின்றது. சற்று பயத்துடன் இயங்குகின்றது! இல்லையேல் என்றோ நான் படைத்த இந்த அதிசய உலகம் அழிந்திருக்கும்! 

இரக்கமுள்ள மனிதா! உன்னைப் பல செயற்கரிய வல்ல செயலை செய்வதற்காகவே படைத்துள்ளேன். அவைகளைப் பார்த்து நான் ஆனந்தம் அடைவதற்குப் படைத்துள்ளேன். செயல்களை செய்யாதவர்களை நீ எல்லாம் தெரிந்த தவசிகள் என்கிறாய்! எதையும் செய்யாமல் சதா மௌனமாய் இருக்கும் சாதுக்களை முற்றிலும் துறந்த முனி என்றும் முக்காலமும் அறிந்தவர் என்றும் பல அரிய சக்திகளை கொண்டவர் என்றும் பேசுகின்றாய்.

இனிய மனிதா! மனித சக்தியை மௌனம் காப்பதற்கும், அமைதியாய் இருப்பதற்குமா பயன்படும்? அப்படியென்றால் ஒன்றுமறியாத முட்டாள்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? அதாவது செயலின் மூலம் தான் இருவருக்கும் வித்தியாசம் காணமுடியும். செயல்களைக் கொண்டு தான் எத்தகையவன் என்று தெரிந்துகொள்ள முடியும்.

பாசமுள்ள மனிதா! உன் உடலில் கைகள், கால்கள், கண்கள், வாய், காதுகள் என்று பல்வேறு வேலைசெய்யும் உறுப்புகளை படைத்திருக்கிறேன் எதற்காக? அமைதியாய், மௌனமாய் உட்காரவா? அல்லவே அல்ல. அவைகளைக்கொண்டு நான் பூமியில் படைத்திருக்கும் அனைத்து ஜீவ ராசிகளின் துன்பத்தைப் போக்கவே. நான் அவர்களுக்கு கொடுத்திருக்கும் உண்ண உணவு, உடை, இருப்பிடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை தங்கு தடையின்றி கிடைப்பதற்கு?! மேலும் ஏமாளிகளை ரட்சிப்பதற்கும், ஏமாற்றுபவர்களை உனக்கு அடையாளம் காண்பித்து உன்மூலமாக அவர்களைத் திருத்துவதற்குமல்லவா  உனக்கு என்னுடைய அளவில்லா அறிவையும், அசுரத்தனமான ஆற்றலையும் கொடுத்திருக்கிறேன்!

பெருமையுள்ள மனிதா! உனது உறுப்புகளைக் கொண்டு, அறிவு கொண்டு உன் வயிற்றை நிரப்பிக்கொள். அதுதான் என் ஜீவ ஓட்டத்திற்கு உதவியாக இருக்கும். அதிகமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடு. எனக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் இந்த உலகில் மனித ஜீவராசிகள் பல்கி பெருகி வருகின்றன. என் ஒருவனால் அவர்களை காப்பது கடினம். ஆனால் நானே பல உருவங்களில் காக்கும் செயலை செய்து வருகிறேன். நோய்களை தீர்ப்பதில் டாக்டராகவும், கல்வி போதிப்பதில் ஆசிரியராகவும், வாழ்கையில் குருவாகவும், தாயாகவும், தந்தையாகவும், நண்பனாகவும் இருந்து காத்து வருகிறேன். 

இரக்கமுள்ள மனிதா! யார் ஒருவர் உனக்கு என் ரகசியத்தை, என் வித்தையை கற்று தருவதாகவோ அல்லது பரிகாரமோ செய்யச் சொன்னால் என்னிடம் கேள். அந்த மாதிரி எதாவது செய்தால் உனது அறிவை புதைப்பதற்குச் சமம். அதற்கு நீ அடிமையாகிவிட்டால் நானும் உன்னுடன் சேர்ந்து அடிமையாகி இந்த உலக நலனுக்காக அனைத்து ஜீவன்களையும் காக்கும் கடமை மறந்து மகிமையை இழக்க நேரிடும்.

மதிப்பு மிக்க மனிதா! உனக்குள் இருக்கும் என்னை தினமும் கவனி! எனக்கு வேண்டுபவை நல்ல சிந்தனை, நல்ல செயல்கள், எல்லோருக்கும் நன்மை செய்யும் குணம், எப்போதும் என்னை மறக்காமல் அனைவரையும் காக்கும் செயல்கள் ஆகியவை. 

அருமை மனிதா !


இன்றே புறப்பட்டு!

நானும் வருகிறேன் !


அனைத்து ஜீவன்களை காப்போம்!         

    

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

1 comment: