Pages

Thursday, 17 July 2025

29.6.2025 கவியரங்கம் - 35 - புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் - இராமபாண்டியன் எழுதிய 'கம்பன் காட்டும் உவமைகள்'



மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 35- 29.6.2025 - புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் - மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. 

" புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் "எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி , இரா . கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராசன், கு கி .கங்காதரன் , இராம பாண்டியன், நா .குருசாமி ,பால் பேரின்பநாதன்,அழகையா ச. லிங்கம்மாள், சிவ சத்யா , மா .முனியாண்டி , தென்காசி புலவர் ம. ஆறுமுகம், இளையான்குடி இதயத்துல்லா, ந .சுந்தரம் பாண்டி , பா .பழனி , பா .பொன் பாண்டி,சு .பால கிருட்டிணன் ,வே .இசக்கி தேவி ஆகியோர் கவிதை பாடினார்கள்.  

கவிஞர் இராமபாண்டியன் எழுதிய* கம்பன் காட்டும் உவமைகள் " நூல் வெளியிட்டனர் .விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நூலை அன்பளிப்பாக வழங்கினார் நூல் ஆசிரியர் . பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய இராம பாண்டியன், நா .குருசாமி இருவருக்கு தென்காசி திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கினர். துணைத் தலைவர் இரா.வரதராஜன் நன்றி கூறினார் . 

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள். மாதாமாதம் கவிதைகளை பேரவையின் வலைப்பூவில் ஆவணப்படுத்தும் துனைச் செயலர் கு .கி .கங்காதரன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் . 

படங்கள் : மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.




                                         

  








புரட்சிக்கவியின் புதுமைப் பாடல்கள்

-    கவிஞர் இரா. இரவி

*****

குடும்பக் கட்டுப்பாடு கடைபிடிக்கிறோம் இன்று
குடும்பக் கட்டுப்பாட்டை அன்றே பாடியவர்

முதுமைக் காதலையும் நன்கு பாடியவர்
முதுமையிலும் இருக்கிறாள் என்பதே இன்பமென்றார்

பாடாத பொருள் இல்லை எனப் பாடியவர்
பாட்டில் புதுமைகள் அன்றே விதைத்தவர்

பகுத்தறிவுப் பகலவன் கருத்துக்களை எல்லாம்
பாட்டின் வழி விளக்கிப் பாடியவர்

தமிழை உயிருக்கு நேராக நேசித்தவர்
தமிழுக்கு பாட்டால் மகுடம் சூட்டியவர்

கெட்ட போரிடும் உலகத்தை வெறுத்தவர்
கவிதையில் அமைதியை வேண்டிப் பாடியவர்

மக்களுக்கு புரட்சி மனத்தை ஏற்படுத்தியவர்
மனதின் மூட நம்பிக்கைகளை ஒழித்தவர்

நிரந்தர நாத்திகன் எனப் பிரகடனப்படுத்தியவர்
நிரந்தரமாக பகுத்தறிவாளராக வாழ்ந்தவர்

கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்
கொள்கையில் சமரசம் செயது கொள்ளாதவர்

ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்தவர்
ஆன்மிகம் சாதி மத வெறி வேண்டாம் என்றவர்

மனிதநேயத்தை பாடல்களில் நன்கு வடித்தவர்
மனிதனுக்கு வாழ்வியல் நெறி வகுத்தவர்

பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் தந்தவர்
பெண்மையின் வளர்ச்சிக்கு உரம் இட்டவர்.

************
















*புதியதோர் உலகம்* *செய்வோம்* -பாரதிதாசன்

🐚🐚🐚🐚🐚🐚🐚🐚


பாட்டுக்கொரு புலவன்

 *பாரதி* கண்ட 

பாவேந்தர் *பாரதிதாசன்* -

நாட்டுக் கொரு சேதி சொன்னார் -அதை

நாளும் காப்போம் (2)


நாட்டு விடுதலைக்கு 

பாடினார் *பாரதியார்* -தமிழ் 

பாட்டு விடுதலைக்குப் 

பாடினார் *பாரதிதாசன்* (4)


 *விடுதலைக்கு முன்* 

நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி அஞ்சியஞ்சி துஞ்சிய தமிழர்கள் -

அடர்ந்திருந்த நாடு   அடிமை பட்ட நாடு  

அடிமை விலங்கு அறுக்க பாடியவர் *பாரதியார்* (8)


 *விடுதலைக்குப் பின்* 

இனமானம் இற்றுத் தன்மானம் பற்று  தளர்ந்திருந்த தமிழர் மனமாசில் மாய்ந்து 

மாயிருளில் தோய்ந்திருந்த தமிழர் தமை

தட்டி எழுப்பும் கொட்டும் முரசாய்

எட்டு திக்கும் எதிரொலிக்கும் 

சங்க முழக்கம் செய்தவர் 

 *பாரதி தாசன்* (14)


 *புதியதோர் உலகம்* *செய்வோம்* 

பழையன கழிதலும் புதியன புகுதலும் 

வழிவழி வந்த 

 *தமிழ் மரபன்றோ!* 

சொல் புதிது

 சுவை புதிது

 சோதி மிக்க 

தமிழ்க் கவிதை தமிழர் நலக் கவிதை 

தமிழர்  நாம் படைப்போம் (20)

 


உடலோடு ஒட்டி உறவாடும் 

 *உயிர் மூச்சு* !

உயிரோடு உணர்வோடும் 

 *தமிழ்ப் பேச்சு!* -எங்கள் 

பேச்சும் மூச்சும் வாழ்வும்  வளமும்

மங்காத தமிழென்று *சங்கே முழங்கு* !(24)

✍️🙏

சித்தாந்த ரத்தினம் 

 *எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர் 

28.06.2025

***************


*புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புதுமைப் பாடல்கள்*

*அறுசீர் விருத்தம்*

புரட்சிச் சாயம் தமிழில்
 பூசும் முதன்மைக் கவிஞன்
 புரட்டிப் போடும் சிந்தைப்
 புதையல் அகழ்ந்த உழவன்
 வரம்புகள் அடங்கா வீரன் 
வானை வளைக்கும் சூரன்
 நரம்புள் முறுக்கை ஏற்றி
 நாவால் உசுப்பும் தமிழன்!


விதியை நொந்தே கைம்பெண்
 வீழ்ந்து கிடந்த காலம்
 எதிர்த்தே துணிந்து நிமிர 
ஏற்றி வைத்தான் விளக்கு
 சதியில் மிதிகள் பட்டே
 சாய்ந்த பெண்டிர்க் குத்தூண் 
 புதிய உலகு செய்தோன்
புல்லர் வஞ்சம் ஒழித்தோன்


பெண்கள் கல்வி விடியல் 
பெற்றே உயரத் துடித்தோன்
பெண்கள் கைமையைக் கண்டே
 பொறுக்கா மனத்தால் உழன்றோன்
 எண்ணம் எழுத்து எல்லாம்
 இன்பத் தமிழே என்றோன் 
வண்ணத் தமிழை வாழ்த்தி 
வகைகள் பிரித்துப் பாடியோன்!

சங்கை முழக்கித் தமிழை
 சகத்தில் பரப்பி நின்றோன்
 எங்கும் புரட்சி நிரப்பி
 ஏக்கம் கரையக் கண்டோன்
தங்கும் புகழைப் புவியில்
 தழைக்க விட்ட வேந்தன் 
சிங்கப் பாரதி தாசன்
 சீர்பேர் பாருள் நிலைக்கும்!

கவிஞர் 
மதுரை சுந்தரம் பாண்டி
************************

புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் (பாரதிதாசன்)
புதுக்கவிதை

பாட்டினிலே உயிருண்டு சொற்களிலே உணர்வுண்டு
ஏட்டினிலே இடமுண்டு எழுத்தினிலே நடையுண்டு
கவிதையிலே மெட்டுண்டு இசையிலே ராகமுண்டு
கவிக்குள்ளே நெஞ்சை அள்ளும் களமுண்டு

பாரதியின் பேருண்டு கருத்திலே  புரட்சியுண்டு
பகுத்தறிவு வளமுண்டு புரட்சிக்கவிப்  பேருண்டு
கோபுரச்  சிறப்புண்டு  சிந்தனையிலே ஒளியுண்டு
கவியின் பெயரை பாரதிதாசனென அழைப்பதுண்டு

தமிழின் அழகுண்டு பாவடியில் ஆழமுண்டு
தாக்கும் வலிமையுண்டு ஏற்கும் குணமுண்டு
சமூகச் செய்தியுண்டு பெண்ணுரிமைக் கருத்துண்டு
சங்கநாதம் முழக்கமிடும் எல்லையிலா சேவையுண்டு

கொள்கைப் பிடிப்புண்டு மனிதநலனில் அக்கறையுண்டு
கற்பனைத் திறனுண்டு புனைப்பெயர் பலவுண்டு
விடுதலை வேட்கையுண்டு அடிமைக்கு இடியுண்டு
வியக்க வைக்கும் கவிதைகளில் புதுமைகளுமுண்டு..
**********