Pages

Showing posts with label YOU WILL NOT WORRY IF YOU KNOW TO DO WORKS-வேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.. Show all posts
Showing posts with label YOU WILL NOT WORRY IF YOU KNOW TO DO WORKS-வேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.. Show all posts

Monday, 28 January 2013

YOU WILL NOT WORRY IF YOU KNOW TO DO WORKS-வேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.

வேலைகளை கற்றுக்கொள் .
 வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.
YOU WILL NOT WORRY IF YOU KNOW TO DO WORKS
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


   
இன்றைய இளைஞர்கள் பலர் பெரிய அளவில் படிப்புகளை படித்தும் அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதை இன்றைக்கு நிலவி வரும் நாடு தழுவிய நிதிநெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் மூலம் தெரியவருகிறது. உள் நாட்டில் திறமைக்கான மதிப்பு இல்லாததால் வெளிநாடு சென்று சம்பாத்தியம் செய்யும் சூழ்நிலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

   

சில இளைஞர்கள் படிப்பதில் கவனம் செலுத்தாமல் ஆட்டம், பாட்டு, நடிப்பு, பேச்சு, விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர். நமது நாட்டில் எல்லாத் துறைகளில் தங்களின் வாரிசுகளை இறக்கி வருவதால் உண்மையான திறமை மற்றும் அறிவு ஜீவிகளுக்கு இடமில்லாமல் போகிறது. அதாவது சமீபத்தில் ஒலிம்பிக் போட்டியில் தேந்தெடுக்கப் பட்டவர்கள் அரசியல் சிபாரிசினால் உள்ளே நுழைந்தவர்கள் என்கிற செய்தி நம் விளையாட்டுத் துறையின் லட்சணம் தெரிய வருகிறது. அதேபோல் அரசியலிலும் பரவி கொஞ்சம் கொஞ்சமாக இசை, பாட்டு , நடனம், சினிமா, தயாரிப்பு, வெளியீடு, டி.வி , நடிப்புத் துறையிலும் பரவிவிட்டது. இப்படி இருக்கும்போது சாதாரணமானவர்களுக்கு  எப்படி வாய்ப்புகள் கிட்டும்?  
  

இது இப்படியிருக்க மெத்த படித்தவர்கள் கடைசியில் படிப்பு இல்லாத அல்லது குறைந்த படிப்பு உள்ளவர்களிடம் போய் வேலை செய்யும் நிலை உண்டாகின்றது. இது எதனால்? இப்போதுள்ள இளைஞர்கள் படிப்பதோ ஏட்டுக் கல்வி. அதாவது வெறும் மனப்பாடம் செய்யும் படிப்பு. இதனால் உண்மையில் ஒருவித உபயோகமும் இல்லை. ஆடுவதற்கு, பாடுவதற்கு, விளையாடுவதற்கு, நடிப்பதற்குத் தேவையானது வெறும் அடிப்படை கல்வியே போதுமானது. ஆனால் தினப்பயிற்சி தான் வெகு முக்கியம். அந்த மாதிரியான துறைகளில் வாரிசுகள் நுழைந்து வருவதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு அதிகபட்சமாக 1 % கிடைத்தாலே அதிகம் தான்.
  
மேலும் இந்த கால இளைஞர்களுக்கு அரிசி எப்படி கிடைக்கிறது என்று தெரிவதில்லை. அவர்களுக்கு நெல்லிருந்து தான் கிடைக்கிறது என்கிறது கூட தெரிவதில்லை. தேங்காய் மரம் எப்படி இருக்கும் என்று கேட்கிறான்? அதாவது செய்முறை பயிற்சியோடு இருக்கின்ற கல்வி முற்றிலும் போய்விட்டது. அன்றாடம் உபயோகப்படும் பொருட்களைப் பற்றிய அறிவு சுத்தமாகவே இல்லை என்று கூறலாம். 

 
சிறிய சிறிய சோதனைகளைக் கூட பள்ளியில் செய்து காண்பிப்பதில்லை. பூவின் பாகங்கள், இலையின் வடிவங்கள், காய் கனிகள், வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா இடங்கள், சிறு சிறு தொழில்சாலைகள், தோட்டங்கள், பூங்கா, அணைகள், பொருட்காட்சிகள், இரயில் நிலையங்கள், துறைமுகம், விமான நிலையம்  போன்றவற்றை காண்பிப்பதோ அழைத்துச் செல்வதோ அறவே இல்லை எனலாம். இது தான் இன்றைய கல்வியின் நிலை. 
   
இன்னும் சொல்லப் போனால் இப்போது நன்றாக படித்த மாணவர்கள் கூட வங்கிகளில் பணம் செலுத்துவது எப்படி என்று தெரிவதில்லை! தபால் நிலையத்தின் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஓரிடம் விட்டு ஓரிடத்திற்குச் சென்று விலாசம் விசாரித்து செல்லும் தைரியம் இல்லை. ஒரு வரி கூட ஆங்கிலத்தில் எழுதத் தெரிவதில்லை. என்னென்றால் அவர்களின் படிப்பு முறையும், சொல்லித்தரும் ஆசிரியர்களும் அப்படி இருக்கிறார்கள். சொல்லித் தரும் வகுப்பு ஆசிரியரைவிட அதிக அளவு டியூஷன் ஆசிரியர்களையும், நோட்ஸ் களையும் அதிகமாக நம்புகிறார்கள். சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். அதுவும் அறிவியல், கணினி, கணிதப் பாடங்களில் சிறந்தவர்களை சந்திப்பது அரிதாகவே நிலவி வருகிறது. இதில் ஆய்வு மேற்கொள்பவர்கள் வெகுவாக குறைந்து விட்டார்கள்.

  
இளைஞர்கள் தங்களின் வருங்கால வாழ்க்கைக்கு வாழ்கையில் உபயோகப் படும் தொழில் கல்வியே முக்கியம் என்பதை இப்போதாவது தெரிந்து கொள்வது அவசியம். வெறும் பத்தக பூச்சிகளாக இருப்பதால் அவர்களின் எதிர்காலத்தில் குனிந்து நிமிர்ந்து ஒரு சிறு வேலை செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் வேலை கிடைத்தாலும் அங்கு நிரந்தரமாக தங்குவது கேள்விக்குறியாகவே இருக்கின்றது? என்னதான் படிப்பு இருந்தாலும் வேலை செய்யத் தெரிந்தால் தான் மதிப்பு என்று தாமதமாகத் தெரிந்துகொள்கிறார்கள். 
   
இதுநாள் வரையில்  மாவட்ட, மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்தவர்கள் எத்தனை பேர் சுய தொழில் செய்து ஒரு சிறந்த வெற்றியாளாராக இருக்கின்றனர்?அப்படி இல்லவே இல்லை என்று கூறலாம். அவர்களில் பெரும்பாலானோர் எங்கேயாவது, யாரிடமாவது கை கட்டி, வாய் பொத்தி அடிமை பட்டு சம்பளம் வாங்குபவர்களாகவே இருப்பார்கள். என்னென்றால் தொழில் வேறு , படிப்பு வேறு. இரண்டும் இருக்கும் போது தான் சாதனை நிகழ்த்த முடியும். இன்றைய நிலவரப்படி தொழில் தான் படிப்பை விடச் சிறந்தது.
  
அதற்குத் தனியாக நேரம் செலவிடத் தேவையில்லை. இளம் வயது முதற்கொண்டு சிறு சிறு தொழில்களை சுயமாக கற்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அதுவே அவர்களுக்கு புதிய அறிவையும், தொழில் நுணுக்கத்தையும், கடின உழைப்போடு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமையும் , வாழ்கையில் முன்னேற்றத்திற்கான வழியும் தெரியும். இந்த அனுபவமே பிற்காலத்தில் வெற்றிகரமாக தொழில் நடத்துவதற்கு பெரிதும் உதவும். 


அதாவது அன்றாடம் பயன்படும் மொபைல், கணினி, டி.வி, பிரிட்ஜ், ஏ.சி, எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், தையல் மிசின், சமையல் அறையில் உபயோகமாகும் பொருட்கள், பாஷின் டிசைன், கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிசின், சைக்கிள் , பேன் போன்ற பொருட்களின் தொழில் நுணுக்கத்தை இளமை காலம் முதற்கொண்டே பழகினால் பின்னாளில் ராக்கெட், கப்பல் மற்றும் விமான தொழில் நுட்பத்தை எளிதாக பழகிவிடலாம். முதலில் தொழில் ஆர்வம் ஏற்பட்டாலே போதும். அந்த நம்பிக்கை எதிர்காலத்தில் மிகுந்த பலன் கொடுக்கும்.
 
சிறிய வயதில் தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள வழி வகை செய்யுங்கள். உங்கள் குழந்தை வருங்காலத்தில் ஜி .டி நாயுடாகவோ, பில் கேட்ஸ் ஆகவோ மாறுவதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம். அவ்வாறு தொழிலில் ஈடுபடும்போது தன்னம்பிக்கையோடு வேறு தவறான சிந்தனைகள் வருவது தவிர்க்கப் படும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். இதை ஒரு பழக்கமாக பழகிவிட்டால் அவர்களின் எதிர்கால வாழ்கையில் வெற்றி கிடைப்பது நிச்சயம்.
      

நன்றி 
   

வணக்கம்

  .