Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- அறிமுக தத்துவவியல் தொடர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன் (6)
Monday, 25 August 2014
Sunday, 24 August 2014
ஒரே விலைக் கதை - சிறுகதை
ஒரே விலைக் கதை
சிறுகதை
மதுரை கங்காதரன்
இந்த முறையாவது தன் கணவரிடத்தில் தான் வகைவகையாய் செய்து வைத்திருக்கும் சமையல்களை காட்டி பாராட்டை பெறவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள் கவிதா.
'உனக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லை! நீ வாங்குறது எல்லாமே சொல்லிக்கொள்ளும் படியே இல்லை! நீயும் உங்கம்மா மாதிரி பழைய பஞ்சாங்கம் தான்' என்று ஒவ்வொரு முறையும் குத்திக்காட்டி பேசுவதில் அவள் கணவர் சத்திய சீலன் வல்லவர்.
எப்படியும் அவர் வாயார தன்னைப் பாராட்ட வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் தான் வாங்கும் எந்த பொருளையும் நிதானமாகப் தெளிவாகப் பார்த்து பார்த்து வாங்கியும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லையே என்று அவள் எண்ணுகின்ற போது வாழ்கையில் சலிப்பு தான் உண்டாகும் கவிதாவுக்கு.
இதைப்பற்றி பல முறை கவிதா தன் அம்மாவிடம் சொல்லுற போது 'கொஞ்சம் பொறு கவிதா! நீ எவ்வளவு நல்லதா வாங்கினாலும் மாப்பிள்ளைக்கு எந்த காரணத்தினாலே பிடிக்கலேன்னு என்னாலே இப்போ ஓரளவு கணிக்க முடியுது. ஆனால் இன்னைக்கு நீ செய்திருக்கும் சமையலை சாப்பிடும் போது மாப்பிள்ளை எப்படி நடந்துக்கிறார்?ன்னு நான் கவனிக்கிறேன். பிறகு அவருக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை உன்கிட்டே சொல்றேன்' என்று சொல்லியது அவளுக்கு ஆறுதலைத் தந்தது.
இருந்தாலும் அவளுக்கு ஒரு நப்பாசை. 'தன் அம்மா நினைப்பது போல கணவரிடம் ஏதும் ஒளிவு மறைவு இருக்காது' என்கிற ஒருவித குருட்டு நம்பிக்கை அவளிடத்தில் இருந்தது. அவள் எதிர்பார்க்கும் நேரத்தில் சத்தியசீலன் வீட்டிற்குள் நுழைந்தான். சமையல் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.
"இன்னைக்கு என்ன சமையல்? கமகமன்னு இருக்கு. ஒரு பிடி புடிச்சுடுறேன்" என்று சொன்னவுடனே கவிதாவுக்கு பாதி பாராட்டு கிடைத்ததாக கருதினாள். சாப்பிட்ட பிறகு மீதி பாராட்டு கிடைக்கும் என்று நம்பினாள்.
'கவிதா, மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டதாலே ரொம்ப பெருமைபடாதேம்மா. சிலர் உள்ளே ஒண்ணும் வெளியே ஒண்ணும் வைச்சுகிட்டு பேசுவாங்க. கொஞ்ச நேரத்திலே மாப்பிள்ளை மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு சொல்லிடுறேன்" என்று கவிதாவின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டாள் அவள் அம்மா.
இருந்தாலும் மிகவும் ஆர்வமாக புன்னகையுடன் கணவனுக்கு பரிமாறத் தொடங்கினாள். சற்று தூரத்திலிருந்து நடப்பதை உன்னிப்பாக கவனித்தாள் கவிதாவின் அம்மா.
"கவி..இது என்ன ? புது மாதிரியா இருக்கு?" என்று சத்தியசீலன் ஆசையைக் கேட்டான்.
"அதுங்களா? கத்தரிக்காய் கூட்டு. கிலோ முப்பது ரூபாய் விக்கிறதை நான் சாமர்த்தியமாய் பேசி இருபது ரூபாய்க்கு வாங்கினேன். நல்லா இருக்குங்களா?" என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
"சுமாரா இருக்கு. அவ உன்னை நல்லாவே ஏமாத்திருக்கா. பதினைந்து ரூபா கத்திரிக்காயை முப்பது ரூபா சொல்லி உன் தலையிலே இருபது ரூபான்னு கட்டிட்டா. இது என்ன வெண்டக்கா சாம்பரா? கிலோ நாற்பது ரூபா சொல்லியிருப்பா. நீ பேசி முப்பது ரூபாய்க்கு வாங்கியிருப்பே?" என்று சத்திய சீலன் முந்திக்கொள்ள அவளும் 'ஆமாம்' என்று தலையாட்டினாள்.
"சமையல்லே நீ தேற மாட்டே?" என்று வழக்கம் போல விமர்சித்தான்.
இவ்வாறு பேசியதை சற்றும் எதிர்பார்க்காத கவிதா ஏதும் புரியாமல் சிலையானாள். ஆனால் அனைத்தையும் கவனித்த அவள் அம்மாவுக்கு எல்லாமே விளங்க ஆரம்பித்தது.
"அம்மாடி கவிதா! மாப்பிள்ளைக்கு நீ எது வாங்கினாலும் அவருக்கு பிடிக்காத காரணம் எனக்கு தெரிஞ்சிருச்சி. இனிமேல் அதுபத்திக் கவலைப்படாதே. நாளையிலிருந்து அவர் எப்படி உன்னை பாராட்டுகிறாருன்னு மட்டும் பாரு" என்று கவிதாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
மறுநாள் புதிதாக வாங்கிய கண் கவர் வண்ணமயமான சேலையும், காலுக்கு ஏற்ற அழகான செருப்பையும் தன் கணவனிடம் காட்ட ஆயுத்தமானாள்.
சத்தியசீலன் வந்தவுடன் தயாராக வைத்திருந்த சேலை மற்றும் செருப்பு பார்சலை அவன் கண் முன் வைத்தாள்.
வழக்கம் போல " இந்த சேலை எவ்வளவு?"ன்னு சற்று நக்கலாகக் கேட்டான்.
"நான் எப்போதும் இருநூறு, முந்நூறு ரூபாயிலே தான் சேலை வாங்குவேன். ஆனா அந்த மாதிரி வாங்கிறது இந்த தடவை எனக்கும் உங்களைப் போல அதெல்லாம் பிடிக்கல்லே. இந்த சேலை இப்போ தான் புதுசா விற்பனைக்கு வந்திருக்கும் சேலைன்னு கடையிலே உள்ளவங்க சொன்னாங்க. விலையே கேட்டேன். ஆயிரத்து அறுநூருன்னு சொன்னாங்க. உடனே 'பில்' போடுன்னு சொல்லீட்டேன். எப்படீங்க இருக்கு?"
"ஆஹா இப்போ தான் உருப்பிடியா ஒரு காரியத்தை செய்திருக்கே. என்னமாய் இருக்கும். கலர் என் கண்ணைப் பறிக்குது. இதை கட்டிட்டுப் பாரு அந்த தேவதை கூட உன் அழகுக்கு ஈடு இணையாக மாட்டா !" என்று கவிதாவை சத்தியசீலன் புகழ அவளோ தூரத்தில் இருக்கும் தன் அம்மாவுக்கு தன் கட்டை விரலை உயர்த்துக்காட்டி 'வெற்றி' என்று சொல்லாமல் சைகை செய்தாள்.
இன்னும் அவனிடத்தில் புன்னகை மறையாமலும் கண்களில் பிரகாசம் குறையாமலும் இருப்பதை அவள் கவனித்தாள்.
"ஆமாம், செருப்பு வாங்குவதாக சொன்னாயே. வாங்கிட்டியா கவி" என்று முதல் முதலாக ஆர்வமாய்க் கேட்டான்.
" இதோ பாருங்க" என்று பார்சலைப் பிரித்து அவனிடத்தில் காண்பித்தாள்.
"இது எவ்வளவு கவி?" என்று கேட்டான்.
"போன தடவை நூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு செருப்பு வாங்கினேன். அது உங்களுக்கு சுத்தமா பிடிக்கல்லே. அதனாலே இந்த செருப்பு வாங்கினேன். காலுக்கு இதமா குளிர்ச்சியா இருக்கும்ன்னு சொன்னாங்க. என்னோட காலுக்கு ரொம்பவே நல்லா இருந்துச்சி. விலையைக் கேட்டேன். எண்ணூறு ரூபாயின்னு சொனாங்க. உடனே மறு பேச்சு பேசாம வாங்கிட்டேன்" என்று கூறினாள்.
"அற்புதம். உன் காலுக்கு, சும்மா சொல்லக் கூடாது. எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? ரொம்ப நல்லா இருக்கு" என்று இன்னொரு முறையும் வாயாரப் பாராட்டினான். இப்போதும் 'வெற்றி' என்று தன் அம்மாவுக்கு சைகை காட்டினாள்.
"கவி! எனக்கு இப்போ ரொம்ப திருப்தியா இருக்கு. பரவாயில்லை நீ எல்லாத்துலேயும் தேறிட்டே" என்று கூற கவிதா மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றாள்.
சரியாக நான்கைந்து நாட்கள் தான் சென்றிருக்கும்.
"ஏங்க ! ஒரு ஐயாயிரம் ரூபாய் தாங்க. காய்கறிங்க, மளிகை சாமான்ங்க வாங்கணும். இப்போதெல்லாம் நான் மளிகை சாமாங்ன்க எப்போதும் வாங்குற கடையிலே வாங்கிறதில்லீங்க. பெரிய ஸ்டோர்லே தான் வாங்குறேன். விலை அதிகமா இருந்தாலும் சரக்கு தரமா இருக்கு பாருங்க" என்று சற்று பெருமையாகச் சொன்னாள்.
"என்னம்மா கவி? முன்னமெல்லாம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தா மாசக்கடைசியிலே ஆயிரம் ரூபாய் மிச்சம் இருக்குன்னு சொல்லுவே. இப்போ என்னான்னா ஒரு வாரத்துக்கு ஐயாயிரம் ரூபாய் கேட்கிறே" என்று கேட்டான் சத்தியசீலன்.
"என்னாங்க செய்றது. உங்களுக்கு விலை குறைவா எந்த பொருளும் வாங்கினா பிடிக்கிறதில்லே. அதனாலே எது வாங்கினாலும் விலை அதிகமா இருந்தாலும் தரமா வாங்குறேன். அது தானே உங்களுக்கும் பிடிக்குது" என்று சொல்லிக் காண்பித்தாள்.
"கவி. உண்மையா சொல்லப் போனா. நீ அப்போ வாங்கிய பொருளும், இப்போ வாங்கிய பொருளும் தரம் எல்லாமே ஒரே மாதிரியாத் தான் இருக்கு. நீ விலையை குறைச்சி வாங்கினதாலே அதோட தரத்தையும் குறைவா எடை போட்டேன். விலையை கூட்டி வாங்குறது பெரிய கௌரவம்னு நினைச்சேன். நீ எப்போதும் போல குறைச்சு வாங்குவேயே அப்படியே வாங்கு. அது தான் நல்லா இருக்கு. நம்ம வரவுக்குள் அது அடங்கும்" என்று வீட்டின் சூழ்நிலையை முதல்முதலாக உணர்ந்து பேசினான் சத்தியசீலன்.
"அப்படீன்னா. இந்தாங்க மூவாயிரம் ரூபாய்" என்று ரூபாயை நீட்டி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள்.
"என்னம்மா கவி! இந்த பணம் ஏது?"
"இது நீங்க கொடுத்த பணம் தாங்க. நான் எப்போதும் போல எல்லாப் பொருளையும் விலை குறைவா வாங்குற இடத்திலே தான் வாங்கினேன். ஆனா உங்ககிட்டே விலையை மட்டும் நான்கைந்து மடங்கு அதிகமா சொன்னேன். நீங்களும் நல்லா இருக்குன்னு சொன்னீங்க. உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும்னு நினைச்சேன். நீங்க மட்டுமில்லீங்க. பொதுவா எல்லோரும் பெரிய இடங்களிலே விலை அதிகம் கொடுத்து ஏமாந்து வாங்குறது தான் கௌரவம்னு நினைக்கிறாங்க. உண்மையில் நம்மோட பலவீனத்தை நல்லா புரிஞ்சிகிட்டு விலையை அதிகம் சொல்லி அப்படி இப்படின்னு இனிமையா பேசுறதாலே அதை அதிகம் விலை கொடுத்து ஏமாந்து வாங்கிறோம். அதை உங்களுக்கு செயலாலே புரிய வைக்கிறதுக்கு தான் என் அம்மா சொல்லி நான் போட்ட நாடகம்" என்று குட்டை உடைத்தாள்.
"உங்கம்மா பழைய பஞ்சாங்கம்னு குறை சொன்னேன். ஆனா அவங்ககிட்டே தான் அறிவும் , திறமையும் இருக்கு. இனிமே விலையைப் பத்தி மூச்சு விடமாட்டேன். நீ எது செய்தாலும் குடும்பத்துக்கு நல்லதுக்குத் தான் இருக்கும்" என்று மனதாரப் பாராட்டினான் சத்தியசீலன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^^^^^^^^^^^^^^
இடி மின்னல் தாங்கும் இதயம் - TO GET BRAVE HEART புதுக்கவிதை
இடி மின்னல் தாங்கும் இதயம்
TO GET BRAVE HEART
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
உன் கொள்கையில் மாற்றம் கூடாது
கடலில் கூட சீற்றம் உண்டாகலாம்
உன் உணர்வில் சீற்றம் கூடாது
நிலத்தில் அதிர்வுகள் ஏற்படலாம்
உன் இதயத்தில் அதிர்வுகள் கூடாது
காலம் தோல்வியைத் தரலாம்
உன் செயலில் தோல்வி கூடாது
எதிர்பாராதது சில நடக்கலாம்
தன்னம்பிக்கை இழக்கக் கூடாது
உடலில் சோர்வுகள் உண்டாகலாம்
மனதில் சோர்வு கூடாது
உழைப்பு உன்னை ஏமாற்றலாம்
சத்தியம் தவறக் கூடாது
நாளை உலகம் அழியலாம்
கடமை செய்ய தவறக் கூடாது
உனது ஆயுள் முடியலாம்
உனது புகழ் அழியக் கூடாது
நிழல் உன் கூட வராமல் போகலாம்
நேர்வழியை தவறக் கூடாது
இறைவனும் உன்னை கைவிடலாம்
நம்பிக்கையை கை விடக் கூடாது
நினைப்பது நடக்காமல் போகலாம்
நடத்துவது தவறக் கூடாது
வார்த்தைகள் தவறி வரலாம்
வாய்மை தவறக் கூடாது
இடி மின்னல் தாங்கும் இதயம்
இன்று முதல் நீ பெறுவாய்!
999999999999999999999999999999 9999999999999999999999999999999999999999999999999
Sunday, 27 July 2014
நித்தம் ஏமாறும் நிசங்கள் ! புதுக்கவிதை
நித்தம் ஏமாறும் நிசங்கள் !
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
காட்சிகளால் ஏமாறும் கண்கள்
ஒலிகளால் ஏமாறும் காதுகள்
நறுமணங்களினால் ஏமாறும் மூக்கு
சுவைகளினால் ஏமாறும் நாக்கு
தொடுவதினால் ஏமாறும் உணர்வுகள்
உதவிகளால் ஏமாறும் உறவுகள்
உறுதிமொழிகளால் ஏமாறும் நட்புகள்
கண்களால் ஏமாறும் காதல்கள்
போலி கௌரவதினால் ஏமாறும் வாழ்க்கை
சாதிகளால் ஏமாறும் ஒற்றுமை
விலைவாசிகளால் ஏமாறும் மகிழ்ச்சி
மழையின்மையால் ஏமாறும் விவசாயி
உழைப்பினால் ஏமாறும் ஏழைகள்
பேராசையினால் ஏமாறும் நடுத்தர வர்க்கத்தினர்
சட்டங்களினால் ஏமாறும் பணக்காரர்கள்
பேஸ் புக்கினால் ஏமாறும் இளைஞர்கள்
லஞ்சம் ஊழலினால் ஏமாறும் நேர்மைகள்
கருப்புபணத்தினால் ஏமாறும் மக்கள் நலன்கள்
விபத்துகளால் ஏமாறும் உயிர்கள்
தீய பழக்கங்களினால் ஏமாறும் நோய்கள்
இளசுகளால் ஏமாறும் முதுமைகள்
சூதாட்டத்தினால் ஏமாறும் கௌரவங்கள்
அரசியலால் ஏமாறும் மக்கள்
இறப்பினால் ஏமாறும் பிறப்பு
நித்தம் ஏமாறும் நிசங்கள்
நிழலாக ஏமாறும் வாழ்கையே
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% %%%%%%%%%%%%%%%%%%%%
இறந்தாலும் வரும் வாரிசு! சிறுகதை
இறந்தாலும் வரும் வாரிசு!
சிறுகதை
மதுரை கங்காதரன்
" இந்த நிலைமையிலே எனக்குக் இன்னொரு கல்யாணம் தேவைதானம்மா? அது ஏமாத்துறதா ஆகாதா? இப்போ எனெக்கென்ன குறைச்சல் ? நான் சந்தோசமா இல்லையா என்ன? நீங்களே சொல்லுங்க. பொழுதை நல்லபடியா கழிக்கிறதுக்கு என்கிட்டே படிப் பு இருக்கு. கைவசம் கைத்தொழில்கள் பல இருக்கு. அதையெல்லாம் மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆர்வமும் இருக்கு. அந்த சுகம் போதும் எனக்கு !" என்று நியாமான மனிதத்தன்மையோடு சொன்னாள் பாரதி.
"எதும்மா ஏமாத்துறது? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்த மாதிரி கொடுத்து உன் கணவரை அற்ப ஆயுசோட உன்னை விதவையாக்கி தன்னோட அழைச்சுகிட்டாரே அந்தக் கடவுள் செஞ்சது மட்டும் ஏமாத்துறதா ஆகாதா? திறமைகள் பலது உன்கிட்டே இருக்கு. அது எனக்குத் தெரியும். மக்களுக்கு சேவை செய்யும் குணம் உனக்கு சின்ன வயசிலிருந்து இருக்குன்னும் தெரியும்! ஆனா அதனாலே உன் வயிறு நிரம்புமா? உனக்கு இப்போ சின்ன வயசு. உனக்கும் ஒரு பாதுகாப்பு அவசியம். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாங்க உன்னை பார்த்துட்டு இருக்க முடியும்? உனக்குன்னு ஒரு புதிய வாழ்க்கை காலம் தாழ்த்தாம அமைச்சுகிட்டாத் தான் உனக்கு நல்லது. ஒரு பொண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் கூடாது தான். ஆனா நீ ஓரளவுக்கு வாழ்க்கையை அனுபவிச்சு குழந்தை குட்டின்னு இருந்திருந்தாக் கூட ஏதோ அவங்களைப் பார்த்துகிட்டே ஒரு வகையான ஆறுதலோட வாழ்க்கையை ஒப்பேத்தலாம். அப்படி எதுவுமில்லாம இருக்கிறதாலே தான் நாங்க அவசரப்படுறோம். நாங்க இருக்கும்போதே உனக்கு பிடிச்சாப்பிலே உன்னோட ஆசையை நிறைவேத்துகிறவரைப் பார்த்து உனக்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திட்டா எங்க கடமை நல்லபடியா முடிஞ்சிடும்" என்று அவளை பலவற்றை சொல்லி சமாதானப்படுத்த முயலுவாள் பாரதியின் அம்மா.
"அவரோட கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அவரை மறக்கமுடியல்லேம்மா. எனக்குன்னு ஒரு ஆசை இருக்காதா? என்னை கட்டிக்கப் போறவர் என் எண்ணங்களுக்கு ஒத்துவந்தால் கூட ஏத்துக்கலாம். ஆனா எனக்கென்னமோ நான் போடும் கண்டீசனுக்கு அவர் ஒத்துவருவாரான்னு தெரியலே. அப்படி ஒத்து வந்தாத் தான் எனக்கு மறுமணம். இல்லாட்டி இல்லை தான்' என்று கறாராய் சொல்லிவிட்டாள் பாரதி.
"இப்போவாவது ஏதோ ஒருவகையிலே ஒத்துகிட்டேயே அதுவரைக்கும் எனக்கு சந்தோசம். அவருக்கும் உன்னைப் போல சில வைராக்கியம் இருக்கிறதாலே தான் நாங்களும் சம்மதிச்சோம். அவோரோட பெயர் கண்ணன் " என்று புதிர் போட்டார் பாரதியின் அம்மா.
"அப்படி என்னம்மா அவரோட வையாக்கியம்? கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க" என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
"அவருக்கும் உன்னைப் போலவே எப்போதுமே சமூகத் தொண்டு செய்யறது தான் பிடிக்குமாம். அதாவது பிறருக்கு கல்வி கற்றுக்கொடுப்பது, சிறிய தொழில் சொல்லிக்கொடுப்பது, ஏழைகளுக்கு நோட்டு, புத்தகம், துணிமணி கொடுப்பது, சிலருக்கு கல்விக்கட்டணம் கட்ட உதவுவது, கணினி பயன்பாடு சொல்லிக்கொடுப்பது இது போன்ற பல உதவிகள் செய்வாராம்!" என்று சற்று பெருமையாகவே சொன்னாள்.
"அம்மா ! அதுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கும் என்னம்மா சம்பந்தம். தண்ணிக்கும் மண்ணுக்கும் முடிச்சு போடுறாப்பிலே இருக்கு!" என்று சற்று சலித்துக்கொண்டாள்.
"சொல்றேன். அதுக்குள்ளே என்ன உனக்கு அவசரம். இந்த காரணத்தினாலே அவரு தன்னோட கல்யாணத்தைப் பத்திக் கவலைபடாமே ஒரு பேச்சிலரா காலத்தை தள்ளிக்கொண்டே வந்திருக்கிறார். ஒருசமயம் ஏதோ ஒரு சமூகநலக் கூட்டத்திலே அவரு பேசிகிட்டே இருக்கும் போது யாரோ ஒருவர் 'சமூகநலத்தைப் பற்றி இவ்வளவு அருமையாப் பேசுறீங்களே ! எல்லாமே சரி தான். உங்களுக்கும் மக்கள் சமூகத்துக் கு மேலே உண்மையான அக்கறை இருந்தா, எங்கே உங்களாலே ஒரு விதவை பொண்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? தம்பி ! உன்னைப்போல பல பேர் இதை விட நல்லா பேசியிருக்காங்க. ஆனா செயல்னு வந்துட்டா எட்டிப்போய் விடுவாங்க!' என்கிற அந்த வார்த்தைகளை இன்று உனது மூலமா செயல்படுத்திக் காட்டணும்னு துடிக்கிறார். அதாவது உன்னைப்போல ஒரு விதவைக்குத் தான் வாழ்வு கொடுக்கணும்னு இத்தனை நாளா கல்யாணத்தைத் தள்ளிபோட்டுகிட்டே வந்திருக்கிறார். இப்போதான் அவருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கப் போகுதுன்னு நான் நினைக்கிறேன். இந்த கல்யாண ஏற்பாடு நாங்க வற்புறுத்தி செஞ்சது கிடையாது. அவங்களாகவே அன்போடு கேட்டதாலே தான் எங்களாலே தட்டமுடியல்லே. நானும் உங்க அப்பாவும் எல்லாவிததிலேயும் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம்" என்று தனக்குத் தெரிந்ததை அனைத்தையும் பாரதியிடம் கூறினாள்.
"ஆயிரம் நீங்க சொன்னாலும் எனக்கு என்னமோ ஏதோ ஒரு சின்ன அதிருப்தி இருக்கு" என்று மீண்டும் தன் எண்ணத்தை பகிர்ந்து கொண்டாள்.
"ஒண்ணு செய்யுறோம். அவரும் உன்கிட்டே ஏதோ பேசணும்னு சொல்றார். அப்போ உன்னோட அபிப்பிராயமும் அவர்கிட்டே சொல்லு. பிறகு நீ ஒரு நல்ல முடிவுக்கு வரலாம்" என்று யோசனை சொன்னாள்.
கண்ணனின் எண்ணம் 'பாரதியிடம் எல்லாமே கல்யாணத்திற்கு முன்னால் பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கும் நல்லது. பின்னால் எந்தவித பிரச்னையும் வராது' என்கிற சிந்தனையுடன் போகலாமா வேண்டாமா ? என்று பலமுறை யோசித்த பிறகு ஒருநாள் பாரதி வீட்டிற்குச் சென்றார்.
"பாரதி இருக்காங்களா? அவங்கிட்டே ஒரு பத்து நிமிசம் பேசணும்" என்று அனுமதி கேட்டு இருவரும் பேசினார்கள்.
"எனக்கு பாரதியோட பேசினதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. என் வருங்கால வாழ்க்கை என்னான்னு இப்போத் தான் தெரிஞ்சுகிட்டேன். சீக்கிரமே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திடுறேன்" என்கிற உறுதியளித்த பிறகு கிளம்பினார் கண்ணன்.
அந்த சந்திப்பு பாரதிக்கு ஒரு புது தெம்பைக் கொடுத்தது. தான் நினைக்கும் வாழ்வு கிடைத்திருப்பதை எண்ணி மனமெல்லாம் பூரித்துப் போனாள்.
"என்னம்மா. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் .. திருப்தியில்லைன்னு சொன்னே.. இப்போ எந்த சொக்குபொடி போட்டு உன்னை மயக்கினாரோன்னு எனக்குத் தெரியாது. உன்னோட மனசு இப்போவாவது ஒத்துகிடதே பெரிய விசயம். மேற்கொண்டு ஆகவேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்" என்று மனப்பூர்வமாக மகிழ்ச்சி அடைந்தாள் அவள் அம்மா.
பாரதிக்கு முதல் கல்யாணம் , இரண்டாண்டுக்கு முன்பு நடந்தது. அழகான மாப்பிள்ளை, மிக நல்ல குணம், கை நிறைய சம்பளம், கௌரவமான குடும்பம், திருமணம் பத்து பொருத்தம் பார்த்து அனைவரின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தது. ஆனால் திடீரென்று அவருக்கு இதய நோய் தாக்கியதால் கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்து அவளின் வாழ்க்கை இருள் சூழ்ந்து விட்டது போலாகிவிட்டது என்றே சொல்லலாம். இத்தனை நாள் தனக்கு மறுமணம் வேண்டாம் என்று சொல்லியும் அவளின் அம்மா, அப்பா பிடிவாதமாய் அவளுக்கேத்த ஒரு நல்ல வரனை பார்த்து சம்மதிக்க வைத்தனர். வேறு வழி தெரியாமல் அவளும் ஒப்புக்காக ஒத்துக்கொண்டாள்.
நிச்சயதார்த்த விழா கலைகட்டியிருந்தது. எல்லோரும் இந்த அதிசய நிகழ்ச்சியை ஆவலோடு கண்டுகளிக்க வந்திருந்தனர். முக்கியமாக பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மற்றும் அவர்களது மனநிலை எப்படியிருக்கும்? அவர்களுக்கிடையே உண்டாகும் அபூர்வ உணர்வைப் பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பவர்கள் மிகவும் அவசரப்பட்டனர் என்றே எண்ணிக்கொள்ளலாம்.
"சற்று நேரத்தில் மாப்பிள்ளையும் பொண்னும் ஒரே இடத்தில் இருந்த காட்சி அனைவரையும் அதிசயிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி இருவருக்கும் பிடித்த காரணத்தினால் தான் என்னவோ இருவரின் முகத்தில் பிரகாசம் பொங்கி வழிந்தது. உணர்வுகள் பீறிட்டு வந்ததன் காரணமாக இருவரின் முகமும் சிவந்து இருந்தது. இனிதாக விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையில் தான் அந்த சம்பவம் நடந்தது.
திடீரென்று பாரதி "அம்மா , எனக்கு மயக்கமும் வாந்தியும் வருது" என்று சொல்லிக்கொண்டே கைகழுவும் தொட்டியில் வாந்தியெடுத்து மிகவும் சோர்வாக உட்கார்ந்துவிட்டாள்.
அங்குள்ள அனைவருக்கும் என்ன செய்வதென்று கை கால் ஓடாமல் பதறினார். இத்தனை குழப்பத்திற்கு மத்தியில் அரசல்புரசலாக "ஒருவேளை அதுவாயிருக்குமோ? யார் கண்டது? ம் .... நாம நினைச்சதெல்லாம் நடக்கவாப்போது ?" என்று எரிகின்ற தீயில் கூட கொஞ்சம் எண்ணையை ஊற்றி வேடிக்கை பார்த்தனர்.
பாரதியின் அம்மா அப்பாவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் " மாமா ! ஒண்ணுதுக்கும் பயப்படாதீங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்று அவர்களைத் தேற்றினார். அதற்குள் ஒரு அனுபவமிக்க மூதாட்டி ஒருவர் அவளின் கை நாடி பிடித்தபடி " சந்தேகமில்லை. இவள் கர்ப்பமாயிருக்கிறாள்" என்று சொல்ல அதைக் கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
"என்ன கர்ப்பமா?" என்று பாரதியின் அம்மா அப்பாவுக்கு வயிற்றில் புளி கரைத்தது. எல்லோரும் ஒவ்வொரு விதமாய் கற்பனை செய்து பேச பேச அவைகளைக் கேட்டு கூனிக்குறுகி நின்றனர். எப்படி இது நடந்தது என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. ஏனெனில் பாரதியின் கணவர் இறந்து இரண்டு வருடமாகிவிட்டது. பின் எப்படி இவள் கர்ப்பம் ? ஒருவேளை தவறான வழியில் சென்றிருப்பாளோ? என்று ஆளுக்காள் அவர்கள் வாய்க்கு வந்ததை அனாவசியமாகப் பேசினார்கள். பிறரின் மனதை புண்படுத்தும் கலை சொல்லியாத் தரவேண்டும். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த மாப்பிள்ளை அனைவரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததார்.
" ஆமாம் .. இவள் கர்ப்பமாவாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவள் வயிற்றில் இருப்பது அவளது வாரிசு தான்" என்று கேட்ட அனைவருக்கும் அதிசயமும் ஆச்சரியமும் தந்தது.
'என்ன சொல்லுகிறான். அவள் வயிற்றில் சுமப்பது. அவளோட வாரிசாம்? அதை நாம நம்பனுமாம்' என்று முணுமுணுத்தனர். பாரதியின் அம்மா அப்பாவிற்கும் தன் மாப்பிள்ளை என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் முழித்தனர்.
"எல்லோரும் நான் சொல்வதை கவனமாக் கேளுங்க. நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரதி வீட்டிற்கு போயிருந்தேன். இந்த கல்யாணத்தில் அவளுக்கு நம்பிக்கையும், தைரியமும் தருவதற்கு போயிருந்தேன். பல விசயங்களைப் பகிர்ந்துகிட்டோம். அவளோட முதல் கணவரின் நினைவுகளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருதாள். அதை மட்டும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பேச்சுவாக்கிலே ஒருசமயம் அவளும், அவரோட கணவரும் இங்கிருக்கும் மழலை ஆஸ்பத்திரிக்கு போனதா சொன்னாள். அது ஒரு 'விந்து வங்கி'. அதிலே இவள் கணவோரோட விந்துவும் கொடுத்திருக்கிறார். அங்கே போய் பார்த்த பிறகு அது உண்மை எனத்தெரிந்தது. எனக்கு ஒரு யோசனை வந்ததது. ஏன் அதைக்கொண்டு அவளுக்கு அவளுடைய வாரிசைத் தரக்கூடாதுன்னு நான் நினைச்சேன். அப்போ அதை அவங்ககிட்டே இந்த மாதிரி சொன்னேன்.
"பாரதி! நான் ஒண்ணு சொல்வேன். நீங்க அதை கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. நீங்க விருப்பபட்டால் உங்களுக்கு உன் கணவரின் நினைவுப் பரிசாக அந்த விந்து வங்கியில் இருக்கும் உன் கணவரின் விந்தைக்கொண்டு உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னேன்.
"அதெப்படிங்க முடியும்?" என்று பாரதி சந்தேகப்பட்டாள்.
"எனக்கு என்னோட வாரிசு தான் வேணும்னு இல்லை. ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டவங்க சிலர் இருக்கிறாங்க. ஆனா அதுக்கும் ஒருபடி மேலே அவங்களோட வாரிசை இந்த நவீன விஞ்ஞானத்தின் மூலமாக் கொடுத்தால் இன்னும் சிறப்பாகும் உங்களுக்கும் பரம திருப்தியாகவும் இருக்குமில்லையா" என்றேன்.
"அந்த யோசனை பாரதிக்கு மிகவும் பிடித்து போயிடுச்சு. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் பக்கபலமா இருப்பதாகச் சொன்னேன். அந்த எதிரொலி தான் இந்த சம்பவம்" என்று நவீன விஞ்ஞான வளர்ச்சியை எடுத்துச் சொல்ல எல்லோருக்கும் மகிழ்ச்சி ஒருபுறம் அடைந்தாலும் நெகிழ்ச்சி ஒருபுறமும் அடைந்தனர். சிலருக்கு அவர் சொல்லியது புரியாமலும் தவிர்த்தனர். கட்டாயம் அவர்கள் பிறரிடமோ அல்லது வலை தளத்தில் மூலம் தெரிந்துகொள்வார்கள்.
இவ்வளவு குழப்பமும் அவர் தெளிவுற எடுத்துச் சொல்வதற்கு பின்னர் திட்டமிட்டபடி அந்த விழா இனிதே முடிந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சியும் தந்தது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% %%%%%%
Monday, 21 July 2014
பங்குச் சந்தை , ஊக வணிக ரகசியங்கள் - SHARE , ON LINE TRADING SECRETS
பங்குச் சந்தை மற்றும் ஊக வணிக ரகசியங்கள்
விழிப்புணர்வு கட்டுரை
மதுரை கங்காதரன்
உங்கள் நல்வாழ்க்கைக்காக ஒரு கதை சொல்லப் போகிறேன். அது பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகம் பற்றிய கதை. நல்லா கேளுங்க ! அதாவது ..
'பங்கு' என்பதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'பிரித்தல்' என்று கூறலாம். அதாவது ஒரு பெரிய மரம் ஒருவரால் மட்டுமே தூக்க முடியாது. ஆனால் அதை ஒருவர் பலருக்கு அவர்களின் பலத்தைப் பொறுத்து சிறிய / பெரிய பகுதிகளாக பிரித்து கொடுத்தால் அதை எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இது ஒரு வகை. மற்றொரு வகை என்னவென்றால் ஒரு இரும்பு குண்டு தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். ஆனால் அதே இரும்பு குண்டை தட்டையாக்கி கப்பல் வடிவில் செய்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குப் புரிகின்றதா?
முதலாவது சொன்னதன் விளக்கம் என்னவென்றால் பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவுவதற்கு மிகப் பெரிய முதலீடு வேண்டும். அதை அரசாங்கமே ஆனாலும் தனியாக முதலீடு செய்ய இயலாது. ஆனால் பெரிய நிறுவனம் அமைந்தால் தான் வேலை வாய்ப்பு பெருகும். வியாபாரம் பெருகும். அந்த வியாபாரம், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உதவும். அதைக் கருத்தில் கொண்டு முதலில் சிறிதாக நன்றாக இயங்கும் நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளின் முதலாளிகளோ அல்லது தலைவர்களோ தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணுகின்ற போது அவர்கள் அரசாங்கத்தை நாடுகிறார்கள். அரசாங்கம் இருவகைகளில் அவர்களுக்கு உதவி செய்கின்றது. ஒரு குறிப்பிட்ட முதலீடு பணத்தை உள்நாடு , வெளிநாட்டில் வாழும் மக்களிடமிருந்தும, பொதுத் துறை மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் வங்கிகளிடமிருந்து 'பங்குகள்' மூலமாகப் பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவுகிறது. அதற்குத் தான் 'பங்கு சந்தை' என்று ஒரு அமைப்பு பல முக்கியமான பெரிய நகரங்களில் இருக்கின்றது.
ஆரம்ப காலதத்தில் ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் பத்து மட்டுமே. நிறுவனத்தின் முதலீடு தேவை பொறுத்து ஐம்பது அல்லது நூறின் மடங்காக பங்குகளை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் தேவைப்படும் முதலீடு அளவிற்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தால் எல்லோருக்கும் தாங்கள் விண்ணப்பித்த பங்குகள் முழுதும் கிடைக்கும். ஆனால் பல சமயங்களில் தேவைப்படும் முதலீடு அளவைவிட பங்கு விண்ணப்பித்த அளவு சுமார் ஐந்து முதல் ஐம்பது மடங்கு வரை அதிகமாக பங்கை விண்ணப்பித்திருப்பார்கள் . அந்த சமயத்தில் எத்தனை மடங்கு அதிகமாக பங்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றதோ அத்தனை மடங்கிற்கு ஒருவருக்குத் தான் குறைந்தளவு பங்குகள் கிடைக்கும். உதாரணமாக ஐந்து மடங்கு என்றால் ஐந்தில் ஒருவருக்கு நூறு பங்குகள் கிடைக்கும். அதுவே ஐம்பது மடங்காக இருந்தால் ஐம்பதில் ஒருவருக்கு நூறு பங்குகள் கிடைக்கும். இவையெல்லாம் ஒரு நிறுவனத்தின் விளம்பரம், சந்தைபடுத்தும் திறமை , வாடிக்கையாளர்களின் தேவைகள், உற்பத்தி பொருட்கள் அல்லது சேவையின் தரம், செயல்பாடு, நிர்வாகம், நிறுவனத்தின் லாபம் மற்றும் முதலீட்டார்களுக்கு கொடுக்கும் லாபத்தின் பங்கு மற்றும் சலுகைகள் பொறுத்து பங்கு விண்ணப்பங்களின் அளவு கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பங்கு விண்ணப்பங்கள் குறிப்பிட்ட வங்கிகளிலோ, அமைப்புகள், முகவர்கள் அல்லது பங்குத் தரகர் மூலமாக கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் (அதிகபட்சமாக ஐந்து நாட்கள்) பங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட வங்கிகளில் பணத்தை கட்டவிட வேண்டும். அதன் பிறகு பங்கு சம்பந்தமான பத்திரிக்கை மற்றும் செய்தித்தாள்கள் மூலமாக அதன் விவரங்களையும், நிலைமையையும் தெரிந்து கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்துத் தான் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைத்திருக்கின்றது என்று தெரியவரும். கிடைக்காதவர்களுக்கு காசோலையாக திரும்ப கிடைக்கும். அதே சமயத்தில் அது பங்கு சந்தையில் நுழைகின்றபோது அந்த நிறுவனத்தின் தலைவரைப் பொறுத்து, லாபம் / நஷ்டம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து அந்த பங்கின் மதிப்பு உயரும் அல்லது குறையும். நல்ல பங்குகள் மிகக் குறைந்த நாட்களின் மாதங்களில் இரண்டு மடங்கு முதல் ஐம்பது மடங்குக்கும் மேல் அதன் மதிப்பு உயரும். அதை வாங்கிய முதலீட்டார்களுக்கு 'ஜாக்பாட்' பரிசு தான். அது போல் நிறுவனத்தின் லாப பங்கை முதலீட்டார்களுக்கு அதிகமாகக் கொடுத்தால் அதன் பங்கின் விலையும் உயரும். அதுபோல் நிர்வாகம் நஷ்டமடைந்தால் பங்கின் விலை முகமதிப்பு / வாங்கிய விலையை விட குறையும்.
இப்படித்தான் பங்குச்சந்தை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தினமும் அந்தந்த பங்குச் சந்தையின் குறியீடுகள் பொறுத்து பங்குச் சந்தையின் வாங்கும் / விற்கும் நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும் அதன் மூலம் நாளைய நிலவரத்தையும் கணிக்கலாம். அப்போது நிர்வாக திறமையின்மையாலும், தரம் குறைவினாலும் , திருப்தியில்லா சேவையினாலும் சில நிறுவனங்களின் செயல்பாடுகள் நஷ்டத்தில் முடிந்த காரணத்தினாலும், நிறுவனமே ஆரம்பிக்காமல் வெறும் நிலத்தை காட்டி பங்குச் சந்தையில் நுழைந்து மக்களிடம் பணம் பெறப்பட்டதாலும் பங்குச் சந்தை தன் மதிப்பை இழந்தது. நாளுக்குநாள் அதன் குறியீடு சரிந்தது. அதை காப்பாற்ற வங்கிகள் 'மியூசுவல் பண்ட்' என்று ஒன்றை ஏற்படுத்தி அந்த பணத்தை பங்குச் சந்தையில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனைப்படி முதலீடு செய்யப்படும் என்று அறிமுகப்படுத்தினார்கள். அப்போதும் மக்களிடையே மியூசுவல் பண்ட்' செய்யல்பாடு நம்பிக்கை இல்லாததால் எதிர்பார்த்த முதலீடு கிடைக்காததால் அதற்கு குறிப்பிட்ட அளவு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டதால் ஓரளவு முதலீடு பெருகியது.
இப்படி இருக்கும் போது இந்தியன் வங்கி திரு கோபால கிருஷ்ணன், ஹர்சத் மேத்தா போன்றவர்கள் பங்குச் சந்தை சட்ட திட்டங்களை மீறி செய்த சில செயல்களால் பங்குச் சந்தை மகிமை மங்கியது. திடீரென்று உயர்ந்த பங்குச் சந்தை குறியீடு மடாரென்று பள்ளத்தில் விழுந்தது. அப்போது பல முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் அடைந்ததால் பலர் பங்குச் சந்தையை விட்டு வெளியேறினர். குறைந்தபட்சம் எட்டு முதல் பத்தாண்டுகள் இப்படியே இருக்கும்போது கணினி, மின்னணு , தொலை தொடர்பு துறை மற்றும் மோட்டார் துறையினால் இந்த பங்குச் சந்தை மீண்டும் உயிர்த்தெழுந்தது. மேலும் பங்குச் சந்தை செயல்பாட்டில் நம்பிக்கை பெற அவை கணினி மயமாக்கப் பட்டது. அனைத்துப் பங்குகளும் மின்னணு பத்திரமாக மாற்றப்பட்டன. அப்போது மேற்கண்ட துறைகள் அதிக லாபம் ஈட்டியதால் அந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. அவர்களே அதில் முதலீடு செய்யும்படி நிறுவனங்கள வழிவகைகள் செய்தனர். அவர்கள் மூலம் பலர் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். பிறகு சில நிறுவனங்களின் பங்கு வெளிநாடுகளில் வெளியிட்டு அவர்களின் மதிப்பையும் முதலீட்டையும் பெற் றதால் பங்குச் சந்தை நன்கு செயல்பட்டது.
முதலீட்டாளர்களுக்கு அதிக லாபமும் சலுகைகளும் கிடைத்தது. மீண்டும் பல பெயர்களில் 'மியூசுவல் பண்ட்' வரிவிலக்குடன் வெளிவந்தது. அதிக சம்பளம் காரணமாக வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காக பலர் அதில் முதலீடு செய்தனர். ஓரளவு நன்றாக போய்க் கொண்டிருந்த பங்குச் சந்தை 'சத்யம்' என்கிற கணினி நிறுவனத்தின் மிகப்பெரிய மோசடியாக அதாவது அந்நிறுவனம் போலியாக அதிக லாபத்தை காட்டியதால் அதன் ஒரு பங்கின் விலை ரூபாய் 140/= க்கு எகிறியது. அந்த மோசடி வெளியில் தெரிந்ததால் ஒரே நாளில் ரூபாய் 30/= ஆக குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்தது. அது போலத் தான் பல நிறுவனங்கள் இருக்கும் என்கிற எண்ணம் முதலீட்டார்களின் நடுவில் ஆழமாக பதிந்தது. மீண்டும் பங்குச் சந்தையில் சுணக்கம் ஏற்பட்டது. பிறகு 'பவர்' துறையும் மோட்டார் துறையும் ஓரளவுக்கு சந்தையை தூக்கிவிட்டது. அதிலிருந்து ரூபாய் 10 முகமதிப்புள்ள பங்குகள் அரிதாக வந்தது. அதுவும் இல்லையென்றே சொல்லலாம். பெயர் பெற்ற நிறுவனங்கள் அல்லது அதிக கவர்ச்சியான விளம்பரம் மூலம் சில நிறுவனங்கள் ரூபாய் 10 முகமதிப்புள்ள பங்குகளை முப்பது முதல் 100 மடங்கு வரை விலையை நிர்ணயித்தனர். இந்த விலை மக்களிடம் நேரடியாக வாங்க முடியாது என்று தெரிந்ததால் 'மியூசுவல் பண்ட்' ன் மூலம் பெற்றன. அப்படி பெற்ற பங்கின் விலை பங்குச் சந்தையில் நுழைந்த சில மணி நேரத்திலேயே வாங்கிய விலையிலிருந்து ரூபாய் நூறு வரை குறைந்தது. அதாவது ரூபாய் 10 பங்கை ரூபாய் 400 க்கு விற்ற பங்குகள் மறுநாளே ரூபாய் முன்னூறுக்கு குறைந்தன. இந்த நஷ்டம் 'மியூசுவல் பண்ட்' பங்குகளின் மதிப்பு முகமதிப்பை விட குறைந்தது. அது மக்களுக்கு மறைமுகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பங்குச் சந்தையை விட்டு விலக ஆரம்பித்தனர். மீண்டும் பங்குச் சந்தை குறியீடு அதல பாதாளத்தில் விழுந்தது. பலருக்கு அடிமேல் அடி.
இந்த நிலையில் பங்குச் சந்தை குறியீடு ஓரளவு நிலையாய் இருக்கும்படி ஒரு மக்களுக்கு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க நல்ல நிலையில் நடக்கும் ஒவ்வொரு துறையினை அதாவது 30 துறையினை தேர்ந்தெடுத்து அந்த துறையின் வளர்ச்சி பொறுத்து குறியீடு நிர்ணயித்தார்கள்.
இதற்கு உதாரணம் நமது கல்வித்துறையில் நடந்தது. முன்பு ஆரம்பப் பள்ளியில் நன்றாக படிக்காதவர்கள் கூட தேர்ச்சி பெறாமல் இருந்தார்கள். அதாவது முதல் வகுப்பிலும் தோல்வி பெறக்கூடிய முறை இருந்தது. அப்படிச் செய்வதால் யாரும் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்பதால் அரசு ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை கொண்டு வந்தனர். இதனால் மறைமுகமாக கல்வி வியாபாரம் நடந்தது. உண்மையில் அவர்களுடைய தரம் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். கூடிய விரைவில் ஒவ்வொரு பள்ளி , உயர்நிலை பள்ளி, மருத்துவம், கலை , அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நன்கு படிக்கும் ஒரே ஒரு மாணவரின் மதிப்பீட்டைப் பொறுத்து மற்ற மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கினால் எப்படி இருக்கும்? அப்படி வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆதாவது அரசியலில் எப்படி பல சில்லறை கட்சிகள் நல்ல கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெறுகிறார்களோ அதுபோலத் தான். அதாவது நல்ல பங்கு நிறுவனத்தின் தயவினால் மற்ற பங்குகளின் விலை ஏறுவது போல செய்தனர்.
அதாவது நன்கு பெயர் போன மற்றும் நல்ல செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெய், சிமெண்ட், கணினி, இரும்பு, மருத்துவம், ரசாயனம், ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பங்கு ஏறினால் அதற்குத் தகுந்தாற்போல் அதே துறையைச் சார்ந்த நட்டை குட்டை பெயர் தெரியாத நிறுவங்களின் பங்கும் ஏறும் / இறங்கும். இது எப்படி இருக்கு? அதனால் தேர்ந்தெடுக்கப்படாத நிறுவங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று முதலீட்டாளர்களுக்குத் தெரிய வராது. அதனால் சமீப காலமாக பங்குச் சந்தை குறியீடு எப்போதும் தாறுமாறாகக் குறையாமல் நிலையாக இருக்கும் ஒரு மாயத்தோற்றம் உருவாக்கியிருக்கிறார்கள். அது ஏறும் குறியீடு வெறும் மாயை. உண்மையில் அதில் முதலீடு செய்தவர்கள் ஆண்டியானது தான் மிச்சம். ஏற்கனவே பங்குகள் அதிக விலை, மேலும் அதிக விலை கொடுத்து யார் வாங்குவார்கள்? மீண்டும் அதற்காக மக்களை ஏமாற்றும் ஒரு திட்டம். சில மாதங்களுக்கு முன்பு சில நிறுவனங்கள் 'பிளாக் லிஸ்ட்'ல் சேர்த்தார்கள். அதில் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாயிருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!
அதாவது பங்குச் சந்தையின் நிலையை நேரடியாக தொலைக்காட்சி மற்றும் கணினி மூலம் ஒளி பரப்பினார்கள். அப்போதும் நிறுவனத்திற்கு நினைத்தவாறு லாபம் கிடைக்காததால் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை சில பினாமி பெயரில் கொடுத்து அவர்கள் மூலம் வலையை விரிக்க ஆரம்பித்தார்கள். அதாவது நீங்கள் பங்குச் சந்தையை நன்றாக கவனித்தீர்களேயானால் தொடக்கத்தில் பங்கின் விலைகள் அதிகமாக இருக்கும். பிறகு மெல்ல மெல்ல குறையும். பிறகு முடியும் போது கொஞ்சம் உயர்ந்து முடியும்.அதாவது எப்போதுமே அதன் வரைபடம் 'U' வடிவத்தில் தான் இருக்கும். எப்போதுமே 'Ç இப்படி இருந்தது கிடையாது.
அப்படியென்றால் என்ன அர்த்தம்? அப்போது என்ன நடக்கிறது ? பங்குச் சந்தை காலையில் முதலே நிறுவனப் பினாமிகள் தங்களிடம் வைத்திருக்கும் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்க ஆரம்பிப்பார்கள். அதனால் நிறுவனத்தில் பங்கு விலை குறையும். இதை கவனிக்கும் அப்பாவி மக்கள் 'ஐயையோ என் பங்கு விலை குறைகின்றதே' என்று பலர் விற்க ஆரம்பிப்பார்கள். அது அன்றைய அடிமாட்டு விலையில் போயிருக்கும். பொது மக்கள் விற்பது முடிந்தவுடன் அந்த அடிமாட்டு விலையை பினாமிகள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பிப்பார்கள். மீண்டும் விலை உயரும். அதாவது அன்றைக்கு ஆதாயம் நிறுவன பினாமிக்கு! ஆனால் நஷ்டமோ மக்களுக்கு! இப்படியே இது நாள் வரை தொடருகின்றது. இதிலேயே நிறுவனங்கள் லாபம் பெறுவதால் புதிதாக உற்பத்தி தொழில் தொடங்க முயற்சி செய்வது கிடையாது. சமீப காலமாக யாராவது உற்பத்தி தொழில் தொடங்கியிருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஏனென்றால் அதில் மிகப்பெரிய அபாயம் இருக்கின்றது என்று இப்போதிருப்போருக்கு நன்கு தெரியும். அதற்கு சாட்சி 'நானோ' கார் தொழிற்சாலை. அரசியல் குறுகீடால் அந்நிறுவனத்திற்கு எவ்வளவு நஷ்டமோ அவ்வளவும் முதலீட்டார்களின் தலைமேல் தானே விழுந்தது.
இப்போது பெரும்பாலும் நிதி, வங்கி மற்றும் தங்க நகை சம்பந்தமாக 'பங்கு' தான் வெளிவருகின்றது. எப்போது ரூபாய் 10 முகமதிப்புள்ள பல உற்பத்தித் துறைகளில் பங்கு வெளிவருகின்றதோ அப்போது தான் பங்குச் சந்தை மிளிரும். மேலும் வெளிப்படையான நிறுவனங்களின் உண்மையான செயல்பாடு மக்களுக்குக் காட்டுகின்றதோ அப்போது தான் பங்குச் சந்தை நன்மதிப்பை பெறும். இல்லையேல் 'மக்களை ஆண்டியாக்கும் சைத்தான்' என்கிற அவபெயரே தரும். பங்குச் சந்தையில் நீங்கள் பலமுறை யோசனை செய்து ' என் பணம் போனாலும் பரவாயில்லை, நான் நஷ்டத்தைத் தாங்கிக்கொள்வேன்' என்று இருந்தால் மட்டுமே தாராளமாக முதலீடு செய்யுங்கள். இல்லை ! இந்த பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்து பல லட்சம் சம்பாதிப்பேன் என்று அடம்பிடித்தால் உங்கள் விதியை யாராலும் மாற்ற முடியாது.
இது போதாது என்று தனியார் நிறுவங்கள் கொடுக்கும் விளம்பரம் என்ன? அதன் செலவு என்ன?அதற்கு 'சகாரா' என்கிற நிறுவனமே சாட்சி. போலி முதலீட்டார்களை உருவாக்கி அதன் முதலீட்டை வேறு ஒரு நிறுவனத்திற்கு உபயோகித்ததால் அந்த நிறுவனத்திற்கு கடன் சுமை கூடி , தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்பட்டதால் அதன் பங்குகள் தரை மட்டத்திற்கு வந்து பலருடைய முதலீட்டை சாப்பிட்டு ஏப்பமிட்டது. அதற்கு முன்னால் விளம்பரம் என்ன! அனுபவித்த சலுகைகள் என்ன? கொடுத்த சம்பளம் என்ன? எல்லாமே மக்களின் முதலீடு தான். நீங்கள் ஒன்றை நன்றாக கவனித்தால் நன்கு தெரிய வரும். அதாவது நிறுவனத்தில் பங்கு முதலீடு செய்தவர்கள் நஷ்டமடைவார்கள்! ஆனால் நிறுவனமோ பல பெயரில் பலவாறு விரிந்து சிறக்கும். நிறுவனத் தலைவர்களின் சொத்துக்களோ பல மடங்கு அதிகமாகும். அது எல்லாமே பங்குச் சந்தை கொடுக்கும் பரிசு தான்.
இந்த லட்சணத்தில் 'அந்நிய முதலீடு' என்று புதுக்கதை ஆரம்பித்து இருக்கிறார்கள். நிலம் நன்றாக இருந்தால் தான் அதில் விழும் விதைகள் நன்கு வளரும். ஆக விதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் நிலம் நன்றாக இல்லாவிட்டால் என்னவாகும்? அதாவது நாடு என்பது நிலம்.அந்நிய முதலீடு என்பது விதை. ஆக இங்குள்ள சட்டம், ஒழுங்கு,அரசியல் எப்போது ஒளிவு மறைவில்லாமல் நடக்கிறதோ அப்போது முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். அது வரை எந்த கொம்பனாளானாலும் ஒன்றும் நடக்காது. ஐயோ அப்பா என்று மக்கள் தினமும் அரசியல் வாதிகள் கொடுக்கும் வலியைத் தாங்கிக்கொண்டு தான் தீரவேண்டும்! இன்னும் சொல்லப் போனால் உலகத்தில் புகழ் பெற்ற ஒருவர் தும்மினால், இருமினால் எதாவது ஒப்பிட்டுச் சொல்லி மிகப்பெரிய வதந்தியை பரப்புவர்கள். விளைவு பங்குச் சந்தை 'பனால்' தான். இது எப்படியிருக்கு? இந்த நூற்றாண்டில் இந்த கணினி உலகத்தில் இப்படியும் மக்கள் இருப்பதால், இந்த பலவீனம் தான் பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றது. இந்த லட்சணத்தில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் நிதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுமாம். அது மக்களை ஆண்டியாக்கினது இல்லாமல் மக்களின் சேமிப்பையும் ஆண்டியாக்க துடிக்கிறது. இதற்கு முன்னால் அரசு உடந்தை. அந்த மாதிரி விசயங்களை இந்த புதிய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்துப் பார்ப்போம்.
இப்போதெல்லாம் ஒரு நிறுவனம் நஷ்டமில்லாமல் லாபத்தில் நடத்துவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். யாணை தன் தலையில் மண்ணை வாரி போட்ட கதையாய் இன்றைய நிறுவனங்கள் இருக்கின்றது. பங்குச் சந்தை போல் ஊக வணிகத்தில் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று அதற்கு கை கொடுத்தார்கள். ஆனால் நிலையில்லாத மூலப்பொருட்களின் விலையேற்றம், மின் தடை, மனித வளம் தட்டுப்பாடு, உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி , நிலையில்லா வங்கி வட்டி விகிதம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், குறைந்த விவசாயம், அதிக எதிர்பார்ப்புள்ள வாடிக்கையாளர்கள், உலகளாவிய தொழில் போட்டி போன்றவற்றால் நிறுவனத்தின் லாபம் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. அதனால் பல நிறுவனங்கள் லாபப் பங்கு, டிவிடெண்ட், போனஸ் பங்கு என்று எதுவுமே முதலீட்டார்களுக்கு கொடுப்பதாக தெரியவில்லை. மேலும் பங்கு வியாபாரம் கணினி மூலமாக நேரடியாக நடைபெறுவதால் லாப நஷ்டம் உடன் தெரிவதால் பலர் சொற்ப நேரங்களே நிறுவனப் பங்குகளை தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர். ஆகையால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் எப்போதும் மன அழுத்தத்திலேயே பங்கு வர்த்தகம் செய்துகொள்கின்றனர். உங்களுக்கும் மன அழுத்தம் வரவேண்டுமா? ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு நிறுவனப் பங்கு வாங்குங்கள். கணினி முன்பு உட்கார்ந்து நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடுங்கள். கட்டாயம் உங்கள் பங்கின் விலை குறைய ஆரம்பிக்கும். கூடவே உங்கள் இதயத் துடிப்பும் கூடும்... வேண்டுமென்றால் அதில் இருப்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சொத்தை கரைக்கும் வரை அது உங்களை விட்டுப் போகாது. ஆகவே அது பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு. இங்கு நடுத்தர மற்றும் கீழ் மட்டவர்களுக்கு வேலையே இல்லை. இதில் இருந்தால் உடனே வெளியில் வந்துவிடுங்கள். இருப்பதாவது காப்பாற்றலாம்.
சரி பங்குச் சந்தை இப்படி இருக்கு! வேறு வகையில் மக்கள் பணத்தை எப்படி கறக்கலாம் என்று யோசித்ததன் விளைவு தான் ஊக வணிகம். ஆனால் ஊக வணிகம் எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே இருக்கின்றது.
அதாவது ஒருவர் அப்போது சொன்னார். 'என்னிடத்தில் பல டன் தங்கம் இருக்கின்றது. 'எங்கே இருக்கிறது என்று காட்டு' என்று பதிலுக்குச் சொன்னால்.. அதெல்லாம் காட்ட முடியாது. உனக்கு எவ்வளவு டன் வேண்டும் ? நான் தருகிறேன். இன்றைய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூபாய் 600/=. இப்போது கல்யாண சீசன். மக்களும் அதில் முதலீடு செய்வார்கள். நாளைக்கு அதை நல்ல விலையில் விற்கலாம். உலகளவில் இனி தங்கம் கிடைக்காது. அழுகிப் போகும் பொருளும் கிடையாது' என்று ஆசை வார்த்தை காட்டினார் . அதை முதலில் மக்கள் நம்ப மறுத்தார்கள். பிறகு அவரே அந்த தங்கத்தை ஒரு கிராம் ரூபாய் 650/= என்றார். அப்போதும் மறுத்தார்கள். இப்படியே ஒரு மாதம் போக அதன் விலை கிராம் ரூபாய் 900/= என்றார்கள். அப்போது தான் 'ஆஹா போன மாதமே 600/= க்கு வாங்கியிருந்தால் இன்று 900/= க்கு விற்றிருக்கலாமே' என்று பலர் புலம்ப ஆரம்பித்தனர். இனியும் ஏமாறக்கூடாது என்று எண்ணி சிலர் தங்கத்தை வாங்க ஆரம்பித்தனர். எவ்வளவு வாங்கினாலும் ஒரே ஒரு பேப்பரில் 'இந்தாங்க இது தான் தங்கம்' என்று கொடுக்க ஏமாந்த மக்களும் வாங்கத் தொடங்கினார்கள். எல்லோரும் கிராம் 3000/= , 4000/= , 5000/= வரை போகும் என்று ஆசையாய் வாங்க ஆரம்பித்தனர். இன்றோ முன்பு ஏறின அளவுக்கு விலை ஏறாமல் தடுமாறி தத்தளிக்கிறது பேப்பர் தங்கத்தின் விலை!
இன்று அதை வாங்க எல்லோரும் தயங்குகின்றனர். கை சுட்டு புண்ணானது தான் மிச்சம். இப்படித் தான் ஊக வணிகத்தில் உள்ளது எல்லாம் தான் ஒரு மாய விலையை நிர்ணயித்து அந்த வலையில் மக்களை சிக்க வைத்து பலரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மிக மோசமாக மக்களை பலி வாங்கிக்கொண்டிருக்கின்றது . அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரித்து அதில் குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு யாரோ ஆண்டி மடம் கட்டின கதை சொல்லியிருக்கிறார்கள் போலும். அந்த கதையை உண்மையாக்கிவிட்டார்கள்.
அந்த கதையை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சத்திரத்தில் சில ஆண்டிகள் பொழுது போகாமல் ஒவ்வொருவரும் ஒரு பேப்பரில் பல வகை பெரிய வீட்டை வரைந்தார்கள். இது தான் என்னோட நிலம். இது தான் உங்களோட நிலம். இது தான் சுவர். இங்கே சமையலறை, படுக்கையறை, படிக்கும் அறை என்று தங்கள் இஷ்டம் போல பேசிக் கொண்டிருந்தார்கள். ஆஹா ஓஹோ என்று அழகு பார்த்து புகழ்ந்து ரசித்தார்கள். அதையெல்லாம் பக்கத்து அறையில் கேட்டுகொண்டிருந்த ஒருவன் அதை எனக்கு இன்ன விலையில் தாருங்கள் என்று கேட்க அவர்களும் அந்த பேப்பரை கையில் கொடுத்து வியாபாரத்தை ஆரம்பித்தனர். இந்த மாதிரி இளித்தவாயர்கள் பலர் வாங்க, வியாபாரம் சூடு பிடித்து ஓடியது. சில வருடம் கழித்து விற்ற ஆண்டிகள் சற்று சுதாரித்து இனி மக்கள் தெளிவாகிவிட்டார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்று எண்ணி கடையை மூடிவிட்டார்கள். ஆனால் பேப்பரை வாங்கியவர்களோ தலையில் துண்டைப் போட்டு மூலையில் முடங்கி கொண்டிருக்கிறார்கள்.
அதில்லாமல் இப்போது தொலைக்காட்சி வழியே விளம்பரம் வருகின்றது. அவர்களுடைய ஒரே குறிக்கோள் .. நாங்கள் ஏமாற்றத் தயார்! நீங்கள் ஏமாறத் தயாரா? அப்படியென்றால் வாருங்கள் ! உங்களிடம் இருக்கும் பணத்தை எங்களிடம் கொடுங்கள். கண்ணை மூடுங்கள். இந்த குழிக்குள் விழுங்கள். சொர்கத்தின் கதவு உங்களுக்காக திறக்கப்படும் ! என்ன சரிதானா? இந்த வணிகம் வந்ததால் உலகத்தில் உள்ள பல நாடுகள், அதன் வங்கிகள் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் பிற நாடுகளின் கையேந்தி இருக்கும் நிலையில் இருக்கிறார்கள். புதிய அரசு இதற்கு சாவு மணி அடித்தால் தான் மக்கள் பிழைப்பார்கள். நாடும் பிழைக்கும். இல்லையேல் செத்து செத்து தான் பிழைக்கவேண்டியிருக்கும்.
அது சரி.. நீங்கள் எத்தனை பேர்களை பார்த்திருப்பீர்கள். யாராவது ஒருவராவது பங்கு சந்தை மற்றும் ஊக வணிகத்தில் ஈடுபட்டு கோடிகளை அல்லது லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார்களா? கட்டாயம் இருக்காது. ஆனால் திரும்பின பக்கமெல்லாம் அதில் இழந்து ஆண்டியானவர்களை பார்க்கலாம்.
நீங்க எப்படி? இருப்பதை பத்திரப்படுத்துவீர்களா? அல்லது ஆண்டியாக ஆசைப்படுவீர்களா ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Subscribe to:
Comments (Atom)