Pages

Thursday 11 July 2024

30.6.2024. மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - உலகின் முதன்மொழி தமிழே! - முனைவர் இரா .வரதராசன் எழுதிய "ஏடுகள் தந்த எட்டுத்தொகை " கவிதை நூல் வெளியீடு

 

30.6.2024. மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 

உலகின் முதன்மொழி தமிழே! 


30.6.2024. மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் "உலகின் முதன்மொழி தமிழே!" என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது.

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர் கவிஞர் இரா.இரவி  தலைமையில்  நடந்தது, பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் முன்னனிலை வகித்தார். உலகத்தமிழாய்வுச் சங்கத்தின் தலைவர் கந்தசாமி, த.மு .எ.க .ச செயலர் பாலசுப்ரமணியன்  வாழ்த்துரை வழங்கினார்கள்.  

கவிஞர் முனைவர் இரா .வரதராசன் எழுதிய "ஏடுகள் தந்த எட்டுத்தொகை"  கவிதை நூல் வெளியிட்டது. மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி அவர்களின் தலைமையில் "உலகின் முதன்மொழி தமிழே!" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன்,  புலவர் மகா .முருகபாரதி , குறளடியான், சி .வீரபாகு , க .பொன் பாண்டி , ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ), அஞ்சூரியா க .செயராமன், வனஜா, சமயக்கண்ணு, இராமப்பாண்டியன், நா.குருசாமி, முனைவர் நாகவள்ளி, பேராசிரியர் முனைவர் பா. ஸ்ரீ வித்யாபாரதி, செல்வகணபதி, பா .பழனி, கலையரசன், முனியாண்டி,  சிவ. சத்யா, அஷ்வந்திகா  ஆகியோர் கவிதை பாடினார்கள் .

மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் வழங்கிய விருதுகள் வழங்கினார்கள். சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் இராமபாண்டியன், வீரபாகு, முனைவர் பா. ஸ்ரீ வித்யாபாரதி ஆகியோர் விருது பெற்றனர் .

கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.

துணைச் செயலர் கு .கி .கங்காதரன்,   அவர்கள் நன்றி கூறினார்.  

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.









உலகின் முதன்மொழி தமிழே!

-    கவிஞர் இரா. இரவி

***

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
முன்மொழிந்தார் முதல்மொழி தமிழே என்று!

மொழியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து
வழிமொழிந்தனர் அமெரிக்க அறிஞர்கள்!

பாவாணர் சொன்ன போது ஏற்காதவர்கள்
பன்னாடுகள் உரைத்ததும் ஏற்கின்றனர்!

ஐநா மன்றமே அறிவிப்பு செய்யலாம்
அகில உலகின் முதல்மொழி தமிழே என்று!

வழக்கில் இல்லாத செத்தமொழி வடமொழியை
வளம் மிக்க மொழியென வரிந்து கட்டுகின்றனர்!

முதல்மொழிக்குச் சொந்தக்காரனான தமிழனே
முனைந்து தமிழ் படிக்க மறுக்கும் அவலம்!

சிறு நூறு ஆண்டு வரலாறு உள்ள மொழிக்கு
சிலர் வால் பிடித்து வக்காலத்து வாங்குகின்றனர்!

ஆங்கில மொழி உருவாக சொல் தந்தது தமிழ்!
ஆயிரங்காலத்து வரலாறு உள்ள தமிழ்!

தமிழகத்து தமிழர்களே தமிழின் தொன்மையை
தரணிக்குப் பரப்பிட அணிவகுப்போம் வாரீர்!

எங்கும் எதிலும் தமிழ் ஒலிக்க வகை செய்வோம்
எல்லோரும் தமிழை விரும்பிப் படிக்க வாருங்கள்!

இனிய தமிழ்மொழி எங்கும் வரவிட வழிசெய்வோம்
ஒருவருக்கும் ஐயம் வேண்டாம் அறிந்திடுவோம்!

உலகின் முதல்மொழி தமிழே! தமிழே! தமிழே!




























உலகின் முதன்மொழி தமிழே

புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 


தமிழன் உடலென்றால் தமிழே உயிராகும் 
தமிழன் மணியென்றால் தமிழே ஒலியாகும் 
தமிழன் மலரென்றால் தமிழே மணமாகும்
தமிழன் வாழ்வென்றால் தமிழே வரமாகும் 

மொழிகளுக்கான பந்தயத்தில் முதலாவது தமிழே 
மங்காதப் புகழுக்கு உரியதும் தமிழே 
தொன்மைக்குச் சாட்சிகள் உள்ளதும் தமிழே 
தொடுவானமாய் காட்சி அளிப்பதும் தமிழே 

தமிழால் ஓங்கிய மரபுகளுண்டு
தமிழால் ஆண்ட அரசர்களுண்டு
தமிழால் ஆளும் நாடுகளுண்டு 
தமிழால் உயர்ந்த மொழிகளுண்டு 

பல்கலைகளுக்கு வித்திட்டது தமிழே 
பிறமொழிகளுக்கு வழிகாட்டியும்  தமிழே 
எட்டுதிசைகளில் முழங்குவதும்  தமிழே
ஏவுகனைக்கு அடித்தளமானதும் தமிழே 

முதன்மொழித் தமிழென்பதில்  ஆதாரமுண்டு 
மொழிகளில் மகுடம் தாங்குதில் தகுதியுண்டு 
முக்காலமும் நிலைக்கும் என்பதில் உறுதியுண்டு 
முத்தமிழ் கண்டச் செம்மொழிச் சிறப்புமுண்டு 

தனித்து வரும் நிலவுக்குக் கலங்கமில்லை 
தனித்து இருக்கும் வானத்திற்கு எல்லையில்லை 
தனித்து வாழும் சிங்கத்திற்கு அச்சமில்லை 
தனித்து இயங்கும் தமிழுக்கு அழிவில்லை 

*********************










































*************************************

No comments:

Post a Comment