Pages

Sunday 10 March 2024

THE SECRET OF BRAMMAM - பசும் பால் (milk) உணர்த்தும் பிரம்மத்தின் இரகசியம் (பரமபத நிலை).. எனது புரிதலும் விளக்கமும் 10.3.2024

 THE SECRET OF BRAMMAM - பசும் பால் (milk) உணர்த்தும் பிரம்மத்தின் இரகஸ்யம் .. எனது புரிதலும் விளக்கம்  

K.K.GANGADHARAN




பசும் பால் (milk) உணர்த்தும் பிரம்மத்தின் இரகசியம் (பரமபத நிலை) .. எனது புரிதலும் விளக்கம்  10.3.2024

  "குருவே! மனிதனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பான இந்த மானுடப்பிறவியில், 'மனிதன், மனது வைத்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகலாம்'  என்று போதித்தீர்கள், இல்லையா?"

  "ஆமாம் சிஷ்யர்களே, மனிதனுக்கான உண்மையும் நோக்கமும் அதுதான்"

  "அதோடு, குருவே, பிரம்மத்தைப் பார்க்க முடியாது! உணரத்தான் முடியும்! என்றும் சொன்னீர்கள்"
 
  "ஆமாம்"
 
  "குருவே, அதுமட்டுமல்ல, பிரம்மத்தை அடைய பல வழிகள் உண்டு. ஒவ்வொருக்கும் ஒரு வழி கட்டாயம் உண்டு என்றும்,  உங்களது வழியில் மற்றவர்கள் அடைய முடியாது! என்றும் அறிவுரை கூறுனீர்கள்"
 
  "ஆமாம், அதுதான் விதி"

  "குருவே, இவற்றையெல்லாம் கூறும்போது எங்களுக்கு குழப்பமாக உள்ளது. நாளுக்கு நாள் நம்பிக்கையும் குறைந்து கொண்டே போகின்றது. இவற்றைப் பற்றி எங்களுக்குப் புரியும் படி, செய்முறையுடன் கூடிய விளக்கம் தரும் படி கேட்டுக் கொள்கிறோம் குருவே!"

 "நல்லது சிஷ்யர்களே,. . என்னால் முடிந்தளவு உங்களுக்கு விளக்கமளிக்கிறேன். முதலில் யாராவது ஒருவர் அங்கிருக்கும் பால் கிண்ணத்தை எடுத்து வாருங்கள்"  என்று குரு கூறியதும் ஒரு சிஷ்யர் அந்தப் பால் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வந்தார். 

  "இந்தப் பாலை விளக்கில் ஊற்றி தீபமேற்றுங்கள்" என்று கூறியதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

   ஏனென்றால், பால் கொண்டு எப்படி தீபத்தை ஏற்ற முடியும்?  என்று குழம்பிக் கொண்டனர். இருந்தாலும் குருவின் சொல்லைத் தட்டாமல் தீபத்தை ஏற்ற முயற்சி செய்து தோற்றுவிட்டனர்.
 
  "குருவே முடியவில்லை" என்று சிஷ்யர்கள் கூறியதும்
 
  "அப்படியா, நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் 'பாலை' எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்த வழியில் இந்தப் பாலைக் கொண்டு 'வெண்ணெய்' தயாரித்துக் கொண்டு வாருங்கள்" என்று கூற, ஒவ்வொருவரும் அவரவர் வழியில் வெண்ணெயுடன் வந்தனர்.
 
  "நல்லது,அனைவரும் நன்றாக வேலை செய்தீர்கள். யார் யார்? எந்தெந்த வழியில் இந்த வெண்ணெய்யை தயார் செய்து வந்தீர்கள்" என்று கேட்டவுடன் அவரவர் 'வெண்ணெய்' தயார் செய்த முறை (கடைதல்), நேரம்,  ஆகியவை சொன்னார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசம் இருப்பதை அறிந்தார்.

   "சிஷ்யர்களே, இப்பொழுது, இதனைக் கொண்டு 'தீபத்தை' ஏற்றுங்கள்" என்று குரு கூறவே, மீண்டும் சிஷ்யர்கள் தோல்வியைக் கண்டனர். 
 
பிறகு, குரு
 
  "சிஷ்யர்களே, இந்த வெண்ணெயைக் கொண்டு நெய்யாக மாற்றிக் கொண்டு வாருங்கள்" என்று குரு கூறவே, அனைவரும் மகிழ்ச்சியாய்ச் சென்று, அவரவர் வழியில் தயாரித்து கையில் நெய்யோடு வந்தனர். 

  "சிஷ்யர்களே, இப்போது உங்களால் தீபத்தை ஏற்ற முடியுமா?" என்று கேட்டவுடனே

   "ஓ.. முடியுமே!" என்று அவரவர் கொண்டு வந்த 'நெய்யைக்' கொண்டு தீபத்தை ஏற்றினர்.

     அனைவரின் முகத்தில் புன்னகையுடன் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. 

 "சிஷ்யர்களே, இந்த செயல்முறை மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?" 

    "குருவே, பாலில் வெண்ணெய், நெய் இருப்பதை அறிந்தோம்" 

    "பிறகு"
 
  "பால் கொண்டு தீபத்தை ஏற்றமுடியாது. ஆனால், அதை நெய்யாக மாற்றினால், அதனைக்கொண்டு தீபத்தை ஏற்றலாம் என்பதை உணர்ந்தோம்.
இதன் மூலம் நீங்கள் எங்களுக்கு என்ன கூறுகிறீர்கள் குருவே" 

    "பாலில் நீர் இருப்பதால் அது எரிவதில்லை. அதாவது, 'நீர்' என்பது 'ஆணவம்' 'அகங்காரம்' 'நான்' ஆகும்.  அது இருக்கும் வரையில், உங்களுக்குள் இருக்கும் 'ஜோதியை' உணர முடியாது. ஆனால், பாலைக் கடையும் போது, 'நீர்' பிரிந்து, பால் 'வெண்ணெயாக' மாறுகிறது. அதையும் வெப்பப்படுத்தும் போது, அதில் தங்கி இருக்கின்ற கொஞ்சம் நீரும் ஆவியாகி 'நெய்யாக' மாறுகிறது. இப்போது அதனைக் கொண்டு 'விளக்கை' ஏற்றலாம் அல்லவா! அதாவது, 'மனம்' என்பது 'பால்'. அதில் 'நான்' என்கிற 'நீர்' இருக்கும் வரை உனக்குள் இருக்கும் 'ஆன்மா' உணர முடியாது.  அதனால், மனதிலிருந்து 'நான்' பிரிக்க வேண்டும்.  அதற்கு தான் 'தியானம்' செய்ய வேண்டும். 'தியானம்' கூட ஒரு வகையில் 'மனதை கடைதல்' ஆகும். வேகமாக ஓடும், பறக்கும் மனதை ஓரிடத்தில் உட்கார்ந்து அமைதியாய் 'தியானம்' செய்யச்செய்ய தேவையில்லாத எண்ணங்கள் மறைந்துகொண்டே போகின்றது. அல்லது பாரமான தவறான, கெட்ட எண்ணங்கள் அடியில் தங்கும்.  நல்ல லேசான எண்ணங்கள் மேலே வரும். நாளடைவில் மனம் முழுவதும் லேசான நல்ல எண்ணங்களே நிரம்பும். தியானம் போல் 'பக்தியோடு' இறைவனைத் தொழுவது, இறைவனைப் பாடுவது, படிப்பது, இறைவனைப் பற்றி பேசுவது, இறைவனை நினைப்பது, கடமைகளை மனம் கோணாமல் செய்வது, பிறர்க்கு உதவி செய்வதில் கூட  'மனம்' தூய்மை நிலை (வெண்மை நிறம் கொண்ட வெண்ணெய் பதம்) அடைய முடியும்.  மேலும், அதன் பின்னே மனதை பக்குவப்படுத்துதல் மூலம் (ஜோதி நிலை கொண்ட நெய் பதம்) 'பிரம்மத்தோடு' அதாவது 'ஆன்மாவோடு' ஐக்கியமாகலாம். அந்த நிலையில் தான் 'எல்லா ஆன்மாவும் தனக்குள் இருப்பதாகவும், தன்னுடைய 'ஆன்மா' எல்லோரிடத்தில் இருப்பது போலவும் உணரும் பக்குவம் உண்டாகும்'. அதுவே 'பிரம்ம நிலை' ஆகும்." 

    "குருவே, இப்போது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது"  

    "பிரம்மம் பற்றிய உண்மையை அறிந்து கொண்டோம் குருவே" 

    "ஆகட்டும், நீங்கள் இதற்கான முயற்சியை முழு ஈடுபாடுடன்  செய்யுங்கள்.  நிச்சயம் பிரம்மத்தை அடைவீர்கள்". 

      படிக்கும் நீங்களும் முயலுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். .

     நன்றி 

**************

      

No comments:

Post a Comment