Pages

Wednesday 13 January 2016

HAPPY PONGAL GREETINGS - தைப் பொங்கல்

உலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 

HAPPY PONGAL GREETINGS 
TO ALL WORLD PEOPLE

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் என்னும் பண்டிகையாம் ..
மனதிலும் வீட்டிலும் சமூகத்திலும் 
விரும்பாத வேண்டாத கிட்டாத 
பழையன கழிதலும் புதியன புகுதலும் 
மெய்பட அனைவரும் 
விரும்பும் பழமையை 
புதிதாய் செம்மையாய் 
எந்நாளும் பொன்னாளாய் திகழ 
பொங்கல் தின விழா நல்வாழத்துகள் 
மதுரை கங்காதரன் 

****************************************************

Monday 4 January 2016

சொந்தக் காலில் ..... சிறுகதை

சொந்தக் காலில் ..... 

சிறுகதை

மதுரை கங்காதரன் 
 
"என்ன முருகா, ஏது இந்த பக்கம்? "
 
"மாணிக்கம் ! உன்னைப் பார்க்கத் தான் புறப்பட்டேன். என்னான்னு தெரியலே. உன்னைப் பார்த்த பின்னே ஏதோ  ஒரு புது தெம்பு  வந்திருக்கு. மனசிலே இருக்கிற பாரம் குறைஞ்சது போல இருக்கு " தன் நண்பனை பார்த்தது கடவுளைப் பார்த்தது போல உணர்ந்தான். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று சொல்லுவார்கள். இவர் விசயத்தில் அவர் நண்பர் தான் தெய்வம்!
 
"விசயத்தை சொல்லு. உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. அதனாலே தான் இப்படி பேசுறே. பிரச்சனை என்னான்னு சொல்லு ? முடிஞ்சளவு தீர்க்கப் பார்க்கிறேன் !"
 
"ஒண்ணுமில்லே, என்னோட வருமானத்திலே வாடகை , சாப்பாட்டு செலவுக்கே சரியா இருக்கு. நல்ல  நாளப்போ கூட நல்ல துணிமணி எடுக்க முடியாத சூழ்நிலை! இது தான் என்னோட வாழ்க்கை சூழ்நிலைன்னு  உனககுத் நல்லாத் தெரியும்.  அப்பப்போ  நீயும் கொஞ்சம் உதவி செய்றதாலே ஏதோ வண்டி ஓடுது. என்  பையன் பாண்டியன் இந்த வருசம் +2 தேர்வு எழுதியிருக்கிறான். நல்ல மதிப்பெண்கள் வரும்ன்னு  சொல்றான். ஆனா அவன்  எவ்வளவு  மதிப்பெண் வாங்கினாலும் என்னாலே அவனை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூட சேர்க்க முடியாது.  என்னோட பொண்ணு +2 தேர்விலே ரொம்ப நல்ல மதிப்பெண் எடுத்தும் அவளை அரசு கலைக்கல்லூரியில் தான் படிக்க வைக்க முடிஞ்சது. அதுவும் கஷ்டப்பட்டுத் படிக்க வைக்கிறேன். அவளுக்கு இந்த வருசத்தோட படிப்பு முடியுது. அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். அந்த செலவும் இருக்கு"
 
"இதெல்லாம் எனக்குத் தெரியாதா? அது சரி பிரச்சனை என்னான்னு சொல்லு ?"
 
"சொல்றேன். என்னோட பையன் தன்னுடைய மேற்படிப்பு தொழில் நுட்பக் கல்லூரியில் தான் படிக்க வேண்டும்ன்னு அடம்பிடிக்கிறான். அவன் வாங்கும் மதிப்பெண்ணிற்கு எங்கேயோ ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனா கண்டிப்பா உள்ளூரில் கிடைக்காது. அவன் கேட்கும் பாடமும் விரும்பும் கல்லூரியும்அதிக பணம் கொடுத்தாத் தான் கிடைக்கும் . அதுக்கு எப்படியும் மூன்று , நான்கு லட்சம் செலவாகும். வங்கியில் கடன் வாங்கும் வசதியும் எனக்கில்லை. அவனை  சாதாரண கல்லூரிக்கு கூட சேர்க்க முடியாத  நிலைமையிலே நான் இருக்கிறேன். அவன்கிட்டே என்னோட வீட்டு நிலைமை எப்படி சொல்றது?  இந்த காலத்துப் பசங்க எப்படி அதை எடுத்துக்குவாங்க? நீ தான் அவன்கிட்டே பக்குவமா  சொல்லிப் புரிய வைக்கணும்" என்றார்.
 
" சரி, சரி நான் வந்து அவன்கிட்டே பேசிப் பார்க்கிறேன். இப்போ அவன் எங்கே இருக்கிறான்?"
 
"வீட்டிலே தான் இருக்கிறான். ஏதோ அவங்க பள்ளியிலே ஒரு விழாவாம். அதுக்குப் போகணும்ன்னு சொன்னான்!"
 
முருகன் தன் நண்பனுடன்  வீட்டிற்குள் நுழைந்தார்கள். 
 
" வள்ளி ! மாணிக்கம் வந்திருக்கிறான். மோர் கொண்டு வா சீக்கிரம்" என்று தன் மனைவிடம் கூறினான் முருகன்.
 
" வாங்க அண்ணே. எப்படி இருக்கீங்க? இதோ வந்துடுறேன்" அவள் சமையலறையில் தன்  வேலைகளை  கவனிக்கச் சென்றாள்.
 
"பாண்டியா ! பாண்டியா!" என்று செல்லமாக அழைத்தார் முருகன்.
 
"இதோ வந்துட்டேனப்பா" பணிவாக அவர்கள் முன் நின்றான்.
 
"என்ன பாண்டியா. பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே?"
 
"நல்லா எழுதியிருக்கிறேன் மாமா "
 
"எங்கேயோ போறதுக்கு தயாராக இருக்கிறாப்பிலே இருக்கே?" என்றார் மாணிக்கம்.
 
"ஆமாம் மாமா. எங்களோட பள்ளியிலே புதுசா ஒரு கட்டிடத்திற்கு திறப்பு விழா இன்னைக்கு நடக்குது. சிறப்பு  விருந்தினர்  யாரோ 'மதியரசன்' வருகிறாராம். கண்டிப்பா எல்லா மாணவர்கள் வரவேண்டும். அதிலேயும் +2 மாணவர்கள் தவறாம வரவேண்டும்ன்னு சொல்லியிருக்காங்க"
 
"யாரு , மதியரசனா? அவரா! அப்போ நீ அவசியமா போயேத் தீரனும். போயிட்டு வந்த பிறகு உன்கிட்டே பேசுறேன்" என்று அவனை அனுப்பி வைத்தான் முருகனின் நண்பன் மாணிக்கம்.
 
" என்ன மாணிக்கம், என் பையன்கிட்டே ரெண்டு வார்த்தை பேசுவேன்னு நினைச்சேன். இப்படி புசுக்குன்னு அனுப்பி வைச்சுட்டே!" என்று உரிமையாகக் கடிந்து கொண்டான்.
 
"முருகா. நான் உங்க மகன்கிட்டே பேசுறதுக்கு வேலை இருக்காது. நீ நினைக்கிறது போல எல்லாம் தானாக நல்லாவே நடக்கும்"
 
"என்னப்பா , சொல்றே. எனக்கு ஒண்ணும் புரியல்லே" என்று முழித்தார் முருகன். அதற்குள் வள்ளி இருவருக்கும் மோர் கொடுத்தாள்.   
 
மோரைக் குடித்துவிட்டு "இப்போ புரியாதது. உன் மகன் விழா முடிச்சிட்டு வரட்டும். வந்த பிறகு எல்லாமே புரியும். அவனைப் பத்தி இனிமேல் கவலை படாதே. அவசியம் ஏற்பட்டா நான் பிறகு வந்து பார்க்குறேன்" என்று விடை பெற்றுச் சென்றார் மாணிக்கம்.
 
பள்ளி நுழைவாயிலில் ஒரே ஒரு அதுவும் சற்று பெரிய அளவில் திறப்பு விழா பற்றிய  நிகழ்ச்சிப் பலகையினை  வைத்திருந்தார்கள். அதில் தலைமை ஆசிரியர் அவர்களின் பெயரும் அதற்குப் பக்கத்தில் பல பட்டப்படிப்புகளும், அதற்கு கீழ் சிறப்பு விருந்தினர் அவர்களின் பெயர் தான் மட்டும் இருந்தன. படிப்பும் , பதவியும் அதில் குறிப்பிடவில்லை.  அதற்கு அடக்கம் , பணிவு தான் அதற்குக் காரணமாக  இருந்திருக்க வேண்டும்.
 
பாண்டியனும் அவன் நண்பர்கள் பலரும் ஆர்வமாக விழாவிற்குச் சென்றனர். பள்ளியில் அனைவருடன் பாண்டியன்  இப்படிக் கூடுவது அனேகமாக இது தான் கடைசியாக இருக்கும். இதற்குப் பிறகு எல்லோரும் பிரிந்து  கல்லூரி வாழ்கையில் நுழையப் போகிறார்களே! 
 
வழக்கம் போல அனைவரும்  முதல் வரிசையில் அமர்ந்தனர்.
 
கடவுள் வாழ்த்துடன் விழா தொடங்கியது. 
 
ஒருவர் பின் ஒருவராக பேசி அமர்ந்தனர்.
 
"இப்போது நமது சிறப்பு விருந்தினர் திரு மதியரசன் அவர்கள் பேசுவார்கள். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாள் போதாது. அவர் ஒரு மிகப் பெரிய தொழிலதிபர். பல தொழிற்சாலைக்குச் சொந்தக்காரர். கடுமையான உழைப்பாளி. வேண்டியவர்களுக்கு 'இல்லை'  என்று சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுக்கும்  வள்ளல். இதைவிட சிறப்பு, அவர் நம்   தலைமை  ஆசிரியரின் நெருங்கிய நண்பர்!" என்று சொல்ல விழாவிற்கு  வந்திருந்த அனைவரும்  கைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அவர் என்னப்  பேசப்  போகிறார் என்பதை ஆவலோடு  எதிர் நோக்கி காத்திருந்தனர்.
 
எளிமையான உடையில்  காட்சியளித்த அவர் தெளிவான நடையில் பேச்சை ஆரம்பித்தார்.
 
"நான் இருப்பவர்களைப் பற்றியோ அல்லது இல்லாதவர்களைப் பற்றியோ நான் பேசப் போவது இல்லை. ஒருவேளை அப்படிப் பேசினால் நீங்கள் அது கதையாக நினைக்கலாம் அல்லது  அவர்களைப்  மிகைப்படுத்தியும் பேசுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டல்லவா? ஆகவே நான் என்னைப் பற்றித் தான் பேசப் போகிறேன். இப்போது உங்களை எல்லாம் பார்க்குபோது எனக்கு என் பள்ளிப்பருவம்  நினைவுக்கு வருகின்றது. நானும் அன்று +2 படித்து முடித்த பிறகு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். என் நண்பர்கள் பலர் அவர்களுக்குள்  ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் மூலையில் ஒரு ஓரத்தில் எவ்வித சிந்தனையும் இல்லாமல்  இருப்பதை  இப்போதைய தலைமை       ஆசிரியரும்  எனது நண்பருமான கதிரேசன் கவனிக்கத் தவறவில்லை. அவர் மட்டும் என் பக்கத்தில் வந்தார்
 
"ஏம்பா மதி. ஏன்  ஒரு மாதிரியா இருக்கிறே. நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறே. அடுத்து என்ன செய்வதா   இருக்கிறே?" 
 
"கதிர், இப்போ  இருக்கிற குடும்ப சூழ்நிலையில் மேற்கொண்டு படிப்பது கனவிலே கூட நினைக்க முடியாது. அப்பாவுக்கு வருமானம் அவ்வளவா இல்லை. அக்காவுக்கு கல்யாணப் பேச்சு நடக்குது. இப்போ   என்னோட  மேற்படிப்பு பத்தி பேசி பிரயோசனம் இல்லை " என்று அவர் தொடங்கிய பேச்சு பாண்டியனின் தற்போதைய குடும்ப சூழ்நிலைக்கு ஒத்து வந்ததால் அதில் அவன் மனம் ஒன்றிப் போனான்.
 
அப்போ இந்த தலைமை ஆசிரியர் தான் எனக்கு ஆறுதல் சொன்னார்."மதி, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது.  அதுக்கு  ஏன் இவ்வளவு கவலைப்படுறே? உன்கிட்டே இருக்கிற  திறமைக்கும் அறிவுக்கும் படிச்சுத்  தான் பெரிய ஆளா வரணும் என்பதில்லை. உழைத்தும் பெரிய ஆளாக  வரலாம். அதுக்கு பல  உதாரணங்கள் இருக்கு! வாழ்க்கைக்கு எழுத, படிக்கன்னு அடிப்படை கல்வி மட்டும் போதும்.  வசதி இருக்கிறவங்க பல லட்சங்கள் செலவழித்து படிக்கிறாங்க. வசதி இல்லாதவங்க வேலைக்குப் போறாங்க. அவங்களுக்கு படிப்பறிவு வளருது. வேலைக்கு போறவங்களுக்கு அனுபவ அறிவு வளருது. அந்த இரண்டு அறிவிலே அனுபவம் தான்  ஜெயிக்கும்.        நான் அடிச்சு சொல்றேன். என்னை விட நீ தான் பெரிய ஆளாய் வருவாய். வெறும் புத்தகப் படிப்பு இல்லாத உனது சுதந்திரமான அறிவு பல சாதனைகள் செய்யும்.  உனக்கு பிடிச்சா சொல்லு. என் அப்பாவோட நண்பர் ஒருவர் ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். அங்கே வேலை வாங்கித் தருகிறேன். சம்மதமா? உனக்கும், உங்க அப்பா, அம்மாவுக்கும்  சம்மதம்னா நாளைக்கே  சேர்ந்திடலாம்" என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும் தான் இன்று   நான் செய்யும் பல  சாதனைக்குக் காரணம். 
 
அன்றைக்கு நடுக்கடல்லே தத்தளிக்கிற எனக்கு ஒரு மரக்கட்டை கிடைச்சதா நினைத்தேன். மறுநாள் அப்பா  அம்மாவோட  சம்மதத்தோட அந்த ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப்பிலே சேர்ந்தேன். தொழில் நுணுக்கங்களை அந்த  முதலாளி எனக்கு நன்றாக சொல்லிக் கொடுத்தார். கூடவே தரம், நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கையும் கொடுத்தார். பிறகு வியாபார விசயங்களையும், வாடிக்கையாளர்களை எவ்வாறு  திருப்திபடுத்துவது   என்பதைத்  விளக்கமாய் எடுத்துச் சொல்வார். எனக்குள் இருந்த அத்தனை  சந்தேகங்களுக்குத் தெளிவாகவும், பொறுமையாகவும் பதில் சொல்வார். நாளடைவில் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். பிறகு அவரே எனக்கு ஒரு சிறிய ஒர்க் சாப் வைத்துக் கொடுத்தார். நன்றாக ஓடியது. பிறகு அதன் வருமானத்தில் பழைய இருசக்கர வாகனத்தை வாங்கி அதை ஓரளவு புத்தம் புதிய வண்டியாக மாற்றி குறைந்த லாபத்திற்கு விற்க ஆரம்பித்தேன். அதுவும்  நன்றாக நடந்தது. பிறகு புகழ்  வாய்ந்த நிறுவனத்தின் இருசக்கர ஷோரூம்  வைத்தேன். முதல் வருடத்திலேயே அதிகமான விற்பனைக்கும், சிறந்த சேவைக்கும் என்று பல விருதுகள் கிடைத்தது. இப்போது தமிழகமெங்கும் பல கிளைகள் இருக்கின்றன. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுடன் நான்   வேலை  செய்து  வருகிறேன். என்னிடம்  வேலை  பார்க்கும் அத்தனை பேரும் தங்கமானவர்கள். அவ்வளவு ஏன்? மேற்படிப்பு படிக்க  வசதியில்லாத இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் என்னிடத்தில் வேலை பார்த்து நன்றாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு கணினியில் 'ஆப்' எனப்படும் அப்ளிகேசன் செய்வதற்க்கு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயிற்சி கொடுத்து அதன் மூலம்  நல்ல வருமானம் கிடைப்பதற்கு வழிவகை  செய்வதாக இருக்கிறேன். விருப்பமுள்ள மாணவர்கள்  நாளைக்கே பயிற்சிக்கு வரலாம். உங்களுடைய வாழ்க்கையில் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதை விட நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நிற்கலாம். பலரை நீங்கள் வாழ வைக்கலாம்" என்று கம்பீரமாக குரலில்  உரையாற்ற அங்குள்ள அத்தனை மாணவர்களுக்கும் புத்துணர்வு பெற்றதாக உணர்ந்தார்கள். அவர்களின்  வருங்கால வாழ்க்கைப் பாதையை  தெளிவாகப்  மனக்கண்ணில் பார்த்தனர். பாண்டியனின் மனதும் தப்பவில்லை. விழா முடிந்தவுடன் பாண்டியன்  மிக மகிழ்ச்சியாக வீட்டை அடைந்தான். 
 
வீட்டில் நுழைந்தவுடன் "அப்பா, நான் தொழில் நுட்ப மேற்படிப்பு படிக்கப் போறது கிடையாது. நாளை முதல் தொழிலதிபர்  மதியரசன்  அவர்கள் நடத்தும் 'கணினி ஆப்' பயிற்சியில் சேரப்போகிறேன். ஏன்னா இப்போது இருக்கும் நம்மோட  குடும்ப சூழ்நிலையில் நாலைந்து லட்சம் செலவழித்து படிக்கிறது முடியாத காரியம். அப்படி படித்தாலும் படிப்பிற்குத் தகுந்த வேலை கிடைக்குமா? என்பது சந்தேகம். அதனாலே இப்போதே  நல்ல பயிற்சி  எடுத்துக் கொண்டு சொந்தக் காலில் நிற்க முடிவு   செய்துவிட்டேன். குடும்பத்திற்கு பாரமா  இருப்பதை விட இப்போதே வேலை செய்து குடும்பத்தை தாங்கி நிறுத்தப் போகிறேன். என் வாழ்க்கைப்  பற்றி  நீங்கள்  எதுவும் கவலை படாதீர்கள். நானும் மதியரசனைப் போல் சாதித்து  என்னைப் போன்ற பலரின் வாழ்க்கைக்கு  வழிகாட்டியாக இருப்பேன்" என்று தன்னம்பிக்கையோடு பேசியதை கேட்ட முருகனும், வள்ளியும்  பூரித்துப் போனார்கள். அப்போது  தான்  தன்  நண்பர்  மாணிககம் கடைசியாக  சொல்லிவிட்டுச் சென்றதை சற்று நினைவு படுத்திக்கொண்டார் முருகன்.
 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$                                                               

Sunday 3 January 2016

FUTURE FATE OF THE WORLD NATIONS - வருங்கால உலக நாடுகளின் கதி

 (இது ஒரு கற்பனை பேட்டி - யாரையும் குறிப்பிடுவது அல்ல ) 

இது நம்ம சானல் வழங்கும் 

'வருங்கால உலக நாடுகளின் கதி' 
FUTURE FATE OF THE WORLD NATIONS

உலகம் முழுவதும் விற்பனையில் புதிய சாதனை செய்து  கிட்டத்தட்ட எல்லா மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தி மக்களிடையே அதிகமாக பேசப்படும்   'வருங்கால உலக நாடுகளின் கதி'  என்கிற புத்தகம் எழுதிய ஆசிரியருடன் ஒரு சிறப்பு பேட்டி . (இது ஒரு கற்பனை பேட்டி - யாரையும் குறிப்பிடுவது அல்ல ) 

இடம் : இது நம்ம சானல் அலுவலகம்           பேட்டி எடுப்பவர் : இது நம்ம சானல் நிர்வாகி 

குறிப்பு : புத்தக ஆசிரியருக்கு தமிழ் உட்பட அனைத்து பிரபல மொழிகள் நன்கு தெரியும். ஆகையால் பேட்டி தமிழிலே எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகி : வணக்கம் ஆசிரியர் அவர்களே ! இதுவரை யாருக்குமே பேட்டி தராத உங்களது சிறப்புப் பேட்டியை முதல் முதலாக  நம்ம தொலைகாட்சியிலே ஒளிபரப்பு செய்வதில் நாங்க மிகவும் பெருமைபடுறோம். 

ஆசிரியர்:   மிக்க மகிழ்ச்சி .. முதலில் இது நம்ம சானல் நிர்வாகி மற்றும் பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களுக்கும்  வணக்கம்,

நிர்வாகி : உங்களோட புத்தகம் 'வருங்கால உலக நாடுகளின் கதி' உலக மக்களுக்கு மிகப் பெரிய அதிர்வை எற்படுத்தியிருக்கே. அந்த மாதிரி புத்தகம் எழுதத் தூண்டியது என்ன காரணம்? உங்களோட நோக்கம் என்னான்னு எங்க நேயர்களுக்குச் சொல்லனும்னு நாங்க  ரொம்ப ஆசைபடுறோம் .  

ஆசிரியர்: இந்த உலகத்திலே எல்லா நாடுகளில் வாழும் மக்கள் எதாவது ஒரு வகையிலே அல்லது பல வகையிலே நேரடியாகவோ அல்லது மறைமுகமாக பாதிக்கப்பட்டுகிட்டே இருக்காங்க. இப்படியே கண்டுக்காம போன இந்த உலகம் நம்ம கண்ணு முன்னாலே அழிஞ்சிடும். மக்கள் இனம் இப்போ ஈவு இரக்கம் இல்லாமல் போட்டி மற்றும் பொறாமையால் தினம் தினம் செத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றது. அதுவும் கூடிய விரைவிலே எதிர்பாராத அழிவு நடக்கப் போகுதுன்னு பல அறிஞர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால்  அது எங்கே? எப்போது? என்று கூடிய விரைவில் தெரிந்துவிடும். அது நடக்காம இருக்கணும்னா இப்போதே பலவிதமான நடவடிக்கைகள் கொஞ்சமும் தாமதமில்லாமல் எடுக்கவேண்டும். அதில் என் பங்கிற்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கத் தான் நான் எழுதிய இந்த புத்தகமும் இப்போது கொடுக்கும் பேட்டியும்.   

நிர்வாகி : நீங்க சொல்றது எங்களுக்கு  புரியல்லே. புரிஞ்சிக்கிறதுக்கும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.  

ஆசிரியர்: புரியும்படி சொல்லணும்னா இந்த உலகம் இதுவரைக்கும் ரெண்டு உலகப் போரை பார்த்திருக்கு. மூன்றாவது உலகப்போர் இதுவரைக்கும் வரலேன்னு நினைக்கிறாங்க. ஆனா மறைமுகமா அது ஆரம்பிச்சிடுச்சி. அது பத்தி தான் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   

நிர்வாகி : என்னா , மூன்றாவது  உலகப்போர் ஆரம்பிடுச்சா? ரொம்ப குழப்புறீங்களே. 

ஆசிரியர்: இப்போ உங்களுக்கு குழப்பமாத் தோணும். ஆனா இந்த பேட்டியின் முடிவுலே உங்களுக்கு எல்லாமே தெளிவாய் புரியும்.

நிர்வாகி : அப்படியா! அதுவும் பார்த்திடலாம். ஆமாம், உங்க புத்தகத்திலே பல நாடுகள் பத்தி எழுதியிருக்கீங்க.  அவங்களோட பாதிப்புகள் என்னவென்று விலாவாரியா எழுதியிருக்கீங்க.  சில நாடுகள் இந்த பாதிப்பை உணர்ந்து தொலைக்குப் பார்வையிலே பல தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக எழுதியிருக்கீங்க. இன்னும் சில நாடுகள் தாங்கள் எப்போதுமே வல்லரசாக இருக்க பல தந்திரங்களை கையாண்டு சில நாடுகளை தங்கள் அடிமை நாடுகளாக ஆக்கிகொண்டிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.. ஆனா இந்தியாவைப் பத்தி ரொம்பவே மட்டம் தட்டி எழுதியிருக்கீங்க. நம் நாட்டு மக்கள் என்னாடான்னா 'வருங்கால இந்தியா ஒரு சிறந்த வல்லரசாக மாறும்னு எல்லோரும் கனவுலே மிதந்துகிட்டே இருக்காங்க. கடைசியில் ' இந்தியாவின் கதி அதோ கதி'ன்னு முடிச்சிருக்கீங்க.. அது தான்  எங்களுக்கு நெருடலாக இருக்கு. அப்படீன்னா என்ன அர்த்தம்? 

ஆசிரியர்: என்ன .. இந்தியா .. ஒரு வல்லரசாக மாறுமா? என்னங்க கிண்டல் பண்றீங்களா? அப்படி மாறப் போறதா ஒரு அறிகுறியும் தெரியல்லேயே? வல்லரசு கில்லரசு இதெல்லாம் மக்களை ஏமாத்துறதுக்காக.  

நிர்வாகி : என்னாங்க அப்படி சொல்லிட்டீங்க. வலிமையான திறமையான புது அரசு பொறுப்பேத்திருக்கு. இப்பவும் உங்க எண்ணம் அப்படித்தானா?  

ஆசிரியர்: அதெப்படீங்க. அரசு மாறினா உடனே நாடு வளர்ச்சி அடைச்சிடும்மா. சட்டியிலே இருந்தாத் தானே அகப்பையிலே வரும்? 

நிர்வாகி : எப்படி .. எப்படி.. எங்களுக்கே பழமொழியா? சட்டின்னு எதைச் சொல்றீங்க. அகப்பைன்னு எந்த அர்த்தத்திலே சொல்றீங்க? 

ஆசிரியர்: சட்டீன்னா மக்களோட வருமானம், வாழ்வாதாரம், வளர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி, பணபுழக்கம் இது போல பலது. அகப்பைன்னா அரசு. மக்கள்கிட்டே அளவுக்கதிமா பணம் இருந்தா அதை அரசு தாராளமாக எடுத்து செலவு பண்ணலாம். இந்த நாடு  பணக்காரங்களை விட்டுட்டு நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள்கிட்டே தானே  தன்னோட பணவசூல் பலத்தை காட்டுது. அட நாடு தான் கடன்கார நாடாக மாறிடிச்சி. அதுபோல் நாட்டிலே அதிகம் பேர் எதோ ஒரு விதத்திலே கடன்காரங்களாக மாறிட்டே இருப்பது தான் கொடுமை. மக்கள்கிட்டே  பணப்புழக்கம் இல்லைன்னு தெரிந்தும் இரத்தம் வர்றவரைக்கும் கறக்குது இந்த அரசு. ஆனா மேல் தட்டு மக்கள் கிட்டே அரசும் சட்டமும் நல்லாவே வளைஞ்சு கொடுக்குது.  அதனாலே அவங்ககிட்டே தான் கோடி கோடியா கருப்புப்பணம் , வெள்ளைப் பணம்னு கொட்டி கிடக்குது. அதை யாராவது தட்டி கேட்கிறாங்களா? மீறி அப்படி யாராவது கேட்டா அவங்களை பண பலம், அதிகார பலம், சட்டத்தின் மூலமா பணிய வச்சிடுறாங்களே. இதிலே கூத்து என்னான்னா சில தலைவர்கள், அரசு அதிகாரிகள் அவங்க அவங்க பதவிக்கேத்த படி சில முறைகேட்டிலும், சட்டத்தை மதிக்காமலும் மக்களுக்கு பல தொல்லைகள் கொடுக்கின்றனர். அப்படி இருக்கும் போது வருங்கால இந்தியா எப்படி இருக்கும்னு நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!     

நிர்வாகி : நீங்க எங்கேயோ இருக்கீங்க. ஆனா எல்லாத்தையும் நேருலே பார்த்தது போல புட்டு புட்டு வைக்கிறீங்களே. அப்படீன்னா இப்போதுள்ள இந்தியாவிலே வளர்ச்சி இல்லையா? அப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு எதெல்லாம் முட்டுக்கட்டையா இருக்குன்னு நேயர்களுக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. 

ஆசிரியர்: முதல்லே அரசியல் தலைவர்களும் மக்களும் தற்பெருமை கொண்டு பேசுறதை நிறுத்தனும். எல்லோரும் அவங்களே அவங்களோட பெருமைகளைப் பத்தி  பேசுறாங்க. இல்லாட்டி அவங்களே ஒரு சின்ன கூட்டத்தை வச்சிக்கிட்டு அவங்க மூலமா பிரமாண்டமா போலியான மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி பல மீடியாக்களில் முக்கியமா அவங்களோட மீடியாவில் பெரிய அளவில் தங்களை பெருமையாக் காட்டுறாங்க. அதெல்லாம் உண்மைன்னு மக்கள் இன்னமும் குருட்டாம் போக்கா நம்பிட்டுத் தான் இருக்காங்க. அது ஒழியனும். நல்லது கெட்டது எது நடக்குதோ அதை ஒளிவுமறைவில்லாம மக்களுக்குத் தெரியப்படுத்தணும். மக்கள் என்ன சொல்றாங்களோ அது படி அரசு நடக்கணும். ஏழை பணக்காரங்கன்னு பார்க்காம அவங்க எல்லோரையும் சமமா மதித்து நடத்தனும். 

நிர்வாகி : தற்பெருமை , மாயத்தோற்றம்ன்னு சொல்றீங்க எதுலே ?  அது எப்படீன்னு சொல்லுங்க? 

ஆசிரியர்: முதல்லே கல்வியை எடுத்துக்கொள்வோம். அது முழுக்க முழுக்க வியாபாரமா மாறியிருக்குது. அதுக்கு கூட விளம்பரம் கொடுத்து கூப்பிடுறாங்க. பணம் கொடுத்தா நல்ல மதிப்பெண்களோட பட்டம். ஒவ்வொரு படிப்பிற்கும் ஒவ்வொரு மாதிரியான நன்கொடை, கட்டணம். அவங்க படிச்சிட்டு எப்படி வேலை செய்வாங்க?  கல்வி தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரம். இந்தியாவிலே இப்போதுள்ள கல்விவளர்ச்சி எப்படி இருக்குதுன்னா படித்த அடிமைகளை உருவாக்குது. குறைஞ்சது அஞ்சு வருசமா ஒரே பாடம் படிக்கிறாங்க. அதுவும் பழைய பாடங்கள் ! எப்பவோ கண்டுபிடிச்சதை இப்ப படிக்குறாங்க. உலகளவிலே இன்றைய காலகட்டத்திலே சில நாடுகள்லே தினம் தினம் பல கண்டுபிடிப்புகள், புவியியல் மாற்றங்கள், மக்கள் எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளில் மாற்றங்கள், பொருளாதாரக் கொள்கை,அவசர சட்டங்கள் , அரசியல் மாற்றங்கள், வியாபாரம் பற்றிய பலவித யுக்திகள் போன்றவைகளைப் பற்றிய கட்டுரைகள் வலைத்தளத்திலே வந்துட்டே இருக்கு. அதெல்லாம் ஆங்கிலத்தில் பெரும்பாலும் வந்துட்டே இருக்கு. இப்போதைய பாட புத்தகத்தில் அதெல்லாம் இருக்காது. பின்னே எப்படி அவங்களுக்கு இப்போதைய நாட்டு நடப்புகளைப் பற்றித் தெரியும்? மக்களுடைய எண்ணங்களின் மாற்றத்தைப் பற்றித் தெரியும்? அதையெல்லாம்  தற்போதைய கல்வி பாட திட்டங்களின்  மூலமா மறைச்சுடுறாங்க. அவங்க படிக்கிறது முற்கால கல்வி! இன்னும் அவங்க தற்கால கல்வி படிக்கணும்! பிற்கால கல்வியை யோசிச்சு புதுசா எப்போ உருவாக்குவாங்க?  அதுக்குள்ளே பிற நாடுகள் எங்கேயோ போய்விடும்!   

நிர்வாகி : கல்வியிலே இவ்வளவு சமாச்சாரம் இருக்குதா? அதுக்கு கல்வி முறை எப்படி இருக்கனுன்னு நினைக்கிறீங்க?

ஆசிரியர்: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? அதாவது சின்ன வயதில் கல்வியோடு ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொடுத்தால் பிற்காலத்தில் எந்த தொழிலையும் கற்பதற்கு திறமை வரும். தொழிலை கற்பதற்கு மனப்பாடம் தேவையில்லை. பரீட்சையும் வேண்டியதில்லை. கொஞ்சம் ஞாபக சக்தி இருந்தா போதும். அதனாலே அவங்களுக்கு ஆர்வம் தானாக பெருகும். எந்த பல்கலைக்கழகத்திலே படிச்சிட்டு திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், கண்ணதாசன் போன்றவர்கள் காலத்தால் அழியாமல் இருக்கும் படைப்புகளைப் படைச்சாங்க? அவங்களுக்கும் தேர்வு இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உண்மை விளங்கும்!    

நிர்வாகி : பரவாயில்லை. நாங்க படைச்ச பழமொழிகளின் அருமை எங்களுக்குத் தெரியல்லை. ஆனா நீங்க அதை சரியா புரிஞ்சிட்டு அதுபடி நடக்கிறீங்க. வல்லரசு நாடுகள் இப்ப என்ன செய்திட்டு இருக்காங்க?

ஆசிரியர்: உணவு, மின்சாரம் ,ஆரோக்கியம், கல்வியை எந்த ஒரு மக்கள் பாகுபாடு இல்லாமல் வழங்கி அரசே நேரடியாக கவனிக்குது. அதிலே எந்த ஒரு குறையும் இல்லாம பார்த்திருக்குது. ஆரம்பம் முதற்கொண்டே செய்முறைக் கல்வி பயிலுறாங்க. அதனாலே அவங்களுக்கு எளிதா தொழிலும் வருது. புதுமையா பலது படைக்கவும் எளிதா முடியுது. அவங்க படிக்கும்போதே சம்பாதிக்கவும் செய்யுறாங்க.  அவங்களைப் போல சிறிய வயது முதற்கொண்டே தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் பழக்கத்தை உண்டுபண்ணினால் வருங்கால இந்தியா சிறந்து விளங்கும்!   

நிர்வாகி : உங்களோட அறிவுரையை இப்போதிருந்தாவது இந்த நாட்டு மக்கள் பின்பற்றுவர்கள். குறைந்தபட்சம் நம் நேயர்கள் கட்டாயம் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். கல்விக்குப் பிறகு விவசாயத்திற்கு வருவோம். நம் நாட்டில் கூடிய விரைவில் விவசாயம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும் அபாயம் இருக்கு என்று எழுதியிருக்கீங்களே அவ்வளவு ஆபத்தாகவா நம் விவசாயத் தொழில் இருக்கின்றது?

ஆசிரியர்: கண்டிப்பாக! சுழலும் ஏர் , பின்னது உலகம் என்று உங்களக்குத் நன்றாகவேத் தெரியும்.  இப்போது இருக்கும் இளைஞர்கள் உடல் உழைப்பை அறவே வெறுக்கிறாங்க. அதனாலே சின்ன வயசிலே குண்டா இருக்காங்க. அதனாலே அவங்க வேலைகளை அவங்களாலே செய்ய முடியிறதில்லே. மனுசன் உயிர் வாழ சாப்பாடு தான் முக்கியம்.  அதுக்கு விவசாயம் அவசியம். இந்த உண்மையை ஏத்துக்கிறதுக்கு அரசும் யோசிக்குது. மக்களும் தயங்குறாங்க. விவசாயத்திற்கு தண்ணீர் அவசியம். இந்தியாவிலே நிலப்பரப்பு அதிகம். அதனாலே இந்தியாவில் எங்கே மழை பெய்தாலும் அதை சேமிக்க முடியும். இங்கு பெய்யும் 75% மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை முதலில் தடுத்தாலே போதும். வற்றாத ஜீவ நதிகள் இருந்தும் சரியானபடி நீர் மேலாண்மை திட்டம் அரசு மேற்கொள்ளாததனால் நாட்டில் ஒரு பகுதி வெள்ளமும், மறுபகுதி வறட்சியும் நிலவுது. தொழில்நுட்பம் அதிகம் இருக்கும் இந்த நூற்றாண்டில் இனிமேலும் துரிதமாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகால மக்களின் சோற்றுக்கு சிக்கல் தான். ஆக விவசாயத்திற்கு முன்னுரிமை தந்து இளைஞர்களை அதில் ஈடுபட வைத்து விவசாயத்திற்கு ஒரு புத்துயிர் கொடுத்தாத் தான் வறுமை ஒழியும். விவசாயமும், மழை நீர் சேகரிப்பும் மாணவர்கள் மூலமாக எடுத்துரைக்கச் செய்தால் இந்தியா வளரும்.  வளரும் நாடுகள்லே விவசாயம் ரொம்பவே முக்கியத்துவம் தர்றாங்க. அவங்க எப்போதும் மற்ற நாடுகளை நம்பியிருப்பதில்லை.   

நிர்வாகி : வந்திருக்கும் புதிய அரசு இதற்கான நடவடிக்கை எடுப்பாங்கன்னு மக்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருக்காங்க. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மொழியும் ஒரு தடையா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க. அதெப்படி தடையாய் இருக்க முடியும். மொழியில்லாமல் ஏது தகவல் பரிமாற்றம்?    

ஆசிரியர்:  சரிதான். இந்த நாட்டில் மொழியை அடிப்படையாகக் கொண்டு பல மாநிலமாக பிரிக்கப்பட்டியிருக்கு. அதனால் பல மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் தங்கள் தாய் மொழிகளைத் தவிர பிற மொழிகளை கற்க விரும்புவதில்லை. ஏன் சிலர் தங்கள் தாய் மொழியைக் கூட சரியாக கற்றுக் கொள்வதில்லை. அதனால் தற்போதைய உலகம் எங்கு நோக்கி போய்க்கொண்டிருக்கின்றது என்கிற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். ஏன் அரசியல் தலைவர்கள் சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். பல மொழிகள் கற்றுக் கொள்வதால் ஆற்றலும், திறமையும் பெருகும். அதனால் தன்னம்பிக்கை உண்டாகும் என்று அரசியல்வாதிகள் உணர வேண்டும். பல மொழி கற்றவருக்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும். நாட்டு நலன் ஒன்றே முக்கியம் என்கிற ஒரே நோக்கம் வளர்க்க வேண்டும். அனைத்து மொழிகள் முக்கியம். அதனால் போட்டி கூடாது. எப்போது இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியோடு ஏதாவது பொது மொழி ஒன்றை கற்கிறார்களோ அப்போது தான் வளர்ச்சி சாத்தியம். அதை தள்ளிப்போட தள்ளிப்போட வளர்ச்சியும் தள்ளிப்  போகும். இப்போதிருக்கும் வல்லரசு நாட்டில் ஒரே ஒரு மொழியே பின்பற்றி வருவதால் இந்த பிரச்னை அங்கே எழுவதில்லை. அதனால் பல கட்சியும் இருப்பதில்லை.          

நிர்வாகி : மொழி, சாதி கொண்டு இருக்கும் சில சுயநலக் கட்சிகள் இனிமேல் மக்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்று நம்புவோமாக. பிறகு சட்டம், நீதி மற்றும் தீர்ப்பு பற்றி கிண்டலாக எழுதியிருந்தீர்கள். கடனை திருப்பி பெறுவதும், இந்த நாட்டில் நீதியும், தீர்ப்பும் கிடைப்பதும் ஒண்ணுன்னு எழுதியிருந்தீங்க. அவ்வளவு நகைப்புக்குரியதாகவா நம் சட்டம், நீதி இருக்கின்றது.  

ஆசிரியர்: ஒண்ணுமில்லை. ஒரு வக்கீல் அலுவலகத்திற்குப் போங்க. அங்கே உள்ள அலமாரியிலே பல கனத்த புத்தகங்களைப் பார்க்கலாம். முதல்ல அவ்வளவையும் யார் படிச்சிருக்காங்க. நீதிபதிக்கு எந்த பிரிவில் எந்த தண்டனை வழங்க வேண்டும் என்று தெரியாததால் பெரும்பாலான வழக்குகள் வருடக் கணக்கில் ஒத்தி வைக்கிறார்கள். நேற்று சாப்பிட்டதையே நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் வழக்கு கட்டில் விவரம் இருந்தாலும் அதை படிப்பதற்கு நேரம் இருக்குமா?ஆண்டுக்கணக்கில் எப்படி யார் யார் அதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்? ஆக அதிக வழக்குகள்  நிலுவையில் இருப்பதால் குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. மேலும் பணக்காரர்களின் வழக்குகள் எல்லாமே கண்துடைப்பாகவே நடை பெறுவதால் அவர்களின் ஆதிக்கம் ஓங்கியே இருக்கின்றது. அப்பாவிகள் கடைசியில் மாட்டிக் கொள்கிறார்கள். இங்குள்ள வழக்கறிஞர்களுக்கு சட்டம் என்பது சர்க்கரைப் பொங்கலாக இருக்குது. ஏதாவது ஒரு வலுவான வழக்கு ஒரு வழக்கறிங்கருக்கு கிடைச்சா போதும் அதை வைச்சே ஆயுள் முழுதும் ஓட்டிவிடுறாங்க. சட்டம் அனைவருக்கும் சமமாக அதே சமயத்தில் வேகமாக நடை பெறவேண்டும். அதை கணினி மயமாக்கிவிட்டால் மிக நன்றாக இருக்கும். இந்த தவறுக்கு இந்த தண்டனை என்று இருந்தால் எளிதாக தீர்ப்பு கிடைக்கும். குற்றங்கள் குறையும். வல்லரசு நாட்டில் யாருமே தவறு செய்து தப்பிக்க முடியாது. மேலும் தீர்ப்புகள் வேகமாக கிடைக்கும்.
 
நிர்வாகி : நீதிமன்றங்கள் , சட்டங்கள் இருந்தாலும் நீதிபதி பதவிகள் சில இடங்களில் காலியாகவே இருக்கின்றது. கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி கிடக்கின்றது என்று கூசாமல் புள்ளிவிவரம் சொல்கிறார்கள். ஒன்று , இரண்டு, மூன்று என்று ஒரு கோடி வரை சொல்வதற்கே ஒருவரின் ஆயுசு போதாது. பின் எப்படி எல்லா வழக்கையும் தீர்க்கப் போகிறார்களோ? ஆனால் இந்த அரசு எல்லாவற்றையும் கணினியில் இருக்க வேண்டும்  என்று அதற்கான  பல நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றது. ஆகவே  வெகு விரைவில் நீதித் துறையும் கணினி மயமாக மாறும். அந்த நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கின்றது. பிறகு விலைவாசி பற்றி எழுதியிருந்தீர்கள். எப்படியிருந்தால் விலைவாசி குறையும்?

ஆசிரியர்: விலைவாசி அதிகமாவதற்கு முக்கிய காரணங்கள் பணக்காரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேராசை. முக்கியமாக மீடியாக்கள் தினமும் ஏதாவது சொல்லி மக்களை பயமுறுத்தியும், மக்களின்  எண்ணங்களையும்  மாற்றி வருகின்றது. முக்கியமாக பதுக்கல், வரி ஏய்ப்பு , லஞ்சம், ஊழல் மற்றும் இந்த நாட்டிற்கு கொஞ்சமும் ஒத்துவராத வல்லரசு நாடுகள் எப்போதுமே வல்லரசாக இருக்க அவர்கள் வளரும் நாடுகளின் மேல் திணிக்கப் பட்ட ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம். இந்த இரண்டினால் பணக்கார வர்க்கம் எளிதாக நடுத்தர மக்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களை நடுத் தெருவுக்கு சத்தமில்லாமல் கொண்டுவந்து   விடுகின்றனர். இதில் அதிக வருமானம் கிடைப்பதால் பணக்காரர்கள் தங்கள் தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டமல் இருந்து விடுகின்றனர். கடைசியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும்  விலைவாசி உயருகின்ற அளவுக்கு மக்கள் வருமானம் உயருவதில்லை. பின் எப்படி அவர்கள் விலைவாசி உயர்வை  எதிர்கொள்வார்கள்? அதை ஈடு கட்ட மக்கள் பலர் பணக்காரர்களிடம் அல்லது  வங்கிகளில்  கடன் பெறுவார்கள். கட்ட முடியாமல் திண்டாடுவார்கள். பிறகு தற்கொலையில் முடியும்! ஆக விலைவாசி கட்டுப்படுத்த அரசால் மட்டுமே முடியும். ஒரு பொருள் உற்பத்தி செய்யும்போது அதன் அடக்க விலை தெரியுமல்லவா? அதிலிருந்து லாபம் இவ்வளவு என்று அரசு நிர்ணயித்தால் போதுமே! அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.   

நிர்வாகி : இந்த புதிய அரசு லஞ்சம் , ஊழல் ஒழிப்பதோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தையும் வரவழைப்பதற்கு பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது என்று எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் எளிய வரி முறையை நடைமுறைபடுத்துவதாக இருக்கிறார்கள். ஆகவே போகப்போக விலைவாசி குறையும் என்று அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.  பொறுப்போம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அது போகட்டும் ! புத்தகத்தில் பல இடங்களில் 'புலியைப் பார்த்து பூனை சூடு போட்டது போல' என்று குறிபிட்டுயிருந்தீங்களே ! அப்படியின்னா எதை சொல்ல வர்றீங்க?       

ஆசிரியர்: உலகத்திலே இருக்கும் பல சிறிய நாடுகளின் நிலப்பரப்புகள் குறைவு. ஆகையால் பல மாடி கட்டிடங்கள் வேறு வழியில்லாமல் கட்டுகிறார்கள். ஆனால் இங்கு நிலப்பரப்பு அதிகமாய் இருந்தும் பல மாடிக்கட்டிடம் கட்டி நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்கள். கடற்கரைகள் ஒட்டித் தான் அதிக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். இயற்கைப்  பேரிடர்  ஏற்படும்  அபாயம் அதிகம். அதனால் அதிக நிலப்பரப்பு இருக்கும் நாடுகள் தங்கள் (தலை) நகரங்களை  நாட்டின்  நடுவில்  இருந்தால்  மக்களுக்கும் பாதுகாப்பு. கடற்கரையும் செழிப்பாக இருக்கும். அரேபியா, ஜப்பான், சிங்கபூர் போன்ற  நகரங்களில் சாலைகள்  பளப்பளப்பாக இருப்பதற்குக் காரணம் அங்கு  சுற்றிலும் கடல் இருக்கின்றது. மண் அரிப்பு உண்டாகாமல்  இருக்க  பலவித சாலைகள் போடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அடுக்கு மாடி கட்டுகிறார்கள். அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர்  பிரச்னை  இருப்பதில்லை. ஆனால் அதைப் பார்த்து இந்த நாட்டில் இருக்கும்  நகரத்தில் மழை பெய்தாலும்  அங்கு   இருக்கும்  தார்  மற்றும்  சிமெண்ட் சாலைகள்  மட்டுமே இருக்கின்றது. மழை நீரை உறிஞ்ச போதிய மண் தரை இல்லாததால் அங்கு நிலத்தடி நீர் குறைந்து  எப்போதுமே தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. வெள்ளம் வந்து விட்டால் அது வடிவதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கு! தண்ணீர் சேமிக்க சிரத்தை எடுக்காதளால் ஒவ்வொரு கோடைகாலத்தில் தண்ணீருக்கு மற்ற மாநிலத்தில் கை ஏந்தும் நிலை இருக்கின்றது. பின் எப்படி இந்நாடு வல்லரசாக ஆக முடியும்? ஆக கடற்கரை ஒட்டி நகரங்களை அமைக்காமல்  நாட்டின் நடுவில் ஒரே இடத்தில் அதிக நெருக்கடியில்லாத கட்டிடங்கள் மற்றும்  மழை நீர் நிலத்தடிக்குச் செல்லுமாறு பார்த்துக்கொண்டாலே நகர வாழ்க்கை நன்றாக இருக்கும். விவசாயமும் பெருகும்.      

நிர்வாகி : நீங்கள் நினைப்பது சரி தான். இப்போது தான் விலை குறைவாகக் கிடைக்கின்றது என்கிற ஒரே காரணத்தினால் பலர் நகரத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் மனைகளை வாங்குகிறார்கள். ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் வீடுகட்டாமல் அல்லது குடியேறாமல் இருக்கிறார்கள். கூடிய விரைவில் இதற்கும் ஒரு விடிவு காலம் வரும். பிறகு பல இடங்களில் இன்றைய இளைஞர்களைப் பற்றியும் மக்கள் எண்ணங்களைப் பற்றியும் எதிர்மறையா எழுதியிருந்தீர்களே ! அது எப்படி?  

ஆசிரியர்: இந்நாட்டு இன்றைய மக்கள் பேராசையும், சுய நல மிக்கவர்களாக இருக்கிறார்கள். சில பெரியவர்கள் பேராசை கொண்டவர்களாகவும், விளம்பத்தில் அதிக ஈர்ப்பு கொண்டவர்களாகவும், சில  இளைஞர்கள் எந்நேரமும்  வலைத்தளம், கைபேசி, மது மற்றும் பல கேளிக்கைகளில்  நேரத்தை வீணாக்குவதிலும், சில குடும்பங்கள் திரைப்படம், சின்னத்திரையில் பொழுதைக் களிப்பவர்களாகவும், குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆகையால்  பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கஷ்டப்பட்டாலும் தனக்கு  கவலையில்லை ! தான் வாழ்ந்தால் போதுமென்ற சுயநலம் மற்றும் பிறரை அடிமை படுத்தும் எண்ணம் ஓங்கி வளர்ந்தும் ,  குறைந்த சிந்தனை, அதிக பேசும் மனிதர்களாகவும், புதியனவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களாகவும், பிறர் பேச்சில் , புகழ்ச்சியில் திருப்தி மற்றும் சந்தோசப்படும் மனிதர்களாகவும்,  மொத்தத்தில் மாயையில் மயங்கும் மனிதர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நாட்டை  'யார் ஆண்டாலும் கவலை இல்லை' என்கிற மனப்பாங்கு ஒழிக்க வேண்டும்.
 
நிர்வாகி : இந்த எண்ணங்கள எளிதாக ஒழிக்க முடியாது. ஆனால் தானாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். பிறகு ஒன்றை ஆணித் தரமாக குறிப்பிட்டு சொல்லியிருந்தீர்கள். அதாவது முதல், இரண்டாம் உலகப் போரின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் இப்போது வல்லரசுகளில் ஒன்றாக திகழ்கிறார்கள். ஆனால் எதிலும் பாதிக்கப் படாத இந்நாடு அந்த நாட்டில் கையேந்தும் நிலை உள்ளதே! என்று சற்று வருத்தப்பட்டு எழுதியிருந்தீர்கள். அவர்கள் எவ்வாறு முன்னேறினார்கள் என்பதைக் கூற முடியுமா?   

ஆசிரியர்: அமெரிக்கா , ஜப்பான், சீனா , ஜெர்மனி, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் போன்ற நாடுகள் இப்போது உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு இந்நாட்டை விட பல மடங்கு என்று சொன்னாலும் மிகையாகாது. அவற்றிற்கு காரணம் உழைப்பு, வெளிப்படையான நிர்வாகம், ஆரோக்கியமான மாற்றங்கள், தேசபக்தி, மக்கள் ஒற்றுமை போன்றவை. இங்கு அவ்வாறு வருமா ? என்பது சந்தேகமே. ஏனென்றால் சுய சிந்தனை இல்லாமை , தனனால் முடியாது என்று கொள்ளும் தாழ்வு மனப்பான்மை, குப்புசாமி பணக்காரனாகி விட்டால் தான் பணக்காரனாகியதாய் நினைத்துக்கொள்ளும் அற்ப சந்தோசம் , தேவையில்லாதவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது , அரசு பதவியில் இருப்பவர்கள் மக்கள் வரிப் பணத்தில் அதிகமாக அனுபவிப்பது, வறட்டு மற்றும் போலி கௌரவத்திற்கு அதிக மதிப்பளிப்பது, காரணம் தெரியாமல் பழைய நடைமுறைகளை விடாப்பிடியுடன் பின்பற்றுவது, எதையும் பின்விளைவை ஆராயாமல் அலட்சியமாய் இருப்பது, பிரச்னைகளை தள்ளிப் போடுதலும் அதை  எதிர்கொள்ள திறமை இல்லாமை, ஒரு பிரச்னை கையாளும் வேறு ஒரு புது பிரச்னை உண்டாகுதல் போன்ற செயல்கள் காலம் காலமாக மக்கள் தவறாமல் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி இந்நாடு  வல்லரசாக மாறும் ?  
 
நிர்வாகி : ஆக உலகத்திலே எங்கெங்கே, என்னென்ன பிரச்னை இருக்கின்றதோ அதெல்லாம் இங்கே காணலாம்ன்னு ஒத்த வரியிலே சொல்றீங்க. அப்படித்தானே. அதையும்  மக்கள் உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். பிறகு உறவுகள், அணுகுமுறை, தகவல் பரிமாற்றம் எப்படி?  

ஆசிரியர்: சொல்லிக்கொள்ளும் படி உறவுகள் இல்லை. எப்போது மகாபாரதம் உறவுக்குள் சண்டை வளர்த்துவிட்டதோ அப்போதிலிருந்து உறவுகள் வலிமைக்கு பதிலாக விரிசல் தான் இருக்கின்றது. மனித நேயத்துடன் அணுகுபவர்கள் மிகக் குறைவு! போலியான தகவல் பரிமாற்றங்களால் தினமும் பலர் ஏமாந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறார்கள். அதற்கு பரந்த மனதோடு எப்போதும்  நேர்மையான, உண்மையான , சத்தியமான வழியில் வாழ்க்கையைச் செலுத்தினால் எல்லோரும் மகிழ்வுடன் இருக்கலாம். 

நிர்வாகி : இதை இன்றைய இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு ஆரோக்கியமான மாற்றம் பார்க்க முடிகின்றது. அவர்கள் நினைத்துவிட்டார்கள். அதன்படி நடத்திமுடிப்பார்கள். பிறகு மக்களிடத்தில் இனம் தெரியாத பயம் இருப்பதாக கூறுகிறீர்கள். அது எந்த அளவுக்கு உண்மையோ? 

ஆசிரியர்: இந்த நாட்டில் பயமில்லாத மனிதர்கள் அனேகமாக வெகு சிலரே இருக்கலாம். ஒவ்வொருவரும், ஒவ்வொருவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். பயப்படுவனவற்றில் சமூகம், போலி சாமியார்கள், ஜோதிடர்கள், நிறுவங்கள், அதிகாரிகள், தலைவர்கள், சட்டம் போன்றவைகள் அடங்கும். இவைகளெல்லாம் சுயநலவாதிகளால் உண்டானவை. அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு, தெளிந்த சிந்தனை, தன்னம்பிக்கை இருந்தால் பயத்தை வெற்றி கொள்ளலாம்.  

நிர்வாகி : நம் பேட்டி முடியும் நேரம் வருகின்றது. ஆரம்பத்தில் மூன்றாவது உலகப் போர் எப்போதோ ஆரம்பித்ததாக சொன்னீர்களே அதன் அர்த்தம் என்ன?

ஆசிரியர்: மேற்கூறிய எல்லா தடைகள் எல்லாமே நமது எதிரிகள். நமது பலவீனத்தால் அவைகள் வலிமையாக இருக்கின்றது.. அவைகளை  நீங்கள் வெற்றி கொள்ள ஆரம்பித்தால் கட்டாயம் இந்நாடு ஒரு வல்லரசாக விளங்கும். எல்லோரும் ஒற்றுமையுடன் மனது வைத்தால் இது நடந்தே தீரும்! 

நிர்வாகி : இது வரை எங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்கு ஆக்கப்பூர்வமாக சில யோசனைகள் சொல்லியதற்கு நேயர்களின் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் இந்நாடு வல்லரசாக உருவெடுக்கும். அப்போது நீங்கள் மீண்டும் ஒரு முறை எங்களுடன் பேட்டி காண அழைப்போம். நன்றி வணக்கம். 

ஆசிரியர்: இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மாத்திரமே. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். எல்லாமே மக்கள் கையில் உள்ளது. இது நம்ம சானல் நேயர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு இனிய நாளில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் ! நன்றி, வணக்கம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

தொழில் முனைவோர், ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்

தொழில் முனைவோர், 
ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள் 

மதுரை கங்காதரன் 

ஒருவர் ஏதாவது ஒரு துறையில் வெற்றி பெற எண்ணினால் அதற்கான பண்புகள், குணநலன்கள் இருக்கின்றதா? அல்லது அதை அடைவதற்கான சூத்திரம் ஏதேனும் இருக்கின்றனவா? என்கிற பலவித கேள்விகள் நமக்குள் எழுகிறதல்லவா? நடைமுறையில் எவ்வித தகுதியும் இல்லாத சிலர் பெரிய வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அனைத்து தகுதிகள் உள்ள சிலரால் அத்தகைய வெற்றி பெறாமல் இருப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. அதற்குக் காரணம் எண்ணங்களும் , தொலைநோக்கு பார்வையும் ஆகும். வெற்றி பெற்றவர்களெல்லாம் உடனடியாக மக்களுக்கு எது தேவையோ அதை தந்துவிடுவதால் பெறுவது. இப்போது இருக்கும் சூழ்நிலை தொலைநோக்கு பார்வை கொண்டு காரியங்களைச் செய்தால் வெற்றி பெறுவது கடினம். ஆனால் அதற்கான வெற்றி காலம் கடந்து கிடைக்கின்றது.

பெரிய பெரிய தலைவர்கள், வெற்றியாளர்கள் கொண்டுள்ள சில பொதுவான பண்புகளை நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஓரளவு வெற்றிப் பாதை தெரியவரும். அந்தப் பாதையில் நீங்கள் செல்கிறீர்களா? என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

முதலாவது :

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வருவதற்கு முதலில் மனதளவில் எல்லாவித செயல்களையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், விடாமுயற்சியும் வேண்டும். அதாவது சாதாரண மனிதர்கள் செய்ய விரும்பாத பலப்பரீட்சைகளை எடுத்துச் செய்ய முற்பட வேண்டும். அதாவது அது கடினமான, ஆபத்து நிறைந்த பாதையாக இருந்தாலும் அதை செய்யத் துணிவை வரவழைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடியது. இது தான் தொழில் முனைவோருக்குத் தேவையான முதல் அம்சம். தங்கள் நோக்கங்களில், லட்சியத்தில், செயல்களில், கருத்துகளில் வலுவான நம்பிக்கை கட்டாயம் தேவை.

உங்கள் எதிர்ப்பாளர்களை சமாளிக்கும் அறிவும் ஆற்றலும், உங்கள் செயல்களை இழக்கச் செய்யும் ஆபத்துகளும் உங்களைத் துரத்திக்கொண்டு வந்தாலும் அதைவிட வேகமாக உங்கள் செயலும், நோக்கமும், வீரமும், துணிவும் இருக்க வேண்டும். தொழிலை தர்மமாக செய்தல் வேண்டும். அதாவது சூதாடி போல் 'வந்தால் மலை, போனால் முடி' என்று குருட்டாம்போக்கில் தொழிலைச் செய்தால் அது ஆபத்தில் முடியும். உங்கள் அணுகுமுறை மென்மையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருத்தல் அவசியம். ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோரின் எண்ணங்களும் செயல்களும் முன்னோக்கிச் செலுத்தும் திறவு கோல்கள். மேலும் சொந்தத் திறன், விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான உதவிக்கரங்கள் ஆகும்.

இரண்டாவது :

தொழில் முனைவோர்கள் கடின உழைப்பிற்குத்  தயாராக வேண்டும். மற்றவர்களை எதிர்பார்த்து இருத்தல் கூடாது. ஆரம்பிக்கும்போதே கனவில் நடப்பதைப் போல அல்லது திரைப்படத்தில் வருவது போல உடனே அதிக லாபம் அல்லது அதிக பலன்கள் கிடைத்துவிடும் போன்ற எண்ணங்களை கட்டாயம் அகற்றிவிட வேண்டும். ஒரே இரவில் கிடைப்பதற்கு அது மந்திரம் செய்யும் மாயாஜாலம் அல்ல. எல்லா வெற்றியாளர்களும் ஒரே மாதிரியாக சொல்வது 'அதிர்ஷ்ட தேவதையை தன் பக்கம் கவர்வதற்கு ஒரே வழி கடின உழைப்பு' என்றே சொல்லுவார்கள். அதே சமயம் அவர்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்வார்கள். அவர்கள் செய்கின்ற வேலைகளின் அவர்களின் உணர்வுகள் கலந்திருக்கும். மற்றவர்களின் உணர்விக்கும் அதிக மதிப்பு கொடுப்பார்கள். அவர்களின் வரம்புகளையும், திறமைகளையும் நன்கு அறிந்திருப்பார். அவர்களிடம் திட்டமிட்ட தெளிவான இலக்கு, அதை செயல்படுத்தும் பொறுமை, உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் துணை கொண்டு தான் வெற்றியடைகிறார்கள்.

மூன்றாவது:

தலைமைப் பண்பு, நிர்வாகத் திறமை ஒரு வெற்றியாளனுக்கு மிக முக்கியம். ஒரு பெரிய தொழிலதிபராக வருவதற்கு அவர் ஒருவரால் மட்டுமே அடைய முடியாது. மற்றவர்களின் உதவியுடனும் தான் சாதிக்க முடியும். தினமும் பேரார்வத்தைத் தூண்டும் வண்ணம் சரியான மக்களை அடையாளம் கொண்டு அவர்களிடம் தன்னுடைய நோக்கத்தை உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். தன்னுடைய மரியாதையை உயர்த்திக்கொள்ள அவர் தன்னுடைய தொழில் தர்மத்தையும் ஒருமைப்பாடு உணர்வையும் மதிக்க வேண்டும். சக ஊழியர்களுக்கு அவரே எல்லாவற்றிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். நேர்மையான குணங்களை வளர்த்து, தொழிலின் தரத்தை உயர்த்தியும், உற்பத்திதிறனைப் பெருக்கியும் அதற்கான மாற்றங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். எல்லா செயல்களுக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும்.

இறுதியாக:

'கற்றல்' கண்டிப்பாக வேண்டும். நாளுக்கு நாள் சிறப்பாகவும், உயர்வாகவும் வியாபாரம் சிறந்து விளங்க வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு தொழிலதிபருக்கும் இருக்கும். ஒரு தொழில் முனைவோர் பொருளாதாரத்திலோ, வணிகத்திலோ, நிர்வாகத்திலோ அல்லது வேறு எதிலோ ஒரு பட்டமோ அல்லது பட்டங்களோ பெற்றிருக்கலாம். ஆனால் தொழில் விஷயங்கள் எல்லாம் கல்லூரியில் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. படிப்பு வேறு, தொழில் வேறு. படிக்கும்போது எப்படி வியாபாரம் செய்வது? எப்படி பணம் சம்பாதிப்பது? எப்படி தொழிலை விட்டுக் கொடுக்காமல் இருப்பது? எதனால் தோல்வி வருகின்றது? இப்படி பலவற்றை அன்றாடமும் சந்திக்க வேண்டியதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் எது வந்தாலும், எதிர் கொண்டாலும் எல்லாமே 'கற்றல்' தான் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். அதுவே நல்ல அனுபவம் தரும். தொழில் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொள்வது நிறுத்த முடியாது. அதற்கான விடுபடும் வழியும் இல்லை.

நிச்சயமாக இவைகள் இருந்தாலே போதும் என்று சொல்லி ஒரு முடிவுக்கு வந்திட முடியாது. அதற்கு மேலும் 

1. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி மாறும் குணம் 

2. தொழில் மற்றும் வியாபார அறிவு 

3. நிர்வாகம் மற்றும் நிர்வாகத் திறமை 

4. போட்டியாளர்களின் பலம் 

5. வாடிக்கையாளர்களின் மனப்போக்கு 

6. சந்தை படுத்தும் திறன்  

7. புதுமையை ஏற்படுத்துதல் 

8. போட்டி போடும் பக்குவம் 

9. இது போன்ற மற்றவைகள் 

இப்போது உங்களுக்கு வெற்றித் தொழிலதிபராக வருவதற்காண ரகசியம் நன்கு தெரிந்திருக்கும்.

இனி என்ன ? நீங்களும் ஒரு வெற்றித் தொழிலதிபர் தான்.

நன்றி 

வணக்கம் 

*************************************************************************** 

இடி மின்னல் தாங்கும் இதயம் - புதுக்கவிதை

      இடி மின்னல் தாங்கும் இதயம் 

                         புதுக்கவிதை 

                 மதுரை கங்காதரன் 

வானத்தில் மாற்றங்கள் இருக்கலாம்  
உன் எண்ணத்தில் மாற்றம் கூடாது 

கடலில் கூட சீற்றம் உண்டாகலாம் 
உன் உணர்வில் சீற்றம் கூடாது 

நிலத்தில் அதிர்வுகள் ஏற்படலாம் 
உன் இதயத்தில் அதிர்வுகள் கூடாது 

காலம் தோல்வியைத் தரலாம் 
உன் செயலில் தோல்வி கூடாது 

எதிர்பாராதது சில நடக்கலாம் 
தன்னம்பிக்கை இழக்கக் கூடாது 

உடலில் சோர்வுகள் உண்டாகலாம் 
மனதில் சோர்வு கூடாது 

உழைப்பு உன்னை ஏமாற்றலாம் 
சத்தியம் தவறக் கூடாது 

நாளை உலகம் அழியலாம் 
கடமை செய்ய தவறக் கூடாது 

உனது ஆயுள் முடியலாம் 
உனது புகழ் அழியக் கூடாது 

நிழல் கூட வராமல் போகலாம் 
நேர்வழியை தவறக் கூடாது 

இறைவனும் உன்னை கைவிடலாம் 
நம்பிக்கை கை விடக் கூடாது 

நினைப்பது நடக்காமல் போகலாம் 
நடப்பது தவறக் கூடாது  

வார்த்தைகள் தவறி வரலாம் 
வாய்மை தவறக் கூடாது 

99999999999999999999999999999999999999999999999999999999999