Pages

Showing posts with label 150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம் - நாட்டு நடப்புகள். Show all posts
Showing posts with label 150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம் - நாட்டு நடப்புகள். Show all posts

Friday, 19 April 2013

150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம் - நாட்டு நடப்புகள்

150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும்... 
வேலை திட்டம் - 
நாட்டு நடப்புகள் 


ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக 150 நாட்கள் வேலை திட்டம் என்று நமது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இதுவே நூறு நாட்களாக இருந்தது. தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு 150 நாட்களாக ஆக்கிவிட்டது. இது ஏழை மக்கள் மீது இரக்கப்பட்டு கொண்டுவந்த திட்டமா? அல்லது ஏழை மக்களை அடிமை படுத்தும் திட்டமா? என்று போகப்போக தெரியும். பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக, தேர்தலில் ஓட்டுகள் வாங்குவதற்காக மக்கள் வரிப்பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து அவர்களை சோம்பேறியாக மாற்றும் திட்டம். அதாவது அவர்களை ஓட்டுக்காக மட்டும் உபயோகப்படுத்தும் திட்டம்.


பெரும்பாலும் கிராம மக்களே அதில் இருக்கின்றனர். எனக்கு இதுவும் அந்நிய நாட்டு சதியோ என்று தோன்றுகின்றது. பொதுவாகவே ஆறு மாதம் சும்மா உட்கார்ந்து கொண்டு பணத்தை வாங்கி ருசித்தவன், அடுத்த ஆறு மாதம் உழைத்துச் சாப்பிட எண்ணம் வருமா? என்னதான் லட்சம் ரூபாய் கொடுத்தாலும் உழைக்கும் எண்ணம் வரவே வராது? அப்படி வந்தாலும் அந்த உழைப்பு ஏனோதானோவென்று தான் இருக்கும்.


ஏற்கனவே கிராமத்து இளைஞர்கள் பாதி பேர் நகரத்தில் இருக்கின்றனர். மீதி பேர் வெளிநாட்டிற்கு போய்விட்டனர். சொர்ப்பமானோர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த வேலையை பார்த்து வருகின்றனர். ஆனால் கொடுமை என்னவென்றால் விவசாயம் பார்ப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். ஏற்கனவே விவசாய நிலங்கள்  'ரியல் எஸ்டேட்' ஆக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கொஞ்சநஞ்ச விவசாயமும் ஆட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்த லட்சணத்தில் அனுபவமிக்க பெரியவர்களோ 150 வேலையில் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த விவசாய தொழிலை மறக்கச் செய்து வருகின்றனர்.


வேலை இருக்கட்டும். அதற்கு தினம் தினம் வேலை இலக்கு யார் வைக்கிறார்கள்? அதை சரியா செய்து முடித்தார்களா? யார் யார் வேலைக்கு வந்தார்கள்? யார் வேலையினை மேற்ப்பார்வையிடுகின்றனர் ? எல்லோருக்கும் சரியான நேரத்தில் சரியானபடி சம்பளம் வருகின்றதா? என்கிற பலவித கேள்விகளுக்கு சரியானபடி பதில் கிடைப்பது கடினம் தான். ஆனால் ஒரு சில இடங்களில் இந்த திட்டம் மிகச்சரியாக நடக்கின்றது.


இப்போது இருக்கும் இந்த திட்டம் சரியாக தேர்தல் வரை தான்! தேர்தல் முடிந்தவுடன்... ஓட்டுகள் தான் போட்டுவிட்டார்களே! பின் ஏன் இந்த திட்டம்? என்று எண்ணிவிடுவார்கள். அதன் பிறகு பணம் கிடைப்பது சந்தேகமே? அதற்கு முந்தைய  நிறைய திட்டங்கள் தான் உதாரணம். தேர்தலுக்குப் பின் இத்திட்டம் ஒப்புக்காக இருக்கும். முதலில் கொஞ்சம் தாமதமாக பணம் வரும். பிறகு மிக மிக தாமதமாக.. பிறகு வரவே வராது. அதற்கு சாக்குபோக்குகள் ஆயிரம் சொல்வார்கள். பிறகு மறந்து விடுவார்கள். அதற்கு பின்னால் மீண்டும் ஒரு புதிய திட்டம்...புதிய ஏமாற்று அல்லது சோம்பேறியாக்கும் திட்டம்???!!!


இந்த மாதிரி மத்திய அரசும், மாநில அரசும் மக்களை இலவசம் கொடுப்பதின் மூலமாகவும், வேலை திட்டத்தின் மூலமாகவும் சொம்பெரியாக்குவதில் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர் என்பது உண்மை. இதில் ஊறிய மக்கள் மீண்டும் பழையபடி உழைக்கத் தயாராக இருப்பார்களா? அப்படி உழைக்கத் தயாராக இருந்தாலும் சொந்தத் தொழில் அனேகமாக மறந்திருப்பார்கள். பிறகென்ன? சோறுக்கும் , கஞ்சிக்கும் அற்ப கூலியில் மற்றவர்களிடம் அடிமைபடவும் தயாராக இருப்பார்கள்! இதன் பலனாக நமது நாட்டில் கூடிய விரைவில் விவசாயத் தொழில் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டிய பெருமை நமது அரசியல்வாதிகளைச் சேரும்.


ஒரு சமயத்தில் மழை நன்றாக பெய்யும். என்னதான் நிலம் , மின்சாரம், தண்ணீர் இருந்தாலும் விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே விளை நிலம் தரிசாக மாறி ஒன்றுக்கும் உதவாமல் போகும். ஏற்கனவே பருப்பு, எண்ணெய் , சர்க்கரை, உரம் , மருந்து மற்றும் பல பொருட்கள் இறக்குமதி செய்து வருகிறோம். கூடிய விரைவில் அரிசி மற்றும் கோதுமையும் இறக்குமதி செய்ய நேரிடப் போகிறது.



அவ்வாறு இறக்குமதி செய்த பொருட்களின் விலை ஏணி வைத்தால் கூட எட்டாத அளவாக இருக்கும். அதை வாயை மூடிக்கொண்டு வாங்கவேண்டும் நிலைமை உருவாகும். இப்போது ஆட்சி செய்யும் நமது அரசியல் தலைவர்கள் நாளுக்கு நாள் நமது பொருளாதாரத்தை பாதாளத்தில் இறக்கிவிடப் பார்க்கிறார்கள். நூறு கோடிக்கு மேல் மக்கள் கொண்ட நமது நாட்டில் தலை சிறந்த பொருளாதார நிபுணர்கள் ஒரு சிலர் கூட இல்லாதது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் தான். ஒருவேளை எல்லோரும் படிப்பில் புலியாகவும், அதை நடைமுறை படுத்துவதில் எறும்பாக இருப்பதில் மர்மம் என்னவென்று இன்றுவரை பிடிபடவில்லை தான்.


ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். நாம் சுதந்திரம் அடைவதற்கும் இந்த மாதிரி காரணங்கள் இருக்கத் தான் செய்திருக்கும். ஏன்? அதைவிட நன்றாக சூழ்நிலையில் நாம் இப்போது இருக்கிறோம்.இருந்தும் நம்மால் ஏதும் செய்ய இயலவில்லை. விலைவாசி ஏறுவது , வரிகள் ஏறுவதும் குறைந்தபாடு இல்லை. இப்படியே இருந்தால் நாம் சிறிய அண்டை நாட்டிற்கும் அடிமை படவேண்டியிருக்கும். சுயமரியாதை இழந்து மீண்டும் அடிமை வாழ்வு வாழ்ந்திட வேண்டுமா? மக்களே ! நன்றாக யோசியுங்கள். நீங்களும் உங்கள் சந்ததியினரும் சந்தோசமாக, நிம்மதியாக வாழவேண்டுமானால் கண்டிப்பாக உழைப்பு மிகமிக அவசியம். 


உழைக்க மறந்தால் அடிமை வாழ்வு தான் என்பதை மனதில் கொண்டு இலவசங்களை மறந்துவிடுங்கள். சோம்பேறியாக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தருவதை விட்டுவிடுங்கள்.

உழைப்போம்!

உயர்வோம்!

ஏமாற்றங்களை தவிர்ப்போம்!