Pages

Sunday 28 June 2020

அளிப்பதில் ஆனந்தப்படும் இதயம் - புதுக்கவிதை - மதுரை கு.கி.கங்காதரன்

அளிப்பதில் ஆனந்தப்படும் இதயம் 

                       புதுக்கவிதை 

        மதுரை கு.கி.கங்காதரன் 

அளிப்பதில் ஆனந்தப்படும் இதயம் 
ஈகை உள்ளத்தில் ஊறும் 
எளிமை ஏற்பதில் ஐயம்  
ஒளியாமல் ஓடும்  ஒளவியம்.

மனமும் கொடையும் இணையம்  
மகத்தான இரக்கத்தின் உதயம் 
ஆற்றிடும் மனதின் காயம் 
மாற்றிடும் ஆனந்த நிலையம் 

இல்லாமல் இருப்பது வறுமை    
இருப்பவர் கொடுப்பது மேன்மை   
துன்பத்தில் தவிப்பது ஏழ்மை      
துடைத்து எறிவது  பெருமை.

மக்களைக் காத்திடும் மண் 
மண்ணைக் காத்திடும் மழை 
மழைநீரைக் காத்திடும் அணை 
மாசில்லா அன்புக்கு இணை  

அடிப்பார் சிரிப்பார் சிறியோர்  
எடுப்பார் கொடுப்பார் பெரியோர் 
பார்ப்பார் மறுப்பார் எளியோர்  
பொறுப்பார் அளிப்பார் வலியோர்.

தன்னலத்தில் இல்லை மகிழ்ச்சி 
தொண்டில் உள்ளது வளர்ச்சி 
பொதுநலத்தில் வேண்டும் எழுச்சி 
பாரினில் மலரும் மலர்ச்சி 
       ***************************