Pages

Thursday 28 January 2021

பாகம் : 4 - பருத்தியில் வண்ணப் புரட்சி -அறிவியல் - குறுநாவல் - (நிறைவுப் பகுதி) - மதுரை கங்காதரன்

 

பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 4



அறிவியல் - குறுநாவல் 

       (நிறைவுப் பகுதி)

                                                   மதுரை கங்காதரன் 

தொடர்ந்து பேசியதன் களைப்பு அந்த வெளிநாட்டவரின் முகத்தில் தெரிந்தது.

 அங்கேயும் இரண்டு ஆண்டுகள்! அங்கு இவர் ஏறாத ஆராய்ச்சிக்கூடமில்லை. பார்க்காத அறிவியல் அறிஞர்களும் இல்லை. இனி எனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விமோச்சனமே கிடைக்காது என்று எண்ணி மறுநாள் மீண்டும் இந்தியாவுக்கே செல்ல ஆயுத்தமானார். அன்றைக்கு இரவு நான் எதேச்சையாக அமெரிக்காவில் உள்ள எனது நண்பர் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது. எனது நண்பர்தான் அவருடைய நண்பர் என்று அப்போது எனக்குத் தெரிய வந்தது. அன்று அங்கே முதன்முதலாக இவரைச் சந்தித்தேன். இவர் அங்கு வந்த நோக்கத்தையும், ஆராய்ச்சியின் விவரத்தையும், தனக்கு நடந்தனவற்றையும் சற்று விரிவாக எனக்கு எடுத்துச் சொன்னார்.”

நானும் கூட அமெரிக்காவில் உள்ள பல ஆராய்ச்சியாளருக்கு ஆராய்ச்சி செய்யும் வசதி அளித்து வருகிறேன். அவர்களின் ஆராய்ச்சி வெற்றி பெற்றால், எனக்கு அதில் ஒரு குறிப்பிட்ட பங்கினைத் தருவார்கள். பலருக்கு வாய்ப்பு தந்திருக்கின்றேன். வருடத்திற்கு ஒரு ஆராய்ச்சியாவது வெற்றி அடையும். அந்த பணமே என் தனிப்பட்ட செலவுக்கும் என் ஆய்வுக்கூடம் பராமரிப்புக்கும் போதுமானதாக இருக்கும்என்று என்னைப் பற்றிய அறிமுகம் செய்து கொண்டேன்

 இவரது பேச்சிலிருந்து இவரின் அசராத நம்பிக்கையும், விடாமுயச்சியும் பார்த்த பின்பு என் மனம், இவருக்கு நீ உதவி செய் என்று கட்டளையிட்டது.’ அப்போது, நான் இவரிடம், உங்களது ஆராய்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தேன். அதன்படி இவர் தன் இந்தியப் பயணத்தை ரத்து செய்தார். அப்போது எனது நிபந்தனையினைச் சொன்னேன். ஒருவேளை, இதில் நீங்கள் வெற்றி பெற்றால் காப்புரிமையில் நூறு சதம் எனது பெயரில் இருக்க வேண்டும் என்று சொன்னேன். ஏனென்றால், இதில் எனக்கு முழுக் காப்புரிமை கிடைத்தால், உலகத்தின் பணக்காரப் பட்டியலில் நிரந்தரமாகவே முதலிடத்தில் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. அதனால்தான் நான் அவ்வாறு இவருக்கு அழுத்தம் கொடுத்தேன் என்றார்.

இதனைக் கேட்ட கூட்டத்தில் இருந்தவர்கள் இது மகாமோசம்! ஒருவகையில் இது சதிச்செயல் கூட!” என்று பலவாறு அந்த வெளிநாட்டவரை விமர்சித்தது.

இந்த நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, இவர் ஆராய்ச்சியின் காப்புரிமையை, என் பேருக்கே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் இவரிடத்தில் சொல்லியதைக் கேட்டு நீங்கள் கொதிப்படையலாம். அவ்வேளையில் இவரும் என்னைக் கோபத்துடன் ஏளனமாகப் பார்த்தார். அப்போதையச் சூழ்நிலையில் இவர், கடுமையான எனது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையென முடிவுக்கு வந்தார். எப்படியும் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று மனித சமுதாயத்திற்கு நன்மைகள் தர வேண்டும் என்கிற ஒரே குறிக்கோள் இவர் மனதில் ஆணித்தரமாக இருந்ததால், தன் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு அதற்கு சம்மதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.”

கண்டுபிடிப்பாளர்களை எப்படியெல்லாம் அலையவிடுகிறார்கள்? இம்சைப் படுத்துகிறார்கள், இயலாமையை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக கொள்கிறார்கள்?’ என்று வெட்ட வெளிச்சமாகப் பலரும் இதன்மூலமாக நன்றாகத் தெரிந்துகொண்டனர்.

அந்த வெளிநாட்டவர், விஞ்ஞானி வினோதனைக் கண்ணால் நான் சொல்வதெல்லாம் சரிதானே?’ என்று அவரைப் பார்த்துக் கேட்க, அவரும் சரி என்று தலையாட்டிவிட்டு, கண்ணாலேயே சமிங்கை செய்து மேலே தொடரச் சொன்னார்.

அன்றையச் சூழ்நிலையில் எனது பணத்தாசை கனவு மென்மேலும் அதிகரித்தது. ஏன் வெறியாகவும் மாறிவிட்டது. எப்படியும் உலகப் பணக்காரர் வரிசையில் எப்போதும் நான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம், எனது மூளையில் நங்கூரமாய்ப் பதிந்தது. இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று என் கொள்கையினை நானே மாற்றிக்கொண்டேன்.  அன்று முதல் நான் இவரின் ஆராய்ச்சிக்குத் தேவையான எல்லா வசதிகளை இவருக்குச் செய்து கொடுத்தேன். முதலில் சில இலட்சங்கள் செலவு செய்தேன். ஆனால், இவர் ஆய்வுமேல் கொண்ட ஈடுபாடும், கடின உழைப்பையும் கண்ட நான், இவர் இதில் வெற்றி பெற்றேத் தீருவார் என்கிற நம்பிக்கை பிறந்தது. அதனால் கோடிக்கணக்கில் செலவு செய்தேன்.”.

நான் எவ்வளவுக்கெவ்வளவு பணவெறி கொண்டிருந்தேனோ, அவ்வளவுக்கவ்வளவு இவர் எவ்வித சலனமும் இல்லாமல் கண்ணும் கருத்துமாய் இவரது ஆய்வில் கவனம் செலுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பானது வெற்றிபெறக் குறைந்தது இவருக்குப் பத்து வருடங்களாவது ஆகும் என்கிற எண்ணத்தில் நான் நினைத்தேன். ஆனால் வெற்றி இவர் பக்கத்தில் இருந்தது. இவரது நல்லெண்ணத்திற்கும் விடாமுயற்சிக்கும், கடவுள் ஐந்தே வருடத்தில் இவரது கனவை நினைவேற்றிவிட்டார். அப்போது இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது ஒரு பக்கத்தில் இருந்தாலும், மறுபக்கத்தில் காப்புரிமை விசயத்தில் சற்று அதிருப்தியும். சோகமும் இவர் மனதில் இருப்பதை உணர்ந்தேன். அப்போது எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஐம்பது சதம் இவருக்குக் கொடுப்பதாக உறுதியளித்தேன். அதைக் கேட்ட இவர் சற்று நிம்மதி அடைந்துவிட்டதாக உணர்ந்தேன்.”

அப்பாடா, நல்லவேளை இந்த வெளிநாட்டவர் ஆரம்பத்திலே நிபந்தனைப் போட்டது போல முழுக்காப்புரிமையைத் தானே வச்சுக்காம பாதியாவது கொடுத்தாரே. இந்த மனுசன் கிட்டேயும் இரக்ககுணம் இருக்கே! அதுவரைக்கும் சந்தோசம்.  இவ்வளவையும் விஞ்ஞானி வினோதன் பொறுமையா கேட்டுட்டு இருக்காரே. அதுவும் நல்லது. அடுத்து என்ன சொல்ல வர்றார்னு பார்ப்போம்? என்று கூட்டத்தில் உள்ள ஒருவர் தன் அனுதாபத்தை மனதிலே அடக்கி வைத்துக் கொண்டார்.

என் பணத்தாசைக் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால், இவரது ஆசை என்னவாக இருக்கும்? என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்.”

அந்த கேள்விக்கு இவர் அளித்த பதில், என் பணத்தாசைக்கு சாவு மணி அடித்தது. ஏனென்றால் இதில் வரும் வருமானம், ஒவ்வொரு நாட்டிலும், பல துறையைச் சார்ந்த ஆராய்ச்சி ஆய்வகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதோடு அங்கு ஆராய்ச்சி செய்ய வரும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டிய உணவு, இருப்பிடம், ஆய்வுச்செலவு உட்பட அனைத்தும் அவர்களுக்கு இலவசமாகவே கொடுக்க வேண்டும் என்று சொன்னபோது, என்னை நானே இளக்காரமாக நினைத்தேன். இங்கு வரும் வரையில் பணம் ஒன்றே குறியாக இருந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு, இவர் மீது நீங்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பு, குறிப்பாக மாணவ மாணவிகள் இளைஞர்களைப் பார்த்தபோது, எனது எண்ணத்தையும் மாற்றிக்கொண்டேன். ஆம்! எனது காப்புரிமை பங்கையும் இலவசமாக உலகுக்கு அளிக்க முடிவு செய்துவிட்டேன் என்றபோது கூட்டமே எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தது. அது அடங்க நீண்ட நேரமானது.                

ஆதாவது, இந்தத் தொழில்நுட்பத்தை இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்தலாம். அதற்காக எவ்வித விலையும் தரவேண்டியத் தேவையில்லை. இதனால் ஏழை எளியோர் முதல் பணக்காரர் வரை, சரிசமமாக ஒரே விதமாகப் பலன் பெறுவார்கள் என்றபோது கூடியிருந்த கூட்டம் மகிழ்ச்சியின் உச்சமான எல்லைக்குச் சென்றதை அவர்களின் முகத்தில் எதிரொளித்தது.

இதுவரையில், நீங்கள் இவரின் ஆராய்ச்சிப் பற்றியத் தகவல்களைக் காதால்தான் கேட்டீர்கள். இப்போது கண்களால் பார்க்கப் போகிறீர்கள்!” என்று மேடையில் நடுவில் இருந்த அந்தக் கண்ணாடிப் பெட்டியை மறைத்திருக்கும் திரையை விலக்கிக் காட்ட, அதனருகில் அமர்ந்திருந்தவர்கள் உட்பட, நேரில் பார்த்தவர்களும், பெரியத்திரை மற்றும் நேரடியாக ஒலி ஒளிப் பரப்பிக் கொண்டிருக்கும் அனைத்து ஊடங்களில் பார்த்த மக்கள், அந்த அதிசயக் காட்சியை வைத்தக் கண்களை எடுக்காமல் கண்டு களித்தனர். அதற்குக் காரணம் வானவில் நிறங்களில் இருந்த பருத்திப் பஞ்சுகள்! இதென்ன மாயமா? மந்திரமா?’ என்று நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்து உறுதி செய்தனர்.

இதற்கே இப்படி ஆச்சரியப்படுகின்றரே! இனி சொல்லப் போகும் விசயத்தைக் கேட்டால், இதோ என் முன் உட்கார்ந்து இருக்கும் விஞ்ஞானி வினோதனை நீங்கள் விடமாட்டீர்கள் என்று பீடிகையைப் போட்டார்.

அனைவரும் என்ன?.... என்ன? உடனே சொல்லுங்கள் என்று ஆரவாரம் செய்தனர்.

ஆதாவது, இயற்கையான நிறமுள்ள இந்தப் பஞ்சைக் கொண்டு நெய்து, அதனை ஆடையாக அணிந்து கொண்டால், உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் இரத்த ஓட்டமும், இதயத்துடிப்பும் சீராகச் செயல்பட வைக்கும். அதோடு வெளியிலிருந்து தாக்கும் கெட்டக்கிருமிகளையும் இந்த வண்ணமயமான பஞ்சுகள் தடுக்கின்றது என்று சொல்லச்சொல்ல கூட்டம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது.

இது மட்டுமல்ல, இந்தப் பருத்திவிதை பூக்களின் விதையோடு சேர்ந்து உருவானதால், ஒவ்வொரு வண்ணப் பஞ்சுவிற்கும் ஒவ்வொருவிதமான நறுமணம் இயற்கையாகவே தருகிறது என்று சொல்ல மேடையில் உள்ளவர்,

அந்தப் பஞ்சினை முகர்ந்து பார்த்து இது ரோசாப்பூ வாசனை! இதில் மல்லிகை வாசனை உள்ளது!” என்று வர்ணித்தனர்.

கடைசியாக என்றபோது எல்லோரின் ஆவல் குற்றால அருவியாய் அறிந்துகொள்ளும் ஆசையாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தப் பருத்தியிலிருந்து கிடைக்கும் கொட்டை பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை உள்ளதோடு, இதன் மூலம் எடுக்கும் பால் நோய்எதிர்ப்புச்சக்தியைத் தருவதோடு பசியையும் போக்கும் ஆற்றலுடையது! இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இருக்கலாம் என்று இவர் நம்புகிறார். அவைகளை இளைஞர்கள் மற்றுமுள்ள அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்து இந்த உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதே இவரது ஆசை. விஞ்ஞானி வினோதன் இதுபோன்ற புதுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதில் பல சாதனைகள் செய்ய வேண்டும்! என்று வாழ்த்தி அமர்கிறேன். நன்றி, வணக்கம்என்று தனது நீண்ட உரையை முடிக்க, கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இவரைப் போல சில பேர் இருக்கிறததாலே என்னவோ புதுப்புது கண்டுபிடிப்புங்க தினமும் நமக்கு கிடைச்சுட்டே இருக்கு என்று அவரைப் போற்றிப் பகழ்ந்தனர். 

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் மனதில் தங்கள் வாழ்நாளில் கட்டாயம் ஒரு தடவையாவது விஞ்ஞானி வினோதனை நேரில் பார்த்துப் பேசிட வேண்டும் என்கின்ற வைராக்கியம் எழுந்தது.

மாணவ மாணவிகள், இளைஞர்கள் ஒரு படி மேலாக இன்று எப்படியாவது அவரிடம் பேச வேண்டும் என்றுத் துடிதுடித்தனர்.

அமைதி அமைதி. இந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ளது. இவர் மாலை வரையில் இங்குதான் இருப்பார். அதனால் நீங்கள் தாராளமாக உங்கள் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூட்டத்தினரின் அன்பையையும், ஆர்வத்தையும் அளக்க முடியாமல் திணறினார்.

விழாவின் நிறைவுப் பகுதியாக, இப்போது குலுக்கலில் தேர்ந்தெடுப்பவர்கள் கேள்வி கேட்கலாம் என்றதற்கு

நீங்களே ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டீர்கள் இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று ஒரே மாதிரியாகப் பதிலலித்தனர்.

இப்போது விஞ்ஞானி வினோதன் ஒரு செய்தி தர இருக்கிறார்என்றார் அவர்

அனைவருக்கும் வணக்கம். இதுவரையில் என் வெளிநாட்டுத் தோழரும், இந்த வெற்றிக்குப் பல வழிகளில் உதவியவருமான டாக்டர் ஜான் மில்லர் அவர்கள், மிகத் தெளிவாக எனது கண்டுபிடிப்பின் வெற்றிப் பயணத்தைத் தமிழில் தொகுத்துப் பேசியதற்கும், அதை நீங்கள் இவ்வளவு நேரம் பொறுமையாகக் கேட்டதற்கும் மற்றும் நம்நாட்டு, வெளிநாட்டு அறிவியல் அறிஞர்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன். இன்றைய நிகழ்வு நாளைய விஞ்ஞான வாசலுக்குத் திறவுகோலாக இருக்கும். அறிவியல் அறிவே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விடிவெள்ளி. அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனது அடுத்த ஆராய்ச்சி பற்றிய அறிவிப்புஎன்றபோது அரங்கம் நிசப்தமாகக காட்சியளித்தது.

என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வத்துடன் கேட்டனர். சிலர் இவர் இதில்தான் ஆய்வு செய்வார் என்று ஊகித்து வைத்திருந்தனர்.

ஆனால் இவர் எல்லாவற்றையும் தாண்டி, நான் அரிசியில் ஆராய்ச்சி செய்து அதில் பலவண்ண அரிசியை உருவாக்குவது என்று திட்டமிட்டுள்ளேன். ஏனென்றால் வெண்மை கொண்ட அரிசி போன்ற உணவுப் பொருட்களைக் காட்டிலும் ஏதாவது ஒரு வண்ணம் கொண்ட உணவுப் பொருட்களில்தான் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாக இருப்பதோடு. நோய் எதிர்ப்பு சக்கதியும் மிகுதியாக இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. எனவே வண்ணமுள்ள அரிசி. அச்செயலைச் செய்யும் என்று நம்புகிறேன்!என்றபோது அரங்கமே விஞ்ஞானி வினோதன் வாழ்க! வாழ்க!! என்று வாழ்த்தியது. அங்கு கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

இப்போது நிறைவாக நமது இந்தியாவின் சிறந்த அறிவியல் அறிஞர் பேச வருகிறார்என்று விழா ஒருங்கிணைப்பாளர் அவரைப் பேச அழைத்தார்.

அவர் எழுந்து ஒலிபெருக்கியின் அருகில் சென்றபோது, ஐயா அந்த நிகழ்வைச் சொல்ல வேண்டாம் என்று விஞ்ஞானி வினோதன் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல

இல்லை இல்லை சொல்லியேத் தீரவேண்டும். அப்போதுதான் என்போன்ற விஞ்ஞானிகளுக்குப் புத்தி வரும் என்று ஆவேசத்துடன் பேசினார்.

இதோ விஞ்ஞானி வினோதன், ‘இந்தியாவின் இளைய இன்றைய சமுதாயத்திற்கு, அறிவியலில் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, விஞ்ஞானிகளுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்குவார் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை. யாருக்குமே தெரியாத, அவரோடு நடந்த ஒரு நிகழ்வினை உங்களோடு பகிர்ந்து கொள்ள வரும்புகிறேன். அப்போதுதான் என்னைப் போன்ற அறிவியல் அறிஞர்கள், இளம் ஆராய்ச்சியாளர்களிடத்தில் எவ்வளவு கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள் என்று தெரிய வரும்?” என்று ஒரு புதிர் போட அனைவரும் ஒரு சில வினாடிகள் மௌனமானார்கள். இவர் என்ன சொல்ல வருகிறார்? என்று தங்கள் பார்வையினைக் கூர்மையாக்கிக் கவனித்தார்கள்.

இவர் என்னிடமும் தன் ஆராய்ச்சிக்கு உதவி கோரி வந்தார். இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையினை நன்றாகப் படித்துப் பார்த்தேன். இக்காலத்திற்கு இவ்வுலகைக் காப்பதற்குப் பயன்படக் கூடிய அருமையான கண்டுபிடிப்பு என்று நன்கு உணர்ந்தேன். அப்போது என்னுடைய அகந்தை தலைத்தூக்கியது. இந்த ஆராய்ச்சியில் இவர் வெற்றிபெற்றால் எங்கே  இப்போது இருக்கும் எனது மதிப்பு மரியாதை கௌரவம் குறைந்துவிடுமோ? என்று  நினைத்தேன். அதனால் இவர் இவ்வாராய்ச்சியில் என்றுமே வெற்றி பெறக்கூடாது என்று நான் உறுதியோடு இருந்தேன். அதனால் இவரின் நம்பிக்கையினைத் தவிடுபொடியாக்க. இவரிடத்தில், ‘இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா?’ என்று கேலி செய்ததோடு, இவரை அவமானப்படுத்தி, ‘இந்தக் கட்டுரை வெறும் வெத்துவேட்டு! என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டேன். அப்போது நான் எழுதிய கட்டுரைகளை இவர் எழுதிய இந்தக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். என்னதான் நான் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், பல ஊடகங்களில் வெளிவந்தாலும், அவையனைத்தும் மக்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் இல்லாததை என்னால் அறிய முடிந்தது. நான் எனது கட்டுரையின் எண்ணிக்கைகளை மட்டும் கூட்டினேனே தவிர இந்த சமுதாயத்தின் பயன்பாடு பற்றிக் கவலைபடவில்லை. என் சுயநலம், ஆனவம் ஒழிந்தது. இவர் மட்டுமல்ல. இவரைப் போல் பல இளம் விஞ்ஞானிகளை அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வெளிவரச் செய்யாமல் தடுத்திருக்கிறேன். அவற்றில் எனது ஞாபகத்தில் இப்போது இருக்கின்ற கட்டுரைகளான உப்புத் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் வேர்களின் மூலம் குடிநீராக மாற்ற முடியும் என்கிற ஆராய்ச்சியும், காந்தசக்தி மூலமாக தண்ணீரோ, வெப்பமோ இல்லாமல் மின்சாரம் எடுக்கலாம் என்கிற ஆராய்ச்சியும் அடங்கும். அம்மாதிரியானக்  ஆராய்ச்சிக் கட்டுரையினைக் கொண்டு வந்தவர்களையெல்லாம் விரட்டாத குறையாக வெளியே அனுப்பினேன் என்று சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. ஒரு வகையில் நம்நாடு பல துறைகளில் வேகமாக முன்னேற்றம் அடையாததற்கு என்போன்ற விஞ்ஞானிகளின் கர்வமும், சுயநலமும்தான் காரணம் என்று ஆணித்தரமாக சொல்லுவேன். அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்களோ? என்ன செய்கிறார்களோ? என்ன பாடுபடுகிறார்களோ? என்று எனக்குத் தெரியவில்லை. மேற்கொண்டு அவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் அப்படியே  விட்டுவிட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை, நான் அவர்களுக்கு ஆராய்ச்சிகளில் உதவி செய்திருந்தால், நம்நாட்டின் மதிப்பு உயர்ந்திருக்கும். ஆனால், அவர்களைப்போல இல்லாமல் இந்த விஞ்ஞானி வினோதன், தன் ஆராய்ச்சியிலிருந்து பின் வாங்காமல் தான் நினைத்தைச் சாதித்தது விட்டார். இனி விஞ்ஞானி வினோதனின் அரிசி ஆராய்ச்சிக்குப் பக்கபலமாக நான் இருக்கப் போகிறேன், அதோடு இன்றுமுதல் வளரும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக இருந்து, உலக மக்களுக்குப் பயன்தரக் கூடிய ஆராய்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பேன்! இது உங்கள் மீது ஆணை! நன்றிஎன்று வீரவசனம் பேசியது, இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளுக்கு அக்கறை காட்டாத தன்னைப்போல அனைத்து அறிவியல் அறிஞர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்தாக இந்நிகழ்ச்சியை காண்பவர்கள் எண்ணினர். இனி வரும் நாளில் நம்நாடு அறிவியலில் முன்னோடியாக இருக்கும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் பிறந்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த தலைமை விஞ்ஞானி, எல்லோர் முன்னிலையில் அப்பட்டமாக தான் தவறு செய்ததற்கான  வருத்தததையும், இனி தான் ஆராய்ச்சிக்கென்று உதவி கேட்டு வருபவர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ளப் போகிறேன்? என்கிற மனமாற்றத்தையும் கேட்ட மாத்திரத்தில், விஞ்ஞானி வினோதனுக்கு தன் ஆராய்ச்சியில் அடைந்த வெற்றியினைக் காட்டிலும், இந்த தலைமை விஞ்ஞானி தன் தவறை உணர்ந்ததே  மிகப்பெரிய சாதனையாகவும், வெற்றியாகவும் கருதியதோடு இதயப்பூர்வமான மகிழ்ச்சியையும் அடைந்தார். 

கருத்தரங்கு முடிந்தவுடன் விஞ்ஞானி வினோதனை நோக்கி இளைஞர் கூட்டம் படையெடுத்தது.

நிறைவுற்றது 

No comments:

Post a Comment