Pages

Thursday 30 October 2014

How to become an successful Industrialist ? in Tamil

How to become an successful Industrialist 

தொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள் 
விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன் 


ஒருவர் ஏதாவது ஒரு துறையில் வெற்றி பெற எண்ணினால் அதற்கான பண்புகள், குணநலன்கள் இருக்கின்றதா? அல்லது அதை அடைவதற்கான சூத்திரம் ஏதேனும் இருக்கின்றனவா? என்கிற பலவித கேள்விகள் நமக்குள் எழுகிறதல்லவா? நடைமுறையில் எவ்வித தகுதியும் இல்லாத சிலர் பெரிய வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அனைத்து தகுதிகள் உள்ள சிலரால் அத்தகைய வெற்றி பெறாமல் இருப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. அதற்குக் காரணம் எண்ணங்களும் , தொலைநோக்கு பார்வையும் ஆகும். வெற்றி பெற்றவர்களெல்லாம் உடனடியாக மக்களுக்கு எது தேவையோ அதை தந்துவிடுவதால் பெறுவது. இப்போது இருக்கும் சூழ்நிலை தொலைநோக்கு பார்வை கொண்டு காரியங்களைச் செய்தால் வெற்றி பெறுவது கடினம். ஆனால் அதற்கான வெற்றி காலம் கடந்து கிடைக்கின்றது.

பெரிய பெரிய தலைவர்கள், வெற்றியாளர்கள் கொண்டுள்ள சில பொதுவான பண்புகளை நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஓரளவு வெற்றிப் பாதை தெரியவரும். அந்தப் பாதையில் நீங்கள் செல்கிறீர்களா? என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

முதலாவது :

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வருவதற்கு முதலில் மனதளவில் எல்லாவித செயல்களையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், விடாமுயற்சியும் வேண்டும். அதாவது சாதாரண மனிதர்கள் செய்ய விரும்பாத பலப்பரீட்சைகளை எடுத்துச் செய்ய முற்பட வேண்டும். அதாவது அது கடினமான, ஆபத்து நிறைந்த பாதையாக இருந்தாலும் அதை செய்யத் துணிவை வரவழைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடியது. இது தான் தொழில் முனைவோருக்குத் தேவையான முதல் அம்சம். தங்கள் நோக்கங்களில், லட்சியத்தில், செயல்களில், கருத்துகளில் வலுவான நம்பிக்கை கட்டாயம் தேவை.

உங்கள் எதிர்ப்பாளர்களை சமாளிக்கும் அறிவும் ஆற்றலும், உங்கள் செயல்களை இழக்கச் செய்யும் ஆபத்துகளும் உங்களைத் துரத்திக்கொண்டு வந்தாலும் அதைவிட வேகமாக உங்கள் செயலும், நோக்கமும், வீரமும், துணிவும் இருக்க வேண்டும். தொழிலை தர்மமாக செய்தல் வேண்டும். அதாவது சூதாடி போல் 'வந்தால் மலை, போனால் முடி' என்று குருட்டாம்போக்கில் தொழிலைச் செய்தால் அது ஆபத்தில் முடியும். உங்கள் அணுகுமுறை மென்மையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருத்தல் அவசியம். ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோரின் எண்ணங்களும் செயல்களும் முன்னோக்கிச் செலுத்தும் திறவு கோல்கள். மேலும் சொந்தத் திறன், விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான உதவிக்கரங்கள் ஆகும்.


இரண்டாவது :

தொழில் முனைவோர்கள் கடின உழைப்பிற்குத்  தயாராக வேண்டும். மற்றவர்களை எதிர்பார்த்து இருத்தல் கூடாது. ஆரம்பிக்கும்போதே கனவில் நடப்பதைப் போல அல்லது திரைப்படத்தில் வருவது போல உடனே அதிக லாபம் அல்லது அதிக பலன்கள் கிடைத்துவிடும் போன்ற எண்ணங்களை கட்டாயம் அகற்றிவிட வேண்டும். ஒரே இரவில் கிடைப்பதற்கு அது மந்திரம் செய்யும் மாயாஜாலம் அல்ல. எல்லா வெற்றியாளர்களும் ஒரே மாதிரியாக சொல்வது 'அதிர்ஷ்ட தேவதையை தன் பக்கம் கவர்வதற்கு ஒரே வழி கடின உழைப்பு' என்றே சொல்லுவார்கள். அதே சமயம் அவர்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்வார்கள். அவர்கள் செய்கின்ற வேலைகளின் அவர்களின் உணர்வுகள் கலந்திருக்கும். மற்றவர்களின் உணர்விக்கும் அதிக மதிப்பு கொடுப்பார்கள். அவர்களின் வரம்புகளையும், திறமைகளையும் நன்கு அறிந்திருப்பார். அவர்களிடம் திட்டமிட்ட தெளிவான இலக்கு, அதை செயல்படுத்தும் பொறுமை, உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் துணை கொண்டு தான் வெற்றியடைகிறார்கள்.


மூன்றாவது:

தலைமைப் பண்பு, நிர்வாகத் திறமை ஒரு வெற்றியாளனுக்கு மிக முக்கியம். ஒரு பெரிய தொழிலதிபராக வருவதற்கு அவர் ஒருவரால் மட்டுமே அடைய முடியாது. மற்றவர்களின் உதவியுடனும் தான் சாதிக்க முடியும். தினமும் பேரார்வத்தைத் தூண்டும் வண்ணம் சரியான மக்களை அடையாளம் கொண்டு அவர்களிடம் தன்னுடைய நோக்கத்தை உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். தன்னுடைய மரியாதையை உயர்த்திக்கொள்ள அவர் தன்னுடைய தொழில் தர்மத்தையும் ஒருமைப்பாடு உணர்வையும் மதிக்க வேண்டும். சக ஊழியர்களுக்கு அவரே எல்லாவற்றிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். நேர்மையான குணங்களை வளர்த்து, தொழிலின் தரத்தை உயர்த்தியும், உற்பத்திதிறனைப் பெருக்கியும் அதற்கான மாற்றங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். எல்லா செயல்களுக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும்.


இறுதியாக:

'கற்றல்' கண்டிப்பாக வேண்டும். நாளுக்கு நாள் சிறப்பாகவும், உயர்வாகவும் வியாபாரம் சிறந்து விளங்க வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு தொழிலதிபருக்கும் இருக்கும். ஒரு தொழில் முனைவோர் பொருளாதாரத்திலோ, வணிகத்திலோ, நிர்வாகத்திலோ அல்லது வேறு எதிலோ ஒரு பட்டமோ அல்லது பட்டங்களோ பெற்றிருக்கலாம். ஆனால் தொழில் விஷயங்கள் எல்லாம் கல்லூரியில் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. படிப்பு வேறு, தொழில் வேறு. படிக்கும்போது எப்படி வியாபாரம் செய்வது? எப்படி பணம் சம்பாதிப்பது? எப்படி தொழிலை விட்டுக் கொடுக்காமல் இருப்பது? எதனால் தோல்வி வருகின்றது? இப்படி பலவற்றை அன்றாடமும் சந்திக்க வேண்டியதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் எது வந்தாலும், எதிர் கொண்டாலும் எல்லாமே 'கற்றல்' தான் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். அதுவே நல்ல அனுபவம் தரும். தொழில் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொள்வது நிறுத்த முடியாது. அதற்கான விடுபடும் வழியும் இல்லை.


நிச்சயமாக இவைகள் இருந்தாலே போதும் என்று சொல்லி ஒரு முடிவுக்கு வந்திட முடியாது. அதற்கு மேலும் 

1. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி மாறும் குணம் 

2. தொழில் மற்றும் வியாபார அறிவு 

3. நிர்வாகம் மற்றும் நிர்வாகத் திறமை 

4. போட்டியாளர்களின் பலம் 

5. வாடிக்கையாளர்களின் மனப்போக்கு 

6. சந்தை படுத்தும் திறன்  

7. புதுமையை ஏற்படுத்துதல் 

8. போட்டி போடும் பக்குவம் 

9. இது போன்ற மற்றவைகள் 


இப்போது உங்களுக்கு வெற்றித் தொழிலதிபராக வருவதற்காண ரகசியம் நன்கு தெரிந்திருக்கும்.

இனி என்ன ? நீங்களும் ஒரு வெற்றித் தொழிலதிபர் தான்.


நன்றி 

வணக்கம் 

***************************************************************************