Pages

Tuesday 15 August 2023

30.7.2023.மதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 13 -கீழடி உலகின் தாய்மடி - முனைவர் இரா.வரதராசன் நூல் வெளியீடு

நாள் 30.7.2023.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "கீழடி உலகின் தாய்மடி "என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது .செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார். 

பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி .கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், அனுராதா, அஞ்சூரியா க .செயராமன், மு .இதயத்துல்லா, புலவர் .முருகுபாரதி, சாந்தி திருநாவுக்கரசு, மா .வீரபாகு, அழகையா, சங்கர நாராயணன், வீரா,மா .ஆறுமுகம், இராம.பாண்டியன், நா .குருசாமி, ஆகியோர் கவிதை படித்தனர். முனைவர் இரா.வரதராசன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது.  கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மூத்த மகன் ஆதிசிவன் நன்றி கூறினார் 

.படங்கள்:  புகைப்படக் கலைஞர்,ரெ.கார்த்திகேயன்  நன்றி.


                                           





                           கீழடி உலகின் தாய்மடி!
                              - கவிஞர் இரா. இரவி
                                                 *****
கீழடி உலகின் தாய்மடி என்பது உண்மை
கீழடி உரைக்கின்றது தமிழரின் அன்றைய தொன்மை
எழுத்தறிவோடு குடிமக்களும் வாழ்ந்திட்ட கீழடி
எல்லா வகை நாகரிகத்தோடும் வாழ்ந்திட்ட கீழடி

முத்து பவளம் அணிகலன்கள் கிடைத்திட்ட கீழடி
முத்தாய்ப்பான தொழில்களும் புரிந்திட்ட கீழடி
விண்முட்டும் புகழை பெற்றுத்தந்திட்ட கீழடி
விளையாட்டு சாதனங்கள் பல தந்திட்ட கீழடி

தந்தத்தால் ஆன சீப்புகள் கிடைத்திட்ட கீழடி
தங்கத்தால் ஆன சங்கிலிகள் கிடைத்திட்ட கீழடி
நெசவுக்கான பொருட்கள் சில கிடைத்திட்ட கீழடி
நெசவு செய்து சிறப்பாக வாழ்ந்திட்ட கீழடி

கண்கவரும் வண்ணப்பொருட்கள் தந்திட்ட கீழடி
கழிவறைகள் கட்டி வாழ்ந்திட்ட கீழடி
நீர் மேலாண்மை அறிவில் உயர்ந்திட்ட கீழடி
நீர் எடுக்க கிணற்றுத்தொட்டிகள் செய்திட்ட கீழடி

தோண்டத் தோண்ட தந்து கொண்டே இருந்த கீழடி
தோண்டுவதற்கே போராடிப் பெற்ற கீழடி
சுட்ட சட்டிகள் செய்து வாழ்ந்திட்ட கீழடி
சுடும் தொழில்நுட்பம் அறிந்து வாழ்ந்திட்ட கீழடி

வெள்ளை வண்ணத்தால் அழகுபடுத்திட்ட கீழடி
வாழ்வாங்கு வாழ்ந்திட்ட வளம் மிக்க கீழடி
உலகமே அன்னார்ந்து வியந்திட்ட கீழடி
உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி வாழ்ந்திட்ட கீழடி!
                                                                          ******












                           கீழடி உலகின் தாய் மடி 
                                     புதுக்கவிதை 
                                 கு.கி.கங்காதரன் 

கீழடியில் கண்டெடுத்தப் பழமைச் சின்னங்கள்
கெத்தாய் உரைக்கும் தமிழர் பெருமைகள்
வைகையில் தவழ்ந்திட்ட தமிழரின் நாகரிகம்
விரிந்து வளர்ந்ததே தமிழரின் பண்பாடு 

ஓரடி ஆத்திசூடி நீதிநெறியை போதிக்கும் 
ஈரடி திருக்குறள் வாழ்வினை உயர்த்தும்
நாலடி நன்னெறி ஒழுக்கத்தை சொல்லும் 
கீழடி அகழாய்வு தொன்மையைக் காட்டும்  


வெட்டி வேலை என்பார் அறியாதவர்கள் 
வெற்றி வேலாய்ப் போற்றிடுவார் அறிஞர்கள் 
வென்று வெளிப்பட்ட தமிழ்க்கலாச்சாரம்
வெல்லமாய் இனித்திடும் தமிழ்ப்பெருமைகள்

கீழடி அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள்
காட்டும் தழிழ்மண்னின் அவதாரங்கள்
கிடைத்திட்ட பழைமை தொல்பொருட்கள்
காத்திட வேண்டியப் பொக்கிசங்கள்

                               ************************

No comments:

Post a Comment