Pages

Tuesday 1 August 2023

கவிக்கனைகளை வீசிடும் (பொழிந்திடும் ) ஆசுகவி - (ஐயா வீரபாண்டியத் தென்னவன்) - புதுக்கவிதை

 கவிக்கனைகளை வீசிடும் (பொழிந்திடும் ) ஆசுகவி 



          (ஐயா வீரபாண்டியத் தென்னவன்)

               புதுக்கவிதை 

            கு.கி.கங்காதரன்மதுரை.  

தமிழ் ஆர்வலர்களை இழுக்கும் காந்தம் - நீர்

தமிழ் துவேசிகளை விரட்டும் திரிசூலம்- நீர்

தமிழே முழங்குமுழங்கிடும் சங்கநாதம் -நீர்

தமிழ்த்தாகத்தைத் தனிக்கும் தமிழ்த்தடாகம்

 

உம் கவி கேட்டால் கல்லாதநாவும் கவிபாடும்

உம் கவி கேட்டால் செவிகள் மோட்சம் பெறும்

உம் கவி கேட்டால் தமிழ்ப்பாசம் பொங்கும்

உம் கவி கேட்டால் தானாகவே கைகள்தட்டும்

 

தமிழுக்கும் தென்னவருக்கும் உள்ள இணைப்பு

தென்னவருக்கும் கவிதைக்கும் உள்ள பிணைப்பு

கவிதைக்கும் தமிழன்னைக்கும் உள்ள தவிப்பு

தமிழன்னைக்கும் கண்ணனுக்கும் உள்ள காப்பு.

 

விருதுகளும் பட்டங்களும் வாரி வழங்கியவர்

விருந்து கொடுத்து கவியரங்கம் நடத்தியவர்

பலரின் நூல்களுக்கு அணிந்துரை அளித்தவர்

பல நூல்களை எழுதித் தனித்தமிழை வளர்த்தவர்

 

மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர்

ஐந்நூறு கவியரங்கங்களுக்குத் தலைமை ஏற்றவர் 

பல மேடைகளில் ஆசுகவி புலமை காட்டியவர் 

பலரை திடீர் கவியால் வியப்பில் ஆழ்த்தியவர் 

 

பாற்கடலைக் கடைந்தால்  அமிர்தம் வரும்  - தென்னவன் 

தமிழ்க்கடலை கடைந்தால் கவியமுதம் சுரக்கும்  

மேகங்கள் முட்டிக்கொண்டால் மழை வரும் -தென்னவனும்  

தமிழும் முட்டிக்கொண்டால் கவிமழை பொழியும்

 

கல்லுக்குள் மட்டுமல்ல உயிரினம் இருக்கும்

இவர் கவிக்குள்ளும் உயிரோட்டம் இருக்கும்.

கவிகளைக் கேட்டுக்கொண்டே இருக்கச் சொல்லும் 

கவிகளைக் கேட்கச் செவிகளை ஏங்க வைக்கும்

 

இவ்வுலகில் நமக்கு கவிபாடியது ‘போதும் என்றெண்ணி 

அவ்வுலகில் கவிபாட 'காலன்அழைத்துக் கொண்டார்   

அங்கு அம்மனுக்கும் அபிராமிக்கும் கவிபாடி எந்நாளும்  

அவர்களுக்குப் பணிவிடை  செய்து கொண்டிருப்பார்.   

              

                      நன்றி, வணக்கம்!

No comments:

Post a Comment