Pages

Friday, 12 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன் - I CAN CHANGE YOUR WEAKNESS TO BIG STRENGTH


உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 



பாகம்: 15 நான் உன் பலவீனத்தை 
பலமாக மாற்றுகிறேன் - 
I CAN CHANGE YOUR WEAKNESS TO BIG STRENGTH 



பிரியமுள்ள மனிதா! மீண்டும் நான் உள்விதி மனிதன் வந்திருக்கிறேன்! நீ பிறர்க்கு நன்மை தரும் காரியங்களைச் செய்தால் அதற்கு நான் ஆயிரம் மடங்கு உதவி செய்வேன். ஆனால் தீய காரியங்களைச் செய்தால் நானே உன்னைக் காட்டிக்கொடுப்பேன் அல்லது அதற்குண்டான வேலையில் இறங்குவேன். நான் அனைவருக்கும் கொடுத்த  செல்வம், மகிழ்ச்சியை நீ ஏமாற்றி குறுக்குவழியில் அபகரிக்க நினைப்பது நான் அனுமதிக்க மாட்டேன். அதைப்பார்த்து சும்மாவும் இருக்கமாட்டேன்.



இனிமையான மனிதா! உன்னைப் படைக்கப்பட்டதன் நோக்கம், உனக்கென்று இந்த பூமியில் பல கடமைகள் இருக்கின்றன. உன்னையும் உன்னைச் சேர்ந்தவர்களையும், உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் காத்தும், அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுப்பதே உனது கடமை. மறைமுகமான அந்த கடமைகளை உன் மூலம் நிறைவேற்ற விரும்புகிறேன். எக்காலத்திலும் என் பெயர் கெடாவண்ணம் இருப்பதற்கும் , இந்த பூமி சுபிட்சம் அடைவதற்குமான அத்தனை வழிகளையும் உன் மூலம் உண்டாக்கப்போகிறேன். எனது ஓட்டம் உனது அறிவை கூர்மையாக்கி அதை செயல்படுத்தும்போது எல்லாமே வியக்கத்தக்க விதத்தில் எல்லோருக்கும் நன்மை தரும் மாற்றங்கள் நீ காண்பாய்!


அன்பு மனிதா! இந்த உள்விதி மனிதனின் பேச்சை கேட்காததால் உனக்கு எல்லாவிதமான சிக்கல்கள் வருகின்றது. அதைச் சரிபடுத்த வேண்டு மென்றால் நான் ஒரு டாக்டராக மாறவேண்டும். அதாவது ஒரு டாக்டர் எப்படி ஒருவரது உடம்பை நன்றாக சோதனை செய்து, ஸ்கேன் , இ.சி.ஜி போன்ற ரிபோர்ட்டை வைத்து நோயை கண்டுபிடித்து அதற்கான மருத்துவ உதவியை அல்லது சிகிச்சையை எவ்வாறு துல்லியமாக தந்து நோயை குணப்படுத்துகிறாரோ, அதுபோல உனக்கும் நான் உனக்குள்ளிருந்து கொண்டு  இப்போது உடனே செய்யவேண்டிய அவசர சிகிச்சையை காலதாமதம் செய்யாது செய்யப்போகிறேன். இந்த நொடி முதல் எனது அருள்மொழியை செவிசாய்த்து கேட்பாயானால் நான் உனக்கு எவ்வளவு நன்மை செய்கிறேன் என்பதை உணரமுடியும்.


பிரியமுள்ள மனிதா! உன்னைச் சுற்றிலும் பலர் உன்னுடைய பொருட்களை பணத்தை அபகரித்தோ, ஏமாற்றியோ, எதேச்சையாக கொடுத்தோ ஒருவனிடத்தில் இழப்பாயானால் அவன் ஒருபோதும் அவற்றை திருப்பித் தர மாட்டான். மீண்டும் அவனிடத்திலோ அல்லது அவனைப் போன்றவர்களிடத்தில் உனது பொருட்களை இழந்துவிடாதே! நான் உனக்கு கொடுத்திருக்கும் பொருட்களை போல எல்லோருக்கும் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேலும் பிறரின் பொருட்களை அபகரிக்க நினைப்பது பேராசை தான். எல்லோரும் எனது படைப்புகளை சரிசமமாக அனுபவிக்கவேண்டுமென்பதே எனது விருப்பம். இனிமேல் நீ உழைத்து தேடிய சொத்துகளை உன்னை விட்டு பிரிய அனுமதிக்கமாட்டேன். அப்படி உன்னிடத்திலிருந்து எடுப்பவர்கள் நிச்சயம் என்னைப்போல ஆன்ம ஓட்டம் கொண்ட மனிதர்கள் அல்ல என்பதை உனக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

பாசமுள்ள மனிதா! நீ எப்போதும் நேர்மையாக இருக்கவேண்டுமென்பதே எனது இலட்சியம். தனிப்பட்ட உறவினாலோ அல்லது நட்புக்காகவோ அல்லது பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நீ நியாயத்தின் பாதையிலிருந்து விலகிவிடாமல் நான் இனிமேல் உன்னை கவனித்துக்கொள்கிறேன். அப்படி பாதையிலிருந்து விலகுபவர்கள், தவறு செய்பவைகள், தீமை விளைவிப்பவர்களை அதிலிருந்து விடுவித்து  உன்னாலான உதவி செய்தும், உன்மூலமாக அவர்களுக்கு வாழ்க்கையில் புத்துயிர் கொடுக்கப் போகிறேன். அது நிச்சயம் நல்ல பலன் தரும்.



மரியாதையுள்ள மனிதா! அனைத்து விதத்திலும் என்னைப்போன்று உன்னை தகுதிபெறச் செய்வதே எனது நோக்கம். அதைவிட்டு உனது அற்ப செயலுக்காவும், அற்ப சந்தோஷம் கொடுக்கும் செயலிலும் ஒருபோதும் நான் திருப்தி அடையமாட்டேன். ஏனெனில் அப்படி செய்வது நம் இருவருக்கும் நல்லதல்ல. மேலும் இந்த மனித ஜென்மத்தில், நான் படைத்த அனைத்தையும் நீ அனுபவிப்பதற்காக பல உயிரினங்களை, பல பொருட்களைப் படைத்துள்ளேன் . கேவலம் உன் பேராசையினால் நான் பிரயாசைப்பட்டு தந்ததை மற்றவர்களிடத்தில் குறுக்குவழியில் ஏமாந்ததால் இன்று நீ மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்கிறாய். அதைப் பார்க்கும்போது  எனக்கே சற்றுக்  கடினமாக இருக்கின்றது. அதை தடுக்கவே உன்னுள் புகுந்து உள்விதி மனிதனாக இருக்கிறேன்.

மதிப்புமிக்க மனிதா! நான் உன்னுடன் இருப்பதால் நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. எதையும் சாதிக்கும் மனத்துணிவை தருகிறேன். அதைக்கொண்டு அச்சத்தை அகற்று. மற்றவர்களை அன்புகொண்டு, அரவணைத்துகொண்டு நல்ல வழியில் நடத்து. இந்த உலகம் செழிக்க புது மாதிரியான நல்ல செயல்களைச் செய்வதற்கு தயாராகும் மனப்பக்குவம் நான் தருகிறேன். அந்த பக்குவம் உனக்கு இப்போது வந்தாயிற்று. இன்று முதல் இந்த உலகம் உன்னைப்போன்ற பலருடைய நல்ல உள்ளங்கள்  அந்த செயல்களைச் செய்வதற்கு ஆயுத்தமாகிக் கொண்டு வருகின்றது. இனி கவலை வேண்டாம். ஆபத்து வருவது தெரிந்தால் அதை உனக்கு சொல்வதோடு அதை வெல்வதற்கான வழிவகைகளைச் செய்து தருகிறேன்.



இனிய நெஞ்சமுள்ள மனிதா! என் ஜீவ ஓட்டம் உள்ள உனது உடல் மிக மிக அற்புதமானது. ஐந்து அறிவு கொண்ட ஜீவராசிகளைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. அதை எக்காரணத்தை கொண்டும் வீணாக்காமல் உலகுக்கு நன்மைதரும் பொருட்டு பலசெயல்களை உன் மூலம் நடைமுறை படுத்தப் போகிறேன். மேலும் அதைக்கொண்டு பல உயிர்களை வாழ வழிவகை செய்து என் பாரத்தை - என் வேலையை - என் கடமைகளை  உனக்கும் கொஞ்சம் பகிர்ந்தளிக்கப் போகிறேன். அப்படி செய்வதால் அதன் மூலம் உனக்கு அதிக அளவு மகிழ்ச்சி கிடைக்கும்.

இரக்க குணம் கொண்ட மனிதா! இந்த உலகில் பலர் உள்ளே ஒன்றும், அதாவது நஞ்சும், வெளியில் ஒன்றும் , அதாவது தேனுமாய்ப்  பேசுகிறார்கள். அவர்களை நான் இனம்கண்டு அவர்களின் என்ன ஓட்டத்தை எனது ஜீவா ஓட்டத்தின் மூலம் தெரியப் படுத்துகிறேன். நீ அந்த கொடிய நஞ்சை தீயிலிட்டு பொசுக்கி அதனை அழிக்க ஏற்பாடு செய்கிறேன். நான் உனக்குள் இருக்கும்வரை இந்த தீய சக்தியை அணுக விடாமல் தடுத்துவிடுகிறேன். அதனால் உனக்கு எப்போதும் நிம்மதி கிடைக்கும். உன்னுடைய பலமும், பலவீனமும் நான் அறிவேன். அந்த பலவீனத்தை பலமாக மாற்றும்  இரசவாத வித்தையை உனக்கு கற்றுத் தருகிறேன். அதைகொண்டு நீ நினைக்கும் நல்ல காரியங்களை செய்து முடிப்பாயாக!


இனிய மனிதா! நான் உனக்குள்ளிருந்து கொண்டு ஒரு நல்ல செயலை முடிப்பதற்குத் துணிச்சலையும், திறமையாக செயல்படும் ஆற்றலையும் , உனது நல்ல குறிக்கோளை அடைவதற்கான தொடர் முயற்சியையும் நான் தருகிறேன். அதை தட்டாமல் பயன்படுத்திக் கொள். நீ சோர்வடையும்போதெல்லாம் நான் உனக்கு சோலைவனமாக காட்சியளிப்பேன். அதில் இருந்துகொண்டு களைப்பை போக்கிக்கொள். அதே நேரத்தில் அதிலேயே மயங்கி உன் குறிக்கோளிருந்து எப்போதும் பின்வாங்கி விடாதே! அதை வெற்றிகொள்வது எப்படி என்று நான் அவ்வப்போது உனக்கு பயிற்சியளிக்கிறேன். அதை தினமும் செய். நிச்சயம் நீ பெரிய சாதனை மனிதனாக உருவெடுப்பாய் . 

அன்பு உள்ளம் கொண்ட மனிதா! நீ பல சமயங்களில் முடிவெடுப்பதில் தடுமாறுவதை கவனிக்கிறேன். அப்படிப்பட்ட சமயங்களில் நான் உனக்கு தக்க வழி காட்டுகிறேன். அந்தமாதிரியான முடிவை என்னிடத்தில் விட்டுவிடு. காலம், நேரம் பார்த்து அந்த காரியத்தை செய்யச் சொல்கிறேன். அதன் படி செய். உனக்கு வெற்றி நிச்சயம். உனக்கு அரிய பெரிய கற்பனைவளத்தை அள்ளித்தருகிறேன். அதன்படி உனது செயலில் ஆர்வம் உண்டாக்குவது எனது கடமை. உனக்குள் சுயகட்டுப் பாட்டை வளர்த்து, சரியான பலமிக்க நுட்ப சிந்தனைகளை கொடுத்து, உள் மனத்தை ஒருமுகப்படுத்தி எதையும் தாங்கும் இதயத்தையும், சகிப்புத் தன்மையும் கொடுத்து உனக்கு இனிமையான மகிழ்ச்சியையும், அனைவரையும் அன்போடு வழிகாட்டும் ஆளுமை மனப்பான்மையும் கொடுத்து உன்னைப்போற்றி வழங்கும் அளவிற்கு உயர்தப்போகிறேன்.



அரவணைக்கும் குணம்கொண்ட மனிதா! இப்போது நீ இறப்பின் விளிம்பில் இருந்தாலும் சரி, வாழ்வின் துவக்கத்தில் இருந்தாலும் சரி, மற்றவர்களால் தூக்கியெறியப்பட்டவனாலும் சரி, மற்றவர்கள் உன்னை கேலிசெய்தாலும் சரி, அடித்தாலும், திட்டினாலும், சரி, இகழ்தாலும் சரி, ஒதுக்கினாலும் சரி அவற்றையெல்லாம் உதறி தள்ளிவிட்டு இந்த நொடி முதல் நான் சொல்லும் இனிய சொற்களை கேள். முன்பு நீ இருந்த நிலை இப்போது முதல் மாறத் தொடங்கும். உன் வாழ்வில் இன்பக் கனியை சுவைக்க ஆரம்பிக்கப் போகிறாய். அதை பறித்து உனக்கு கொடுக்கிறேன். அதை சுவைத்துப் பார். அந்த சுவையின் இன்பத்தை வேறெந்த இன்பமும் ஈடுகட்டமுடியாத ஒன்றாகும்.



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Thursday, 11 October 2012

உள்விதி மனிதன் பாகம்:14 நீ பாதி நான் பாதி - உன் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி - YOU AND ME ARE 50:50


உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 

பாகம்:14  நீ பாதி! நான் பாதி! 
உன் மகிழ்ச்சி! என் மகிழ்ச்சி!
YOU AND ME ARE 50:50 



பிரியமுள்ள மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். உனக்கு இப்போது மிகப்பெரிய சந்தேகம் வந்திருக்கும். நான் எப்படி உனக்குத் தெரியாமல் உனக்குள் இருக்கமுடியும் என்று? அப்படி ஒன்றும் நான் உன்னுள் இருப்பதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லை என்று அடித்துச் சொல்வது என் காதில் விழுகின்றது. இப்போது அதைப்பற்றித் தெளிவாக உன்னிடம் விளக்குவதற்கு நான் கடமைபட்டிருக்கிறேன். மனிதா! நீ  பிறந்த விதம் மற்றவர்களிடம் கேட்டோ அல்லது பார்த்தோ அல்லது படித்தோ தெரிந்து கொண்டிருப்பாய். ஆனால் நீ உருவாகும் விதம், அதில் நடக்கும் அற்புதத்தை இந்த அறிவியல் வளர்ச்சி எல்லோருக்கும் படம் போட்டு காட்டுகின்றது என்று சொன்னால் மிகையாகாது. அதாவது மிக மிக நுட்பமான முறையில் கண்ணுக்குத் தெரியாத சிறிய இரண்டு உயிர்களின் சங்கமம்! கருவாய் உருவாகின்றது. பிறகு படிப்படியாக  பத்து மாத வளர்ச்சியினை தேவைப்பட்டால் அல்லது வசதி இருந்தால் அணு அணுவாக நாம் கணினி உதவியால் பார்த்து பரவசபடுகின்றோம். அவ்வாறு தான் மனிதன் உருவாகின்றான் என்பதை உன்னால் மறுக்க முடியாது. அது ஒன்றும் ஒரு பொம்மைபோல எல்லா உறுப்புகள் உள்ள மிகச்சிறிய மனிதனாக இருந்து பெரியதாக உருவாகவில்லை. முதலில் முட்டை, கரு, பிறகு மனிதனின் ஒவ்வொரு அங்கமும் படிப்படியான வளர்ச்சி. இவற்றையெல்லாம் ஓடி ஓடி யார் செய்கிறார்கள். இந்த உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இரத்த ஓட்டம்  தான் உனக்கு உயிர் ஓட்டம் கொடுத்தது. அந்தச் செயலை சரியாக நான் செய்யாமல் வேறு யார் உனக்குள் இருந்து கொண்டு செய்வார்கள்? இந்தப் படைப்பை என்னையன்றி யாராலும் படைக்க இயலாது. இப்போது அல்ல, இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் கழித்தும் என்னுடைய படைப்புக்கு இணையாக ஒரு தூசியளவும் உன்னால் படைக்கமுடியாது. 


இனியமனிதா! இப்போது புரிகின்றதா! உனது உயிர் ஓட்டம் எதனால் வந்தது என்று ! நீ முழுவதுமாய் உருவான பிறகு நான் பாதி ! நீ பாதி தான். அதாவது இந்த உலகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஜீவ ராசிகளையும் உருவத்தில் சரி பாதியாக படைத்திருக்கிறேன். அதாவது வலது பாதி ! இடது பாதி! மேலும் காலங்கள், சூழ்நிலைகள், செயல்கள்  போன்றவையும் பாதி, பாதியாக படைத்துள்ளேன். இரவு, பகல், மழை காலம், கோடை காலம், உண்மை, பொய் , நல்லது, கெட்டது இன்னும் பல.

பாசமுள்ள மனிதா! ஒன்று மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்! நீ பூமியில் வருவதற்கு முன்னமே உனக்கென்று உண்ண உணவு, இருக்க இடம், உடுக்கும் உடைக்கு வேண்டிய பொருட்களை படைத்து விட்டு பிறகு தான் உங்கள் அனைவரிடத்தில் உள்விதி மனிதனாக ஆன்ம ஓட்டமாக இருந்து வருகிறேன். அதாவது உனக்கு அரண்மனை போல இடம் இல்லாவிட்டாலும் நீ நன்றாக தங்குமளவிற்கு நல்ல சூழ்நிலைகளைப் படைத்து இருக்கிறேன். உன்னைச் சுற்றிலும் உனக்கு வேண்டியவற்றைத் தாராளமாகவே படைத்திருக்கிறேன். இதைச் சொல்லும்போது உன் மனம் சிரிப்பது தெரிகின்றது அல்லது எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று ஆவேசப் படுவது புரிகின்றது.

அன்பு மனிதா! உனது சந்தேகம் எனக்கு புரிகின்றது! அத்தனைப் படைப்புகளையும் படைத்திருக்கும்போது ஏன் இப்போது ஏற்ற தாழ்வு இருக்கின்றது. அதுவும் ஏற்றம் என்பது சொற்ப விகிதத்திலும். தாழ்வு தான் பெரும் விகிதத்திலும் இருக்கின்றது! ஏன் இந்த பேதமை! என்று உன் மனதில் எழுவது சராசரியானது தான்.

மதிப்புமிக்க மனிதா! நீ பிறக்கும் போதே உனக்குள் ஆற்றலையும், அறிவையும் கொடுத்து, அறிவுரை வழங்கி ஓயாது  ஜீவ ஓட்டமாக உன்னுள் ஓடிக்கொண்டிருக்கிறேன். அது போதாதென்று உன் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பலரின் மூலமாகவும் பலவித உருவங்களில் பேச்சாகவோ, செயல்களாகவோ, கணினி மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ அவைகளைக்  கிடைக்கும்படி செய்திருக்கிறேன். உனக்குள்ளிருந்தபடி உன் பங்கை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி எச்சரிக்கையும் செய்து வருகிறேன். அதாவது அறிவை வளர்த்துக் கொள், உனக்குள்ள ஆற்றலை பெருக்கிக் கொள். மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்திற்குத் தகுந்தாற்ப்போல் உன்னை மாற்றிக்கொண்டு இருக்கின்ற உன் பங்கை காப்பற்றிக்கொள் என்று ஓடி ஓடி உன்னிடம் வந்து  சொல்லிக்கொண்டு வருகிறேன். அவற்றையெல்லாம் அலட்சியமாக நீ எடுத்துக் கொண்டதால் இன்று கஷ்டப்படுகின்றாய்.

இனிய மனிதா! அறிவையும், ஆற்றலையும் அதிகமாக வளர்த்து சரியானபடி சரியான நேரத்தில் அவற்றை உபயோகித்து வருகிறவர்கள எப்போதும் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்கள் நிம்மதி இழந்து, மகிழ்ச்சி இழந்து துன்பப்பட்டு கொண்டிருப்பதை பார்கிறேன். அவர்களுக்கு நான் துயர் துடைக்கும் சிறந்த ஆலோசகனாக இருக்க வந்திருக்கிறேன்.  அதுபோல்  குறைந்த அளவில் அறிவையும், ஆற்றலையும்   பயன்படுத்துகிறவர்கள் கொஞ்சம் கஷ்டப் பட்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியை தர விரும்புகிறேன். ஒரு சிலர் மற்றவர்களின் ஆற்றலையும், அறிவையும் பெற்றுக்கொண்டு காலத்தைத் தள்ளுகின்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருப்பார்கள். அவர்களுக்கும் எச்சரிக்கை செய்து  தங்களது சொந்த காலில் நிற்குமளவிற்கு நான் உதவி செய்யப் போகிறேன். அவர்கள் எல்லோரும் எனது சத்திய வார்த்தைகளை மதிக்காமல், நான் சொல்லிய அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், இந்த நன்மை செய்யும் உள்விதி மனிதனை மறந்துதோ அல்லது என்னை அலட்சியபடுத்தியதன் விளைவாக இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  
  

மதிப்புமிக்க மனிதா! நான் உன்னிடத்தில் பேசும் பேச்சு, சொல்லும் ரகசியங்கள் எல்லாவற்றையும் உனக்கு மட்டும் தான் கேட்கும். உனக்காவே சொல்லிவருகிறேன். உனக்கு எந்த வழியைக் காட்டினால் பெரும் நன்மை அடைவாய் என்பதை நன்கு யோசித்து அந்த நன்மை தரும் வழியைக் காட்டி அழைத்துச் செல்கிறேன். நீ உறங்கினாலும், உட்கார்ந்திருந்தாலும், நின்றிருந்தாலும் நான் விழித்துக்கொண்டும், உன்னைச் சுற்றிலும் எனது ஆன்ம ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும். சிலநேரத்தில் அதை பற்றி கவலைபடாமல், நான் சொல்லும்படி நடக்காமல், உன் கண்ணால் காண்பவை அனைத்தும் உண்மை என்று நம்பியும், கேட்பது அனைத்தும் நான் உனக்கு சொல்லியது போலவும், செய்வது அனைத்தும் எனது கட்டளை என்று நினைத்து பலவிதத்தில், பலரிடத்தில் நீ ஏமாறும் போது உன்னோடு சேர்ந்து நானும் வேறுவழி இல்லாமல் ஏமாறுகிறேன். உனக்கு நான் கொடுத்த பங்குகள் (உணவு, உடை மற்றும் இடம்) குறைகின்றது அல்லது கிடைக்கவில்லை என்றால் அதை மற்றவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்று தானே அர்த்தம். அதைப் பற்றி நான் எச்சரிக்கை செய்தும் அதை துச்சமாக மதித்து நீ கஷ்டப்படுகின்றாய். அந்த கஷ்டம் இன்றோடு ஒழிந்தது. இனி நான் இருக்கும்போது அந்த கவலை வேண்டாம்.

இரக்கமுள்ள மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருப்பதினால் உன் கஷ்டம்! என் கஷ்டம்! உன் சுகம்! எனது சுகம்  உன் எண்ணம்! எனது எண்ணம்! உன் செயல் ! எனது செயல்! ஏனென்றால் நீ பாதி ! நான் பாதி! ஒன்று நினைக்கலாம். உள்ளுக்குள் ஓடிக்கொண்டு நீ  என்ன செய்துகொண்டிருக்கிறாய். நான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டாமல், தட்டிக்கேட்காமல், தண்டனை கொடுக்காமல் ஏன் இருக்கிறாய் ! என்று?

இனிமையான மனிதா! உன் அறிவைவிட என்னறிவு பன்மடங்கு அதிகம். உன் ஆற்றலைவிட என் ஆற்றல் பன்மடங்கு அதிகம். ஆனால் என்னுடைய விருப்பம் எல்லாம் உன்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். நீ தவறு செய்யும்போதெல்லாம் என்னையும் சேர்த்து தவறு செய்யத் தூண்டுகிறாய். தவறு செய்ய வைக்கிறாய். ஆனால் உனக்கு இருக்கும் இரக்கத்தை விடப்பன்மடங்கு இரக்கம் எனக்கு உண்டு. அதனால் நீ செய்யும் தவறுகளுக்கு உடனே தண்டனை தர இயலவில்லை. இந்த இரக்கத்தை நீ உனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு என்னையே ஆட்டிப் படைக்க எண்ணுகிறாய்! நீ என்னை மதிக்காமல் என்னை ஆட்டிப் படைக்க எண்ணினால் உனக்குத்தான் எல்லாவகையிலும் நஷ்டம்.

அன்பு மனிதா! உன்னைச் சுற்றிலும் சிலர் தங்கள் வார்த்தைகளால் உன் மூளையை சலவை செய்து உனது அறிவு, ஆற்றல், செல்வங்களை உறிஞ்சுபவர்களை அடையாளம் கண்டு உனக்கு காட்டுகிறேன். அவர்களிடம் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் அவர்கள் உனது பலவீனத்தையும், நீ அசரும் நேரத்தையும் பார்த்து, உனக்கு பலவழிகளில் கோபம், பொறாமை, பேராசை போன்ற உணர்வுகளைத் தூண்டி அவர்களின் எண்ணங்களை அல்லது நினைத்ததைச் சாதித்துக் கொள்வார்கள். அந்த மாதிரி சமயத்தில் நீ என்னிடத்தில் கலந்தாலோசித்து என் அனுமதி கேட்டு எதுவும் செய்தால் உனக்கு மிகவும் நன்மை தரும். 

இரக்கமுள்ள மனிதா! உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், கல்வியாளர்கள் போன்றவர்கள் நினைத்தால் நீ கேட்காகமலே அவர்களால் பல உதவிகளை செய்ய இயலும். ஏன்? யாராவது அப்படி செய்கிறார்களா! இன்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பவர்கள் நாளை பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று தானே சம்பாதிக்க துடிக்கிறார்கள். அத்தனை கோடி பணம் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? அவர்கள் உழைத்ததாலா!  இல்லை, நீ அவர்களிடத்தில் ஏமாந்ததால்! நீ சோம்பேறியாக இருந்ததினால்! நீ தூங்கியிருக்கும் சமயத்தில் அவர்கள் விழித்துக்கொண்டு செயல் பட்டதால்! அவர்கள் எல்லோரும் உன் அறிவை மழுங்கச் செய்து, திசை திருப்பி உன்னை குழியில் தள்ளி புதைக்கவும் துணிபவர்கள்! உன்னைப் போன்றோர்களை  ஆண்டியாக்குவதே அவர்களது குறிக்கோள். அவர்களிடம் ஆயுசு முழுவதும் உன்னை அடிமையாக மாற்ற விரும்புவர்கள். என்னையும், உன்னையும் அனாதையாக்குவதே அவர்கள் இலட்சியம். அவர்களிடத்தில் நீ இழந்ததை அல்லது கொடுத்ததை கெஞ்சினாலும், உன் நிலைமையை எடுத்துச் சொன்னாலும் அவர்களிடமிருந்து சல்லிகாசு கூட  திரும்ப பெறமுடியாது! அவர்கள் இரக்கப்பட்டு தரவும் மாட்டார்கள். 

இனிய மனிதா! அப்படி திருப்பிக் கேட்டால் அவர்களின் பதில், உன்னை யார் என்னை நம்பச் சொன்னது? நீ ஏமாந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இந்த கஷ்டத்தை நன்றாக அனுபவி ! என்று தான் சொல்வார்கள். இப்படிப்பட்ட வேளையில் நான் சொல்லும் அறிவுரையைக்  கேட்டிருந்தால் இந்த நிலை உனக்கு  வந்திருக்குமா? எல்லாம் இழந்த பிறகல்லவா என்னைத் தேடுகிறாய்! உதவி செய்யுங்கள் என்று கதறுகிறாய். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று புலம்புகிறாய்! கண் கெட்ட பிறகு என்னை தேடி அலைகிறாய். உன்பக்கத்தில் உனக்குத் துணையாக இருப்பதைக் கூட கண்டும் காணாமல் இருக்கிறாய்! 

அன்பு மனிதா! இதுவரை போனது போகட்டும்! இனி நீ இழந்ததை விட அதிகமாகவே நல்ல முறையில், பெருமை தரும் விதத்தில், எல்லோரும் போற்றும் விதத்தில் உனக்கு நான் மகிழ்ச்சியோடு பெற்றுத்தருகிறேன். நான் உனக்கு கொடுக்கும் பொக்கிஷத்தை மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க நினைத்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன். அதற்கு என்றும் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். ஆனால்  அதை தீயசெயலுக்கு பயன்படுத்த விரும்பினால் நான் எனது முழு சக்தியையும் என்னுள்ளேயே வைத்துக்கொண்டு உனக்கு ஒரு துளி கூடத் தராமல் உன்னைவிட்டு முற்றிலும் தள்ளிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். உன்னை அனாதையாக விடவும் தயங்க மாட்டேன்! அதனால் நீ பலவித கஷ்டங்களை அடைந்து அதை அனுபவிக்கநேரிடும். அந்த கஷ்டங்களை  என்னையன்றி யாராலும் தீர்க்க முடியாது. நீ என் பேச்சை கேட்காமல் பிறர்க்கு தீங்கு செய்ய உன் சக்தியை உபயோகித்தால் என் ஆக்க சக்தி உனக்கு உதவாது.

இனிய உள்ளம் கொண்ட மனிதா! நீ ஒரு குழந்தை மாதிரி! யார் ஒருவர்  சேவை மனப்பான்மையோடு உனக்கு அதிகமாகத் தேவைப்படும் உதவி மற்றும் இரக்கமனப்பான்மையோடு நல்ல ஆரோக்கியமான உணவு, மானம் காக்கும் உடை, சுகாதாரமான இருப்பிடம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்வு தருகின்றனரோ அவர்கள் எல்லோரும் என்னைப்போல ஜீவ ஓட்டம், ஆன்ம ஓட்டம் கொண்டவர்கள். நீ உன் கண்களை மூடிக்கொண்டு அவர்களின் பின்னே செல்க. உனக்கு எந்த ஒரு குறையும் வராது. அதற்கு நான் உதவி செய்கிறேன்.


பாசமுள்ள மனிதா! உண்மையான என்னைப்போல  ஜீவ ஓட்டம் கொண்டவர்கள், அவர்கள் உண்ணு முன், நீ உணவருந்திவிட்டாயா? என்று சரி பார்த்த பிறகே உண்பார்கள். அவர்கள் உறங்கச் செல்லுமுன் நீ நிம்மதியாக தூங்கிவிட்டாயா? என்று பார்த்த பிறகு தான் அவர்கள் உறங்கச் செல்வார்கள். அவர்களின் வசதியைவிட உனது வசதி பற்றி கவலைபடுவார்கள். அவர்களின் ஆரோக்கியத்தைவிட உனது ஆரோக்கியம் முக்கியமென  நினைப்பார்கள். அவர்கள் உனது உழைப்பு மற்றும் நீ தேடிய செல்வங்களை, பணத்தை வீணடிக்க மாட்டார்கள், அபகரிக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பேராசையும், சுயநலமும் துளி கூட இருக்காது. அத்தகைய மனிதர்களை, உயிர் ஓட்டமுடைய ஆன்மாக்களை உனக்கு இனம் காட்டுகிறேன். ஆகையால் எப்போதும் நீ என்னைவிட்டுப் பிரிய நினைக்காதே! உனக்கு வரும் உணர்வுகளை என்னிடத்தில் பகிர்ந்து கொள். 

மதிப்புமிக்க மனிதா! என்னால் உன் மூலம் மற்றவர்களையும் வசப்படுத்த முடியும். ஆனால் உனது நோக்கம் மென்மையாகவும், அவர்களின் நலனில் அக்கறையாகவும், அவர்களின் பொன்னான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு துணை போவதாகவும் இருந்தால் மட்டுமே நீ விரும்பும் மனிதர்களை உன்னுடன் இணைந்து செயலாற்றும் வலிமையையும், சந்தர்ப்பத்தையும் கொடுப்பேன். 

இனிமையான மனிதா! எனது ஆற்றலினால், எனது சக்தியினாலும் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அதை உன் மூலம் மேலும் செம்மையாக்கவே வந்துள்ளேன். எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன். நீயும் நானும் வேறல்ல. உன்னால் என்னை பிரிக்கமுடியாது. ஆனால் நான் நினைத்தால் உன்னைவிட்டு பிரியவும் முடியும். அவைகளெல்லாம் நீ நினைக்கும் நினைவிலும், செய்யும் செயலைப் பொருத்தும், என்னை தூய்மையாகப் பேணுவதைப் பொருத்தும் இருக்கின்றது. என்னை விட்டு பிறரின் கட்டுப்பாட்டில் இருக்க நினைக்காதே! அது உனக்கு ஆபத்தில் முடியும்.

பாசமுள்ள மனிதா! நான் உன்னை கட்டுபடுத்துகிறேன். அதே சமயத்தில் உன் இன்பமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத்  துணையும் செய்கிறேன். என்னை மதித்து, நம்பினால் உன்வாழ்க்கை செழிக்கும். அதைவிட்டு பிறருடைய தயவில் உன் வாழ்க்கையைத் தள்ள நினைக்காதே. உனக்கு உதவி செய்பவர்களிடம் ஒப்படைத்து உன் மகிழ்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பேன் ! இது உறுதி!


நல்லதை நினை!

நல்லதை செய்!


என் மூலம் அதிக நன்மை பெறுவாய்!


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com       

வாழ்கையின் வெற்றிக்கு எந்த மாதிரி 'தகுதி' தேவை- WHAT IS THE QUALIFICATION FOR SUCCESS

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

வாழ்கையின் வெற்றிக்கு எந்த மாதிரி
 'தகுதி' தேவை-
WHAT IS THE QUALIFICATION FOR SUCCESS


எந்த ஒரு செயலிலும் தகுதி இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றிக்குரிய தகுதி இதோ!

த  - தன்னம்பிக்கை 
கு - குறிக்கோள் 
தி - திட்டம்.

தன்னம்பிக்கை:

நீ நினைக்கும் காரியத்தைப் பற்றி யாரிடமாவது கேட்டால் ,'அந்த காரியமா! ரொம்ப கஷ்டமான வேலை. செய்யவே செய்யாதே! மீறி செய்தால் வர்றதை நீ தான் அனுபவிக்கனும். அப்புறம் உன்னிஷ்டம்!' என்று அவனம்பிக்கையாகவே பேசி செய்யவிடாமல் செய்பவர்கள் தான் அநேகம் பேர். இத்தனைக்கும் அந்த வேலை பற்றிய அறிவும், தெளிவும் அவர்களுக்கு இருக்காது. இந்த இடத்தில் தான் உங்களது தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. வேண்டுமென்றல் அந்த காரியத்தை செய்தே முடிப்பேன் என்று இன்னும் அதிகமாகவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும். 


தன்னம்பிக்கை என்பது உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் செயல். அநேகம் பேர் வானத்தையே பார்த்துக் கொண்டிரும்போது ஒரு சிலர் வானத்தில் பறந்து சாதனை செய்தததை அறிவியல் வரலாறு சொல்கிறது.


அனைவரும் நிலவை ரசித்துக்கொண்டு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும்போது சிலர் அந்த நிலவிலே காலடி பதித்ததை மறுக்கமுடியமா! அதைவிடவா தன்னம்பிக்கைக்கு உதாரணம் வேண்டும்.


தன்னம்பிக்கை, உன்னிடத்தில் அணையா விளக்காக எரிந்துகொண்டிருந்தால் அதன் வெளிச்சமே உனது வெற்றிக்கு அடையக்கூடிய வழியைக்காட்டும்.

குறிக்கோள்:


குறிக்கோள் இல்லாத வாழ்க்கை எழுதப்படாத வெள்ளைத்தாள் போன்றது. அது இருந்தாலும் ஒன்று , இல்லாவிட்டாலும் ஒன்று ! கயிற்றில் கட்டப்படாத பட்டம் எத்தனை நிமிடம் உயரத்தில் இருக்கும். காற்றடிக்கும் திசையில் ஏற இறங்க பறந்து முடிவில் எங்கோ விழுந்து புதைந்தும் போகும். அது போல குறிக்கோள் இல்லாத வாழ்க்கை 'ஸ்டேரிங் ' இல்லாத கார். எவ்வளவு திறமையான டிரைவராக இருந்தாலும் அவரால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் விபத்து இல்லாமல் போய்ச் சேரமுடியாது.
அது கண்களைக் கட்டிக்கொண்டு நெருக்கமுள்ள சாலையில் நடப்பதற்க்குச் சமம்.    


குறிக்கோள் ஒரு மனிதன் இருப்பதை அடையாளம் காட்டுகிறது. வெற்றியை முன்னமே நிச்சயிக்கிறது. புது தேம்பித் தருகின்றது. குறிக்கோளுள்ள மனிதன் தனக்கு வரும் எந்த ஒரு இடையூறையும் தாண்டிச் செல்லும் துணிச்சல் தருகின்றது. எந்த ஒரு பிரச்சனையும் சமாளிக்கும் அறிவையும், ஆற்றலையும் தருகின்றது.


திட்டம்:

திட்டம் இல்லாத வாழ்க்கை படிக்கபடாத புத்தகம். அதாவது 'வாழ்கையில் வெற்றி பெறுவது எப்படி?' என்ற புத்தகம் உனது கையில் இருந்தால் மட்டும் போதுமா? அதைப் படித்தால் தானே அதில் உள்ள விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். அதன் படி நடந்து வெற்றிபெற முடியும். 


திட்டம் ஒருவனிடத்தில் இருக்கும் திறமையை, எண்ணத்தை, கனவை நனவாக்கும் முதல் படி. முதல் படியை கால்பதிக்கும் அடுத்த படி தானாகவே உருவாகி உன்னை மேலே மேலே ஏறச் செய்கின்றது. அது உனது குறிக்கோள் அடையும் வரை படிகளை உருவாக்குகிறது.

நீ இருக்கின்ற இடத்தையும், அடைய வேண்டிய இடத்தையும் இணைக்கும் பாலம். ஆற்றின் குறுக்கே கட்டப்படும் வலிமையான பாலம் எவ்வாறு பயணத்தை எளிமையாக்குவ்தோடு, மற்றவர்களையும் கடப்பதற்கு உதவி செய்கின்றது. அது போல உனது திட்டத்தின் வலிமையைப் பொறுத்துதான் உனது வெற்றி அமைகிறது.


எப்போதும் வெற்றிக்கு இந்த 'தகுதி' யை வளர்த்துக் கொண்டால் நீங்கள் ஒரு சாதனை மனிதனாக மாறலாம்.  

இல்லையென்றால் ........     



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   


Tuesday, 9 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 13 உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொள் - FILL UP YOUR HEART WITH HAPPY

உள்விதி மனிதன்  
சம மனிதக் கொள்கை 

பாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , 
உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள் -
FILL UP YOUR HEART WITH HAPPY AND GOOD FOOD


இனிமையான மனிதா! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். இந்த உலகில் பஞ்சபூதங்கள் எவை? என்று கேட்டால்  உடனே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று கூறுவாய். ஏன்? இவைகளை பூதங்கள் வரிசையில் இருக்கின்றது என்று கேட்டால் அவைகள் உருவத்தில் பெரிதானால் அனைத்தையும் பாரபட்சமின்றி அழிக்கும் தன்மை கொண்டது என்று பதில் சொல்வாய்! இவைகள் மட்டும் தான் தீங்கு செய்கின்றது என்று இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். இவைகளெல்லாம் உனக்கு நித்தமும் தொந்தரவு செய்வது கிடையாது. ஏன் ? சில இடங்களில் இவைகள் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்கின்றது. உனது வாழ்நாளில் இவைகளில் ஏதாவது ஒன்றாவது உனக்குக் கெடுதல் செய்திருக்கின்றதா? இல்லை! அப்படித்தானே.



மேன்மையான மனிதா! இந்த பூதத்திற்கெல்லாம் தலைவன் யார் என்று தெரியுமா? அதை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டால்  வயது (இளமை & முதுமை), அந்தஸ்து (ஏழை & பணக்காரன், கெளரவம், என்று யாரையும் விட்டுவைக்காமல், உன்னை தூங்கவிடாமல் செய்யும் குணம், எமனைவிட பலசாலி, சர்வாதிகாரி, கொடுமையான செயலைச் செய்யும் துரோகி, உனக்குள் இருந்துகொண்டு உன்னையே நம்பாமல் இருக்கும் நண்பன், அனைத்து அழிவுச் செயலுக்கும் காரண கர்த்தா, ஆயுசுக் கடனை வஞ்சனையில்லாமல் வசூல் செய்யும் ஈட்டிக் காரன், நாளை தருகிறேன் என்று சொன்னாலும் கேட்காத அரக்கன், அவரவரே கடனை அடைக்கச் சொல்லும் இம்சைக்காரன், எனது ஜீவ ஓட்டத்தைக் கூட தடை செய்யும் திறமை கொண்டதுமாகிய உனது வயிறு தான். இதைப் படித்தவுடன் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். வயிறைப் பற்றி இவ்வளவு கடுமையாக ஏன் விமர்சிக்கிறேன் என்று? இப்போது சொல்கிறேன் கேள். வயிறு தான் இந்த உடலுக்கு வேண்டிய நல்ல ஊட்டச் சத்துக்களை தரம் பிரித்து அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான சக்திகளை இடைவிடாது கொடுத்து இந்த ஆன்ம ஓட்டத்தை, மன ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்கிறது.

பெருமை கொண்ட மனிதா! வயிறை நாம் பொதுவாக அலட்சியமாகத் தான் கருதுகின்றோம். ஏனென்றால் எப்படியாவது அதற்கு தீனி போட்டுவிடுகின்றோம். ஆனால் மற்றவற்றிக்கு வாய்கிழிய பேசுகிறவர்களால் எந்த ஒரு பயில்வானால் ஒருவேளை பட்டினி கிடக்கமுடியுமா? இந்த உலகில் பணமில்லாமல், இடமில்லாமல் கூட இருந்துவிடலாம்! ஏன்? உடுத்துவதற்கு ஒரே உடையுடன் கூட இருந்துவிடலாம்! ஆனால் ஒரு வேளை உணவில்லாமல் அல்லது சாப்பிடமுடியாமல் இருந்தால் எப்படி இருக்குமென்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அந்த வயிற்றுப் பசியை யார் போக்குகின்றனறோ அவரே உன்னைக் காப்பவர். உன் வாழ்விற்கு மகிழ்ச்சியை அள்ளித் தருபவர். மனிதரில் மாணிக்கம் .. இல்லை இல்லை.. மனிதரில் தெய்வம் என்று வைத்துக்கொள்ளலாம்.  

அருமை மனிதா! உடலை விட உயிர் மேலானது என்கிறார்கள்! உயிர் என்றால் ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம், ஆன்ம ஓட்டம் தானே! அது நன்றாக இயங்கவேண்டுமென்றால் இந்த வயிறு கொடுக்கும் உணவல்லவா வேண்டும். ஒருவகையில் என்னைவிட பலசாலியும் கூட. ஆனால் அதில் மிகப் பெரிய சூட்சமமும், ரகசியமும் இருக்கின்றது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் இதை படித்த பிறகாவது நான் சொன்னது நம்புவாயென்று நினைக்கிறேன்.   



பாசமுள்ள மனிதா! எப்போதும் ஒன்றை மட்டும் நினைவு கொள். எல்லோருக்கும் பாரபட்சமின்றி வயிறைக் கொடுத்திருக்கிறேன். அது தான் எனது ஜீவ ஓட்டத்திற்கு ஆற்றலைத் தருகின்றது. அதுவும் ஐந்தறிவுக்குள் இருக்கும் ஜீவன்களுக்கு ஒருவர் நீ யோசிப்பதற்க்குண்டான சிந்தனையைத் தருகின்றது. அன்பு மனிதா ! உன்னைப் பொறுத்தமட்டில் உன்னை எப்போதும் ஒருவர் துரத்திக்கொண்டே இருந்தால் தான் நீ உனக்கு வேண்டியதை தேடி ஓடுவாய். இல்லாவிட்டால் இந்த அற்புதப் பிறவியை வீணாக்கி விடுவாய். ஆகவே வயிற்றின் உதவி கொண்டு எனது ஆன்ம ஓட்டத்தின் மூலம் உன்னை துரத்திக்கொண்டு இருக்கிறேன். தினமும் நேரம் தவறாமல் உணவருந்துவதன் ரகசியம், ஒவ்வொரு முறை நீ உணவு உண்ணும்போது உனக்குள் இருக்கும் இந்த உள் மனிதனின் சிந்தனை வரவேண்டும். சோர்வுக்கு இடம் கொடுக்காமல் , நன்மையான புதிய புதிய செயல்களை  செய்ய வேண்டும். உன் பசி, மற்றவர்களுக்கும் எற்படுமென்று அவர்களின் பசியை போக்கி உதவி செய்ய வேண்டும். அதன் மூலம் அனைவரையும் காக்கும் குணம் வளரவேண்டும். உன் வாழ்கையை அனுபவிக்க, மகிழ்ச்சியுடன் கலந்த இன்பத்தை கொடுக்கின்றது.


பிரிய மனிதா! அந்த வயிறிடத்தில்  , நான் தான் நேற்று சாப்பிட்டுவிட்டேனே இப்போது ஏன் கேட்கிறாய் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளாது. சரி நாளை தருகிறேன் என்று சொன்னாலும் ஒத்துக் கொள்ளாது. நாக்கில் அறுசுவை கொடுத்தது அதன் மூலமும் நீ மகிழ்ச்சியடைய வேண்டுமென்பதற்காக. எனது ஜீவ ஓட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக. 

அன்புமிக்க மனிதா! உனது வயிறு உனக்குமட்டும் தான் சொந்தம். அது மானமுள்ளது. சொந்த காலில் நிற்ப்பது. ஒருவர் உதவியையும் ஏற்றுக்கொள்ளாதது. உன் வயிற்றுக்கு நீயே தான் எஜமானர். யாருக்கும் அடிமை இல்லாதது. அது இயங்க நீ தான் தேவை. உன்மூலம் தான் தேவை. நீ அதை கவனிக்காவிட்டாலும் அது உன்னை சும்மாவிடாது. 


இனிய மனிதா! பஞ்சபூதங்கள் கூட உனக்கு ரொம்ப அரிதாக ஆபத்து தரும்.. அழிவு தரும்.. துன்பம் தரும்.. ஆனால் உனக்குள் இருக்கும் வயிறு தினமும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று வேளையாவது உனக்கு மரண அவஷ்தை கொடுக்கும். நீ அதற்கு உண்டான 'இறை ' யை கொடுத்துவிட்டால் அது உனக்கு தொந்தரவு தராது. அதுவும் உனக்குள் இருக்கும் இந்த உள்  மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதை உனக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால் எனது ஜீவ ஓட்டத்திற்கு இது தான் பேருதவி செய்கின்றது. 'பசி ' என்பது மறைமுகமாக் உன்னை நல்ல எண்ணங்களை நினைக்கச் சொல்கின்றது. நல்ல செயல்களை செய்யச் சொல்கின்றது. மனிதனை காப்பதற்கு நினைவுபடுததுகிறது . நான் உன்னுடன் இருப்பதை அடிக்கடி ஞாபகபடுத்துகின்றது. பசி, இந்த உள் மனிதனின் ஜீவ ஓட்டத்தை சரியாக வைத்துக்கொள்ள உதவும்  'நேரம் தவறாது ஞாபக படுத்தும்  எச்சரிக்கை  மணி' என்று கூட சொல்லலாம். 

பாசமுள்ள மனிதா! பசி வரும்போது தான் வயிறு ஓன்று இருக்கின்றது என்று அறிகின்றாய்! அது தினமும் உனக்கு எச்சரிக்கை செய்யும் எமன். எனது ஆன்ம ஓட்டத்தை நிறுத்தும் ஆற்றல் கொண்டது. மரணத்தை ஞாபகப் படுத்தும் அபாயச் சங்கு. அதை நீ உணர்ந்துகொண்டால் எப்போதும் தப்பிப்பாய். இல்லையேல் அதைவிட உனக்கு அவஸ்தை தருபவர் இந்த உலகில் யாருமில்லை. அந்த அவஸ்தை இருக்காமல் இருக்க நீ மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். நீ மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்றால் நல்ல செயல்கள் செய்யவேண்டும்.



இரக்கமுள்ள மனிதா! இந்த வயிற்றுப் பிழைப்பிற்காக நீ என்னென்ன செய்கிறாய்? படிக்கிறாய். உழைக்கிறாய். சம்பாதிக்கிறாய். நன்றாக நேரம் தவறாமல் அறுசுவை உணவு சாப்பிடுகின்றாய். அப்படித்தானே! அதன் மூலம் பூதங்களின் தலைவனான வயிற்றின் தீயை ஆறவைக்கின்றாய். அவைகளெல்லாம் தற்காலிகமானது தான். அந்த தற்காலிக செயலின் பலன் அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு மணி நேரம் வரை தான். மீண்டும் கவனிக்காவிட்டால், அது திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதை தான்.

பிரியமுள்ள மனிதா! நன்றாக யோசித்துப்பார்! இந்த அரை சான் வயிறுக்காக எவ்வளவு படாதபாடுபடுகின்றாய். ஒருவேளை உணவு இல்லையெனில் உன்னை எப்படியெல்லாம் வாட்டிவதைக்கின்றது. நீ இதுநாள்வரை அதனிடத்தில் எவ்வளவு விசுவாசம் இருந்தாலும் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையை போல 'பசி .. பசி  ' என்று சப்தமில்லாமல் கூப்பாடு போட்டுகொண்டிருக்கும். ஒருவகையில் அது உன்னை மிரட்டும். அதற்காகவே நீ உழைத்தே தீரவேண்டும். அதுவும் மற்றவர்களின் வயிற்றை அடிக்காமல்! அதற்காக நீ புதிதாக எதற்கும் கஷ்டப் படவேண்டாம். உனக்காக வித விதமாக , பலவித சுவைகளில் படைப்புகளை படைத்திருக்கிறேன் அதை எனக்குத் தந்தால் போதுமானது.



மதிப்புமிக்க மனிதா! உனக்குமட்டுமல்ல ! எல்லோருக்கும் வயிறே பிரதானமானது. அதை கவனிப்பதே உனது முதல் கடமை. அதை கவனத்தில் கொள்ளாமல் அதை மறக்கச் செய்யும் கேளிக்கைகளில் ஈடுபட்டு உனது ஆன்ம ஓட்டத்தை பாழ்படுத்திக் கொள்கிறாய். அதை சரிகட்ட  'பணம்' என்கிற உருவத்தைப் படைத்து அதன் மூலம் என்னை அவ்வப்போது கவனித்து வருகின்றாய். ஆனால் ஒருகட்டத்தில் என்னைவிட அதுவே முக்கியம் என்று எண்ணி அதை தேடுவதற்கு நல்ல வழியை கடைப்பிடிக்காமல் குறுக்கு வழியில் செல்ல துணிந்து விடுகின்றாய். அதற்காக பலரை அழிக்கவும் தயாராக இருக்கின்றாய் என்பதை அறிவேன்.

பெருமைமிக்க மனிதா ! உனக்கு பணம், நகை  போன்ற செல்வம் உனக்குத் தேவையென்றால் நானே அதைப் படைத்திருப்பேனே! இவ்வளவு அரிய படைப்புகளை படைத்த நான் அதைப் படைப்பதற்கு சில வினாடிகள் கூட ஆகாது. ஆனால் சிலர் அதன் மூலம் என்னைவிட பெரிய ஆற்றல் உள்ளவனாக காட்டிக்கொன்கிறார்கள் . பணம் அதிகம் உள்ளவன் எதைச் சொன்னாலும் , அதாவது அழிக்கும் செயலைச் செய்யச் சொன்னாலும் செய்கின்றாயே ! அது நியாயமா! இதுநாள் வரை நீ அப்படி எதாவது செய்திருந்தால் அதை மறந்திடு! மீண்டும் செய்ய நினைத்தாலே நான் கொடுக்கபோகும் தண்டனை உனக்கு மட்டுமல்ல. உன்னைச் சேர்ந்தவர்களுக்கும், சந்ததியினருக்கும் தான்.  நான் உனக்கு தண்டனை கொடுக்க இனி தயங்க மாட்டேன். அப்படி ஏதேனும் யாருக்கேனும் துரோகம் செய்து உன் வயிறை கவனித்தால் நான் தகுந்த நேரத்தில் , உனது ஜீவ ஓட்டத்திற்கு  தடையாக இருப்பேன். அப்போது நீ எது கொடுத்தாலும் நான் ஏற்கத் தயாராக இருக்க மாட்டேன். நீ திருந்தி கண்ணீர் சிந்தினாலும் அப்போது எனக்கு எதுவும் கேட்காது. அப்போது நீ கஷ்டப்படுவது இல்லாமல் மற்றவர்களும் கஷ்டப்படுவதை உன் கண்ணால் பார்க்கலாம்.



பாசமுள்ள மனிதா! நீ கேளிக்கைகளில், செய்யக் கூடாத செயல்களில், மற்றவர்களிடம் பசப்பு வார்த்தைகளில் ஏமாறும்போது, பகட்டான வற்றில் கவனம் செலுத்தும்போதும், பேராசைபடுவதன் மூலமும், எனது ஜீவ ஓட்டத்திற்கு பொருத்தமில்லாதவற்றில் உனது சம்பாத்தியத்தை செலவழிக்கு முன் என்னையும் , என் குணத்தையும் கவனி. நான் மீண்டும் மீண்டும் எனக்குத் தகுந்தளவு உணவு மட்டும் தான் கேட்பேன். எனக்கு நீ கோடி பணம் கொடுத்தாலும், தங்கத்தை கொட்டி கொடுத்தாலும், வைரத்தால் அபிஷேகம் செய்தலும், உனக்கிருக்கும் அவ்வளவு சொத்துக்களை எழுதி வைத்தாலும், என்னை புகழ்ந்து பேசினாலும், புகழ்ந்து பாடினாலும் அவைகள் எனக்கு உனது  ஒரு முடியளவிற்கு  கூட பிரயோஜனம் இருக்காது. எனக்கு வேண்டியது எப்போதும் ஒரு சான் வயிற்றுக்கான உணவு மட்டும். அது கொடுத்துவிட்டால் உனக்கு சிலமணிநேரம் விடுதலை. பிறகு மீண்டும் 'பசி ' என்னும் தீயை ஏற்றிவிடுவேன், அது அணைப்பது உனது அன்றாட கடமை.



இனிய மனிதா! உன் வயிறு தான் உலகம். அது உனது வாழ்கையை செவ்வனே வழிநடத்திச் செல்லும் தலைவன். உன் உடலை மகிழ்ச்சியால் நிரப்பும் ஆற்றல் கொண்டது. அதன் வழி தான். உன் வழி ! அதை மாற்ற யாராலும் முடியாது! நான் எதற்காக உன்னை எச்சரிக்கிறேன் என்றால் , உன்னைச் சுற்றிலும் பசியை மறக்கும், மயக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வலையில் விழுந்து விடவேண்டாம் ஜாக்கிரதை!

பிரிய மனிதா! நீ ஒவ்வொரு காரியம் செய்யும்போது உனக்கு கஷ்டம், பிரச்சனை வரக்கூடாதென்றால் எப்போதும் இந்த வாசகம் நினைவில் வைத்துக்கொள். அதாவது 'இன்னும் சில மணி நேரத்தில் , இம்சை அரசனான எனது வயிறு கேட்கும் நல்ல உணவை கொடுக்க வேண்டும். அப்போது தான் எனது ஆன்ம ஓட்டம் தடைபடாமல் இருக்கும். கொடுக்கும் உணவு நல்ல வழியில் இருக்கவேண்டும் ' என்பதாகும். அந்த எச்சரிக்கை வசனம் தான் உனது காதில் சப்தமில்லாமல் இனி ஒலிக்கச் செய்யப் போகிறேன். கவனம் கொள் மனிதா ! இது ஒரு நாளில் சரி செய்யும் வேலை கிடையாது. எனது ஆன்ம ஓட்டம் நிற்கும்வரை அதாவது  நீ சாகும் வரை தற்காலிகமாக தினமும் உன்னை சித்திரவதை அல்லது துன்புறுத்திக் கொண்டிருப்பேன். என்னை கவனிக்க உனது மனம் பிரயாசைப் படவேண்டும்.



பாசமுள்ள மனிதா! இந்த இம்சை நீ தினமும் காணும் சின்னத் திரை, வெள்ளித் திரை, இனிக்கும் பாடல்களால், கிளர்ச்சியூட்டும் இன்பச் செயல்களால் , தீப்பொறி வசனங்களால், அன்பாலும், அரக்கத்தாலும், புகழாலும் சரி செய்யமுடியாது. இந்த பிரச்சனை நல்ல முறையில் தீர்க்க படவேண்டுமென்றால் அதற்கான சிறந்த வழியை ஏற்படுத்திக்கொள். அதற்கு எப்போதும் உனக்கு உதவி செய்யவே உனக்குள் இருக்கும் உள் மனிதனாக வந்துள்ளேன். வெறும் சவுடாலான பேச்சுகளால் , பகட்டு வார்த்தைகளால் நீ உன் வயிறை திருப்தி படுத்தமுடியாது.

பிரிய மனிதா! உனக்கு ஆயுசு முழுவதற்க்கு நல்ல உணவைத் தரவே நான் வந்துள்ளேன். இனிமேல் நான் சொல்லுபடி நட. வாழ்கையில் உனக்கு வயிறைப் பற்றிய கவலை இல்லை. மற்றவர்களுக்காகவும் உழை . ஆனால் உன் வயிற்றுக்கு நீ தான் துணை. இது தானாக நடக்கக் கூடிய ஒன்றல்ல. நீயாக நடத்திக் காட்டக் கூடிய ஓன்று.




இனிய மனிதா! இந்த உள் மனிதனான என்னை , எனது ஜீவ ஓட்டத்தை மறக்கச் செய்வது அது தான். என்னை நிந்திப்பது அது தான், உன்னை அணு அணுவாக கொல்வதும் அது தான். என்னை உச்சத்தில் வைத்து வேடிக்கை பார்ப்பதும் அது தான். உன்னை பாவச் செயலை செய்யவைப்பதும் அதுதான். பிறரை துன்புறுத்துவதும் அது தான்.

மதிப்பு மிக்க மனிதா! இப்போது முதல் உன் வயிற்றுக்கு நிரந்தர சிறந்த வழியை நான் தருகிறேன். எனது படைப்பை உனக்கு எப்போதும் தந்து உனது வயிற்றை நல்ல உணவால் நிரப்புவதோடு, உனது உடலை , எனது ஜீவ  ஓட்டத்தின் உதவியால் மகிழ்ச்சியால் நிரப்புகிறேன். அதுமட்டுமல்ல. மற்றவர்களுடைய வயிற்றிற்கு உன்னால் முடிந்தளவு உதவி செய்தால் இந்த உள் மனிதன் மகிழ்ச்சியடைவேன். என் படி நட. உனது வாழ்வில் என்றும் நிம்மதியாய் இருப்பாய்.




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   
  

எந்த மதம் உயர்ந்த மதம் என்று தெரிந்துகொள்ள ஆசையா? DO YOU WANT TO KNOW WHICH RELIGION IS THE BEST ONE


அனுபவப் பொன்வரிகள் 


மதுரை கங்காதரன்  

எந்த மதம் உயர்ந்த மதம் என்று தெரிந்துகொள்ள ஆசையா?
DO YOU WANT TO KNOW 
WHICH RELIGION IS THE BEST ONE?



இந்த உலகில் பல மதங்கள் இருக்கின்றன! இந்து மதம், இஸ்லாம் மதம், கிறித்துவ மதம், புத்த மதம், சீக்கய மதம் என்று பலதரப்பட்ட மதங்களை இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். அவற்றில் எந்த மதம் உயர்ந்தது ? என்று சொல்வதற்கு முன் எல்லா மதத்தின் கோட்பாடுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு தான் முடிவு சொல்ல முடியும்.

இதற்கு ஒரு அருமையான உதாரணத்தின் மூலம் புரிய வைக்கலாம். நமது உயிர் வாழ்விற்கு மிகவும் முக்கியமானது உணவு. சிலரிடத்தில் உங்களுக்கு பிடித்தமான உணவு எது என்று கேட்டால் 'அரிசிச் சாப்பாடு ' என்பார்கள். ஒரு சிலருக்கு 'கோதுமைச் சப்பாத்தி ' என்றும், கூழ் என்றும், கஞ்சி என்றும், ரொட்டி, பீசா, இட்லி, தோசை, பொங்கல் என்று வித விதமாகச் சொல்வார்கள். அனால் எல்லாமே பசியை போக்குவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகின்றது. அதாவது அவைகளுடைய செயல் ஒன்று தான். 


இதில் கோதுமைச் சப்பாத்தி சாப்பிடுகின்றவரை அழைத்து, நீங்கள் சாப்பிடுவதைவிட அரிசிச் சாப்பாடு மிகவும் ருசியாக இருக்கும் என்று சொன்னால், அதை மருந்திற்கும் கூட சாப்பிட்டுப் பார்க்காமல் இல்லை..இல்லை சப்பாத்தி தான் ருசி என்கிற பதில் தான் வரும். இப்படி பலரிடத்தில் கேட்டால் அவரவர் விருப்பபடி தான் கூறுவார்கள். 

அதேபோல என் மதம் தான் சிறந்தது என்று சொன்னால் ... உடனே மற்றவர் இல்லை ..இல்லை என் மதம் தான் சிறந்தது என்று பதில் வரும். சில சமயங்களில் வாதங்கள் கூட வரும். இதற்கு காரணம் ஒரு மதத்தில் இருப்பவர்கள் மற்றொரு மதத்தினை பற்றிய நூல்களை படிக்காமல் இருப்பது. அதாவது சப்பாத்தி சாப்பிடுகிறவர், அரிசிச் சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அவருக்கு உடனே ஒன்று தெரிய வரும். இதுவும் ஒருவகை ருசியுடன் இருக்கிறது. பசியைப் போக்குகிறது என்று!


எந்த ஒரு மதமும் தீயப்பழக்கத்தை அனுமதிப்பதில்லை. மக்களிடம் அன்பை, இரக்கத்தை காட்டச் சொல்கின்றது. கொலை, கொள்ளை போன்றவற்றை செய்யச் சொல்வதில்லை. மக்களிடையே கோபம், போட்டி, பொறாமை ஆகியவற்றை அறவே துறக்கச் சொல்கிறது. மக்கள் போற்றும் எல்லா மதங்களில் உயர்ந்த கருத்துக்களே இருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் மனிதனுக்கு நல்வழி காட்டும் நூலாகவே இருக்கின்றது. அதை பின்பற்றுபவர்கள எல்லோரும் நன் மக்களாகவே திகழ்கின்றனர். அறவழியில், சத்தியத்தைக் கடைபிடித்து  கடமைகளை தவறாமல் பின்பற்றச் சொல்கின்றது. மனிதனை மேன்மைபடுத்துவதற்கு உதவியாக இருக்கின்றது.    

முடிவு ! எல்லா மதங்களும் மனிதனின் நல்வாழ்விற்காக, மகிழ்ச்சி தருவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அனைத்து மதங்களும் சிறப்பு வாய்ந்தவை, பெருமை வாய்ந்தவை, உயர்ந்து நிற்பவை.

மதங்களை போற்றுவோம்,

மனிதர்களை நல்வழி படுத்துவோம். 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com