
26.1.2025 கவியரங்கம் - 30 - "திருக்குறளை தேசிய நூலாக்கு "
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
"திருக்குறளை தேசிய நூலாக்கு! " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி அனைவருக்கும் குடியரசு தின நாள் வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், முன்னிலை உரையாற்றினார் .
கவிஞர்கள் இரா.இரவி , இரா.கல்யாணசுந்தரம், கு .கி கங்காதரன், புலவர் மகா . முருகு பாரதி,கி .கோ குறளடியான் , இளையாங்குடி மு .இதயத்துல்லா, தென்காசி புலவர் ஆறுமுகம் , லிங்கம்மாள், அனுராதா ,ஆசிரியர் சிவ சத்யா , அவரது 10.வயது மகன் பிரேம் மித்ரா , மா .முனியாண்டி, அஞ்சூரியா க . செயராமன் , பா.பழனி, கு .பால் பேரின்பநாதன் , இந்தி ஆசிரியர் வேல்பாண்டியன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
10.வயது பிரேம் மித்ரா முதல் 85. வயது இரா.கல்யாணசுந்தரம் வரை கவிதை படித்தனர்
குடியரசு தினத்தை முன்னிட்டு கவிஞர்கள் அனைவரும் ஒன்றிய அரசுக்கு திருக்குறளை தேசிய நூலாக்கிட வேண்டுகோள் வைத்தனர் ..
துணைச்செயலர் கு .கி கங்காதரன் நன்றி கூறினார்
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், இரமேஷ் கை வண்ணம்.
<திருக்குறளை தேசிய நூலாக்கு>
திருக்குறளை தேசியத்தின் நூலாக்கு – அதில்
இருக்கின்ற பொருளறிந்து பாராட்டு
எதிர்ப்புகள் இருந்தாலும் வள்ளுவத்தை – ஒரு
இடமறிந்து எந்நாளும் மேலேற்று.
திருக்குறளை மிஞ்சுகிற நுலில்லை – இதுபோல்
தித்திக்கும் இருவரிகள் வேறெங்கே?
சுருக்கமாய்ச் சொல்வதில் அழகுண்டு – அந்த
அழகினில் பிறக்கின்ற சுரமுண்டு.
நறுக்கென ஒலித்திடும் இருவரிகள் – பல
உறுத்துடன் சொல்கின்ற பொருளறிந்து - இன்றே
மறுப்பின்றி தேசிய நூலாக்கு.
அடுக்கு மொழியோடு அலங்கரிக்கும் – இதில்
அத்துனை குறள்களும் உலகளக்கும்
முடுக்கும் உணர்வுகள் முன்நிற்கும் – மிக
எடுப்பான இந்நூலை யார்படைப்பார்?
தலுக்கி மினுக்கிடும் நூலில்லை – இது
தாய்நாட்டின் பெருமைக்கு உரமூட்டும்
வலுக்கட் டாயமாய் இந்நூலை – நாடு
வரவேற்க வேண்டுமென உரைப்போமே.
சலிப்புதட்டும் நூலல்ல எம்நூல் – இந்த
சகத்தினை ஆள்கின்ற ஒருநூலே
விழிப்பு வந்ததின்று விழுதாக - இதை
விரும்பியே தேசியத்தின் நூலாக்கு.
* முனைவர்
இரா. வரதராசன் (26.1.2025)
திருக்குறளை தேசிய நூலாக்கு ! கவிஞர் இரா .இரவி !
பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !
பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் !
மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் !
மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !
வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் !
வசந்தம் அடையும் ரகசியம் கூறும் நூல் !
தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் !
தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !.
தமிழென்ற சொல்லின்றி பெருமை சேர்த்த நூல் !
தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் !
நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க எனும் நூல் !
நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க எனும் நூல் !
ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் !
ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் !
பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் !
பயனுற வாழ்க்கை வாழ்ந்திட வழி சொல்லும் நூல் !
வானிலிருந்து வரும் மழை அமிர்தம் எனும் நூல் !
வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் !
இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் !
இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் !
கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும் எனும் நூல் !
கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக எனும் நூல் !
முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் !
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் !
மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது !
மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது !
விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது !
பறவையில் தேசியப் பறவை மயில் உள்ளது !
தேசிய மரம் மலர் விலங்கு பறவை உள்ளன !
தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ?
உலகப்பொது மறையை தேசிய நூலாக்க !
உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ?
திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை !
தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை !
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக !
திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !
***************