Pages

Showing posts with label மாயையை உள் மனிதனால் வெல்வாயாக - BEAT YOUR FATE BY YOUR INNER MAN. Show all posts
Showing posts with label மாயையை உள் மனிதனால் வெல்வாயாக - BEAT YOUR FATE BY YOUR INNER MAN. Show all posts

Monday, 15 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 17 விதி, மாயையை உள்விதி மனிதனால் வெல்வாயாக - BEAT YOUR FATE BY YOUR INNER MAN

உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 

பாகம் : 17 விதி , மாயையை உள்விதி மனிதனால் வெல்வாயாக -
BEAT YOUR FATE BY YOUR INNER MAN

மதிப்பு மிக்க மனிதா! பரவாயில்லையே, இந்த உள்விதி மனிதனை நீயாக விரும்பி அழைக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. எனது வேலையை நீ எளிதாக்குகிறாய்!  சரி, எதெற்கெடுத்தாலும் மாயை, விதி என்ற இருவகைகளை பேசுவதை கேட்டிருக்கிறோம். அதாவது மகான்கள் மாயை எனவும், மனிதர்கள் விதி எனவும், நேரம், காலம் எனவும் பேசுவார்கள். அது புரிந்தோ அல்லது புரியாமலோ தலையை ஆட்டுகிறாய். அதைப்பற்றி விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிறேன். சற்று பொறுமையுடன் கேள்! அவைகளெல்லாம் ஒருவகையில் தீய செயல்களே. அவைகளெல்லாம் நிலைத்தன்மை அற்றவை. நொடியில் மாறுபவை. அப்படியிருக்கும் போது பரபரப்பான இன்றைய உலகில் மனிதனுடைய சிற்றறிவுக்கு ஏறுவது மிகவும் கடினம். அதற்கு நுண்ணறிவு மற்றும் பேரறிவு தேவை.  அதை வெல்வது மிகவும் சிரமம். 

பிரிய மனிதா! முதலில் விதி அல்லது மாயை இதுவென்று அறியவேண்டும். அறிந்த பின் அதன் செயலை உணரவேண்டும். உணரும்போதே அதனால் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பார்க்கவேண்டும். அவைகள் நல்லவைகள், நாலு பேருக்கு நன்மை தரக்கூடியவையாக இருந்தால் நான் உன்னுடன் கை கோர்த்து உதவி செய்வேன். அதுவே கெட்டவைகளாக இருந்தால் அதை முளையிலேயே நசுக்கி விடுவேன். அதுவே உனக்கும் எனக்கும் நல்லது. 

மேன்மையான மனிதா! மாயை மற்றும் விதி ஆகியவை ஒருவகையில் உன்னை ஏமாற்றுபவை. உனது அறிவை திரை போட்டு மூடி கண்களை மறைக்கும் சக்தி பெற்றவை. மாயாஜால வித்தைகள் மற்றும் சித்து வேலை செய்பவை. இருப்பதை இல்லாமல் செய்யும். இல்லாததை இருப்பதாக காட்டும். நேர்மை, உண்மை, நியாயம், தர்மம் ஆகியவற்றை தெளிவாக பேசுவார்கள். உன்னை திசை திருப்புவதற்கு, உன் கண்களை மறைப்பதற்கு மாய விளையாட்டு காட்டுவார்கள். பெரும்பாலும் அவைகள் மனிதர்கள் உருவில் தான் வரும். அவர்களின் வார்த்தைகள் தேன் தடவிய சொற்களாக இருக்கும். அவர்களுடைய உபசரிப்பு யாரும் காட்டாத மிக மிக அன்பாக இருக்கும், அவர்களுடைய செயல்கள் அதிசயத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கும். அவர்களுடைய இடம் சில சமயங்களில் பிரமாண்டமானதாக இருக்கும். அவர்கள் எதை சொன்னாலும் நம்புபடியாகச் சொல்வார்கள். ஆதாரதிற்காக பக்கத்தில் சில ஜால்ராக்களை உட்கார வைத்திருப்பார்கள். பெரிய, சிறிய தலைவர்களைத் தெரியும் என்பார்கள். கடவுள் பற்றி ஏகாந்தமாய் பேசுவார்கள். அழகாக பாடுவார்கள, பேசுவார்கள். இவற்றுக்கும் மேலாக அவரைப் பற்றிய விளம்பரங்கள் டி.வி.யில் அடிக்கடி வரும். போட்டோக்கள், வீடியோக்கள், ஒலி - ஒளி குறுந்தகடுகள், புத்தகங்கள் என்று அடுத்தடுத்து காட்டுவார்கள். உங்களுடைய எதிர்காலம் பற்றி ஆஹா...ஓஹோ... என்று பேசுவார்கள். உங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாக சத்தியம் செய்வார்கள், கொஞ்சி பேசவும் தயங்க மாட்டார்கள். உன்னிடத்தில் பணம் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவந்தால் உன்னிடம் விசுவாசகமாக நடப்பதாக காட்டிக் கொள்வார்கள். இவைகள் தான் மாயையாகவும், விதியாகவும் உன்னிடத்தில் வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்கள், சொத்துகள், செல்வம், பணம் உன்னிடத்திலிருந்து பேச்சிலே உன் கண்களைக் கட்டிவிட்டு உன் மூலமாகவே எடுத்து (அபகரித்து) செல்வார்கள். இதுநாள் வரை உனக்கு அவைகள் தெரியாமல் இருந்தது. இனி அவைகளை இந்த உள் மனிதன் கவனித்து கொள்வான். அதிலிருந்து தப்புவிக்க அனைத்து உபாயங்களை  உனக்கு சொல்கிறேன்.  என் பேச்சை நுண்ணிப்பாக கேள். உண்மைகள் தெரியும். பொய்யைப்  புரிந்துகொள்வாய். 


இனிமையான மனிதா! மனித ஜென்மம் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவேண்டுமென்றால்  உன்னிடத்தில் மன சுத்தம், வாக்கு சுத்தம், எண்ணச் சுத்தம், செயல் சுத்தம், சரீர சுத்தம், சூழ்நிலை சுத்தம் போன்றவை இருக்கவேண்டும். அப்போது தான் உனது புனிதத் தன்மை மேன்மை பெரும். அவைகளெல்லாம்  இருக்க வேண்டுமென்றால் உனக்கு எப்போதும் பசி, பிணி அணுகக்கூடாது. நீ பிறக்கும்போதே உனக்குத் தேவையான உணவு, உடை, இடம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதி ஆகியவை அளித்து விட்டேன். ஆனால் அதில் சிலவற்றை மாயை என்ற தீய செயலுக்கு அடிமையாகி நான் கொடுத்ததை இழந்து, உனது அடுத்த ஜென்மத்திற்கு (மகன் அல்லது மகளுக்கு) வைக்காமல் அவர்களை துன்பக் கடலில் ஆழ்த்தி எனது வேலையை அதிகமாக்கிவிடுகின்றாய். அதை இனிமேல் நடக்காமல் இருக்கவே நான் பெரும் முயற்சி எடுக்கிறேன்.

பாசமுள்ள மனிதா! இளமையில் பசியின் கொடுமை மிகவும் அவஸ்தை தருவது. அது என்னையும் மீறி பல அழிவுச் செயல்களுக்கு தூண்டுகிறது. அதை உன் மூலம் போக்க விரும்புகிறேன். நீ பிறக்கும் போது கோபம், பொறாமை, போட்டி, தீமை தரும் எண்ணங்களுடன் பிறந்தாயா! சந்தோஷமாகத் தானே படைத்தேன். அதன் பின் எப்படி குணம் மாறியது! உனக்கு கொடுத்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? உனக்குள் நான் இருப்பதால், இதை மட்டும் தெரிந்து கொண்டேன். நீ நினைக்கும் மகிழ்ச்சி, அதாவது பணம் சம்பாதிப்பது, கேளிக்கைகளில் ஈடுபடுவது, சாப்பிடுவது, படம், டி . வி. பார்ப்பது, அரட்டையடிப்பது எவையெல்லாம் மகிழ்ச்சி என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறாய். இன்னும் உண்மையான மகிழ்ச்சி எப்படி பெறுவது என்பதை நான் உனக்கு கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் அதை உதாசீனப் படுத்துகிறாய். மாயை உருவில் அதிர்ஷ்டம் வருகின்றது. அதைத் தேடி கோவில், குளம், அர்ச்சனை, பரிகாரம், யாகம், தானம், தர்மம் போன்றவற்றை செய்கிறாயே அதனால் நீ பலன் அடைந்தாயா? உனது எண்ணத்தை, செயலை  சுத்தமாக வைத்துக்கொண்டால் ஒழிய இவையனைத்தும் பலன் தராது. 

மதிப்புமிக்க மனிதா! தினம் அல்லது உனக்கு நேரம் கிடைக்கும்போது கோவிலுக்குச் செல்கிறாயே அது என்னைவிட புனிதமானது என்பதை மறந்துவிடாதே! கோவில்களுக்குச் செல்லுமுன் உனது எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஞாபக படுத்தும் இடம். உனக்குள்ளே ஆற்றல், அறிவு, இந்த உள்விதி மனிதன் இருப்பதை உணர்த்தும் இடம். உனக்குள்ள கடமைகளை செய்யச் சொல்லும் ஸ்தலம். உனது கடமை என்னவெனில் வீட்டையும், நாட்டையும் இரு கண்கள் போல் காக்கவேண்டும் என்பதை நினைவூட்டும் சின்னம். ஆனால் அங்கேயே இருந்துவிடக் கூடாது. ஏனெனில் நான் கொடுத்த அறிவும், ஆற்றலும் பயன்படுத்தாமல் இருந்துவிடக்கூடாது. உனது உடல் ஒரு கோயில். அதில் நான் ஒரு தெய்வமாக ஜீவ ஓட்டமாக இருக்கிறேன் என்பதை மனதில் நன்றாக பதிந்துகொள். 

இரக்கமுள்ள மனிதா! கோவில், குளத்திற்கு பெரிய பணக்காரர்கள், அரசியல் வாதிகள், அறிஞர்கள், தலைவர்கள், மகான்கள், முனிகள் தினமும் வருகின்றனரா! எப்போதாவது தான் வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும்! உழைத்தால் தான் உணவு கிடைக்கும், பாடு பட்டால் தான் பலன் கிடைக்கும் என்று. அது உனக்கு ஏன் தெரிவதில்லை? எல்லா கடமைகளை முடித்துவிட்டு வா! உன்னை ஏற்றுக்கொள்கிறேன். கடமையை செய்யாமல் அல்லது கடமையை தவிர்ப்பவனை  நான் மன்னிக்கவே மாட்டேன்! கடமையைச் செய்தால் தான் அதற்குரிய பலனை தரமுடியும். முதலில் வீட்டில் இருக்கும் கடமையை தவறாமல் செய். தாய், தந்தையரைக் காப்பாற்று. சகோதர சகோதரிகளின் கடமைகளைச் செய். உனது குடும்பத்தை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள். இவையனைத்தும் முடித்தால் தான் என்னை முழுமையாக அடைய முடியும். உனது கடமையை செய்தாலே நீ பூரண முக்தி பெறுவாய். அதை விட்டுவிட்டு போலிச் சாமியார் பின் செல்வது, மந்திரம் சொல்வது, அவர் சொல்லும் பலவற்றை கடைபிடிப்பது, அவர்களிடம் செல்வத்தை இழப்பது, கடமையை விட்டு விலகுவது இவையனைத்தும் உனக்கு கெடுதலே தருமே அன்றி பலன் தராது. உனது வாழ்கையில் மகிழ்ச்சி ஏற்படாது, மற்றவர்களுக்கும்  மகிழ்ச்சி தர முடியாது. அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். 

பிரிய மனிதா! ஏனோ தானோவென்று, எங்கேயோ எதையோ நினைத்துக்கொண்டு கோடி முறை கடவுளை நினைப்பதைவிட மனதளவில் உண்மையாக , சத்தியமாக ஒரே ஒரு தடவை நினைத்தாலே போதும். நீ புண்ணியம் பெறுவாய். அந்த புண்ணியத்தை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள். தினமும் ஒரே சொல்லை உச்சரிப்பதால் மட்டும் எவ்வித பலன் கிடைக்காது. அது உனக்கு சொல்லும் அல்லது  உணர்த்தும் ஆரம்ப பாடம். உனது எண்ணம் ஒரு மனம் தீவிரமாக இருக்கின்றதா வென்று சோதித்துப் பார்க்கும் பாலபாடம். அதில் வெற்றி பெறும்போது புதிதாக பல கற்பதற்கு அறிவு பெறுகின்றாய். புதிது, புதிதாக கற்பதால்  மட்டுமே நீ மேன்மை பெறுவாய். கற்பதோடு நிற்காமல் அதை செயல்படுத்து. வெறும் எல்லோருக்கும் நல்லதை நினைக்கவேண்டும், நல்லதை செய்யவேண்டும், நல்லதை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் நீ இன்று யாருக்கு என்ன நல்லது செய்துள்ளாய் என்பதை தெரிந்துகொள். இது மகான்களுக்கும், தலைவர்களுக்கும், மனிதர்களுக்கும் பொருந்தும். நீ யாருடன் நட்பு கொள்வதற்குமுன் அவன் எவ்வளவு நன்மையான செயல்கள் மக்களுக்குச் செய்திருக்கிறான் என்பதை அறிந்துகொண்டு பழகு. அதுவே உனக்கு நல்லது. இந்த உள் மனிதனுக்கும் நல்லது.


பண்புள்ள மனிதா! சிலர் பணத்தையும், செல்வத்தையும் அள்ளி அள்ளித் கோவிலுக்குத் தருகிறார்கள். அவைகளெல்லாம் நல்ல வழியில் கிடைத்தது என்று சொல்லமாட்டேன். பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய அந்தஸ்துக்காக, பணத்திமிறினால் என்னமோ அவர்களை நம்பித் தான் நான் இருக்கிறேன் என்கிற இறுமாப்பு. அன்பு மனிதா! அதற்கெல்லாம் நான் அவர்களுக்கு இம்மியளவு கூட பலன் தரமாட்டேன். அவர்கள் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. குறுக்கு வழியில் சம்பாதித்து, குறுக்கு வழியில் என்னைப் பார்பவர்களுக்கு , பணத்தைக் கொண்டு என்னை விலைக்கு வாங்க நினைப்பவர்களை நான் ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டேன்.  பலர் நேர்மையாக, அன்பாக , பணிவுடன் சிறிதே செய்தாலும் அதில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். அதில் உண்மை இருக்கின்றது. ரகசியமாக் போட்ட பணம் யாருக்குப் போய் சேருகின்றது? பாவப்பணம் அனைத்தும் பாவ மனிதருக்குத் தான் சேருகின்றது. அதன் மூலம் மக்களுக்கு நன்மை தராது. யார் ஒருவர் பணத்தை நேரடியாக அவரே தன் கைகளால் ஏழைகளுக்கு அல்லது மக்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்கின்றனரோ அவர்களே புனிதப் பிறவிகள். அவர்களிடம் நான் விரும்பி இருப்பேன். நீயும் புனிதமாவதற்கு முயற்சி செய். அதற்கு நான் துணையாக வருகிறேன். அனைவரையும் காத்து மகிழ்ச்சியை தருவதே எனது கொள்கை. அதை உள் மனிதனாக இருந்து செய்ய இருக்கிறேன். 


உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com