Pages

Saturday 13 March 2021

அவன் தேடிய அழகி! - சிறுகதை- கு.கி.கங்காதரன்

                 

அவன் தேடிய அழகி!
சிறுகதை
கு.கி.கங்காதரன்


  "'அழகு' என்பது நிரந்தரமானதல்ல என்ற உண்மையை அறிந்துகொண்டால் அதனைப் பற்றிய ஆசைகள் மனதில் உண்டாகாது"

  "இதோபாரு ராகவா, இனிமே உனக்குப் பொண்ணு பார்க்க எங்களாலே முடியாதுப்பா. இதுவரை எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்தாச்சு. அவங்கள்லே ஒருத்தரைக்கூடப் பிடிக்கலேன்னா, அதுக்கு என்ன அர்த்தம்? எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் மூக்குசரியில்லை. ‘கண்ணு காந்தம்போல இல்லை. சிரிச்சாப் பல்லு தெரியுது. இப்படியே ஒவ்வொரு குறையைச் சொல்லிட்டே இருந்தா இந்தப்பிறவியிலே உனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது. ஒருவேளை இப்படியெல்லாம் குறை சொல்லுறதுக்குக் காரணம் காதல் கீதல்னு மனசுலே இருக்கான்னும் கேட்டதற்கு 'அதெல்லாம் கிடையாது'ன்னும் சொல்லிட்டே. கடைசியாக் கேட்கிறேன் 'நீ எப்படிப்பட்ட பொண்ணைத்தான் விரும்புறே?’ அதையாச்சும் சொல்லு" என்று சரவெடிபோலப் படபடவென்று இடைவிடாது பேசி முடித்தார் அவனுடைய அப்பா விநாயகம்.

  "நல்ல அழகானப் பொண்ணா வேணும்னு ஆசைப்படுறது தப்பா? அதுக்கு ரதிபோல இருக்கனும்னு நினைக்கலே. பார்த்தவுடனேப் பிடிக்கிற அளவுக்கு இருந்தாலேப் போதும்" என்று ராகவன் தனது எதிர்கால மனைவியைப் பற்றிய விருப்பத்தைக் கவலையாக வெளிப்படுத்தினான்.

  "சுத்திவளைச்சு பேசாதே. எங்களுக்குக்கெல்லாம் தெரிஞ்ச பொண்ணைக் காட்டிச் சொல்லு. 'இப்படிப்பட்டப் பொண்ணுதான் வேண்டும்னு! அவள் மாதிரி அமையுதான்னுப் பார்ப்போம். ஆனா எது எப்படி இருந்தாலும் இப்போப் பார்க்கப்போற பொண்ணுதான் கடைசி. அதன் பிறகு நீயாச்சி, உன் கல்யாணமாச்சு. எங்களை ஆளைவிட்டுடுடா சாமி" என்று கெஞ்சியபடியும், அதனை மிஞ்சியபடியும் கையெடுத்து கும்பிடுபோட்டாள் அவன் அம்மா விமலா.

  "பொண்ணைப் பார்த்தா கற்பனையைத் தூண்டுவதாக இருக்கனும். அதோடு பேசிட்டே இருக்கனும்போல தோனும். சிரிச்சா பார்த்திட்டே இருக்கனும். பேசினாக் கேட்டுட்டே இருக்கனும்போலத் தோணனும். மொத்ததிலே நம்ம 'சிந்தாலாபோல இருக்கனும்" என்று கடைசியில் தனது மனதில் இருக்கும் கனவுக்கன்னிப்பற்றிய இரகசியத்தை போட்டு உடைத்தான் ராகவன்.

  "அடே! நடிகை சிந்தாலாவா?"
  "அவளேதாம்மா"
  "ஆமா, சமீபத்திலேகூட ஒரு படத்திலே குடும்பக் கதாப்பாத்திரத்திலே நடிச்சு தேசிய அளவிலே சிறந்த நடிகையாத் தேர்ந்தெடுத்தாங்களே அவங்களா?"

  'ஆமாம்' என்றுத் தலையாட்டினான்.

 "இன்றைக்குகூட நம்ம ஊர்லே எங்கேயோ படப்பிடிப்பு நடக்கிற சமயத்திலே எதிர்பாராதவிதமா விபத்துக்குள்ளாகி தலையிலை அடிபட்டு நம்ம ஊரு ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்களே அவங்கதானே?" என்று அந்த நடிகையைப் பற்றிய நடப்புத்தகவலை அமைதியாகத்தந்தாள் விமலா.

  "என்னம்மா சொல்றே? அவங்களை ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்களா?"

  "ஆமாண்டா ராகவா. அதுதான் இப்போதைய தலைப்பு செய்தி, முக்கியச் செய்தியும்கூட!" என்று உறுதிபடுத்தினாள்.                   

  ராகவனுக்கு அந்தச்செய்தி அதிர்ச்சியளித்தாலும் விரைவிலே இயல்பான நிலைக்குத் திரும்பினான்.

  அழகை ரசிப்பது ராகவனுக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பது. அழகின்மேல் மனதைப் பறிகொடுப்பது யதார்த்தமாக இருந்தாலும் அதனை அர்த்தமுள்ளதாக்கும் திறமை அவனுக்குண்டு. அழகைப்பற்றியக் கவிதை எழுதச் சொன்னால் நன்றாகவே எழுதுவான். அவனுடைய  கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளதே அதற்குச் சாட்சி. அழகின்மேல் அவ்வளவு ஈடுபாடு இருப்பதால் தனக்கு வரப்போகும் மனைவி, தன் கற்பனைக்கும் அப்பால் இருக்கவேண்டுமென்பதால் சலிக்காமல் பெண்பார்க்கும் படலத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறான்.

  ராகவன் பக்கத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. வசீகரிக்கும் அழகும், துள்ளும் இளமையோடு நல்ல வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கும் அவன், ‘தனக்கு அழகானப் பெண் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஏதும் இருப்பதாக யாரும் சொல்லமுடியாது.   

  "ராகவா, சொல்ல மறந்திட்டேன். உன்னோட நண்பன் முருகவேல் கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி இங்கு வந்திருந்தான். நேரமிருந்தால் உன்னை அவன் வீட்டிற்கு வரச் சொன்னான்" என்பதை விமலா நினைவுபடுத்தி ராகவனிடத்தில் தெரிவித்தாள்.

  "அப்படியாம்மா. அவனை ஒரு எட்டு போய்ப்பார்த்துட்டு வந்துடுறேன்" என்று மேலோட்டமாகத் தன்னை அலங்கரித்துப் புறப்படத்தயாரானான்.

  "ராகவா, இன்னிக்கு நாம பார்க்கப்போறப் பொண்ணுகூட அந்தப் பகுதியில்தான் இருக்குன்னு சொன்னங்க. ஒருவேளை நீ போறவழியிலே எந்தப்பொண்ணாவது அழகாத் தெரிஞ்சா அவதான் உன்னுடைய வருங்கால மனைவியா இருக்கலாம்!" என்று கிடைக்கிற சந்தில் சிந்து பாடி கேலியாகப் பேசினார் விநாயகம்.

  முருகவேல் வீடு சற்றுத் தொலைவில் இருந்தாலும் நடையாகவே செல்வது ராகவனுக்குப் பழக்கம். நடப்பது அவனுக்கு நிறையவேப் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் நடந்து செல்லும்வேளையில் பல நண்பர்கள், உறவினர்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம். யாரையும் சந்திக்க நேரமில்லாத இந்த அவசர உலகத்தில் இம்மாதிரியான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே வம்படியாக நடத்தே செல்வான். அவன் இளமையாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  அவன் போகின்ற வழியில் விநாயகம் சொன்னதுபோல் திருமணமாகாத அழகிகள் தென்படுகிறார்களா? என்று உண்மையில் பார்த்துக்கொண்டே கடந்தான். எதிர்பார்த்ததுபோல் தேவதையாக ஒரு பெண் சற்று தூரத்தில் நின்றிருக்க 'அப்பா சொல்லியப் பெண் இவளாய் இருப்பாளோ?' என்று எண்ணியபடி அருகில் செல்லச்செல்ல அதற்குள் அவளிடத்தில் ஒருவன் மிக உரிமையாக 'உன்னோடப் பையன் என்னகிட்டே இருக்கவேமாட்டேன்னு ரொம்பவே அடம்பிடிக்கிறான். அம்மாதான் வேணுமாம், இந்த அப்பா வேண்டாமாம்' என்றபடி குழந்தையை அவளிடத்தில் கொடுக்க அதைக் கவனித்துக்கொண்டிருந்த ராகவனின் எண்ணம் தவிடுபொடியானது.

  அதேபோல் சற்றுதூரம் செல்ல ஒரு அப்சராஸ்அழகி யாரோ ஒரு பெரியவருடன் செல்வதைப் பார்த்த ராகவன் நான் தேடும் அழகி வளாய் இருக்குமோ?’ என்கிற ஆர்வத்தில் அணுக, அவள் அதேவேளையில் 'பார்த்தீங்களா, உங்க மாப்பிள்ளையை! நாம வந்து அரைமணி  நேரமாச்சு. இன்னும் அவரைக் காணாம்' என்ற வசனம் காதில் விழுந்தபோது அவன் காதுகள் இரண்டும் அடைப்பட்டுப் போனதாக உணர்ந்தான்.

  இப்போது ராகவன் மனதில் இந்த எண்ணம் ஓடியது. ‘அழகானப் பெண்களை யாரும் விட்டுவைக்கமாட்டார்கள்போலல்லவாத் தெரிகிறது. ஒருவேளை நான் தாமதமாகப் பெண்பார்க்க ஆரம்பித்திருக்கேனோ? நடந்த நிகழ்வுகளைப் பார்த்த ராகவன் தனக்குள்ளே 'எனக்கென்னவோ நான் நினைத்தபடி அழகான மனைவி கிடைப்பாள் என்ற நம்பிக்கை இல்லை என்று எண்ணியதால் அந்த நம்பிக்கைச் சற்று குறைந்துவிட்டதாக உணர்ந்தான்.

  மனது கற்பனையிலும் கண்கள் சாலையிலும் நடந்துகொண்டிருந்த ராகவன், சற்று தூரத்தில் பதற்றத்துக்குள்ளாகும் அதிர்ச்சியான அந்தக் காட்சியைக் கண்டமாத்திரத்தில் அவனுடைய கால்கள் அதை நோக்கி ஓட்டமெடுத்தது. அங்கே ஒரு தாயின் கவனக்குறைவால் அவளுடைய குழந்தை அவசரமாகக் சாலையைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக எதிரே ஒரு கனரகவாகனம் வேகமாக அக்குழந்தையை நோக்கி வருவதை ராகவன் கவனித்தாலும், அக்குழந்தையைக் காப்பாற்ற முடியாத தூரத்தில் இருந்தான். அவன் இதயம் ஒரு சில மணித்துளிகள் நின்றேவிட்டது! தன் கண்ணெதிரே ஒரு குழந்தை இறக்கும்காட்சியைக் காணச் சகிக்கமுடியாமல் இருகண்களை நன்றாக மூடிக்கொண்டபோதும் தன் கைவிரல்களின் சிறு இடைவெளியின் வழியாக நடக்கப்போகும் கோரநிகழ்ச்சியைப் பார்க்க முனைந்தான்.

  ஆனால் அவன் எண்ணியதற்கு மாறாக, எங்கிருந்தோ ஒரு பெண் உருவம் அக்குழந்தையைச் சாலையிலிருந்து சட்டென்று நடைபாதையில் தூக்கி வீசிய வேகத்தில் அவள் தன்வசத்தில் வைத்திருந்த கைப்பையை நழுவியபடி கீழேவிழுந்து அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறிப் போனதோடு அவளும் மயக்கமாகிக் கீழே சாய்ந்து விழுந்தாள்.

  அவ்விடத்தில் இருந்த குழந்தையின் தாயானவள் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த ராகவனிடம் "தம்பி, இந்தப் பொண்ணுமட்டும் என் குழந்தையைக் காப்பாத்திருக்காவிட்டால் நான் உயிரோடு இருந்திருக்கவே மாட்டேன். இந்தப் பெண்ணுக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு தெரியலே. சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போங்க தம்பி' என்று தனது இயலாத நிலையை நாசூக்காக எடுத்துக்கூறி ராகவனை விரைவுபடுத்தினாள். அந்தவேளையில் ராகவனும் ஒரு மனிதாபிமான முறையில் ஒரு ஆட்டோவை உடனே அழைத்து அவளை அதில் ஏற்றியபின், அப்பெண்ணின் கைப்பையிலிருந்து வெளியே சிதறிக்கிடந்த பொருட்களை அவன் நிதானத்தை இழந்தவாறு அவசரம் அவசரமாகச் சேகரித்தான். அவற்றில் அப்பெண் மாநில அளவில் நடந்த கதை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றச் சான்றிதழ்கள், பதக்கங்கள் அடங்கியிருந்தன. இது தவிர அப்பெண் எழுதியப் புத்தகங்கள் சில அப்பெண்ணின் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் விதமாக இருந்தன.

  அவைகளைப் பத்திரமாக அவளின் கைப்பையில் சேகரித்தபடி 'ஆட்டோக்காரரே, நிர்மலா ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் சீக்கிரமா போப்பா' என்று பணிவாகக் கட்டளையிட்டான். அதேவேளையில் அவன் தனது கைபேசியை எடுத்து "யாரு, டாக்டர் பிரபாகரா?" என்று பதற்றத்தில் நாக்கு உளறியபடி பேச "ஆமாண்டா, ராகவா. உனக்கு என்னாச்சு? பேச்சு ஒருமாதிரியாக இருக்கே!" என்று அவன் டாக்டர் நண்பன் விசாரிக்க, நடந்ததை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னான் ராகவன்.

  "டோண்ட் வொரி ராகவன். நான் இருக்கேன். தைரிமா இரு. நீ ஆட்டோவில் அந்தப்பெண்ணை எடுத்துட்டு வர்றதை கேட்டிலிருந்து மற்ற எல்லாருக்கும் சொல்லி விடுகிறேன். அவங்க நேரா எங்கிட்டே அழைச்சுட்டு வந்துடுவாங்க. மற்றதை நான் பார்த்துக்கிறேன்" என்று தைரியம் கொடுத்தபிறகே ராகவனுக்கு நிம்மதி வந்தது.

  அந்த ஆட்டோவை பார்த்தமாத்திரத்தில் "சார், டாக்டர் பிரபாகரன் சொன்ன கேஸா?" என்ற கேள்விக்கு "ஆமாங்க" என்றவாறே தலையாட்டினாலும் ராகவனுக்கு இனம்புரியாத ஒருகவலையும் அன்பும் அப்பெண்ணைப் பார்த்தபிறகு எட்டிப்பார்த்தது. இவ்வளவுக்கும் அவள் ராகவன் கற்பனையில் வரும் 'கனவுக்கன்னி' போல் இல்லாமல் இருந்தாள்.

  டாக்டர் பிரபாகரோ, “ராகவா, பயப்படும்படியா இருக்காதுபோல் தெரியுது. இருந்தாலும் தலையிலே லேசா அடிப்பட்டதால் மக்கம்போட்டு விழுந்திருக்கிறாள். எதுக்கும் தலைப் பகுதியை ஒரு எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்துடுவோம்என்றுத் தனது உதவி டாக்டரிடம் அந்த வேலையைச் சொல்ல, அவரும் 'ஆகட்டும்' என்று அப்பெண்ணை எக்ஸ்-ரே எடுக்கும் அறைக்கு எடுத்துச் சென்றார்.

  "ராகவா, நீ இங்கேயே இருந்தா வீணாக ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருப்பாய். நீ என் கூட என் அறைக்கே வந்து இரு. அதுதான் நல்லதுன்னு எனக்குப்படுது" என்று ராகவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார் டாக்டர் பிரபாகரன்.

  பிரபாகரும் ராகவனும் அறையில் உள்ளே நுழைந்த அதேவேளையில் "டாக்டர், படப்பிடிப்பின்போது தலையிலே அடிபட்ட 'சிந்தாலா' நடிகையின் 'எக்ஸ்-ரே' ரிப்போர்ட் வந்திருச்சி டாக்டர்' என்றபடி உதவி டாக்டர் தன் கையில் இருந்த எக்ஸ்-ரே படத்தைக் கொடுக்க அதனை வாங்கிய பிரபாகர், சிறிய வெள்ளைநிறச் சோதனைப் பெட்டிபோல் இருக்கும் இடத்தில் அதனை மாட்டிவிட்டு விளக்கினை எறியவிட்டார். அழகாக இருக்கும் 'சிந்தாலா' எலும்புக்கூடாய் மண்டை ஓடாய்க் காட்சியளித்தாள். அதை நுண்ணிப்பாகப் பார்த்த டாக்டர் பிரபாகர் "அடி ஒன்றும் பலமாய் இல்லை. ஷி இஸ் பெர்ஃபக்ட்லி ஆல் ரைட். அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க. ஆனா ரெண்டு மூனு நாட்கள் மட்டும் ஓய்வு எடுக்கச் சொல்லிடுங்க" என்று உத்தரவிட்டார்.

  அதைக்கேட்ட ராகவன், தான் அழைத்து வந்த பெண்ணிற்கும் இதுபோல் ஒன்றுமில்லாமல் இருக்கவேண்டும்என்று மனதில் வேண்டிக்கொண்டான்.

  சற்று நேரத்தில் உதவி டாக்டர் ஒருவர் பிரபாகரிடம் "டாக்டர், இந்த சார் அழைச்சிட்டுவந்தப் பெண்ணின் 'எக்ஸ்-ரே' படம் வந்திருச்சு. அதனை வாங்கிப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு சோதனைப் பெட்டியில் வைத்து விளக்கினை எறியவிட்டு அதிக நேரமாகவே ஆராய்ந்தார். அதனைப் பார்க்க பார்க்க ராகவன், கவலையின் உச்சத்திற்கேப் போய்விட்டான். அதன்பின் "ராகவன், அவளுக்கு பயப்படும்படியாக ஒண்ணுமாகலே. எல்லாமே சரியாய்தான் இருக்கு! இந்நேரம் அந்தப் பொண்ணுக்கு மயக்கம் தெளிந்திருக்கும். மேற்கொண்டு ஆகப்போவதை உடனே கவனி ராகவா" என்பதைக் கேட்டவுடன் அவன் மனதில் அதுவரையில் ஏற்றிவைத்திருந்த பல ஆயிரம் டன் சுமை இறங்கியதுபோல் உணர்ந்தான். அவன் இப்போது சாதாரண நிலைக்கு வந்தான்.

  "ராகவா, இந்த ரெண்டு எக்ஸ்-ரேயினைக் கவனிச்சியா? ஒண்ணு அழகு தேவதை, அழகு ரதி, இளைஞர்களின் கனவுக்கன்னி 'சிந்தாலாவின் மண்டையோடு! இன்னொன்று நீ அழைச்சிட்டு வந்திருந்த பெண்ணோட மண்டையோடு! இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு நீயே சொல்லுஎன்றபோது அதுவரையில் லட்சியம் செய்யாத ராகவன் அவ்விருபடத்தினை நன்றாகப் பார்த்தான். இரண்டிற்கும் எவ்வித வேறுபாடு இல்லாமல் இருப்பதைக் கவனித்தான்.

  "இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது" என்றான்.

  "பார்த்தாயா. மனிசனுக்குள்ளே இருக்கிற எலும்புகளின் அமைப்பு எல்லாருக்கும் ஒரேமாதிரியாகத்தான் இறைவன் படைச்சிருக்கான். ஆனா வெளியே பார்க்கிற அழகு இருக்கே வெறும் சதையும் தோலாலும் ஆனது. அந்த அழகுக்கு மனிதர்கள் அடிமையாகி வாழ்க்கையில் எவ்வளவு துயரப்படுறாங்க? வெளி அழகு நிலையானதல்ல. அதை மனிதன் உணர்ந்துட்டா போதும்" என்று முடிக்க, அந்த வசனங்கள் ராகவன் காதுகளில் நுழைந்தபோது அவன் தலையில் யாரோ நறுக்கென்று கொட்டியதுபோல் உணர்ந்தான். அன்றுதான் அவன் உண்மையான அழகைப்பற்றிய பாடத்தை கற்றுக்கொண்டான். அதனைப்பற்றிய அறிவும், புத்தியும் வந்தது.

  டாக்டரிடம் விடைபெற்ற ராகவன், உடனடியாகத் தான் அழைத்து வந்திருக்கும் பெண்ணை அவளுடைய வீட்டில் ஒப்படைத்தபிறகு, இன்றைக்கு அவனுக்காகப் பார்க்கப்போகும் பெண் எப்படியிருந்தாலும் 'சம்மதம்' என்று தனது அம்மா, அப்பாவிடம் தெரிவித்து தனது 'பெண் பார்க்கும்' படலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் அவள் இருக்கும் அறைக்கு விரைந்தான்.

  அங்கு, தான் கொஞ்சமும் நினைத்துப்பார்த்திராதபடிப் பலர் அவளைச் சூழ்ந்திருந்தனர்.

  "தம்பி, நீங்க யாரு பெத்த பிள்ளையோ நல்ல நேரத்திலே என் பொண்ணோட உசிரைக் காப்பாத்தீட்டீங்க. ஆயுசு பூரா உங்களை மறக்கவே மாட்டேன்" என்று பெண்ணின் அப்பா ராகவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

  அப்போதுதான் அங்கு தனது அப்பா அம்மாவும் இருப்பதைக் கவனித்தான்.

"அப்பா, நீங்க எப்படி இங்கே..?" என்று ஆச்சரியமாய்க் கேட்டான்.

  "எனக்கு வேண்டப்பட்ட ஒருவர், நீ ஒரு பொண்ணை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரி பக்கம் போனதாக என்னிடம் சொன்னார்" என்று தனது வரவிற்கானக் காரணத்தை விளக்கினார்.

  "ராகவா, இப்ப நீ காப்பாத்தினப் பொண்ணு, வேறு யாருமில்லே. இன்றைக்கு உனக்காக ஒரு பொண்ணைப் பார்க்கப் போறோம்னு சொன்னோமே அந்தப் பொண்ணுதான் இவள்!" என்று மேலும் வியப்பை வெளிப்படுத்தினார் விநாயகம்.

 அதைத் கேட்ட பெண்ணின் அப்பா, "இந்தத் தம்பியா உங்கள் பையன்? நல்லவேளையாக நீங்க பெண் பார்க்க வரலே. அப்படி வந்திருந்தா கட்டாயம் என் பொண்ணை வேண்டாம்னுதான் சொல்லியிருப்பீங்க!" என்று புதிராக ஒரு குண்டைத் தூங்கிப் போட்டார்.

  "ஏங்க நீங்களே உங்க பொண்ணைப் பத்தி இப்படிப் பேசுறீங்க?" என்று விநாயகம் கவலையாக வெளிப்படுத்தினார்.

   "நான் இப்படி பேசுறதுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முதலாவது உங்கப் பையனோட அழகு! இவரோடு எம் பொண்ணை ஒப்பிட்டா ஏணி வச்சா கூட எட்டாது. இரண்டாவது பொண்ணைப் பார்க்குறதுக்கு முன்னாடியே அபசகுணமாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனாலே..."
     
  "மாமா" என்று உணர்ச்சிவசப்பட்டு சப்தமாய் அழைக்க அனைவரும் வியப்பாக ராகவனைப் பாரத்தார்கள்.

  "மாமா, நான் இப்போ உறுதியாச் சொல்றேன். உங்கப் பொண்ணைக் கட்டிக்க எனக்கு முழு சம்மதம்! நானும் நேற்றுவரை அழகு அழகுன்னு கண்மூடித்தனமா, இல்லே இல்லே மூடத்தனமா இருந்திடேன். உங்க பொண்ணு மூலமா அழகுன்னா என்னான்னு தெரிஞ்சுட்டேன். வெறும் சதையிலே இருக்கிற அழகு உண்மையில்லேன்னு இப்போ உணர்ந்துட்டேன். இதுவரை எனது அழகு பைத்தியத்தாலே பல பெண்களை இழிவுபடுத்திட்டேன். அதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது. இனிமேலும் இந்தமாதிரி தவறு செய்வதாக இல்லே. அழகுக்கு நான் வகுத்திருந்த இலக்கணத்தை அடியோடு மறந்துட்டேன்" என்று மனமுவந்து ராகவன் பேசியதைக் கேட்ட அப்பெண் உட்பட எல்லோரும் ஆனந்தத்தால் கண்கலங்கி நின்றனர்.

  "மாபிள்ளை, நீங்க எம் மகளோட உசிரைக் காப்பாத்தினதோடு வாழ்க்கையும் தர்றதா சொல்றீங்களே! அதைவிட மகிழ்ச்சி எங்களுக்கு வேறென்ன இருக்கு?”

  "எனக்கு முழு சம்மதமாக இருந்தாலும் பொண்ணுக்குச் சம்மதமா?ன்னு அவளோட அபிப்பிராயத்தைக் கேளுங்க அம்மா?" என்று ராகவன் தனது அம்மாவிடம் காதைக் கடித்தான். 
 
  "நீ என்னம்மா சொல்றே? என் பையனைப் பிடிச்சிருக்கா?"

  இந்தக் கேள்விக்கு தன் வாயால் பதில் சொல்லாமல் அவள் நாணத்தின் மூலம் அக்மார்க் முத்திரைபோல வெளிப்படுத்தினாள்.

                                                ************************************** **************************************                                            






கொடை குணம் - சிறுகதை கு.கி.கங்காதரன்

கொடை குணம்
சிறுகதை
கு.கி.கங்காதரன்

"யாருக்குமே கொடுக்கின்ற மனம் இருந்தால்தான் கொடை குணம் பிறக்கும்"

அரிதாக சிலருக்குத்தான் தங்களுக்கு நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்னமே அறிந்துகொள்ளும் ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள். அந்தப் பட்டியலில் சதாசிவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதற்குமுன் பலமுறைகள், அப்படியான நடக்கப்போகும் சில அசம்பாவித நிகழ்வுகளை முன்னமே அறிந்து, அதற்கேற்றாற்போல் அதில் பங்கெடுத்துக் கொள்ளாமல் தவிர்த்துத் தப்பித்தும் இருக்கிறார்.

இன்று தனக்கு எங்கிருந்தோ ஏதோ ஒரு ஆபத்து வரப்போகின்றதுஎன்று உள்மனம் எதிரொலித்தது.

இதற்குமுன் சதாசிவம் இம்மாதிரியான வேளையில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது வழக்கம். ஆனால் இன்று ஒரு பெரிய வியாபாரத்தை முடிக்க வேண்டுமென்றால் பயணம் மேற்கொள்ள வேண்டியக் கட்டாயத்தில் இருந்தார். இதனால் கிடைக்கும் வியாபாரத்தை விட்டுவிட முடியாமல் தவித்தார். முடிவாக என்ன நடந்தாலும் பரவாயில்லை, சென்றேத் தீருவது என்று முடிவும் எடுத்தார். போகும் இடம் தூரமாக இருப்பதோடு விரைவாகவும் செல்லவேண்டும் என்கிற நிபந்தனையும் இருந்தது. இருந்தாலும் தான் இன்று எதைச் செய்தாலும் மிகவும் எச்சரிக்கையாகவும் அதேவேளையில் வேகமாகவும் அதிநம்பிக்கையோடும் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

பயணத்திற்காக ஆயுத்தவேலைகள் மடமடவென்று செய்துமுடித்தார். கார் டிரைவராக யாரை அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தபோது அவருக்கு உடனே 'குமரகுரு' ஞாபகம் வந்தது. ஏனென்றால் இளமையும் சுறுசுறுப்போடும் அதில்லாமல் சமயோசிதப் புத்தியோடும் செயல்படக்கூடியவன். எந்த நிலைமையில் இருந்தாலும் தெளிவாகச் சிந்தனை செய்பவன்.

"குரு, வியாபார விசயமா உடனே திருவாரூர் போகவேண்டும். அதற்குவேண்டிய ஏற்பாடு உடனே செய்துவிடு. முக்கியமா, ஒன்னுக்கு ரெண்டு தடவை காரை நன்றாக சரிபார்த்துக் கொள். பயணத்தின்போது எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது" என்று நடக்கப்போகும் அசம்பாவிதத்தை மனதில்கொண்டு அதனை முறியடிக்க முன்ஜாக்கிரதையாகச் சில ஏற்பாடுகளைச் செய்தார்.

"ஆகட்டும் முதலாளி" என்று டிரைவர் குமரகுரு தன் முதலாளி சொன்ன வேலைகளைச் சிரத்தையோடு, விரைவாகவும் செய்ய ஆரம்பித்தான். அவனைப் பொறுத்தவரை எந்த ஒரு வேலையினைச் சொன்னாலும் நேர்த்தியாகச் செய்து முடித்துவிடுவான். அவனுக்குத் திருப்தி உண்டாகும்வரை சலிக்காமல் திரும்பத்திரும்பச் செய்வது அவனது பழக்கமும் கூட.
அனைத்து ஏற்பாடுகளும் துல்லியமாகச் செய்து காரை வாசலில் நிறுத்திவிட்டு தன் முதலாளிக்காக காத்திருந்தான் டிரைவர் குமரகுரு.

அவரும் வேகமாக ஆயுத்தமாகி "குரு, புறப்படலாமா?" என்று கேட்க "புறப்படலாம் முதலாளி. எல்லாவற்றையும் ஒன்னுக்குப் பத்துமுறை சரிபார்த்துட்டேன். எந்த ஒரு பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பே இல்லை" என்று உறுதியாகப் பதில் சொல்லியவாறே காரின் பின்பக்க கதவினைத் திறந்துவிட, அதில் சதாசிவம் வசதியாக உட்கார்ந்த பிறகு, "ம்.. வண்டியை எடுக்கலாம்" என்று குமரகுருவுக்கு பச்சைக்கொடி காட்டினார் சதாசிவம்.

இருவரும்  காரில் ஏறி அமர்ந்ததுதான் தாமதம், கார் சாலையில் பறக்க ஆரம்பித்தது. எந்தச் சாலையில் எப்போது வேகமாகச் செல்லவேண்டும்? எப்போது நிதானமாகச் செல்லவேண்டும் என்பது குமரகுருவுக்கு அத்துப்படி.

சாலைக்கு வந்துவிட்டால் யாராக இருந்தாலும் சாலைவிதிகளைச் சரியாகக் கடைபிடித்தால்தான் எந்த ஒரு விபத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். அதில் யாராவது ஒருவர், சாலைவிதிகளை மீறும்பட்சத்தில், அவருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சிலவேளைகளில் கோர நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அதில் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக பல உயிர்கள் பலியான சம்பவங்களும் சில நடக்கவும் செய்திருக்கின்றன.

டிரைவர் குமரகுருவின் பார்வையும் கவனமும் சாலையில் லயித்திருந்திருந்தன. சதாசிவத்தின் எண்ணங்களோ தனக்கு நடக்கப்போகும் அசம்பாவிதத்தைப் பற்றி ஒருபுறம் இருக்க, இந்தப்பயணத்தால் தன் வியாபாரத்தில் கிடைக்கும் பெரிய பலனைப் பற்றியையும் அசைபோட்டுக் கொண்டிருந்தது.

இதுவரைக்கும் எல்லாமே சரியான பாதையில் போய்க்கொண்டிருந்த அந்தக் காரை மோதும் வண்ணம், திடீரென்று தவறாக மற்றொரு கார் எதிர்திசையில் வந்து கொண்டிருக்கின்றது.

"குரு, அதோ ஒரு கார்! மோத வருவதுபோல் நமக்கு எதிரே வருது, பார்த்து …" என்று உசார் படுத்தினார். அவ்வேளையில் தமக்கு நடக்கப்போகும் அசம்பாவிதம் இதுதான்என்றும் உணர்ந்தார்.

"ஐயா, பாரத்துட்டேன். ஆனால் அந்தக் கார், நம்மைக் கவனிக்காமல்..."
"அந்தக் காரில் 'பிரேக்' இல்லைபோல இருக்கு. ஏதாவது உடனே செய்!"
"முயற்சி பண்ணுகிறேன் முதலாளி"  

உடனே ஏது செய்வதறியாது குமரகுரு தனது அத்தனைத் திறமையும் அனுபவமும் கொண்டு சாமர்த்தியமாக காரைத் திருப்பிச் சட்டென்று 'பிரேக்' போட, அதைச் சற்றும் எதிர்பாராத சதாசிவம் நிலைகுலைந்து முன்இருக்கையில் மோத, கார் எவ்வித சேதமில்லாமல் தப்பித்தது. ஆனாலும் சதாசிவத்தின் தலை, முன்இருக்கையில் மோதியதால் அவர் தலையிலிருந்து பொலப்பொலவென்று இரத்தம் ஆறாய் வெளிவந்தது. அதைப்பார்த்துச் சுதாரித்த குமரகுரு, ஒரு துணியால் அவர் தலையைச் சுற்றி மேற்கொண்டு இரத்தம் அதிகமாக வெளிவராமல் தடுத்தான்.

"முதலாளி, முதலாளி" என்று குமரகுரு பலமுறை கூப்பிட்டும் சதாசிவம் விழிக்காமல் இருக்கவே அவனுக்கு லேசாகப் பயம் தொத்திக்கொண்டது.  

ஆயினும் சதாசிவம் தலையிலிருந்து அதிக இரத்தம் வெளியேறியதால் மயக்கமாகிப் போனார். 'தன் முதலாளிக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. எப்படியாவது அவரை நல்ல நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும்' என்கிறத் துடிப்பு அவனுள் இருந்தது.

நிலைமை மேலும் மோசமடைவதற்குள் பக்கத்தில் ஏதேனும் ஆசுபத்திரி  இருக்குமா? என்று காரை உருட்டிக்கொண்டே ஓட்டிச் சென்றான் குமரகுரு. அந்த இடம் கிராமம் போல இருந்ததால் அவனால் ஆசுபத்திரியை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாமல் போனது.

'சீக்கிரம் ஒரு நல்ல ஆசுபத்திரியைக் காட்டு!' என்று பல தெய்வங்களை மனதில் வேண்டிக்கொண்டான்.

அவன் நேரத்திற்குச் சற்றுத் தொலைவில் ஒரு ஆசுபத்திரி இருப்பதைக் கண்டவன், காணக் கிடைக்காத காட்சியாக அதனைப் பார்த்தான். உடனே உள்ளே சென்று டாக்டரிடம் நடந்ததைக் கூறி தன் முதலாளிக்கு வேண்டிய சிகிச்சையை வழங்குமாறு வேண்டிக்கொண்டான். அங்கிருந்த டாக்டரும் நர்சும் கொஞ்சம்கூட தாமதம் செய்யாது உடனே சிகிச்சையை ஆரம்பித்தார்கள். பல சோதனைகள் செய்தனர். கடைசியாக அவர் தலையிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவருக்கு இரத்தம் உடனே உடலில் செலுத்தியாகவேண்டும் என்று குமரகுருவிடத்தில் டாக்டர் சொன்னார்.

"டாக்டர் எந்தவகை இரத்தம் வேண்டும்" என்று சொல்லும்படி விரைவுபடுத்தினான். 
"இந்த பாருங்க தம்பி, இவரோட இரத்தம் அரியவகை இரத்தம். உடனே கிடைப்பது ரொம்பக் கடினம். ஆனா முயற்சி பண்ணுகிறேன்என்று கைபேசி மூலம் பல இரத்த வங்கிகளுக்குத் தொடர்பு கொண்டார் டாக்டர்.
"டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் முதலாளியை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்" என்று கெஞ்சாத குறையாக சொன்னான்.

அதேநேரத்தில் அந்த அரியவகை இரத்தத்தைத் தனக்குத் தெரிந்தப் பலரிடம் கேட்டுப்பார்த்தான் குமரகுரு.

அவர்களுக்குக் கிடைத்தபதில்கள் இல்லை என்றும் நாளை காலையில் கிடைக்கும்என்றே வந்தன.
டாக்டர் ஒரு கட்டத்தில் அமைதியாய் யோசனையில் மூழ்க, அதனைக் கலைத்தான் குமரகுரு.

"டாக்டர், கடைசியாக எனது இரத்தம், எந்தவகை இரத்தம் என்று பரிசோதித்துப் பாருங்க டாக்டர். அப்பறம் கடவுள் விட்ட வழிஎன்று தனது கடைசி நம்பிக்கையை முயற்சித்தான் குமரகுரு.

அவனுடைய நம்பிக்கையும் டாக்டரின் முயற்சியும் வீண்போகவில்லை. ஆம்.. குமரகுருவின் இரத்தமும் சதாசிவத்தின் இரத்தமும் ஒரேவகையைச் சேர்ந்தது என்று பரிசோதனையின் முடிவு அறிவிக்க, மேற்கொண்டு நடக்கவேண்டியதை டாக்டரும் நர்சும் சற்றும் தாமதிக்காமல் உடனே ஆரம்பித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக சதாசிவத்திற்கு சுயநினைவு திரும்ப ஆரம்பித்தது. தான் மிகப்பெரிய ஆபத்திலிருந்துத் தப்பித்ததாக உணர்ந்தார். பக்கத்தில் படுத்திருந்த குமரகுருவின் கையிலிருந்து இரத்தம், அவர் உடலில் ஏறிக்கொண்டிருந்தது. இன்று காலையில் தனது உள்மனம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருந்ததால்தான் இந்த விணைஎன்று அவர் எண்ணிக்கொண்டார். இந்நிலையில் அவர் தம் வியாபாரத்தைவிட தனது உயிரைப் பற்றியே அதிகம் சிந்தித்தார்.

சிறிதுநேரத்தில் முழுவதுமாக குணமடைந்தவராக உடலில் தெம்பும் மனதில் திடமும் தெரிந்தன. ‘தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம்என்று சொல்லிக் கொண்டார்.

"டாக்டர், நீங்கள் சரியான சமயத்திலே என் உயிரைக் காப்பாத்திட்டீங்க. அதுக்கு என்னோட பரிபூரண நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றவாறு டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட முயற்சித்தார் சதாசிவம்.

"இது, என்னைப் போன்ற ஒவ்வொரு டாக்டரின் கடமை. இதைப் பத்திப் பெரிசா பேசவேண்டியதில்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே நீங்க குணமாகிவிடுவீங்க. உங்களுக்கு இப்ப நல்ல ஓய்வு தேவை" என்று டாக்டர் சதாசித்திற்கு நம்பிக்கையளித்தார்.

"என்ன இருந்தாலும் இந்த உயிர் பிழைச்சது உங்களால்தானே டாக்டர்!"

"எனக்கு நீங்க நன்றியைச் சொல்வதைவிட, உங்கள் டிரைவருக்கு முதல்லே நன்றியைச் சொல்லுங்க. அவர்மட்டும் உங்களுக்குச் சரியானபடி முதலுதவியைக் கொடுத்திட்டு, இங்கு வந்திருக்காவிட்டால் நீங்கள் பிழைத்திருக்க மாட்டீங்க" என்று தனது அபிப்பிராயத்தைச் சொன்னார் டாக்டர்.  

"கண்டிப்பாக. அவன் எனக்குக் கொடுத்த உயிர்பிச்சைக்கு என் நன்றியை தெரிவிப்பதோடு அவனை வாழ்நாள் முழுவதும் நன்றாக கவனித்துக் கொள்வேன். இப்போது உங்களுக்கு ஏதாவது பெரிசா செய்யனும்னு நினைக்கிறேன். நீங்க மறுக்கக் கூடாது. என்னைப்போல அவசர சிகிச்சைக்கு மட்டுமில்லாம ஏழைகளுக்கும் உங்க மூலமா இலவசசேவை கொடுக்கணும். அதுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றேன்" என்று தன் செய்நன்றியை உடனே காட்டவேண்டும் என்றுத் துடித்தார் சதாசிவம்.

"இப்ப அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஏற்கனவே நான் ஏழைகளுக்கு இலவசமாத்தான் சிகிச்சை கொடுக்கிறேன். மீறி எனக்கு ஏதாவதுத் தேவைப்பட்டா உங்களிடம் வருகிறேன்" என்று அவருடைய கைபேசி எண்ணையும், விசிட்டிங் கார்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டார் டாக்டர்.

டாக்டரின் நடவடிக்கை அங்கிருந்த நர்சுக்கு அதிசயமாக இருந்தது. ‘இந்த டாக்டரிடம் பணக்காரர் யாராவது சிக்கிக் கொண்டால் அவரிடத்தில் எவ்வளவு பணம் கரக்கமுடியுமோ அவ்வளவு பணம் கரக்கக் கூடியவர்என்று அந்த நர்சுக்கு நன்றாகவேத் தெரியும். பின் ஏன் இந்த திடீர் ஞானோதயம்?' என்பதற்கு விடைத்தெரியாமல் தவித்தாள்.

"டாக்டர் என்ன இருந்தாலும் அவர் கொடுத்த வாய்ப்பை ஏத்துக்காம இருந்தது எனக்கு வருத்தம்தான். இதுதான் தகுந்த சமயம்னு அவர்கிட்டேயிருந்து சில லட்சத்தைக் கரந்திருக்கலாம். அநியாயமா விட்டுட்டீங்களே"

"நர்சு.. நீ சொல்றதுபோல, அவர் இங்கு சிகிச்சை எடுக்க வந்தவுடனே, அவரிடமிருந்து சில லகரம் கரந்துவிடத் திட்டம்போட்டது உண்மை"

"பின்னே, ஏன் டாக்டர் அந்தமாதிரி செய்யலே?"

"அவருக்கு அரியவகை இரத்தம் தேவைன்னும் அந்த இரத்தம் இலேசா கிடைக்காதுன்னும் நமக்கு நல்லாத் தெரியும்"

"அதுக்கு என்னா டாக்டர் செய்யுறது. நீங்க அதுக்கு முயற்சி பண்ணீங்களே. நல்லவேளை அந்த டிரைவரோட இரத்தம் சேர்ந்திச்சு. அதனாலே அவர் பொழச்சார். இல்லாட்டிப் பொணமாத்தான் போயிருப்பார்" என்று சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாள் நர்சு.

"அது தப்பு. நான் நினைத்திருந்தா ரொம்ப எளிதா அவரைக் காப்பாத்திருக்கலாம். ஆனா எனக்கு மனசு வரலே. மனசு இருந்தாத்தான் கொடை குணம்வரம்னு டிரைவர் மூலமா எனக்கு இப்பதான் தெரிச்சது"

"என்ன டாக்டர் சொல்றீங்க?"

"ஆமா.. அதுதான் உண்மை. ஏன்னா என்னோட இரத்தமும் அந்த அரியவகையைச் சேர்ந்தது. சொல்லப்போனா நான்தான் அவருக்கு முதல்லே இரத்தம் கொடுத்திருக்கணும். நான் அதைச் செய்யலே. என்னைப் போல சுயநல டாக்டர் பலர் இருக்கிறதாலேயேப் பல நோயாளிங்க செத்திருக்காங்க. இதுவரை எந்த டாக்டராவது தனது இரத்தத்தை சாகக் கிடக்கும் நோயாளிக்கு கொடுத்திருக்காங்களா? இல்லையே. எந்தவகை இரத்தமானாலும் காசுக்காகத்தானே வாங்கி நோயாளிகளுக்குக் கொடுக்கிறாங்க. என் செயலைப் பார்த்து நானே வெட்கப்படுறேன். ‘தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்னு டாக்டர்களும் அவசியம் தெரிஞ்சுக்கணும். இனிமே என்னால் முடிஞ்ச அளவுக்கு அதைக் கடைபிடிக்க ஆரம்பிக்கப்போறேன். இந்தமாதிரி நிகழ்ச்சி இனி என்வாழ்க்கையிலே நடக்கவேக் கூடாதுன்னும் முடிவுபண்ணிட்டேன்" என்று என்று தன் மனதில் உள்ளதை வெளியேக் கொட்டினார் அந்த டாக்டர்.

இந்த உண்மையைக் கேட்ட அந்த நர்சுவின் மனதிலும் ஒருவித எண்ணம் உதித்தது.
"டாக்டர்ங்க மட்டுமில்லே. நர்சுகளும் இரத்த தானத்தைச் செய்யவேண்டும் என்று கருதுகிறேன். அது நான் இப்பவே அதுக்குத் தயாராகிவிட்டேன்"

"என்னுடைய உன்னுடைய இந்த கொடை எண்ணம் கண்டிப்பா ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். இது உறுதி" என்று உணர்ச்சி வசப்பட்டார் டாக்டர்.     

"நர்சுஎன்று அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தார் டாக்டர்.
அவங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சுட்டு இருக்காங்க?"

அவர்களைப் பார்த்தவாறே "அவங்களுக்குள்ளே ஏதோ பேசிட்டே இருக்காங்க. புறப்படுறதுக்கும் தயாராகிட்டாங்க போலிருக்கு" என்கிறத் தகவலை டாக்டருக்குத் தந்தாள் நர்சு. அங்கே...

"முதலாளி!"

"என்ன குரு?"

"அடுத்து எங்கே போகணும் முதலாளி?"

"நேராக வீட்டுக்கு. இனி அந்த வியாபாரம் எனக்கு வேண்டாம்"

"சரிங்க முதலாளி. நான் ஒன்னு சொல்ல நினைக்கிறேன். முதலாளி கோபிக்ககூடாது"
"என்ன குரு. சும்மா சொல்லு"

நாளைக்கு என் டிரைவர் வேலையை ராசினாமா செய்யப்போறேன்!" என்கிற அதிர்ச்சி தகவலை சொன்னான்.

திடீரென்று இப்படி பேசியபோது ஒன்றும் பிடிபடாமல் விழித்தார் சதாசிவம்.

"ஏன்? என்ன காரணம் குரு?"

"என்னாலேதானே முதலாளி உங்களுக்கு இந்த துன்பம் நேர்ந்திச்சி. உங்க உடம்பும் இப்படி ஆயிடுச்சி. அதோடு பெரிய வியாபாரமும் போயிடுச்சு"

"குரு, உண்மையிலே நீ காரை ஓட்டிட்டு வந்ததாலேதான் நான் பிழைச்சேன். வேறே யாராவது ஓட்டிட்டு வந்திருந்தா நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு? என் உசுரு விட வியாபாரமா முக்கியம்? நீ செஞ்சுருக்கிற இரத்த தானத்தை அவ்வளவு சுலபமா வேறே யாரும் செஞ்சிருக்கமாட்டாங்க"

"இல்லை முதலாளி, என்னோட மனசு.."

"நான் இன்னொன்று சொல்றேன். அதைச் சொன்னா இன்னும் அதிர்ச்சி ஆயிடுவே"
"அது என்ன முதலாளி?"

"இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்கும்ன்னு எனக்கு முன்னமே தெரியும். என்னோட உள்மனசு எவ்வளவோ தடுத்தும், என்னோட பேராசையினாலேதான் நான் இந்த கதிக்கு ஆளாயிருக்கேன். உன்னோட கொடை மனசு என்னையும் கொடைக்காரனா மாத்திடுச்சி. என்னோட அகக்கண்கள் திறந்திருச்சி. புதிய சக்தியும் பொறந்திருச்சி. இன்றையிலிருந்து என்னாலானப் பல உதவிகளைத் துயரப்படுகிற ஏழைகளுக்கு உன்மூலமாச் செய்யனும். அதுதான் என்னோட ஆசை. அதை நிறைவேத்துவாயா?"

"முதலாளி, இதைவிட எனக்கு மகிழ்ச்சி எதுவுமில்லை" என்று ஆனந்தக் கண்ணீரோடுச் சம்மதித்தான் டிரைவர் குமரகுரு.

&&&&&&&&&&&&&&&