Pages

Showing posts with label பாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள். Show all posts
Showing posts with label பாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள். Show all posts

Wednesday, 14 November 2012

பாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்


 விவேகனந்தர் - ஒரு ஆன்மீக நியூட்டன் -
பாகம்: 4  நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 
அவரின் அற்புத செயல்கள்


சுவாமி விவேகனந்தரின் ஆன்மீக சொற்ப்பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்காரணமாக அவருக்கு 1893 இல் அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ நகரில் 'உலக மதங்களின் பாராளுமன்றத்தில்' சொற்பொழிவு ஆற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது . அவரது சாந்தமான முகம், எளிமையான தோற்றம், நல்லொழுக்கமுள்ள பேச்சு அனைவரையும் வியக்கச் செய்தது. இதுநாள் வரை யாருமே எந்த ஒரு கூட்டத்தில் ஆரம்பித்து பேசாத வார்த்தையை பேசினார். அதாவது 'சகோதர சகோதரிகளே !' என்று ஆரம்பித்தார். அவரது அந்த தொடக்கம் அவருக்கு முடிவில்லா பெரும் புகழை பெற்றுத் தந்தது. அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அங்கு அவரின் சிலையை நிறுவி அதில் '  A LIGHT FROM EAST' என்று அதாவது 'கிழக்கிலிருந்து வந்த ஒளி' என்று வார்த்தையை பொரித்து நம் இந்திய ஆன்மீகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பெருமையை தேடித் தந்தார்.


இன்றைய இளைஞர்கள் நமது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் போன்றைகள் கட்டிக் காத்து நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு உலகநாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு காற்றடிக்கும் திசைகளில் பறந்து, கால் போகும் திசைகளில் நடந்தீர்களேயானால் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல பெயர் கிடைக்காது. 


அமெரிக்காவில் சமய சொற்பொழிவாற்றச் சென்றிருந்த போது அவர் நேரத்தை வீணாக்காமல் அங்கிருக்கும் நூலகத்திற்கு தினமும் சென்று வந்தார். காலையில் அவர் தான் முதல் ஆளாக நுழைவார். ஆனால் கடைசி ஆளாகத்  தான் வெளியேறுவார். இப்படி இருக்கும் சமயத்தில் நூலக பொறுப்பாளருக்கு அவரின் நடவடிக்கைகள் சற்று சந்தேகத்தை வரவழைத்தது. அவர் சுவாமிஜீயிடத்தில் சற்று கடினமாக "நீங்கள் இங்கு வருவது பொழுது போக்கிற்காக என்று நினைக்கிறேன்" என்றார். சுவாமிஜி சற்றும் தாமதிக்காமல் கையில் இருக்கும் புத்தகத்தை அவர் கையில் கொடுத்து "நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள ஒரு வரியைச்  சொல்லுங்கள். அந்த பக்கத்தில் உள்ளதை ஒன்று விடாமல் முழுவதும் பாராமல் சொல்கிறேன் " என்றார். சுவாமிஜியை அவமானப் படுத்தவேண்டுமென்று நினைத்து 'ஒரு பக்கத்தில் உள்ள ஒரு வரியைச் சொன்னார்.' ஆனால் என்ன ஆச்சரியம், அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் ஒன்று விடாமல் பாராமல் விறுவிறுவென்று வாயிலிருந்து சொல்லருவிபோல கொட்டினார். அந்த நூலகப் பொறுப்பாளர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதோடு சுவாமிஜிக்கு வேண்டிய புத்தககளை அவரே எடுத்துக் கொடுக்கும் சேவையினை மேற்கொண்டார். 


இதிலிருந்து இளைஞர்களுக்கு தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் , புத்தகங்கள் படிக்கும்போது கவனம் சிதறவிடாமல் ஒருமுக மனதோடு ஆழ்ந்து படித்தால் மனதில் நன்றாக பதியும் என்பதை உணர்ந்து கொளவேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் அதை செயலில் நடத்திக் காட்டவேண்டும். படிப்பது என்பது காகிதத்தில் வரைந்த பழங்களின் படம் போல. அதை எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும், பேசினாலும் அதன் உண்மையான சுவையை அனுபவிக்க முடியாது. ஆனால் செயல் என்கிற உண்மையான பழம் ஒரு முறை சுவைக்கும்போது அதன் முழுமையான இன்பத்தை ஆயுள் முழுக்க அனுபவிக்கலாம். இளைஞர்களே! பேசுவதோடு உங்கள் வேலை முடிந்துவிடவில்லை. செய்து காட்டவேண்டும். 


ஒருமுறை அவருக்கு 'துப்பாக்கி சுடும் போட்டி' நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று விழா அமைப்பாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் அங்கு சென்றார். அப்போது போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் யாரும் குறிபார்த்து சரியாகச் சுடவில்லை. அப்போது சில போட்டியாளர்கள் கிண்டலாக சுவாமிஜீயை சுட அழைத்தனர். அவர் சற்றும் தயங்காமல், அமைதியாக, தன்னம்பிக்கையோடு மனதை ஒருமுகப்படுத்தி தனது முழு கவனத்தையும் துப்பாக்கியில் கொண்டுவந்து சரியாக குறிபார்த்து சுட்டார். அனைவரும் சுவாமிஜியின் ஆற்றலைக்கண்டு வியந்து பாராட்டினர்.


இளைஞர்களே! ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் முடியாதது ஏதுமில்லை. நீங்கள் மனது வைத்தால் எல்லோரும் மூக்கில் விரலை வைக்குமளவிற்கு சாதனை படைத்து வெற்றி பெற முடியும். 'முடியும்' என்று உங்களை நீங்களே நம்புங்கள்.


இன்றைய இளைஞர்களுக்கு இத்தகைய உதாரணங்கள் மிகவும் தேவை. ஏனென்றால் போட்டி, பொறாமை நிறைந்த இந்த உலகில் ஒருவருக்கொருவர் ஏமாற்றும்  செயலில் ஈடு[படுவதை தவிர்க்க வேண்டும். பேராசை கொண்டு மனித குலத்தையும், மாசில்லா இயற்கையான சுற்றுப்புற சூழ்நிலைகளை அழித்து வருவதை தடுக்க இளைஞர்கள் முன்வரவேண்டும். அதற்கு வழிகாட்டியாக நாம் இருப்போம். 


இன்றைய வல்லரசு தலைவர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கிறதென்றால்  தங்கள் நாடு மட்டும் மாசு படாமல் தூய காற்று கொண்டு இருக்கவேண்டும். தங்கள் மக்கள் அனைத்து செல்வங்களும் வசதிகளும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவேண்டும், தன்னுடைய புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டுமென்று நினைக்கின்றனர். ஆனால் ஒன்றை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அனைவரும் ஒரே உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஒரு நாட்டில் அளவில்லா மாசு ஏற்படுதல் , ஒரு நாட்டில் நடக்கும் தீவிரவாதம், ஒரு நாட்டின் உள்நாட்டுப் போர், இரு நாட்டிற்க்கிடையே நடக்கும் போர் , உள் நாட்டின் அராஜகம், ஒரு நாட்டின் ஊழல், லஞ்சம் போன்றவை என்பது பக்கத்து வீடு தீப்பற்றி எறிவது போல. அதை   தகுந்த சமயத்தில் விரைவாக அணைக்க முயற்சிக்காவிடில் அந்த தீ இப்போது வல்லரசு நாட்டிற்கும் பரவும்  காலம் வெகுவிரைவில் இல்லை. உதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளை பாதிக்கவில்லையா?  ஆகவே வருங்கால உலகம் தூய்மையாக விளங்க இளைஞர்களின் கையில் தான் உள்ளது.


எதையும் பார்த்த மாத்திரத்தில் மனிதில் ஏற்றுக்கொண்டு விரைவாக புரிந்துகொள்ளும் தன்மை இளைஞர்களிடத்தில் இருப்பதால் அவர்களை நல்லவழியில் செலுத்தி, சேவை மனப்பான்மையோடு மக்களுக்கு பல நன்மைதரும் காரியங்களை செய்யச் செய்து இந்த உலகுக்கு எதிர்காலத்தில் வர இருக்கும் ஆபத்தை அடியோடு ஒழித்து புதிய உலகம் படைத்து சுவாமி விவேகனந்தர் கண்ட கனவை நாம் நிறைவேற்ற இன்றே சபதம் மேற்கொள்ளுவோம். 


ஆன்மிகம் கடைபிடிப்போம் !

இயற்கை வளங்களை காப்போம்!

நாட்டை அழிவிலிருந்து மீட்போம்!

இளைஞர்கள் சிக்கியுள்ள மாயவலையை அறுப்போம்!


இளைஞர்களைக் கொண்டு புது உலகத்தை படைப்போம்.! 

சுவாமி விவேகானந்தர் கண்ட கனவை நனவாக்குவோம் !


நன்றி ! வணக்கம் !!