Pages

Tuesday 10 March 2020

கணினித்தமிழ் - தமிழா விழி! தமிழே வழி!


கணினித்தமிழ் - தமிழா விழி! தமிழே வழி! 
கு.கி.கங்காதரன் மதுரை, தமிழ்நாடு, இந்தியா கைப்பேசி: 9865642333

முன்னுரை
கையால் எழுதும் எழுத்துகள் 
கரையானால் அழிந்து விடும்! 
கணினியில் எழுதும் எழுத்துகள் 
காலத்தால் அழியாமல் நிற்கும்! 

என்கிறது புதுக்கவிதை,  இன்றையக் காலகட்டத்திற்கு வெகுவாய்ப் பொருந்தும்.  வாழ்வாதாரத்திற்கு  உதவாத  எந்த ஒரு தகவலும், அறிவும், செயலும் கேளிக்கைக்காக,  நேரம் போக்குவதற்காக மட்டுமே பயன்படும்.  இது கணினியுகம். கையால் எழுதிய நிலை மாறி கணினியால் எழுதும் நிலைக்கு வந்துள்ளோம். இனி கணினியால் எழுதும் மொழிகளே வாழும். மற்ற மொழிகள் அழியும். ஆகவே தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் கணினியில் கட்டாயமாகக் கற்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழர்கள், கணினித்தமிழைக் கற்றால்தான் தமிழர்களின்  நாகரிகம், பண்பாடு, இலக்கியம், படைப்புகள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்ற இயலும். தமிழ்மொழியைக் காக்க உதவும். அவ்வாறு செய்யின் உலகத் தமிழர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தமிழின் பெருமைகளை எடுத்துக்காட்ட  முடியும். இனிமேல் நமது வாழ்வாதாரமும், வளர்ச்சியும் கணினித்தமிழைப் பொறுத்தே இருக்கும்.  ஏட்டுக்கல்வி கற்றும், கணினித்தமிழ்  தெரியாமல் இருப்பவனும்  'கைநாட்டு' என்று சொல்லும் காலம் விரைவில் வரும். நம் வாழ்வுக்கு வானம்,  காற்று,  மழை, சூரிய ஒளி,  பூமி எவ்வாறு  அவசியமானதோ  அவ்வாறு கணினியில் தமிழ்மொழிக்  கற்பது இன்றியமையாதது.

தமிழ்மொழியைக் கணினியில்  எழுதினால் 
தரணியெங்கும் தமிழ்ப்பெருமை பரப்பலாம்!
கணினியும் கைப்பேசியும் இணைந்த கரங்களால்   
கணினித்தமிழை இணையத்தில் வளர்க்கலாம்!   
என்பது உண்மைதானே. 

இக்காலமும் வருங்கால வாழ்க்கையும்

       இன்றைய நமது வாழ்க்கையானது, நாம் அறிந்தோ அறியாமலோ கணினியில்  ஐக்கியமாகி வருகின்றது. கணினி, நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து வருவதை உணரவேண்டும்.  'எங்கும் கணினி,  எதிலும் கணினி,  எல்லாமே கணினி மயம்'  என்றாகும்போது நமது விழிகள்  அப்போது முழிக்கக் கூடாதல்லவா! 'அடடா,  கணினித்தமிழைக் கற்காமல் விட்டுவிட்டோமே!' என்று பின்னாளில் வருந்துவதைவிட,   இப்போதே விழித்துக் கொண்டு அதனைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது  நல்லதுதானே!  'கணினி இல்லாத வாழ்க்கை, பாலைவனத்தில் வாழும் வாழ்க்கைக்குச் சமம்'  என்றளவிற்கு உலக மக்களைக் கணினி தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.

குழப்பும் தமிழ் விசைப்பலகைகள்

இணையத்தில் தொடும் வலைத்தளமெல்லாம் தமிழ்மொழி வரவேண்டுமென்றால்  கணினித்தமிழை  எளிமையாக்க வேண்டும்.  கணினித்தமிழில் முதலடி எடுத்து வைக்கவேண்டுமென்றால் அதன் விசைப்பலகையின்  (Keyboard)  எழுத்துகள் விரல்களில் வசப்படவேண்டும்.
விசைப்பலகை விரல்களில் வசப்பட்டால் - நாம் 
விரைவாய் கணினித்தமிழை கற்கலாம். 

'முதல் கோணல், முற்றிலும் கோணல்'  என்கிற பழமொழியின்படி,  தமிழ்மொழிக்கு  விதவிதமாக 20க்கும் மேற்பட்ட கணினி விசைப்பலகைகள் இருக்கின்றன. அவற்றில்  ஒன்றைக்கூட நம்மால் எளிதாய்க் கற்க  இயலவில்லை. காரணம், ஏட்டுக்கல்வியில் எழுத்துகளைக் கற்றதுபோல் எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் படி அகரவரிசையில் அவ்விசைப்பலகையின் அமைப்பு இல்லாமையே! அதுதான் நம்மைக்  கணினித்தமிழைக்  கற்க,  கற்பிக்கவிடாமல் செய்கின்றது. இப்போதுள்ள கணினித்தமிழைப்  பழகவேண்டுமென்றால் அளவற்ற நினைவாற்றலும்,  இடைவிடாது பயிற்சியும்,  கடினமான முயற்சியும், அசராத தன்னம்பிக்கையும் வேண்டும்.  இந்த அவசர உலகத்தில் இது சாத்தியமா?

இன்றையத் தகவல் பரிமாற்றத்தின் நிலைமை

கணினி, கைப்பேசி உதவியால் நொடிப்பொழுதில் நம்மால் உலகெங்கும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். அதற்கான ஊடகங்கள் பல இருந்தாலும் சமூக வலைத்தளங்களே முதன்மையாய் இருப்பதும், அதில் சிறியவர்கள்,  இளைஞர்கள்,  வயதானோர்கள் ஆர்வமாய்ப்  பரிமாற்றம் செய்து கொள்வதும் அறிந்ததே.  ஆனால் பெரும்பாலும் தமிழர்கள், ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ்மொழியில் தகவல் பரிமாற்றம் செய்து வருவது வேதனைக்குரிய விசயம்.  இப்படியே  கண்டும்  காணாது  விட்டுவிட்டால்  தமிழெழுத்துக்களோடு  தமிழ்மொழியும்  அழியும் நிலைக்குத் தள்ளப்படுவது  உறுதி.  யுனெஸ்கோவும்  அழியப்போகும் மொழிகளில் தமிழும் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.  அந்த நிலையைப் போக்கவே நான் வடிவமைத்த பதிப்புரிமை (Copyright)  பெற்ற UMASK  (Uniform Multi-lingual Alphabets Soft Keyboard) என்னும் எளிய கணினித்தமிழ் எழுத்துப் பலகையைக் கொடுத்துள்ளேன். இனி உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களும், தமிழைக் கற்க நினைக்கும் ஏனைய மொழி இனத்தாரும்    
           
      கற்பேன் கற்பேன் கணினித்தமிழைக் கற்பேன்
           எழுதுவேன் எழுதுவேன் கணினித்தமிழில் எழுதுவேன்
           வாசிப்பேன் வாசிப்பேன்  கணினித்தமிழில் வாசிப்பேன்
           படைப்பேன் படைப்பேன்  கணினித்தமிழில் படைப்பேன்!

என்று ஆணித்தரமாய் சொல்லுவார்கள். அதெப்படி? என்று இப்போது கூறுகிறேன்.

கணினியில் தமிழ் எளிதாகக் கற்க
1. விசைப்பலகையிலோ அல்லது கணினித்திரையிலோ தமிழ் எழுத்துகள்  தெளிவாகத் தெரிய வேண்டும்.
2. ஏட்டுக்கல்வியைப் போல எழுத்துகள்  அகரவரிசையிலிருந்தால் கணினித்தமிழைக் கற்க, கற்பிக்க, தட்டச்சு செய்ய  எளிதாக இருக்கும்.

'UMASK' எனும் தமிழ் மென்பொருளானது, அவ்வாறு அமைந்துள்ளதோடு  இன்றையக் கணினியின் 
    1.   அபரிமிதமான வேகம், எளிமை
    2.    'கீக்களின் (Key) மென்மை,
    3.    தொழில்நுட்ப வளர்ச்சி,
   4.    சிறுவர்கள்,  இளைஞர்களின் மனநிலை (Attitude) ஆகியனக் கருத்தில் கொண்டு உருவாக்கியதாகும்.
        
‘UMASK கணினித்தமிழ் அமைப்பு

               ஏட்டுக்கல்வியின்படி தமிழ் எழுத்துகள் 247 என்பது தெரிந்ததே. அவைகளை இக்கால சிறுவர்கள், இளைஞர்கள் நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுகிறார்கள் என்பதே மெய்.   ஆனால்   UMASK   கணினித்தமிழில் 31 எழுத்துகளே. அவைகளைத்  தெரிந்தாலேப் போதுமானது.  மீதம்  216  எழுத்துகள்,  உயிர்மெய்யெழுத்துகளான கூட்டெழுத்துகள்.  அவைகள்,  வாய்பாடு படி  உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் விசைப்பலகையில் அழுத்தும்போது தானாக உயிர்மெய்யெழுத்தாக மாறிவரும்.  மேலும், ஏட்டுக்கல்விபோல் அகரவரிசையில் எழுத்துகள் அமைந்திருப்பதால் அதிகளவு  முயற்சி,  பயிற்சி,  நினைவாற்றல்  ஆகியவைத்  தேவையிருக்காது.  அதாவது மிகக் குறைவான எழுத்துகள்தான் இருக்கின்றது என்பது தெரிந்தாலே மக்கள் கட்டாயம் கணினித்தமிழைக் கற்க முன் வருவார்கள். 

         
கணினித்திரையில் கணினித்தமிழ் அமைப்பு          


UMASK எழுத்து விசைப்பலகையின் அமைப்பு

UMASK மென்பொருளின் சிறப்பு அம்சங்கள்

1.      தமிழ் எழுத்துகளான உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள்  அகரவரிசையில் அமைந்த முதல் விசைப்பலகை. ஆகையால்  கணினித்தமிழை  விரைவாக,  எளிதாகக் கற்க, கற்பிக்க, தட்டச்சு செய்ய முடியும்.
2. உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் தனித்தனியே இருப்பதால் உயிர்மெய்யெழுத்துகளை  குழப்பமில்லாமல் எளிதாகப் பெறலாம்.  கற்கும் முறைப்படி  (வாய்பாடு) அமைந்துள்ளது. (க+ஆ=கா, ல+ஓ=லோ, க+ஒள=கெள)  
3.      வாய்பாடு படி  'UMASK' மென்பொருள் இருப்பதால் 100% சரியான எழுத்துகளே தரும்.  எ், உ், எி, எெ, ஈு, ஒி, உெ, உே, ஐே போன்ற  தவறான எழுத்துகள் தரவே தராது.
4.      சாதாரண வழியில் (Normal Mode) 247 எழுத்துகளில் 229 எழுத்துகளை (92.7%) தட்டச்சு செய்யலாம்.
5.      கணினி விசைப்பலகையில் தமிழ் எழுத்துகள் தெரியாவிட்டாலும் கணினித் திரையில் (Computer Screen) அதன் அமைப்பு தெரியும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.  விசைப்பலகை (Keyboard) மூலமாகவும், 'சுட்டி (Mouse) மூலமாகவும் இயக்கலாம்.
6. இதன் எழுத்துரு  (Font) 'யுனிக்கோடு‘ (Unicode)  ஆகையால் இது மைக்ரோசாப்ட் (MS) ஆபீஸ், பெயிண்ட், போட்டோஷாப், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வலைத்தளம் (Website), வலைப்பூ (Blog) மற்றும் அச்சகங்களுக்கு மிகவும் ஏற்றது.
7.   இணையதளம் (Internet)  இணைப்பு  இதற்குத்  தேவையில்லை. 

முடிவுரை

UMASK  கணினித்தமிழ்  மூலம்  நேரடியாகவும்,  இணையத்தின் மூலமாகவும் தமிழ்மொழியை மிக  எளிதாக  கற்கலாம் - கற்பிக்கலாம் - தட்டச்சும் செய்யலாம்.  ஏட்டுக்கல்விபோல  அமைந்திருப்பதால் தமிழ் தெரிந்த எவரும் பயமில்லாமல்,  நடுக்கமில்லாமல் ஆர்வமாய்க்  கணினித்தமிழைக் கற்க  வருவார்கள்.  தொடக்கப் பள்ளி முதலே இவ்வமைப்புள்ள கணினித்தமிழைத் தொடுதிரை நுட்பத்தில் கொடுத்தால் மழலையர்களால்  எளிதாகத் தமிழைக் கற்க இயலும். ஏன்? எல்லா வயதினரும் கூட
           மேலும் தமிழில் உள்ள இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் போன்றவை  இணையதளத்தில் பதிவேற்றப்பட்டால் வெகு விரைவில்  'தமிழிணையம்'  பிரமாண்டமாய் உருவெடுக்கும். இன்றுள்ள  மற்றும் வருங்கால சந்ததியினர்கள் கணினித்தமிழில் பல சாதனைகளைப் படைப்பார்கள். தமிழின் பெருமை உலகெங்கிலும் பரவுவதோடு கணினி இருக்கும் மட்டும் தமிழ்ப்படைப்புகள் அழியவே அழியாது.  தமிழ்மொழியும் தமிழரின் அடையாளமும் கணினியில் தமிழ் இருக்குமட்டும் கல்வெட்டுபோல் என்றும் மறையாது.

தமிழா கணினித்தமிழில் விழி கொள் !
தமிழா கணினித்தமிழின் வழி செல் !
            **************