Pages

Friday, 7 February 2025

26.1.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - 30 - "திருக்குறளை தேசிய நூலாக்கு! "

 



26.1.2025 கவியரங்கம் - 30 - "திருக்குறளை  தேசிய  நூலாக்கு  "


மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

"திருக்குறளை  தேசிய  நூலாக்கு!  " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம்   நடந்தது. தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி அனைவருக்கும் குடியரசு தின நாள் வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், முன்னிலை உரையாற்றினார் .

கவிஞர்கள் இரா.இரவி , இரா.கல்யாணசுந்தரம், கு .கி  கங்காதரன்,  புலவர் மகா . முருகு பாரதி,கி .கோ குறளடியான் , இளையாங்குடி மு .இதயத்துல்லா, தென்காசி புலவர் ஆறுமுகம் , லிங்கம்மாள், அனுராதா ,ஆசிரியர் சிவ சத்யா , அவரது 10.வயது மகன் பிரேம் மித்ரா , மா .முனியாண்டி, அஞ்சூரியா க . செயராமன் , பா.பழனி,   கு .பால் பேரின்பநாதன் , இந்தி ஆசிரியர் வேல்பாண்டியன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.

10.வயது  பிரேம் மித்ரா முதல் 85. வயது இரா.கல்யாணசுந்தரம் வரை கவிதை படித்தனர் 

குடியரசு தினத்தை முன்னிட்டு கவிஞர்கள் அனைவரும் ஒன்றிய அரசுக்கு  திருக்குறளை  தேசிய  நூலாக்கிட  வேண்டுகோள் வைத்தனர் ..

துணைச்செயலர் கு .கி  கங்காதரன் நன்றி கூறினார்

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர்,  மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.

படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், இரமேஷ்   கை வண்ணம்.






<திருக்குறளை தேசிய நூலாக்கு>

 

திருக்குறளை தேசியத்தின் நூலாக்குஅதில்

இருக்கின்ற பொருளறிந்து பாராட்டு

எதிர்ப்புகள் இருந்தாலும் வள்ளுவத்தைஒரு

இடமறிந்து எந்நாளும் மேலேற்று.

 

திருக்குறளை மிஞ்சுகிற நுலில்லை இதுபோல்

தித்திக்கும் இருவரிகள் வேறெங்கே?

சுருக்கமாய்ச் சொல்வதில் அழகுண்டு அந்த

அழகினில் பிறக்கின்ற சுரமுண்டு.

 

நறுக்கென ஒலித்திடும் இருவரிகள் பல

திருப்பு முனைகளை உருவாக்கும்

உறுத்துடன் சொல்கின்ற பொருளறிந்து - இன்றே

மறுப்பின்றி தேசிய நூலாக்கு.

 

அடுக்கு மொழியோடு அலங்கரிக்கும் இதில்

அத்துனை குறள்களும் உலகளக்கும்

முடுக்கும் உணர்வுகள் முன்நிற்கும் மிக

எடுப்பான இந்நூலை யார்படைப்பார்?

 

தலுக்கி மினுக்கிடும் நூலில்லை இது

தாய்நாட்டின் பெருமைக்கு உரமூட்டும்

வலுக்கட் டாயமாய் இந்நூலை நாடு

வரவேற்க வேண்டுமென உரைப்போமே.

 

சலிப்புதட்டும் நூலல்ல எம்நூல்இந்த

சகத்தினை ஆள்கின்ற ஒருநூலே

விழிப்பு வந்ததின்று விழுதாக - இதை

விரும்பியே தேசியத்தின் நூலாக்கு


                  * முனைவர் இரா. வரதராசன் (26.1.2025)


                                                                    %%%%%%%%%%%%%%%

திருக்குறளை தேசிய நூலாக்கு !       கவிஞர் இரா .இரவி !


பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !

பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் !

மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் !

மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !


வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் !

வசந்தம் அடையும் ரகசியம் கூறும்  நூல் !

தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் !

தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !.


தமிழென்ற சொல்லின்றி  பெருமை சேர்த்த  நூல் !

தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் !

நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க  எனும் நூல் !

நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க  எனும் நூல் !


ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் !

ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் !

பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் !

பயனுற வாழ்க்கை  வாழ்ந்திட வழி சொல்லும்  நூல் !


வானிலிருந்து வரும் மழை அமிர்தம்  எனும் நூல் !

வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் !

இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் !

இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் !


கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும்  எனும் நூல் !

கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக  எனும் நூல் !

முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் !

முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற   நூல் !


மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது !

மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது !

விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது !

பறவையில் தேசியப் பறவை மயில்  உள்ளது !


தேசிய  மரம் மலர் விலங்கு பறவை உள்ளன  !

தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ?

உலகப்பொது மறையை  தேசிய நூலாக்க !

உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ?  


திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை !

தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை !

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக !

திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !

***************



















தலைப்பு; திருக்குறளைத் தேசிய நூலாக்கு.
(கவி பாரதி விஸ்வநாதன்)

திருக்குறளை           இன்றே
தேசிய நூலாக்கிடுவீர்!

ஒருபொழுதும்   அன்னியர்      
 ஓரக்கண்ணால் பாரார்!

அரும்பும் 
புல்லும்
ஆகாயம்
 நோக்கும்!

கரும்பும் 
இனிப்பைக்
கொடுத்துச் 
சிரிக்கும்!

 விரும்பி தமிழர்க்கூட்டம்
 வரவேற்று போற்றுவரே.


போற்றுவாரைப் பார்த்து
 பாரும் புன்னகைக்கும்! 

ஆற்றின் 
வெள்ளம்
அணைத்துத்
தழுவும்!

காற்றும் 
குளிர்ந்து
 கனிந்து தென்றலாகும்! 

ஊற்றுநீர் நிலமெல்லாம்
 பொங்கிப்
பீற்றும்! 


பேசாத 
கிளிக்கூட்டம்
பைந்தமிழில் கொஞ்சும்!

காசெல்லாம் கைவிட்டே
 கறையினும் கவலையிலை!

வாசல்முன் மாக்கோலம்
வரைந்து 
நிற்போம்! 

நேசமும் 
இரத்தப்
 பாசமுடன் வணங்குவமே!

&&&&&&&










திருக்குறளை தேசிய நூலாக்கு!
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன்  

ஆதித்தமிழ் அறிவின் ஊற்று திருக்குறள் 
ஈரடியில் ஞானப் பாலூட்டும் முப்பால் 
எக்காலமும் எந்நாட்டவரும் ஏற்ற வாழ்வேடு 
அடிப்படை ஆழமான அர்த்தமுள்ள நூல் 

அணுவைப் பிளந்தால் ஆற்றல் பிறக்கும் 
பாற்கடல் கடைந்தால் அமிழ்தம் கிட்டும் 
திருக்குறள்படி நடந்தால் வாழ்வு சிறக்கும் 
தேசியநூலுக்குத் தகுதி உண்டு திருக்குறளுக்கு. .

வாழ்வின் நெறிகளை வழங்கும் திருக்குறள் 
இல்லறத்திற்கு இன்பம் சேர்க்கும்  திருக்குறள் 
நல்லாட்சிக்கு நல்வழி காட்டும்  திருக்குறள் 
அகில உயிர்களைக் காக்கும்  திருக்குறள் 

இன்றைக்கும் நாளைக்கும் இன்மைக்கும் மறுமைக்கும் 
அருளுக்கும் பொருளுக்கும் அரசனுக்கும் ஆண்டிக்கும் 
இல்லறத்துக்கும் துறவறத்திற்கும் அறிவுக்கும் ஞானத்திற்கும் 
உடலுக்கும் உயிருக்கும் திறவுகோல் திருக்குறளே 

வாழும் திருக்குறளை தேசிய நூலாக்கினால் 
ஊர் உறவுகளின் மகிழ்ச்சி பெருகும் 
கல்வி கடமையும் புதுப்பொலிவு பெறும் 
சாதி இனங்களின் ஒற்றுமை ஓங்கும் 

****************