Pages

Sunday 27 July 2014

நித்தம் ஏமாறும் நிசங்கள் ! புதுக்கவிதை

  நித்தம் ஏமாறும் நிசங்கள் ! 
   
          புதுக்கவிதை 

     மதுரை கங்காதரன் 

காட்சிகளால் ஏமாறும் கண்கள் 
ஒலிகளால் ஏமாறும் காதுகள் 

நறுமணங்களினால் ஏமாறும் மூக்கு 
சுவைகளினால் ஏமாறும் நாக்கு 

தொடுவதினால் ஏமாறும் உணர்வுகள்
உதவிகளால் ஏமாறும் உறவுகள்  

        

உறுதிமொழிகளால் ஏமாறும் நட்புகள் 
கண்களால் ஏமாறும் காதல்கள் 

போலி கௌரவதினால் ஏமாறும் வாழ்க்கை
சாதிகளால் ஏமாறும் ஒற்றுமை  

விலைவாசிகளால் ஏமாறும் மகிழ்ச்சி 
மழையின்மையால் ஏமாறும் விவசாயி  

உழைப்பினால் ஏமாறும் ஏழைகள் 
பேராசையினால் ஏமாறும் நடுத்தர வர்க்கத்தினர்

          

சட்டங்களினால் ஏமாறும் பணக்காரர்கள் 
பேஸ் புக்கினால் ஏமாறும் இளைஞர்கள் 

லஞ்சம் ஊழலினால் ஏமாறும் நேர்மைகள் 
கருப்புபணத்தினால் ஏமாறும் மக்கள் நலன்கள் 

விபத்துகளால் ஏமாறும் உயிர்கள் 
தீய பழக்கங்களினால் ஏமாறும் நோய்கள் 

இளசுகளால் ஏமாறும் முதுமைகள் 
சூதாட்டத்தினால் ஏமாறும் கௌரவங்கள்

   

அரசியலால் ஏமாறும் மக்கள்
இறப்பினால் ஏமாறும் பிறப்பு  

நித்தம் ஏமாறும் நிசங்கள் 
நிழலாக ஏமாறும் வாழ்கையே 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


 
   

இறந்தாலும் வரும் வாரிசு! சிறுகதை

இறந்தாலும் வரும் வாரிசு!

சிறுகதை 


மதுரை கங்காதரன்  

" இந்த நிலைமையிலே எனக்குக் இன்னொரு கல்யாணம் தேவைதானம்மா? அது ஏமாத்துறதா ஆகாதா? இப்போ எனெக்கென்ன குறைச்சல் ? நான் சந்தோசமா இல்லையா என்ன? நீங்களே சொல்லுங்க. பொழுதை நல்லபடியா கழிக்கிறதுக்கு என்கிட்டே படிப்பு இருக்கு. கைவசம் கைத்தொழில்கள் பல இருக்கு. அதையெல்லாம் மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆர்வமும் இருக்கு. அந்த சுகம் போதும் எனக்கு !" என்று நியாமான மனிதத்தன்மையோடு சொன்னாள் பாரதி.

"எதும்மா ஏமாத்துறது? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்த மாதிரி கொடுத்து உன் கணவரை அற்ப ஆயுசோட உன்னை விதவையாக்கி  தன்னோட அழைச்சுகிட்டாரே அந்தக் கடவுள் செஞ்சது மட்டும் ஏமாத்துறதா ஆகாதா?  திறமைகள் பலது உன்கிட்டே இருக்கு. அது எனக்குத் தெரியும். மக்களுக்கு சேவை செய்யும் குணம் உனக்கு சின்ன வயசிலிருந்து இருக்குன்னும் தெரியும்! ஆனா அதனாலே உன் வயிறு நிரம்புமா? உனக்கு இப்போ சின்ன வயசு. உனக்கும் ஒரு பாதுகாப்பு அவசியம். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாங்க உன்னை பார்த்துட்டு இருக்க முடியும்? உனக்குன்னு ஒரு புதிய வாழ்க்கை காலம் தாழ்த்தாம அமைச்சுகிட்டாத் தான் உனக்கு நல்லது. ஒரு பொண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் கூடாது தான். ஆனா நீ ஓரளவுக்கு வாழ்க்கையை அனுபவிச்சு குழந்தை குட்டின்னு இருந்திருந்தாக் கூட ஏதோ அவங்களைப் பார்த்துகிட்டே ஒரு வகையான ஆறுதலோட வாழ்க்கையை ஒப்பேத்தலாம். அப்படி எதுவுமில்லாம இருக்கிறதாலே தான் நாங்க அவசரப்படுறோம். நாங்க இருக்கும்போதே உனக்கு பிடிச்சாப்பிலே உன்னோட ஆசையை நிறைவேத்துகிறவரைப் பார்த்து உனக்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திட்டா எங்க கடமை நல்லபடியா முடிஞ்சிடும்" என்று அவளை பலவற்றை சொல்லி சமாதானப்படுத்த முயலுவாள் பாரதியின்  அம்மா.


"அவரோட கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அவரை மறக்கமுடியல்லேம்மா. எனக்குன்னு ஒரு ஆசை இருக்காதா? என்னை கட்டிக்கப் போறவர் என் எண்ணங்களுக்கு ஒத்துவந்தால் கூட ஏத்துக்கலாம்.  ஆனா எனக்கென்னமோ நான் போடும் கண்டீசனுக்கு அவர் ஒத்துவருவாரான்னு தெரியலே. அப்படி ஒத்து வந்தாத் தான் எனக்கு மறுமணம். இல்லாட்டி இல்லை தான்' என்று கறாராய் சொல்லிவிட்டாள் பாரதி.

"இப்போவாவது ஏதோ ஒருவகையிலே ஒத்துகிட்டேயே அதுவரைக்கும் எனக்கு சந்தோசம். அவருக்கும் உன்னைப் போல சில வைராக்கியம் இருக்கிறதாலே தான் நாங்களும் சம்மதிச்சோம். அவோரோட பெயர் கண்ணன் " என்று புதிர் போட்டார் பாரதியின் அம்மா.

"அப்படி என்னம்மா அவரோட வையாக்கியம்? கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க" என்று ஆர்வத்துடன் கேட்டாள்.


"அவருக்கும் உன்னைப் போலவே எப்போதுமே சமூகத் தொண்டு செய்யறது தான் பிடிக்குமாம். அதாவது பிறருக்கு கல்வி கற்றுக்கொடுப்பது, சிறிய தொழில் சொல்லிக்கொடுப்பது, ஏழைகளுக்கு நோட்டு, புத்தகம், துணிமணி கொடுப்பது, சிலருக்கு கல்விக்கட்டணம் கட்ட உதவுவது, கணினி பயன்பாடு சொல்லிக்கொடுப்பது இது போன்ற பல உதவிகள் செய்வாராம்!" என்று சற்று பெருமையாகவே சொன்னாள்.

"அம்மா ! அதுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கும் என்னம்மா சம்பந்தம். தண்ணிக்கும் மண்ணுக்கும் முடிச்சு போடுறாப்பிலே இருக்கு!" என்று சற்று சலித்துக்கொண்டாள்.

"சொல்றேன். அதுக்குள்ளே என்ன உனக்கு அவசரம். இந்த காரணத்தினாலே அவரு தன்னோட கல்யாணத்தைப் பத்திக் கவலைபடாமே ஒரு பேச்சிலரா காலத்தை தள்ளிக்கொண்டே வந்திருக்கிறார். ஒருசமயம் ஏதோ ஒரு சமூகநலக் கூட்டத்திலே அவரு பேசிகிட்டே இருக்கும் போது யாரோ ஒருவர் 'சமூகநலத்தைப் பற்றி இவ்வளவு அருமையாப் பேசுறீங்களே ! எல்லாமே சரி தான். உங்களுக்கும் மக்கள் சமூகத்துக்கு மேலே உண்மையான அக்கறை இருந்தா, எங்கே உங்களாலே ஒரு விதவை பொண்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? தம்பி ! உன்னைப்போல பல பேர் இதை விட நல்லா பேசியிருக்காங்க. ஆனா செயல்னு வந்துட்டா எட்டிப்போய் விடுவாங்க!' என்கிற அந்த வார்த்தைகளை இன்று உனது மூலமா செயல்படுத்திக் காட்டணும்னு துடிக்கிறார். அதாவது உன்னைப்போல ஒரு விதவைக்குத் தான் வாழ்வு கொடுக்கணும்னு இத்தனை நாளா கல்யாணத்தைத் தள்ளிபோட்டுகிட்டே வந்திருக்கிறார். இப்போதான் அவருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கப் போகுதுன்னு நான் நினைக்கிறேன். இந்த கல்யாண ஏற்பாடு  நாங்க வற்புறுத்தி செஞ்சது கிடையாது. அவங்களாகவே அன்போடு கேட்டதாலே தான் எங்களாலே தட்டமுடியல்லே. நானும் உங்க அப்பாவும் எல்லாவிததிலேயும் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம்" என்று தனக்குத் தெரிந்ததை அனைத்தையும் பாரதியிடம் கூறினாள்.


"ஆயிரம் நீங்க சொன்னாலும் எனக்கு என்னமோ ஏதோ ஒரு சின்ன அதிருப்தி இருக்கு" என்று மீண்டும் தன் எண்ணத்தை பகிர்ந்து கொண்டாள்.   

"ஒண்ணு செய்யுறோம். அவரும் உன்கிட்டே ஏதோ பேசணும்னு சொல்றார். அப்போ உன்னோட அபிப்பிராயமும் அவர்கிட்டே சொல்லு. பிறகு நீ ஒரு நல்ல முடிவுக்கு வரலாம்" என்று யோசனை சொன்னாள்.

கண்ணனின்  எண்ணம் 'பாரதியிடம் எல்லாமே கல்யாணத்திற்கு முன்னால் பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கும் நல்லது. பின்னால் எந்தவித பிரச்னையும் வராது' என்கிற சிந்தனையுடன் போகலாமா வேண்டாமா ? என்று பலமுறை யோசித்த பிறகு ஒருநாள் பாரதி வீட்டிற்குச் சென்றார்.   

"பாரதி இருக்காங்களா? அவங்கிட்டே ஒரு பத்து நிமிசம் பேசணும்" என்று அனுமதி கேட்டு இருவரும் பேசினார்கள். 

"எனக்கு பாரதியோட பேசினதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. என் வருங்கால வாழ்க்கை என்னான்னு இப்போத் தான் தெரிஞ்சுகிட்டேன். சீக்கிரமே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திடுறேன்" என்கிற உறுதியளித்த பிறகு கிளம்பினார் கண்ணன்.    

அந்த சந்திப்பு பாரதிக்கு ஒரு புது தெம்பைக் கொடுத்தது. தான் நினைக்கும் வாழ்வு கிடைத்திருப்பதை எண்ணி மனமெல்லாம் பூரித்துப் போனாள்.

"என்னம்மா. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ..  திருப்தியில்லைன்னு சொன்னே.. இப்போ எந்த சொக்குபொடி போட்டு உன்னை மயக்கினாரோன்னு எனக்குத் தெரியாது. உன்னோட மனசு இப்போவாவது ஒத்துகிடதே பெரிய விசயம். மேற்கொண்டு ஆகவேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்" என்று மனப்பூர்வமாக மகிழ்ச்சி அடைந்தாள் அவள் அம்மா.      


பாரதிக்கு முதல் கல்யாணம் , இரண்டாண்டுக்கு முன்பு நடந்தது. அழகான மாப்பிள்ளை, மிக நல்ல குணம், கை நிறைய சம்பளம், கௌரவமான குடும்பம், திருமணம் பத்து பொருத்தம் பார்த்து அனைவரின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தது. ஆனால் திடீரென்று அவருக்கு இதய நோய் தாக்கியதால் கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்து அவளின் வாழ்க்கை இருள் சூழ்ந்து விட்டது போலாகிவிட்டது என்றே சொல்லலாம். இத்தனை நாள் தனக்கு மறுமணம் வேண்டாம் என்று சொல்லியும் அவளின் அம்மா, அப்பா பிடிவாதமாய் அவளுக்கேத்த ஒரு நல்ல வரனை பார்த்து சம்மதிக்க வைத்தனர். வேறு வழி தெரியாமல் அவளும் ஒப்புக்காக ஒத்துக்கொண்டாள்.

நிச்சயதார்த்த விழா கலைகட்டியிருந்தது. எல்லோரும் இந்த அதிசய நிகழ்ச்சியை ஆவலோடு கண்டுகளிக்க வந்திருந்தனர். முக்கியமாக பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மற்றும் அவர்களது மனநிலை எப்படியிருக்கும்? அவர்களுக்கிடையே உண்டாகும்  அபூர்வ உணர்வைப் பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பவர்கள் மிகவும் அவசரப்பட்டனர் என்றே எண்ணிக்கொள்ளலாம். 

"சற்று நேரத்தில் மாப்பிள்ளையும் பொண்னும்  ஒரே இடத்தில் இருந்த காட்சி அனைவரையும் அதிசயிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி இருவருக்கும் பிடித்த காரணத்தினால் தான் என்னவோ இருவரின் முகத்தில் பிரகாசம் பொங்கி வழிந்தது. உணர்வுகள் பீறிட்டு வந்ததன் காரணமாக இருவரின் முகமும் சிவந்து இருந்தது. இனிதாக விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையில் தான் அந்த சம்பவம் நடந்தது.

திடீரென்று பாரதி "அம்மா , எனக்கு மயக்கமும் வாந்தியும் வருது" என்று சொல்லிக்கொண்டே கைகழுவும் தொட்டியில் வாந்தியெடுத்து மிகவும் சோர்வாக உட்கார்ந்துவிட்டாள்.

அங்குள்ள அனைவருக்கும் என்ன செய்வதென்று கை கால் ஓடாமல்   பதறினார். இத்தனை குழப்பத்திற்கு மத்தியில் அரசல்புரசலாக "ஒருவேளை அதுவாயிருக்குமோ? யார் கண்டது? ம் .... நாம நினைச்சதெல்லாம் நடக்கவாப்போது ?" என்று எரிகின்ற தீயில் கூட கொஞ்சம் எண்ணையை ஊற்றி வேடிக்கை பார்த்தனர்.

பாரதியின்  அம்மா அப்பாவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் " மாமா ! ஒண்ணுதுக்கும் பயப்படாதீங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்று அவர்களைத் தேற்றினார். அதற்குள் ஒரு அனுபவமிக்க மூதாட்டி ஒருவர் அவளின் கை நாடி பிடித்தபடி " சந்தேகமில்லை. இவள் கர்ப்பமாயிருக்கிறாள்" என்று சொல்ல அதைக் கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.


"என்ன கர்ப்பமா?" என்று பாரதியின் அம்மா அப்பாவுக்கு வயிற்றில் புளி கரைத்தது. எல்லோரும் ஒவ்வொரு விதமாய் கற்பனை செய்து பேச பேச அவைகளைக் கேட்டு கூனிக்குறுகி நின்றனர். எப்படி இது நடந்தது என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. ஏனெனில் பாரதியின் கணவர் இறந்து இரண்டு வருடமாகிவிட்டது. பின் எப்படி இவள் கர்ப்பம் ? ஒருவேளை தவறான வழியில் சென்றிருப்பாளோ? என்று ஆளுக்காள் அவர்கள் வாய்க்கு வந்ததை அனாவசியமாகப் பேசினார்கள். பிறரின் மனதை புண்படுத்தும் கலை சொல்லியாத் தரவேண்டும். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த மாப்பிள்ளை அனைவரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததார்.

" ஆமாம் .. இவள் கர்ப்பமாவாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவள் வயிற்றில் இருப்பது அவளது வாரிசு தான்" என்று கேட்ட அனைவருக்கும் அதிசயமும் ஆச்சரியமும் தந்தது.

'என்ன சொல்லுகிறான். அவள் வயிற்றில் சுமப்பது. அவளோட வாரிசாம்? அதை நாம நம்பனுமாம்' என்று முணுமுணுத்தனர். பாரதியின் அம்மா அப்பாவிற்கும் தன் மாப்பிள்ளை என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் முழித்தனர்.

"எல்லோரும் நான் சொல்வதை கவனமாக் கேளுங்க. நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரதி வீட்டிற்கு போயிருந்தேன். இந்த கல்யாணத்தில் அவளுக்கு நம்பிக்கையும், தைரியமும் தருவதற்கு போயிருந்தேன். பல விசயங்களைப் பகிர்ந்துகிட்டோம். அவளோட முதல் கணவரின் நினைவுகளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருதாள்.  அதை மட்டும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பேச்சுவாக்கிலே ஒருசமயம் அவளும், அவரோட கணவரும் இங்கிருக்கும் மழலை ஆஸ்பத்திரிக்கு போனதா சொன்னாள். அது ஒரு 'விந்து வங்கி'. அதிலே இவள் கணவோரோட விந்துவும் கொடுத்திருக்கிறார். அங்கே போய் பார்த்த பிறகு அது உண்மை எனத்தெரிந்தது. எனக்கு ஒரு யோசனை வந்ததது. ஏன் அதைக்கொண்டு அவளுக்கு அவளுடைய வாரிசைத் தரக்கூடாதுன்னு நான் நினைச்சேன். அப்போ அதை அவங்ககிட்டே இந்த மாதிரி சொன்னேன்.

"பாரதி! நான் ஒண்ணு சொல்வேன். நீங்க அதை கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. நீங்க விருப்பபட்டால் உங்களுக்கு உன் கணவரின் நினைவுப் பரிசாக அந்த விந்து வங்கியில் இருக்கும் உன் கணவரின் விந்தைக்கொண்டு உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னேன்.

"அதெப்படிங்க முடியும்?" என்று பாரதி சந்தேகப்பட்டாள்.

"எனக்கு என்னோட வாரிசு தான் வேணும்னு இல்லை. ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டவங்க சிலர் இருக்கிறாங்க. ஆனா அதுக்கும் ஒருபடி மேலே அவங்களோட வாரிசை இந்த நவீன விஞ்ஞானத்தின் மூலமாக் கொடுத்தால் இன்னும் சிறப்பாகும் உங்களுக்கும் பரம திருப்தியாகவும் இருக்குமில்லையா" என்றேன். 

"அந்த யோசனை பாரதிக்கு மிகவும் பிடித்து போயிடுச்சு. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் பக்கபலமா இருப்பதாகச் சொன்னேன். அந்த எதிரொலி தான் இந்த சம்பவம்" என்று நவீன விஞ்ஞான வளர்ச்சியை எடுத்துச் சொல்ல எல்லோருக்கும் மகிழ்ச்சி ஒருபுறம் அடைந்தாலும் நெகிழ்ச்சி ஒருபுறமும் அடைந்தனர். சிலருக்கு அவர் சொல்லியது புரியாமலும் தவிர்த்தனர். கட்டாயம் அவர்கள் பிறரிடமோ அல்லது வலை தளத்தில் மூலம் தெரிந்துகொள்வார்கள்.


இவ்வளவு குழப்பமும் அவர் தெளிவுற எடுத்துச் சொல்வதற்கு பின்னர் திட்டமிட்டபடி அந்த விழா இனிதே முடிந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சியும் தந்தது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%     

Monday 21 July 2014

பாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்?


தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 10

ISO - வின் தரம் பற்றிய விளக்கம் 

'புதிய தென்றல்' ஜூலை 2014  மாத இதழில்

வெளியான பகுதி.

யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்?

WHO CAN DO GOOD EXPORT BUSINESS?

மதுரை கங்காதரன்  











பங்குச் சந்தை , ஊக வணிக ரகசியங்கள் - SHARE , ON LINE TRADING SECRETS

பங்குச் சந்தை மற்றும் ஊக வணிக ரகசியங்கள் 


விழிப்புணர்வு கட்டுரை 


மதுரை கங்காதரன் 

உங்கள் நல்வாழ்க்கைக்காக ஒரு கதை சொல்லப் போகிறேன். அது பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகம் பற்றிய கதை. நல்லா கேளுங்க ! அதாவது ..


'பங்கு' என்பதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'பிரித்தல்' என்று கூறலாம். அதாவது ஒரு பெரிய மரம் ஒருவரால் மட்டுமே தூக்க முடியாது. ஆனால் அதை ஒருவர் பலருக்கு அவர்களின் பலத்தைப் பொறுத்து சிறிய / பெரிய பகுதிகளாக பிரித்து கொடுத்தால் அதை எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இது ஒரு வகை. மற்றொரு வகை என்னவென்றால் ஒரு இரும்பு குண்டு தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். ஆனால் அதே இரும்பு குண்டை தட்டையாக்கி கப்பல் வடிவில் செய்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குப் புரிகின்றதா?


முதலாவது சொன்னதன் விளக்கம் என்னவென்றால் பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவுவதற்கு மிகப் பெரிய முதலீடு வேண்டும். அதை அரசாங்கமே ஆனாலும் தனியாக முதலீடு செய்ய இயலாது. ஆனால் பெரிய நிறுவனம் அமைந்தால் தான் வேலை வாய்ப்பு பெருகும். வியாபாரம் பெருகும். அந்த வியாபாரம், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உதவும். அதைக் கருத்தில் கொண்டு முதலில் சிறிதாக நன்றாக இயங்கும் நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளின் முதலாளிகளோ அல்லது தலைவர்களோ தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணுகின்ற போது அவர்கள் அரசாங்கத்தை நாடுகிறார்கள். அரசாங்கம் இருவகைகளில் அவர்களுக்கு உதவி செய்கின்றது. ஒரு குறிப்பிட்ட முதலீடு பணத்தை உள்நாடு , வெளிநாட்டில் வாழும் மக்களிடமிருந்தும, பொதுத் துறை மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் வங்கிகளிடமிருந்து  'பங்குகள்' மூலமாகப் பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவுகிறது. அதற்குத் தான் 'பங்கு சந்தை' என்று ஒரு அமைப்பு பல முக்கியமான பெரிய நகரங்களில் இருக்கின்றது.  


ஆரம்ப காலதத்தில் ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் பத்து மட்டுமே. நிறுவனத்தின் முதலீடு தேவை பொறுத்து ஐம்பது அல்லது நூறின் மடங்காக பங்குகளை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் தேவைப்படும் முதலீடு அளவிற்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தால் எல்லோருக்கும் தாங்கள் விண்ணப்பித்த பங்குகள் முழுதும் கிடைக்கும். ஆனால் பல சமயங்களில் தேவைப்படும் முதலீடு அளவைவிட பங்கு விண்ணப்பித்த அளவு சுமார் ஐந்து முதல் ஐம்பது மடங்கு வரை அதிகமாக பங்கை விண்ணப்பித்திருப்பார்கள். அந்த சமயத்தில் எத்தனை மடங்கு அதிகமாக பங்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றதோ அத்தனை மடங்கிற்கு ஒருவருக்குத் தான் குறைந்தளவு பங்குகள் கிடைக்கும். உதாரணமாக ஐந்து மடங்கு என்றால் ஐந்தில் ஒருவருக்கு நூறு பங்குகள் கிடைக்கும். அதுவே ஐம்பது மடங்காக இருந்தால் ஐம்பதில் ஒருவருக்கு நூறு பங்குகள் கிடைக்கும். இவையெல்லாம் ஒரு நிறுவனத்தின் விளம்பரம், சந்தைபடுத்தும் திறமை , வாடிக்கையாளர்களின் தேவைகள், உற்பத்தி பொருட்கள் அல்லது சேவையின் தரம், செயல்பாடு, நிர்வாகம், நிறுவனத்தின் லாபம் மற்றும் முதலீட்டார்களுக்கு கொடுக்கும் லாபத்தின் பங்கு மற்றும் சலுகைகள் பொறுத்து பங்கு விண்ணப்பங்களின் அளவு கூடும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு பங்கு விண்ணப்பங்கள் குறிப்பிட்ட வங்கிகளிலோ, அமைப்புகள், முகவர்கள் அல்லது பங்குத் தரகர் மூலமாக கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் (அதிகபட்சமாக ஐந்து நாட்கள்) பங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட வங்கிகளில் பணத்தை கட்டவிட வேண்டும். அதன் பிறகு பங்கு சம்பந்தமான பத்திரிக்கை மற்றும் செய்தித்தாள்கள் மூலமாக அதன் விவரங்களையும், நிலைமையையும் தெரிந்து கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்துத் தான் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைத்திருக்கின்றது என்று தெரியவரும். கிடைக்காதவர்களுக்கு காசோலையாக திரும்ப கிடைக்கும். அதே சமயத்தில் அது பங்கு சந்தையில் நுழைகின்றபோது அந்த நிறுவனத்தின் தலைவரைப் பொறுத்து, லாபம் / நஷ்டம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து அந்த பங்கின் மதிப்பு உயரும் அல்லது குறையும். நல்ல பங்குகள் மிகக் குறைந்த நாட்களின் மாதங்களில் இரண்டு மடங்கு முதல் ஐம்பது மடங்குக்கும் மேல் அதன் மதிப்பு உயரும். அதை வாங்கிய முதலீட்டார்களுக்கு 'ஜாக்பாட்' பரிசு தான். அது போல் நிறுவனத்தின் லாப பங்கை முதலீட்டார்களுக்கு அதிகமாகக் கொடுத்தால் அதன் பங்கின் விலையும் உயரும். அதுபோல் நிர்வாகம் நஷ்டமடைந்தால் பங்கின் விலை முகமதிப்பு / வாங்கிய விலையை விட குறையும்.


இப்படித்தான் பங்குச்சந்தை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தினமும் அந்தந்த பங்குச் சந்தையின் குறியீடுகள் பொறுத்து பங்குச் சந்தையின் வாங்கும் / விற்கும் நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும் அதன் மூலம் நாளைய நிலவரத்தையும் கணிக்கலாம். அப்போது நிர்வாக திறமையின்மையாலும், தரம் குறைவினாலும் , திருப்தியில்லா சேவையினாலும் சில நிறுவனங்களின் செயல்பாடுகள் நஷ்டத்தில் முடிந்த காரணத்தினாலும், நிறுவனமே ஆரம்பிக்காமல் வெறும் நிலத்தை காட்டி பங்குச் சந்தையில் நுழைந்து மக்களிடம் பணம் பெறப்பட்டதாலும் பங்குச் சந்தை தன் மதிப்பை இழந்தது. நாளுக்குநாள் அதன் குறியீடு சரிந்தது. அதை காப்பாற்ற வங்கிகள் 'மியூசுவல் பண்ட்' என்று ஒன்றை ஏற்படுத்தி அந்த பணத்தை பங்குச் சந்தையில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனைப்படி முதலீடு செய்யப்படும் என்று அறிமுகப்படுத்தினார்கள். அப்போதும் மக்களிடையே மியூசுவல் பண்ட்' செய்யல்பாடு நம்பிக்கை இல்லாததால் எதிர்பார்த்த முதலீடு கிடைக்காததால் அதற்கு குறிப்பிட்ட அளவு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டதால் ஓரளவு முதலீடு பெருகியது.


இப்படி இருக்கும் போது இந்தியன் வங்கி திரு கோபால கிருஷ்ணன், ஹர்சத் மேத்தா போன்றவர்கள் பங்குச் சந்தை சட்ட திட்டங்களை மீறி செய்த சில செயல்களால் பங்குச் சந்தை மகிமை மங்கியது. திடீரென்று உயர்ந்த பங்குச் சந்தை குறியீடு மடாரென்று பள்ளத்தில் விழுந்தது. அப்போது பல முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் அடைந்ததால் பலர் பங்குச் சந்தையை விட்டு வெளியேறினர். குறைந்தபட்சம் எட்டு முதல் பத்தாண்டுகள் இப்படியே இருக்கும்போது கணினி, மின்னணு , தொலை தொடர்பு துறை மற்றும் மோட்டார் துறையினால் இந்த பங்குச் சந்தை மீண்டும் உயிர்த்தெழுந்தது. மேலும் பங்குச் சந்தை செயல்பாட்டில் நம்பிக்கை பெற அவை கணினி மயமாக்கப் பட்டது. அனைத்துப் பங்குகளும் மின்னணு பத்திரமாக மாற்றப்பட்டன. அப்போது மேற்கண்ட துறைகள்  அதிக லாபம் ஈட்டியதால் அந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. அவர்களே அதில் முதலீடு செய்யும்படி நிறுவனங்கள வழிவகைகள் செய்தனர். அவர்கள் மூலம் பலர் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். பிறகு சில நிறுவனங்களின் பங்கு வெளிநாடுகளில் வெளியிட்டு அவர்களின் மதிப்பையும் முதலீட்டையும் பெற்றதால் பங்குச் சந்தை நன்கு செயல்பட்டது. 


முதலீட்டாளர்களுக்கு அதிக லாபமும் சலுகைகளும் கிடைத்தது. மீண்டும் பல பெயர்களில் 'மியூசுவல் பண்ட்' வரிவிலக்குடன் வெளிவந்தது. அதிக சம்பளம் காரணமாக வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காக பலர் அதில் முதலீடு செய்தனர். ஓரளவு நன்றாக போய்க் கொண்டிருந்த பங்குச் சந்தை 'சத்யம்' என்கிற கணினி நிறுவனத்தின் மிகப்பெரிய மோசடியாக அதாவது அந்நிறுவனம் போலியாக அதிக லாபத்தை காட்டியதால் அதன் ஒரு பங்கின் விலை ரூபாய் 140/= க்கு எகிறியது. அந்த மோசடி வெளியில் தெரிந்ததால் ஒரே நாளில் ரூபாய் 30/= ஆக குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்தது. அது போலத் தான் பல நிறுவனங்கள் இருக்கும் என்கிற எண்ணம் முதலீட்டார்களின் நடுவில் ஆழமாக பதிந்தது. மீண்டும் பங்குச் சந்தையில் சுணக்கம் ஏற்பட்டது. பிறகு 'பவர்' துறையும் மோட்டார் துறையும் ஓரளவுக்கு சந்தையை தூக்கிவிட்டது. அதிலிருந்து  ரூபாய் 10 முகமதிப்புள்ள பங்குகள் அரிதாக வந்தது. அதுவும் இல்லையென்றே சொல்லலாம். பெயர் பெற்ற நிறுவனங்கள் அல்லது அதிக கவர்ச்சியான விளம்பரம் மூலம் சில நிறுவனங்கள் ரூபாய் 10 முகமதிப்புள்ள பங்குகளை முப்பது முதல் 100 மடங்கு வரை விலையை நிர்ணயித்தனர். இந்த விலை மக்களிடம் நேரடியாக வாங்க முடியாது என்று தெரிந்ததால் 'மியூசுவல் பண்ட்' ன் மூலம் பெற்றன. அப்படி பெற்ற பங்கின் விலை பங்குச் சந்தையில் நுழைந்த சில மணி நேரத்திலேயே வாங்கிய விலையிலிருந்து ரூபாய் நூறு வரை குறைந்தது. அதாவது ரூபாய் 10 பங்கை ரூபாய் 400 க்கு விற்ற பங்குகள் மறுநாளே ரூபாய் முன்னூறுக்கு குறைந்தன. இந்த நஷ்டம் 'மியூசுவல் பண்ட்' பங்குகளின் மதிப்பு முகமதிப்பை விட குறைந்தது. அது மக்களுக்கு மறைமுகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பங்குச் சந்தையை விட்டு விலக ஆரம்பித்தனர். மீண்டும் பங்குச் சந்தை குறியீடு அதல பாதாளத்தில் விழுந்தது. பலருக்கு அடிமேல் அடி.


இந்த நிலையில் பங்குச் சந்தை குறியீடு ஓரளவு நிலையாய் இருக்கும்படி ஒரு மக்களுக்கு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க நல்ல நிலையில் நடக்கும் ஒவ்வொரு துறையினை அதாவது 30 துறையினை தேர்ந்தெடுத்து அந்த துறையின் வளர்ச்சி பொறுத்து குறியீடு நிர்ணயித்தார்கள்.

இதற்கு உதாரணம் நமது கல்வித்துறையில் நடந்தது. முன்பு ஆரம்பப் பள்ளியில் நன்றாக படிக்காதவர்கள் கூட தேர்ச்சி பெறாமல் இருந்தார்கள். அதாவது முதல் வகுப்பிலும் தோல்வி பெறக்கூடிய முறை இருந்தது. அப்படிச் செய்வதால் யாரும் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்பதால் அரசு ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை கொண்டு வந்தனர். இதனால் மறைமுகமாக கல்வி வியாபாரம் நடந்தது. உண்மையில் அவர்களுடைய தரம் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். கூடிய விரைவில் ஒவ்வொரு பள்ளி , உயர்நிலை பள்ளி, மருத்துவம், கலை , அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நன்கு படிக்கும் ஒரே ஒரு மாணவரின் மதிப்பீட்டைப் பொறுத்து மற்ற மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கினால் எப்படி இருக்கும்? அப்படி வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆதாவது அரசியலில் எப்படி பல சில்லறை கட்சிகள் நல்ல கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெறுகிறார்களோ அதுபோலத் தான். அதாவது நல்ல பங்கு நிறுவனத்தின் தயவினால் மற்ற பங்குகளின் விலை ஏறுவது போல செய்தனர்.


அதாவது நன்கு பெயர் போன மற்றும் நல்ல செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெய், சிமெண்ட், கணினி, இரும்பு, மருத்துவம், ரசாயனம், ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பங்கு ஏறினால் அதற்குத் தகுந்தாற்போல் அதே துறையைச் சார்ந்த நட்டை குட்டை பெயர் தெரியாத நிறுவங்களின் பங்கும் ஏறும் / இறங்கும். இது எப்படி இருக்கு? அதனால் தேர்ந்தெடுக்கப்படாத நிறுவங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று முதலீட்டாளர்களுக்குத் தெரிய வராது. அதனால் சமீப காலமாக பங்குச் சந்தை குறியீடு எப்போதும் தாறுமாறாகக் குறையாமல் நிலையாக இருக்கும் ஒரு மாயத்தோற்றம் உருவாக்கியிருக்கிறார்கள். அது ஏறும் குறியீடு வெறும் மாயை. உண்மையில் அதில் முதலீடு செய்தவர்கள் ஆண்டியானது தான் மிச்சம். ஏற்கனவே பங்குகள் அதிக விலை, மேலும் அதிக விலை கொடுத்து யார் வாங்குவார்கள்? மீண்டும் அதற்காக மக்களை ஏமாற்றும் ஒரு திட்டம். சில மாதங்களுக்கு முன்பு சில நிறுவனங்கள் 'பிளாக் லிஸ்ட்'ல் சேர்த்தார்கள். அதில் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாயிருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! 


அதாவது பங்குச் சந்தையின் நிலையை நேரடியாக தொலைக்காட்சி மற்றும் கணினி மூலம் ஒளி பரப்பினார்கள். அப்போதும் நிறுவனத்திற்கு நினைத்தவாறு லாபம் கிடைக்காததால் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை சில பினாமி பெயரில் கொடுத்து அவர்கள் மூலம் வலையை விரிக்க ஆரம்பித்தார்கள். அதாவது நீங்கள் பங்குச் சந்தையை நன்றாக கவனித்தீர்களேயானால் தொடக்கத்தில் பங்கின் விலைகள் அதிகமாக இருக்கும். பிறகு மெல்ல மெல்ல குறையும். பிறகு முடியும் போது கொஞ்சம் உயர்ந்து முடியும்.அதாவது எப்போதுமே அதன் வரைபடம் 'U' வடிவத்தில் தான் இருக்கும். எப்போதுமே 'Ç இப்படி இருந்தது கிடையாது.  

அப்படியென்றால் என்ன அர்த்தம்? அப்போது என்ன நடக்கிறது ? பங்குச் சந்தை காலையில் முதலே நிறுவனப் பினாமிகள் தங்களிடம் வைத்திருக்கும் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்க ஆரம்பிப்பார்கள். அதனால் நிறுவனத்தில் பங்கு விலை குறையும். இதை கவனிக்கும் அப்பாவி மக்கள் 'ஐயையோ என் பங்கு விலை குறைகின்றதே' என்று பலர் விற்க ஆரம்பிப்பார்கள். அது அன்றைய அடிமாட்டு விலையில் போயிருக்கும். பொது மக்கள் விற்பது முடிந்தவுடன் அந்த அடிமாட்டு விலையை பினாமிகள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பிப்பார்கள். மீண்டும் விலை உயரும். அதாவது அன்றைக்கு ஆதாயம் நிறுவன பினாமிக்கு! ஆனால் நஷ்டமோ மக்களுக்கு! இப்படியே இது நாள் வரை தொடருகின்றது. இதிலேயே நிறுவனங்கள் லாபம் பெறுவதால் புதிதாக உற்பத்தி தொழில் தொடங்க முயற்சி செய்வது கிடையாது. சமீப காலமாக யாராவது உற்பத்தி தொழில் தொடங்கியிருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஏனென்றால் அதில் மிகப்பெரிய அபாயம் இருக்கின்றது என்று இப்போதிருப்போருக்கு நன்கு தெரியும். அதற்கு சாட்சி 'நானோ' கார் தொழிற்சாலை. அரசியல் குறுகீடால் அந்நிறுவனத்திற்கு எவ்வளவு நஷ்டமோ அவ்வளவும் முதலீட்டார்களின் தலைமேல் தானே விழுந்தது. 


இப்போது பெரும்பாலும் நிதி, வங்கி மற்றும் தங்க நகை சம்பந்தமாக 'பங்கு' தான் வெளிவருகின்றது. எப்போது ரூபாய் 10 முகமதிப்புள்ள பல உற்பத்தித் துறைகளில் பங்கு வெளிவருகின்றதோ அப்போது தான் பங்குச் சந்தை மிளிரும். மேலும் வெளிப்படையான நிறுவனங்களின் உண்மையான செயல்பாடு மக்களுக்குக் காட்டுகின்றதோ அப்போது தான் பங்குச் சந்தை நன்மதிப்பை பெறும். இல்லையேல் 'மக்களை ஆண்டியாக்கும் சைத்தான்' என்கிற அவபெயரே தரும். பங்குச் சந்தையில் நீங்கள் பலமுறை யோசனை செய்து ' என் பணம் போனாலும் பரவாயில்லை, நான் நஷ்டத்தைத் தாங்கிக்கொள்வேன்' என்று இருந்தால் மட்டுமே தாராளமாக முதலீடு செய்யுங்கள். இல்லை ! இந்த பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்து பல லட்சம் சம்பாதிப்பேன் என்று அடம்பிடித்தால் உங்கள் விதியை யாராலும் மாற்ற முடியாது.


இது போதாது என்று தனியார் நிறுவங்கள் கொடுக்கும் விளம்பரம் என்ன? அதன் செலவு என்ன?அதற்கு 'சகாரா' என்கிற நிறுவனமே சாட்சி. போலி முதலீட்டார்களை உருவாக்கி அதன் முதலீட்டை வேறு ஒரு நிறுவனத்திற்கு உபயோகித்ததால் அந்த நிறுவனத்திற்கு கடன் சுமை கூடி , தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்பட்டதால் அதன் பங்குகள் தரை மட்டத்திற்கு வந்து பலருடைய முதலீட்டை சாப்பிட்டு ஏப்பமிட்டது. அதற்கு முன்னால் விளம்பரம் என்ன! அனுபவித்த சலுகைகள் என்ன? கொடுத்த சம்பளம் என்ன? எல்லாமே மக்களின் முதலீடு தான். நீங்கள் ஒன்றை நன்றாக கவனித்தால் நன்கு தெரிய வரும். அதாவது நிறுவனத்தில் பங்கு முதலீடு செய்தவர்கள் நஷ்டமடைவார்கள்! ஆனால் நிறுவனமோ பல பெயரில் பலவாறு விரிந்து சிறக்கும். நிறுவனத் தலைவர்களின் சொத்துக்களோ பல மடங்கு அதிகமாகும். அது எல்லாமே பங்குச் சந்தை கொடுக்கும் பரிசு தான்.

 

இந்த லட்சணத்தில் 'அந்நிய முதலீடு' என்று புதுக்கதை ஆரம்பித்து இருக்கிறார்கள். நிலம் நன்றாக இருந்தால் தான் அதில் விழும் விதைகள் நன்கு வளரும். ஆக விதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் நிலம் நன்றாக இல்லாவிட்டால் என்னவாகும்? அதாவது நாடு என்பது நிலம்.அந்நிய முதலீடு என்பது விதை. ஆக இங்குள்ள சட்டம், ஒழுங்கு,அரசியல் எப்போது ஒளிவு மறைவில்லாமல் நடக்கிறதோ அப்போது முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். அது வரை எந்த கொம்பனாளானாலும் ஒன்றும் நடக்காது. ஐயோ அப்பா என்று மக்கள் தினமும் அரசியல் வாதிகள் கொடுக்கும் வலியைத் தாங்கிக்கொண்டு தான் தீரவேண்டும்! இன்னும் சொல்லப் போனால் உலகத்தில் புகழ் பெற்ற ஒருவர் தும்மினால், இருமினால் எதாவது ஒப்பிட்டுச் சொல்லி மிகப்பெரிய வதந்தியை பரப்புவர்கள். விளைவு பங்குச் சந்தை 'பனால்' தான். இது எப்படியிருக்கு? இந்த நூற்றாண்டில் இந்த கணினி உலகத்தில் இப்படியும் மக்கள் இருப்பதால்,  இந்த பலவீனம் தான் பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றது. இந்த லட்சணத்தில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் நிதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுமாம். அது மக்களை ஆண்டியாக்கினது இல்லாமல் மக்களின் சேமிப்பையும் ஆண்டியாக்க துடிக்கிறது. இதற்கு முன்னால் அரசு உடந்தை. அந்த மாதிரி விசயங்களை இந்த புதிய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்துப் பார்ப்போம். 

 

இப்போதெல்லாம் ஒரு நிறுவனம் நஷ்டமில்லாமல் லாபத்தில் நடத்துவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். யாணை தன் தலையில் மண்ணை வாரி போட்ட கதையாய் இன்றைய நிறுவனங்கள் இருக்கின்றது. பங்குச் சந்தை போல் ஊக வணிகத்தில் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று அதற்கு கை கொடுத்தார்கள். ஆனால் நிலையில்லாத மூலப்பொருட்களின் விலையேற்றம், மின் தடை, மனித வளம் தட்டுப்பாடு, உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி , நிலையில்லா வங்கி வட்டி விகிதம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், குறைந்த விவசாயம், அதிக எதிர்பார்ப்புள்ள வாடிக்கையாளர்கள், உலகளாவிய தொழில் போட்டி போன்றவற்றால் நிறுவனத்தின் லாபம் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. அதனால் பல நிறுவனங்கள் லாபப் பங்கு, டிவிடெண்ட், போனஸ் பங்கு என்று எதுவுமே முதலீட்டார்களுக்கு கொடுப்பதாக தெரியவில்லை. மேலும் பங்கு வியாபாரம் கணினி மூலமாக நேரடியாக நடைபெறுவதால் லாப நஷ்டம் உடன் தெரிவதால் பலர் சொற்ப நேரங்களே நிறுவனப் பங்குகளை தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர். ஆகையால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் எப்போதும் மன அழுத்தத்திலேயே பங்கு வர்த்தகம் செய்துகொள்கின்றனர். உங்களுக்கும் மன அழுத்தம் வரவேண்டுமா? ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு நிறுவனப் பங்கு வாங்குங்கள். கணினி முன்பு உட்கார்ந்து நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடுங்கள். கட்டாயம் உங்கள் பங்கின் விலை குறைய ஆரம்பிக்கும். கூடவே உங்கள் இதயத் துடிப்பும் கூடும்... வேண்டுமென்றால் அதில் இருப்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சொத்தை கரைக்கும் வரை அது உங்களை விட்டுப் போகாது. ஆகவே அது பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு. இங்கு நடுத்தர மற்றும் கீழ் மட்டவர்களுக்கு வேலையே இல்லை. இதில் இருந்தால் உடனே வெளியில் வந்துவிடுங்கள். இருப்பதாவது காப்பாற்றலாம்.   

    

சரி பங்குச் சந்தை இப்படி இருக்கு! வேறு வகையில் மக்கள் பணத்தை எப்படி கறக்கலாம் என்று யோசித்ததன் விளைவு தான் ஊக வணிகம். ஆனால் ஊக வணிகம் எல்லாவற்றிற்கும் ஒரு படி  மேலே இருக்கின்றது.


அதாவது ஒருவர் அப்போது சொன்னார். 'என்னிடத்தில் பல டன் தங்கம் இருக்கின்றது. 'எங்கே இருக்கிறது என்று காட்டு' என்று பதிலுக்குச் சொன்னால்.. அதெல்லாம் காட்ட முடியாது. உனக்கு எவ்வளவு டன் வேண்டும் ? நான் தருகிறேன். இன்றைய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூபாய் 600/=. இப்போது கல்யாண சீசன். மக்களும் அதில் முதலீடு செய்வார்கள். நாளைக்கு அதை நல்ல விலையில் விற்கலாம். உலகளவில் இனி தங்கம் கிடைக்காது. அழுகிப் போகும் பொருளும் கிடையாது' என்று ஆசை வார்த்தை காட்டினார் . அதை முதலில் மக்கள் நம்ப மறுத்தார்கள். பிறகு அவரே அந்த தங்கத்தை ஒரு கிராம் ரூபாய் 650/= என்றார். அப்போதும் மறுத்தார்கள். இப்படியே ஒரு மாதம் போக அதன் விலை கிராம் ரூபாய் 900/= என்றார்கள். அப்போது தான் 'ஆஹா போன மாதமே 600/= க்கு வாங்கியிருந்தால் இன்று 900/= க்கு விற்றிருக்கலாமே' என்று பலர் புலம்ப ஆரம்பித்தனர். இனியும் ஏமாறக்கூடாது என்று எண்ணி சிலர் தங்கத்தை வாங்க ஆரம்பித்தனர். எவ்வளவு வாங்கினாலும் ஒரே ஒரு பேப்பரில் 'இந்தாங்க இது தான் தங்கம்' என்று கொடுக்க ஏமாந்த மக்களும் வாங்கத் தொடங்கினார்கள். எல்லோரும் கிராம் 3000/= , 4000/= , 5000/= வரை போகும் என்று ஆசையாய் வாங்க ஆரம்பித்தனர். இன்றோ  முன்பு ஏறின அளவுக்கு விலை ஏறாமல் தடுமாறி தத்தளிக்கிறது பேப்பர் தங்கத்தின் விலை! 

இன்று அதை வாங்க எல்லோரும் தயங்குகின்றனர். கை சுட்டு புண்ணானது தான் மிச்சம். இப்படித் தான் ஊக வணிகத்தில் உள்ளது எல்லாம் தான் ஒரு மாய விலையை நிர்ணயித்து அந்த வலையில் மக்களை சிக்க வைத்து பலரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மிக மோசமாக மக்களை பலி வாங்கிக்கொண்டிருக்கின்றது . அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரித்து அதில் குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு யாரோ ஆண்டி மடம் கட்டின கதை சொல்லியிருக்கிறார்கள் போலும். அந்த கதையை உண்மையாக்கிவிட்டார்கள்.


அந்த கதையை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சத்திரத்தில் சில ஆண்டிகள் பொழுது போகாமல் ஒவ்வொருவரும் ஒரு பேப்பரில் பல வகை பெரிய வீட்டை வரைந்தார்கள். இது தான் என்னோட நிலம். இது தான் உங்களோட நிலம்.  இது தான் சுவர். இங்கே சமையலறை, படுக்கையறை, படிக்கும் அறை என்று தங்கள் இஷ்டம் போல பேசிக் கொண்டிருந்தார்கள். ஆஹா ஓஹோ என்று அழகு பார்த்து புகழ்ந்து ரசித்தார்கள். அதையெல்லாம் பக்கத்து அறையில் கேட்டுகொண்டிருந்த ஒருவன் அதை எனக்கு இன்ன விலையில் தாருங்கள் என்று கேட்க அவர்களும் அந்த பேப்பரை கையில் கொடுத்து வியாபாரத்தை ஆரம்பித்தனர். இந்த மாதிரி இளித்தவாயர்கள் பலர் வாங்க, வியாபாரம் சூடு பிடித்து ஓடியது. சில வருடம் கழித்து விற்ற ஆண்டிகள் சற்று சுதாரித்து இனி மக்கள் தெளிவாகிவிட்டார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்று எண்ணி கடையை மூடிவிட்டார்கள். ஆனால் பேப்பரை வாங்கியவர்களோ தலையில் துண்டைப் போட்டு மூலையில் முடங்கி கொண்டிருக்கிறார்கள்.

அதில்லாமல் இப்போது தொலைக்காட்சி வழியே விளம்பரம் வருகின்றது. அவர்களுடைய ஒரே குறிக்கோள் .. நாங்கள் ஏமாற்றத் தயார்! நீங்கள் ஏமாறத் தயாரா? அப்படியென்றால் வாருங்கள் ! உங்களிடம் இருக்கும் பணத்தை எங்களிடம் கொடுங்கள். கண்ணை மூடுங்கள். இந்த குழிக்குள் விழுங்கள். சொர்கத்தின் கதவு உங்களுக்காக திறக்கப்படும் ! என்ன சரிதானா? இந்த வணிகம் வந்ததால் உலகத்தில் உள்ள பல நாடுகள், அதன் வங்கிகள் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் பிற நாடுகளின் கையேந்தி இருக்கும் நிலையில் இருக்கிறார்கள். புதிய அரசு இதற்கு சாவு மணி அடித்தால் தான் மக்கள் பிழைப்பார்கள். நாடும் பிழைக்கும். இல்லையேல் செத்து செத்து தான் பிழைக்கவேண்டியிருக்கும்.   

  

அது சரி.. நீங்கள் எத்தனை பேர்களை பார்த்திருப்பீர்கள். யாராவது ஒருவராவது பங்கு சந்தை மற்றும் ஊக வணிகத்தில் ஈடுபட்டு கோடிகளை அல்லது லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார்களா? கட்டாயம் இருக்காது. ஆனால் திரும்பின பக்கமெல்லாம் அதில் இழந்து ஆண்டியானவர்களை பார்க்கலாம்.

நீங்க எப்படி? இருப்பதை பத்திரப்படுத்துவீர்களா? அல்லது ஆண்டியாக ஆசைப்படுவீர்களா ?  

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
           

Monday 14 July 2014

தமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே !


13.7.14 அன்று உலகத் தமிழாய்வுச் சங்கம் மற்றும் 
மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவியரங்கம்  
தலைப்பு:தமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் 
தமிழ் எழுத்தே !  

எனக்கும் தமிழ் தாய்க்கும் இடையே நிகழ்ந்தது 
புதுக்கவிதை வடிவில்  

மதுரை கங்காதரன் 



என்னருமை தமிழ் தாயே ! தனித்தியங்கும் தமிழ் மொழியே ! 
எம் மொழி பேசும் தமிழனே ! எனை அழைத்தக் காரணம் யாதோ?

ஏன் இவ்வாறு தலைகுனிந்து தரைபார்த்து நடக்கிறாய் ?
உன் இளமை அழகு இனிய மொழி வீரநடை எங்கே?

எம் தமிழ் மொழிபடும் துயரினை துடைக்கமுடியாமல் தலைகுனிகிறேன்!     
என் இளமை குன்ற, இனிமை குறைய , வீரநடை தளரக் காரணம் நீங்களே !

தமிழ் மொழியின் வளர்ச்சி நீ நினைத்தவாறு    இல்லையா?
தமிழை போட்டியின் போது மட்டுமே நினைக்கின்றனர் புது ராகம் பாடுகிறனர் !

தினமும் நான் தமிழை  பார்க்கிறேன்! பலவற்றில் தமிழைக் கேட்கிறேன் !
திரைகளில் பட்டிமன்றங்களில் பேசப்படுகிறதமிழை ரசிக்கிறார்கள் மக்கள் !

நம்  தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேறு என்ன வேண்டும்? 
நீ பார்க்கும் தமிழ் ! பேசும் தமிழ் ! எழுதும் தமிழ் !  எதிலும் தரமில்லையே ? 
 
பல சொற்களின் உயிரொளியாய் தமிழ் எழுத்தின் கவசமாய் இருந்தாயே!
பல மொழிக்கு மூலமாய் இருந்தும் எனக்கு சோதனை வந்துவிட்டதே!

 

புதிர் போட்டு பேசுகிறாயே ? புரியும்படி தெளிவாய் சொல் ! கேட்கட்டும் இவர்கள்! 
மதி கெட்டு பிறமொழி கலந்து தமிழ்மொழியை நஞ்சாக்குகிறாயே

தமிழை சிதைத்து பேசி அதன் இனிமையினை குழைக்கிறாயே 
தமிழை காலத்திற்கேற்ப வலைதளத்தில் வளர்க்க மறந்தாயே !

தமிழ் தாயே  இப்படியே விட்டால் ஏது நடக்கும்?
தமிழ் மொழி சில ஆண்டுகளில் அழியும் !  தமிழ் நூல்களும் புதையும் .

தமிழ் மொழி அழியுமா ? கூடவே கூடாது ? நம் கண் முன் அழிவதை தடுப்போம்  
தமிழ் மொழியை பிறமொழி சுனாமி சுழலிருந்து காத்திடுவோம்

   

தமிழ்மொழிக்கு பிறமொழி கலவா புத்துயிரொளியைத் தருவோம் 
தமிழ் எழுத்துக்களை போற்றும் கவசமாய் இருந்திடுவோம்    

தமிழை கணினியில் வளர்ப்போம்  ! வலைதளத்தில் வலம் வருவோம்  
தனித்தமிழாய்ப் பேசிடுவோம்  ! தரணியில் தமிழின் புகழ் பரப்புவோம்.  
 
*******************************************************************************************



கற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு


கற்றோர் போற்றும் நம்ம காமராசர் 
(காமராசர் பிறந்த நாள் சிறப்பு புதுக்கவிதை 
புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 

நம்ம காமராசர் ! நம்ம காமராசர்!

கற்பனைக்கு எட்டாததை சொன்னவர்  
கனவிலும் நடக்காததை நடத்தினவர்  

தன்னலம் கருதாத மனித தெய்வமானவர் 
தன்னம்பிக்கையில் சிகரமானவர் நம்ம காமராசர்.   

கல்வியில் கலங்கரை விளக்கம் 
தொழிலில் திசை காட்டி 

  

அரசியலில்  சாணக்கியர் 
பல திட்டங்களுக்கு முன்னோடி நம்ம காமராசர்!

பிறந்தார்கள் இருந்தார்கள் இறந்தார்கள் இவ்வுலகில் பலர் 
பிறந்தார் இருந்தார் இன்னமும் இருக்கிறார் மக்கள் மனதில்  

சொல்வதை செய்யாதவர் பலர் உள்ளார் 
சொல்லாமல் பல செய்தவர் நம்ம காமராசர் .

இவர் படிக்காதவர் ! என்ன செய்திடுவார் ? என 
இவரை ஏளனம் செய்தோர் பலர்.


இவர் மாமேதை ! எதையும் செய்திடுவார் என 
இவரை கற்றோரும் போற்றினர் நம்ம காமராசர் 

கேள்விக்குறி போல் வளைந்திருந்த ஏழைகளின் வாழ்வை 
வேள்வித் தீயால் ஆச்சரியக்குறியாய் மாற்றியவர் 

சரித்திரம் படிப்பவர்களுக்கு நடுவில் 
சரித்தரம் படைத்தவர் நம்ம காமராசர் 

எளிமையால் ஏழைப் பங்காளரானார் 
திறமையால் பாரத ரத்னாவானார்

ஆற்றலால் தென்னக காந்தியானார் 
கடமையால் கர்ம வீரரானார் நம்ம காமராசர்.

  

சுயநலத்திற்கு சாவு மணி அடித்தார் 
பொதுநலத்திற்கு ஆலய மணி ஒலித்தார்.

இறைவன் எனக்கு ஒரு வரம் கொடுத்தால் 
நம்ம காமராசரை மீண்டும் தர வேண்டுவேன்.

நன்றி ..வணக்கம் .

*****************************************************************************************

Saturday 12 July 2014

குடும்ப ரகசியம் - FAMILY SECRET - SHORT STORY - சிறுகதை

குடும்ப ரகசியம் 
சிறுகதை 
மதுரை கங்காதரன் 
 

"என்ன மரகதம், கம்ப்யூட்டர்லே ரொம்ப வேலையா இருக்கிறது போலத் தெரியுது. அப்படி என்னதான் பார்க்கிறே?" அவள் கணவர் முத்தரசன் கனிவாய்க் கேட்டார்.

"என்னங்க, அப்படி கேட்டீங்க. நம்ம குழந்தைங்களோட பள்ளிக்கட்டணம், தேர்வு மதிப்பெண்கள், அவங்களோட வருகை பதிவேடு, அவர்களுடைய செயல்திறன்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆகியவைகள் இதுலே தாங்க பார்க்கணும். அதில்லாம அவங்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்றாங்களா? அதுவும் வலைத்தளத்திலே தான் பார்க்க முடியுது" என்று ஒரு குடும்பத்தலைவிக்குரிய பொறுப்புடன் பதிலளித்தாள்.  

"உனக்கு இந்த அளவுக்கு கம்ப்யூட்டர் அறிவு இருக்கிறதை நெனச்சா எனக்குப்  பெருமையா இருக்குது. அதோடு இ.லாக்கர் வலைத்தளத்திலே மிக முக்கியமான நம்ம வீட்டு விசயங்கள் இருக்கு அதையும் பார்க்கக் கூடாதா?" என்று கெஞ்சினார்.


"போதுங்க உங்க சுய புராணம்! எனக்கு நம்ம குழந்தைங்களோடதை பார்க்கிறதுக்கே நேரம் சரியா இருக்கு. அதெல்லாம் பார்த்துக்கிறத்துக்கு நீங்க இருக்கீங்கல்லே" என்று ஒவ்வொருமுறை அவர் கம்ப்யூட்டரில் தங்கள் குடும்ப சமாச்சாரம் இருக்கின்றது என்று சொல்லும் போதெல்லாம்  இப்படி தட்டிக் கழித்துவிடுவாள்.   

என்னதான் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்போடு இருந்தாலும் அவர்களுக்கிடையில் 'பணவிசயம்' என்று ஒன்று வரும் போது எவ்வளவு இடைவெளி உண்டாகிறது. எவ்வளவு மனக்கசப்பு, ஒருவித புரிதல் இல்லாத தன்மை? எல்லோர் குடும்பத்திலும்  இப்படி இருக்கும்போது இந்த குடும்பத்திலும் இல்லாமல் போகுமா என்ன ? ஒருநாள் ..        

"மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்ன்னு பேரு தான்.  வாங்குகிற சம்பளமெல்லாம் என்னாங்க பண்றீங்க. நீங்களும் செலவு செய்யுறாப்பிலே தெரியல்லே. நம்ம குடும்பத்துக்கு தேவையான செலவு தான் செய்யுறீங்க. ஒருமாசம் உங்களுக்கு, எனக்கு, நம்ம ரெண்டு குழந்தைங்களுக்கு பள்ளிச் செலவு, வீட்டு வாடகை, மளிகை சாமான்ன்னு ரொம்ப போனா இருபதாயிரம் தாண்டாது. மிச்ச பணம் என்னங்க பண்றீங்க? வட்டி தொழில் பண்றீங்களா? அல்லது பெரிய சொத்து எதாச்சும் வாங்கப் போறீங்களா?" என்று அடுக்கடுக்காய் கேட்கும் கேள்விக்கு எப்போதும் ஒரு சிரிப்பு தான் பதிலாய் கிடைக்கும். அந்த சிரிப்பில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்  உள்ளது என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும். 

அதாவது 'உங்களுக்கு நான் இருக்கிறேன். உங்களுக்காகத் தான் நான் இதெல்லாம்  பண்றேன். என்னை நம்பு. உங்களை எப்போதும் கைவிடமாட்டேன். உங்களை கண்கலங்கவிடாமல் காலமெல்லாம் சந்தோசமாக வைத்திருப்பேன்' போன்றவைகள் தான் அதன் அர்த்தம்.


வீட்டு வாடகை உட்பட எந்த வகை வீட்டுச் செலவு செய்வதிலும், குழந்தைகளுக்கு கல்விச் செலவு செய்வதிலும் எப்போதுமே தள்ளிப் போட்டது கிடையாது. அந்தந்த நேரத்தில் அந்தந்த செலவு தவறாமல் திட்டமிட்டபடி செய்துவிடுவதால் தன் குடும்பத்தில் இதுநாள் வரை எந்த ஒரு பிரச்னையும் வந்தது கிடையாது.

'முத்துன்னா முத்து தான். பெயருக்கேத்த செயலும் முத்தாத் தான் இருக்கு. உங்களைப் போல எல்லாரும் இருந்துட்டா என்னைப்போல வீட்டுச் சொந்தக்காரங்களுக்கு ஏது பிரச்னை. சிலர் வீடு வாடகை சரியான நேரத்திலே கொடுக்காம என்னமாய் இழுத்தடிக்கிறாங்க? அட 'எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. அதுவும் இந்த மாதிரி வீட்டு வாடகை நம்பித் தான் இருக்குன்னு' மத்த ரெண்டு குடித்தனக்காரங்க எப்பத்தான் நினைக்கப் போறாங்களோ?' என்று ஒவ்வொரு மாதமும் வாடகை வாங்க வரும் போது மனம் நொந்து புலம்பும் வசனம் கிட்டத்தட்ட அங்கு குடியிருக்கும் அனைவருக்கும் அத்துப்படி. 


இவர் இப்படியென்றால் மளிகைக்காரர் ஒருபடி மேலே 'உங்க வீட்டுக்குத் தேவையான சாமான்கள் எதுவேண்டுமானாலும் வாங்கிக்குங்க. பணம் என்னங்க பணம். அதுகிடக்கட்டும். உங்ககிட்டே இருந்தா அது வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலே அதாவது பேங்க் லாக்கர்லே இருக்கிறது போல. நீங்க கூட வராதிங்க. நானே பையனை விட்டு போடச் சொல்றேன்' என்று முத்தரசனை புகழ்ந்து தள்ளிவிடுவார்.

என்னதான் ஒருவர் நல்லவராக, நாணயமாக, நேர்மை தவறாதவராக இருந்தாலும் இந்த சமுதாயம் நல்ல பட்டமா கொடுக்கப் போகுது?  அந்த தெருவில் உள்ளவர்களோ 'இதுக்கெல்லாம் காரணம் ! தான் அதிகமா சம்பாதிக்கிறதா பணத்திமிர். இந்த அலட்டல் எங்கே கொண்டு போய் முடியும் என்கிறதைப் பார்க்கத் தானே போறோம்' என்று பொறாமையால் மனதில் கருவும் மனிதர்கள் இருக்கத் தானே செய்வார்கள்.

உண்மையில் முத்தரசனுக்கு வறட்டு கௌரவம் துளி கூட இருந்தது கிடையாது. நியாமாய் நடப்பது அவருடைய குணம். அதேபோல் 'இல்லை' என்பவர்களுக்கு இருப்பதை கொடுக்கும் மனம் உண்டு. அவ்வாறு சிலர் உதவி பெற்று தங்களுடைய வாழ்க்கையில் வளமான திருப்புமுனைக்குக் காரணமாக அவர் இருந்துள்ளார். 

இத்தனை நல்ல குணங்கள் இருந்தும் சில மனிதருக்கு ஒரு சில பலவீனம் இருக்கத் தானே செய்கிறது. அவருக்கும் ஒரு பலவீனம். அதாவது தான் செய்யும் காரியங்கள் வெளிப்படையாக எவரிடத்திலும் பேசியது கிடையாது. அதற்கு தனது மனைவியும் விதிவிலக்கில்லாமல் இருந்தது. அவரது மனைவிக்கும் மனதில் அவ்வப்போது பயம் எழும். ஒவ்வொரு மாதம் மிச்சமாகும் பணத்தை வேறு யாருக்காவது... சே..சே.. அப்படியிருக்காது. அல்லது தவறான வழியில் ..சீ ..சீ .. அதுவும் இருக்கிறதுக்கு வாய்ப்பில்லை. கடைசியில் 'எனக்கேன் இந்த வேண்டாத எண்ணம். இதுவரைக்கும் ஒரு குறையும் வைக்காமல் எந்த பிரச்னையும் இல்லாமல் வண்டி போகுது. பிறகு ஏன் எதைப் பத்தியும் கவலை படனும்?' என்று சமாதானம் அடைந்துவிடுவாள்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மாதிரியான சோதனை. ஆம். அந்த குடும்பத்திற்கும் எமன் வடிவில் வந்தது. எதிர்பாராத அந்தக் குடும்பத் தலைவர் முத்தரசனின் வாகன விபத்து மரணத்தில் முடிந்தது. அதுவே அந்த குடும்பத்து விதியை தலைகீழாகப் புரட்டிப் போட்டு வேடிக்கை பார்த்தது. பொதுவாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்துவிடாலோ அல்லது நினைவிழந்து விட்டாலோ எப்படியெல்லாம் துன்பம் வரும் என்று அதை அனுபவிப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதுவும் இரு குழந்தை வைத்து அவர்களது வாழ்க்கை வண்டி எவ்வாறு ஓடும்? என்று சற்று நினைத்துப் பார்த்தால் நமக்கே ஒரு கணம் இருள் சூழும். 


"இன்னும் எத்தனை நாளம்மா பொறுக்கிறது. மாசம் ஆறாச்சி. இனிமேல் என்னாலே பொறுக்க முடியாதம்மா. சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க. அவரு வேலை பார்த்த நிறுவனம் மூலமா கிடைச்ச பணத்தை வச்சிட்டு எத்தனை நாளைக்குத் தான் வாழ்க்கையை ஓட்டுவீங்க" என்று எப்போதும் புகழ்ந்து பேசும் வீட்டுக்காரர் பணம் வராததால் அவரும் மாறிவிட்டார். 


"ஐயா, இன்னும் ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்குங்க. எப்படியும் பூரா வாடகையும் தந்துடுறேன்" என்று எதோ ஒரு நம்பிக்கையில் கெஞ்சினார்.

"என்னமா? எப்படித் தருவீங்க? மனுசன் சொந்த பொண்டாட்டியைக் கூட நம்பாம சம்பாதிச்ச  பணத்தை என்ன தான் செஞ்சாரோ? அந்த பணத்தை யார் யார் சாப்பிடுறாங்களோ? ஏதாவது ஒரு சின்ன விவரம் தெரிஞ்சாக் கூட எதாச்சும் பண்ணலாம். இப்படி நட்டாத்துலே இந்த குடும்பத்தை தவிக்க விட்டுட்டு போய்விட்டாரே. ஓஹோன்னு எப்படி வாழ்ந்த குடும்பம் இப்படி நிர்கதியாய் போயிடுச்சே. இருந்தாலும் என்னோட பொழப்பு இதுலே தாம்மா இருக்கு. என்னை மன்னிச்சிடுங்க" என்று வீட்டுக்காரர் தன் பங்கிற்கு சொல்லிவிட்டுச் சென்றார்.

'இவங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். பணம் இருக்கிற திமிருலே என்னமாய் ஆடுனாங்க! இப்ப என்னாச்சு?' என்று பொறமைபட்டவர்களுக்கு அவல் கிடைத்தது போல் இருந்தது அவர்களது குடும்ப வாழ்க்கை. கடன் கொடுத்த அனைவரும் அக்குடும்பத்திற்கு கொடுத்த கெடு முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் தான் இந்த குடும்பம் உயிர் பிழைக்கும் என்று இருக்கும் போது அது ஒரு நண்பனின் மூலம் வந்தது.

"ஐயா ! கொஞ்சநாளைக்கு முன்னாடி முத்தரசன்னு ஒருத்தர் விபத்திலே மரணம் அடைந்தாரே அவரோட வீடு எதுங்க?" என்று ஒருவர் அந்த தெருவில் விசாரித்து வர " அதோ அந்த மூணு வீடு ஒரே மாதிரியாத்  தெரியுதில்லே. அதுலே நடு வீடு தாங்க" என்று விடை கிடைக்க அந்த வீட்டை அடைந்தார்.


வீடு சோகத்தில் மூழ்கிக் கிடந்ததை பார்த்து பதற்றப்பட்டார். 

"நீங்க...தானே முத்தரசனோட மனைவி மரகதம் .." என்று வார்த்தைகள் அவர் முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் 

"ஆமாங்க . நான்தாங்க அவரோட மனைவி!"

"நான் அவரது நெருங்கிய நண்பர். அவன் இறந்த நாள்லே நான் வெளிநாட்டிலே இருந்ததாலே உடனே வரமுடியல்லே. நேற்று தான் இந்தியாவுக்கு வந்தேன். விசயத்தை கேள்விப்பட்ட உடனே புறப்பட்டு வந்துட்டேன். முத்தரசன் தங்கமானவன். குடும்பத்து மேலே அதிக அக்கறையுள்ளவன். திடீரென்று இப்படியாயிடுச்சேன்னு எனக்கும் ரொம்ப கவலையா இருக்கு. நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. உங்க வீட்டுக்காரர் உங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போற அளவுக்கு எந்த தப்பும் பண்ணலை. அவர் உயிரோட இருக்கும்போது இந்த கடிதம் என்கிட்டே கொடுத்தாரு. 'எனக்கு ஏதாச்சு ஒண்ணு  ஆனா இந்த கடிதத்தை என் மனைவிகிட்டே  கொடுத்து அவங்களுக்கு வேண்டிய உதவி செய்யுங்க'ன்னு சொன்னாரு. இதுலே எல்லா விவரமும் இருக்குது " என்று அந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார்.


பிரித்து பார்த்த போது அதில் இ.லாக்கர் என்கிற வலைதள விலாசமும், அதன் கடவுச்சொல்லும் இருந்தது. அதைப் பார்த்தபோது சட்டென்று தன கணவர்  தன்னிடம் தங்கள் குடும்ப விசயங்கள் எல்லாம் இந்த வலைத்தளத்திலே இருக்கிறதுன்னு அடிக்கடி சொல்லுவாரே அந்த ஞாபகம் வந்தது. அப்படியென்ன அதில் இருக்கோ'  என்று அந்த நாட்களில் வராத ஆர்வம் இப்போது அவளுக்கு வந்தது.

"அப்போ நான் வர்றேங்க" என்று விடைபெற்று செல்ல நினைத்தவரை "'கொஞ்சம் நில்லுங்க" என்று தடுத்து நிறுத்தினாள்.  


"நீங்க அவருக்கு உண்மையா இருக்கீங்கன்னு இந்த கடிதம் மூலமாத் தெரியுது. அதென்னங்க இ. லாக்கர் கொஞ்சம் விவரம்மா சொல்லுங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா எனக்கு உதவி செய்ய முடியுமா?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.

"என்னென்ன இருக்குன்னு சொல்றேன். அதுக்கு என்னென்ன பண்ணனும்ன்னு சொல்றேன். சந்தேகம் இருந்தா அதையும் தீர்த்து வைக்கிறேன். இ.லாக்கர் என்பது வங்கியிலே இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் போல ஒண்ணு. உங்களுக்கு கம்ப்யூட்டர் இயக்குவதற்கு கொஞ்சம் தெரியும்ன்னு நினைக்கிறேன். வலைதளத்தில் இ .லாக்கர் னு டைப் பண்ணுங்க" என்று சொன்னார்.

உடனே கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து "ம் ..டைப் ..பண்ணிட்டேன்" என்றாள். 

திரையில் இ.லாக்கர் உங்களை  வரவேற்கிறது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க உங்களது சரியான விலாசமும் , கடவுச்சொல்லும் அதில் டைப் செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் வந்தது 

 
"அதில் அவர் கொடுத்திருக்கும் விலாசத்தையும், கடவுச்சொல்லையும் டைப் பண்ணுங்கள். என்ன வருதுன்னு பாருங்கள்" என்றார் அவரது நண்பர்.

பார்த்தாள். பார்த்தவுடன் முகத்தில் மூடிக்கிடந்த சோகத்திரை மறைந்து மகிழ்ச்சி திரையாக மாறியது.

"என்னங்க. இப்போது அவரு என்ன பண்ணியிருக்கார்ன்னு தெரிஞ்சதா? இந்த நவீன கம்ப்யூட்டர் உலகத்திலே இதுவும் ஒரு வசதி. மனுசனை நம்பாதவர்களுக்கு இந்த கம்ப்யூட்டர் தான் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாத் தெரியுது, இந்த இயந்திரமயமான உலகத்திலே எப்பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர்  நேரடியாக நிதானமாய் பேச முடியாத நிலைமை வருதோ அப்பெல்லாம் இந்த கம்ப்யூட்டர் தான் எல்லோருக்கும் துணை. இந்த சூழ்நிலையிலே இதனோட மகத்துவமும் உதவும் கண்டிப்பா தேவைப்படும் " என்று நம்பிக்கையும் ஆறுதலும் சொன்னார்.


"என்னான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க. பணவிசயம் தான் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லேயே" என்றாள் மரகதம்.

"இவ்வளவு கேட்கிறதாலே நான் என்னான்னு பார்த்து உங்களுக்கு விளக்கம் சொல்றேன். இதோ வரிசையா ஆயுள் காப்பீடு பாலிசி, வங்கி லாக்கர், நிரந்த வைப்பு , வீடு மற்றும் மனை விவரம், முக்கிய சான்றிதழ்கள்ன்னு  இருக்கா? ஒவ்வொன்றும் அழுத்திப் பார்த்தா என்னென்ன அசல் இருக்கோ அதெல்லாமே ஸ்கேன் பண்ணி அப்லோடு செய்திருக்கிறார். முதல்லே ஆயுள் காப்பீடு பார்ப்போம்" என்று அழுத்தினார். 


"இது உங்க குடும்பத்தோட ஆயுள் காப்பீடு விவரம் . அவரு பேர்லே ஐந்து லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்திருக்கிறார். அந்த பாலிசியோட படம் இது தான். இதுலே அதனுடைய பெயர், ஊர், எப்போது ஆரம்பித்த விவரம், காலாவதி ஆகும் நாள் என்றும் அதில் உங்கள் பேரை நாமினியாகவும் போட்டுயிருக்கிறார்" என்று சொல்ல ஓரளவு பயம் நீங்கி தைரியம் வந்தது அவளுக்கு.

"இது தான் வங்கி லாக்கர் விவரம்" என்று அதை அழுத்தினார். 'இதுலே வங்கி லாக்கர்லே என்னென்ன தங்க வைர நகைகள், பத்திரங்கள் இருக்கிறதோ அந்த படங்கள் தான் இவைகள். எல்லாமே எப்படியும் இருபது லட்சம் இருக்கும் " என்று அனைத்தையும் படங்கள் மூலமாகப் பார்த்து பரவசம் அடைந்தாலும் அவர் இல்லாதது ஒரு குறையாக அவளுக்கு இருந்தது. 


"வங்கி லாக்கர் சாவி எங்கிருக்கின்றது என்கிற இடத்தின் பகுதியை படம் பிடித்து வைத்திருகிறார். பாருங்க. இதோ ஒரு கருப்புகலர் பெட்டியிலே இருக்கு. எப்படி திறப்பது என்றும் படம் பிடித்து வைத்திருக்கிறார் பாருங்க " அதன் வீடியோ படம் ஓடியது.

"பிறகு இது பாருங்க. இது உங்க பேர்லே, உங்க குழந்தைங்க பேர்லே உள்ள நிரந்தர வைப்பு பணம். குத்துமதிப்பா ஒரு அஞ்சு லட்சம் இருக்கும்.  இது உங்க மூணு பேர்லே உள்ள அஞ்சல் அலுவலக வைப்பு பணம். இதுலேயும் ஒரு அஞ்சு லட்சம் இருக்கும்" என்று அடுத்ததிற்கு தாவினார். 

"இது வீட்டு பிளாட் வீடியோ படம். பிளாட் எங்கிருக்கிறதை காட்டும் படம். அதன் பத்திரத்தின் படம் இது" விலாவாரியாக எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிமுடித்தார். 

இப்போது தன் கணவரை நினைத்து பெருமைபட்டாலும் இந்த விசயங்களை அவர் சொல்லும் போதெல்லாம் அலட்சியாமாக தான் இருந்ததை எண்ணி வெட்கப்பட்டாள். எதோ அவருடைய நண்பர் நல்லவராக இருப்பதால் சரியாப் போச்சி. இல்லையென்றால் .. அதை நினைச்சாலே .அப்பப்பா வாழ்க்கையே இருட்டாயிருக்கும்'  என்று பல சிந்தனைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அவரே தொடர்ந்து "இவையெல்லாம் கிடைக்கிறதுக்கு உங்க கணவரோட இறப்புச் சான்று முக்கியம். அதை வாங்கிட்டீங்களா?" என்று கேட்டார்.

"அது எப்படியோ அந்த சமயத்திலே பலரோட வற்புறுத்தலின் பேர்லே அவரோட இறப்புச் சான்றும் , வாரிசு சான்றும் வாங்கிட்டேங்க" என்று உடனே பதில் சொன்னார்.


"ரொம்ப நல்ல காரியம் பண்ணீட்டீங்க. ஒவ்வொன்னா நீங்க உங்க பேர்லேயும் குழந்தைங்க பேர்லேயும் மாத்திக்குங்க. உதவி தேவைபட்டா தாராளமா இந்த நம்பர்லே பேசுங்க. நான் வர்றேன்" என்று கிளம்பினார்.

அப்போது தான் இந்த கம்ப்யூட்டரைக் கொண்டு  யாரெல்லாம் எப்படியெல்லாம் மக்களுக்கு சேவை கொடுக்கிறாங்க. கம்ப்யூட்டராலே பல நன்மைகள் இருக்கத் தான் செய்யுது. இவ்வளவையும் அவரு சொல்லியிருந்தாலும் எனக்கு அப்போ ஒண்ணுமே புரியல்லே . ஆனா இப்போ எல்லாமே புரியுது. இனி வாழ்க்கையிலே கவலையில்லை. இருந்தாலும் மனைவிகிட்டே  பணவிசயங்களை மூடி மறைக்கிறது எவ்வளவு பெரிய தவறுன்னு ஏன் பலருக்கு தெரியாமல் இருக்குது? கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவு இல்லாமல் வாழ்க்கை நடத்தினால் இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் துன்பப்பட தேவை இருக்காதே. அவர் நம்பும் மூன்றாம் மனுசன் நம்பிக்கையா எல்லாமே சொன்னால் சரி. அதில்லாமே அதை மூடி மறைச்சாலோ அல்லது மறந்து போனாலோ வாழ்க்கை என்னாவது? எனக்கு கிடைத்திருக்கும் இந்த அனுபவம் மற்ற எல்லோருக்கும் ஒரு பாடமாக கட்டாயம் இருக்கும். எல்லோரும் இ.லாக்கரை எல்லோரும் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு உறுதியாக தனது அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&