Pages

Showing posts with label கடமையின் வலிமை STRENGTH OF DUTY (STORIES OF LIFE). Show all posts
Showing posts with label கடமையின் வலிமை STRENGTH OF DUTY (STORIES OF LIFE). Show all posts

Monday, 9 September 2013

கடமையின் வலிமை STRENGTH OF DUTY (STORIES OF LIFE)

கடமையின் வலிமை


STRENGTH OF DUTY (STORIES OF LIFE) 
வாழ்க்கைக்கான கதைகள் 
மதுரை கங்காதரன் 

விருக முனிவர், கடும் தவம் செய்து பல சத்திகளை பெற்றிருப்பவர். அவருடைய சக்தியினால் கல்லும் கனியாகும். மனிதனும் கல்லாவான். அவர் நினைத்தால் எல்லாம் நடக்கும். அப்படிப்பட்ட முனிவர் ஒரு நாள் பர்வத நாட்டு அரசருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தன்னுடைய தவவலிமையை அங்கு  காட்டவேண்டும் என்று அந்நாட்டிற்குப் புறப்பட்டார்.

நாட்டிற்குள் நுழைந்ததும் அந்நாட்டு மக்களிடம் தான் வந்த விவரத்தை கூறினார். ஆனால் அந்நாட்டு மக்களோ முனிவர்  சொல்வதை கேட்டும் கேட்காமலும் அவர்கள் தங்கள் வேலைகளை செய்வதில் கவனமாக இருந்தனர். மொத்தத்தில் அவரை மதிக்கவில்லை என்றே சொல்லலாம். முனிவருக்கோ மிகவும் கோபம் வந்தது. ஆனாலும் அவர்கள் தன்னை மதிக்காததன் காரணத்தை கேட்டறிய ஆசைபட்டார். அம்மக்களிடத்தில் 

"மக்களே! நானோ மகாமுனி. அதிவல்லப தவவலிமை பெற்றவன். ஏன் நீங்கள் என்னை மதிக்கவில்லை" என்பதற்கு மக்களோ 

"நாங்கள் ஏன் உங்களை மதிக்க வேண்டும்? எங்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கள் நாட்டில் காலம் தவறாமல் மழை பெய்கிறது. வேண்டிய அளவு விளைச்சல் கிடைக்கின்றது. அதை சாப்பிட்டு மகிழ்ச்சியோடு இருக்கிறோம். இதில் உங்களுடைய உதவி எங்கு இருக்கின்றது? என்று சொல்லுங்கள் பார்ப்போம் !" என்று எல்லோரும் ஒரே மாதிரியாக அவருக்கு பதிலளித்தனர்.

"ஓஹோ ! உங்கள் நாட்டில் மழை வேளாவேளைக்கு பெய்வதால் தானே என்னைப் போன்ற முனிவரை மதிக்கவில்லை. ஆகையால் என்னுடைய தவவலிமையால் இன்றிலிருந்து பன்னிரண்டு வருடங்கள்  மழை பெய்ய விடாமல் செய்துவிடுகிறேன்" என்று கோபமாக வருணபகவானை கூப்பிட்டு 

"  வருணனே! இந்த நாட்டிற்கு இன்றிலிருந்து பன்னிரண்டு வருடங்கள் மழை பெய்யச் செய்யக் கூடாது. இது என்னுடைய கட்டளை" 

உடனே வருணன் ," மழை பெய்ய வைப்பது என் கையில் இல்லை. விஷ்ணு பகவான் கையில் உள்ள சங்கில் இருக்கின்றது. அவர் எப்போதெல்லாம் ஊதுவாரோ அப்போதெல்லாம் மழை பெய்யச் செய்ய வேண்டியது எனது வேலை" என்று சொல்லிவிட்டு நழுவிச் சென்றார்.


"அப்படியா!" என்றவர் விஷ்ணு பகவனைக் கூப்பிட்டார்.

"விஷ்ணு பகவானே!  இன்றிலிருந்து பன்னிரண்டு வருடங்கள் இந்த நாட்டிற்கு மழை தரக்கூடாது."

"அப்படியே ஆகட்டும் முனிவரே!" என்றார் விஷ்ணு பகவான்.


தன் கையில் உள்ள சங்கை பார்த்து "இனி பன்னிரண்டு ஆண்டிற்கு இந்த சங்கிற்கு வேலையில்லை" என்று ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டார்.

அன்று முதல் அந்த நாட்டில் முதன்முறையாக பருவத்தில் மழை பெய்ய தவறியது. அது இயற்கையின் மாற்றம் என்று எண்ணி அதை அவ்வளவு பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டாவது பருவமும் மழை பெய்யத் தவறியதால் எல்லோருக்கும் சந்தேகம் வந்து  மன்னரிடத்தில் முறையிட்டனர்.


"அரசே! இரண்டு பருவமாக மழை பெய்யவில்லை. அதன் காரணம் என்னவென்று தாங்கள் குருவிடம் கேட்டுச் சொல்லவேண்டும்" என்றனர்.

அதற்கு ஆமோதிக்கும் வண்ணம் " குருவே ! நம்நாட்டிற்கு இந்த கஷ்டம் வருவதற்கான காரணத்தை தாங்கள் ஞான திருஷ்டியில் பார்த்து சொல்லவேண்டும்" என்று பணிந்து கேட்டார்.


குருவும் தனது ஞான திருஷ்டியில் பார்த்துவிட்டு " அரசே! விருக முனிவரது சாபம் தான் இதற்குக் காரணம். நமது நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை வருவதற்கு வாய்ப்பு இல்லை" என்றார் வருத்தமாக. 

அதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழி தெரியாமல் எல்லோரும் சோகத்தில் மூழ்கினர்.


அவ்வளவு நடந்தும் ஒரே ஒரு விவசாயி மட்டும் அதிகாலையில் எழுந்து வழக்கம் போல் கலப்பைக் கொண்டு தனது நிலத்தை உழுது கொண்டு வந்தார். அதைப் பார்த்த ஊர் மக்கள் 

"என்னபா! உனக்கு விவரம் தெரியாதா? நமக்கு தான் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாதே! ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு உழுது கொண்டிருக்கிறாய்?" என்று அக்கறையாக கேட்டனர். அதற்கு அந்த விவசாயியோ 

" தெரியும் ! ஆனால் இது எனது கடமை. இதை செய்தே தீருவேன். கட்டாயம் என் உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும்  பலன் கிடைக்கும் என்கிற அசையாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது " என்று எல்லோரையும் மேற்கொண்டு பேசவிடாமல் செய்தார்.

                     

" என்ன தான் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு செய்தாலும் பலன் கிடைக்கப் போவதில்லை. சரி ! இவன் ஒரு சரியான முட்டாளாக இருப்பான் போலிருக்கு. சொன்னால் கேட்க மாட்டான். மகனே உன் சமத்து!" என்று அவரவர் தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.

உழுவதை தொடர்ந்து செய்து வந்தார் அந்த விவசாயி. அவர் கஷ்டப்பட்டு உழுவதை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் மனம் பொறுக்காமல் அவரிடத்தில், " ஐயா ! பன்னிரண்டு வருடங்கள் இங்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லையே பின் ஏன் கஷ்டப்பட்டு உழுதுகொண்டிருக்கிறீர்கள்?" என்றார்.

"பகவானே ! அதை நான் அறிவேன். ஆனால் அதன் காரணத்தை உங்களுக்குச் சொல்ல கடமைபட்டிருக்கிறேன். அதாவது பன்னிரண்டு வருடங்கள் என்னுடைய இந்த கலப்பையை  உபயோகப்படுத்தாமல் இருந்தால் அது துருபிடித்து ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். மேலும் எப்படி உழவு செய்வது? மறந்தே போய்விடும். அதனால் தான் தொழிலும், கலப்பையும் மறக்காமல் தினமும் உபயோகித்து வருகிறேன்" என்றார்.


இதைக் கேட்ட உடனே விஷ்ணு பகவானுக்கு தன்னுடைய 'சங்கு' வின் நினைப்பு வந்தது. 'ஆஹா , இதேபோலத் தானே என் சங்குவை உபயோகப்படுத்தாமல் அங்கு பத்திரமாக வைத்து விட்டேன். பன்னிரண்டு ஆண்டிற்குப் பிறகு அது எப்படி இருக்குமோ? ஊத முடியுமோ? முடியாதோ?' என்று தனக்குள் சந்தேகமடைந்தார். அது எந்த நிலைமையில் இருக்கின்றது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தார். அந்த சங்கு சுற்றிலும் மண்புழுதி ஒட்டிக்கொண்டு இருந்ததை கவனித்தார். சங்கு வில் துவாரம் இருப்பதே தெரியாமல் இருந்தது. தட்டிப் பார்த்தார். துடைத்துப் பார்த்தார். ஆனால் துவாரம் தெரிந்தபாடில்லை. குச்சியை விட்டு நோண்டிப் பார்த்தார். துவாரம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. ஒற்றைக்கண்ணால் துவாரத்தின் மூலம் உள்ளே மண் அடைந்துள்ளதா? என்பதை உற்று நோக்கினார். துவாரம் கொஞ்சம் பெரியதாகத் தெரியவே ஆர்வக்கோளாரில் தன்னை அறியாமலே பூ ... என்று  ஊதினார். அதே நேரத்தில் ஜோ..வென மழை பெய்யத் தொடங்கியது. அது நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தன.

        

விருக முனிவர் அதை பார்த்து புன்னகை புரிந்தார். 

அதற்கு அர்த்தம் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும்  , தீர்க்கமுடியாத பிரச்சனை வந்தாலும், பல சோதனைகள், தோல்விகள் வாழ்கையில் வந்தாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு கொண்டு கடமையைச் செய். கட்டாயம் வாழ்கையில் பல அற்புதங்கள் நிகழும். என்றும் வெற்றி உனதே! 

###################################################################################